பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Sunday, 19 June 2011

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயார் 70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயார்
70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ
ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப் போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில் இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப் போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தீப்பொறி என்று தனது சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை இறுதிவரை நடத்தியவர். ஐயர் கூறும் உண்மைகள் வெளிச்சத்தில் கடந்த காலத்தின் ஒரு பகுதி குறித்த புரிதலைப் வந்தடையலாம் என நம்புவோம்.



நடந்தவை எல்லாமே ஒரு கனவு போல் இன்றும் மறுபடி மறுபடி எனது நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. வன்னி குறு நிலப்பரப்பில் ஆயரமாயிரமாய் மக்கள் பலியெடுக்கப்பட்ட போதெல்லாம், செய்வதறியாது திகைத்துப் போனவர்களுள், உணர்வின்றி, உணவின்றி உறக்கம் தொலைத்து அதிர்ச்சியடைந்த ஆயியமாயிரம் மனிதர்களுள் நானும் இன்னொருவன். தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக் கொண்ட்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற வகையில் இழப்புக்கள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது. 1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக்கட்சியின் தலைமியிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. என்.எம்.பெரேரா என்ற ரொஸ்கிய வாத இடதுசாரி நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார்.



தமிழகத்திலிருந்து வருகின்ற பெரியாரின் எழுத்துக்களைப் படித்ததில் எனக்கு நாத்திகவாததில் நாட்டம் ஏற்படுகிறது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது சுற்றத்திலிருந்து எதிர்ப்புக்கள் வருகின்றன.



எனது இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு புரட்சி போராட்டம் என்பன குறித்துச் சிந்திக்கிறோம். இடது சாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.



இந்த நிலையில் 1970 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, சிறீ லன்கா சுதந்திரக் கட்சி ஆகின இணைந்து இலங்கையில் ஒர் அரசை அமைத்துக் கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியை கட்டுப்படுத்தும் வகையில் இனவாரியான தரப்படுத்தல் சட்டமூலத்திற்கான மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுகிறது. இது 1973 இல் அமுலுக்கு வருகிறது. இதே வேளை 1971 இல் பௌத்த மதம் தேசிய மதமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசாகவும் பிரகடனப்படுத்தப் படுகிறது. இந்தக் குடியரசில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவிலை என்பது தவிர இனவாரியான தரப்படுத்தல் என்பது திறமையுள்ள தமிழ் மாணவர்கள் கூட ப்ல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கின்றது. இதற்கு முன்னதாக 1958 இல் தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களின் வடு இன்னமும் ஆறியிருக்கவில்லை.








இதனால் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கின்றனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோர் முன்னின்று உருவாக்கிய இந்த அமைப்பில் நானும் எனது ஊரைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். பல ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசு நாடாகிய போது நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டங்களில் நானும் குலம் என்ற எனது நண்படும் தீவிரமாகப் பங்கெடுக்கிறோம். பெரும்பாலான இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள் எனப் பல போராட்டங்களில் தீவிர பங்காற்றுகிறோம். இவ்வேளையில் தமிழரசுக் கட்சிக்கும் மாணவர் பேரவைக்கும் அடிப்படையிலிருந்த முரண்பாடென்பது, செயற்பாட்டுத்தளத்திலேயே அமைந்திருந்தது, மாணவர் பேரவை கூட்டணியின் செயற்பாடு தீவிரமற்றதாக இருந்ததாகக் குற்றம் கூறினர்.

இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.



குடியரசு தின எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகளை ஒட்டி சுமார் 42 பேர் சிறைப்படுத்தப்படுகின்றனர். சேனாதிராஜா, காசியானந்தன் வண்ணையானந்தன் உள்பட பலர் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர். அத்ற்கு முன்னதாக அரச சார்பானவர்களின் வீடுகள் முன்னால் குண்டெறிதல், பஸ் எரிப்பு, அரச வாகன எரிப்பு போன்ற சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தவிர குடியரசு தினத்தன்று தொடர்ச்சியாக மக்கள் ஆதரவுடனான ஹர்த்தால் கடையடைப்பு என்பன தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது.

இதே வேளை சிவகுமாரன் சோமவீர சந்திரசிறீ என்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அவரின் தீவிர தமிழ் விரோத நடவடிக்கைகளுக்காக கொலை செய்வதற்கு பல தடவை முயற்சிக்கிறார். தவிர யாழ்ப்பாண முதல்வராக இருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரான துரையப்பாவைக் கொலைசெய்ய இரண்டு மூன்று தடைவைகள் முயற்சிசெய்கிறார். இவையெல்லாம் தோல்வியிலேயே முடிவடைகின்றன.



இவேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்.



அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார். அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும், உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிந்த அந்தக் காலகடம் எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி. அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா, பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்.



இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட் வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார். பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.

இதே வேளை செட்டி, பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன் அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசிய தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.



செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெருதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர் எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக் கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.



அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை என்றும் அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர் இந்தியாவிற்குச் செல்கிறார்.



இதே வேளை பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறை இந்திய இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபாரத்தின் பிரதான மையமாக இருந்தது. இதன் காரணமாகவும் தமிழரசுக் கட்சி மற்றும் சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றோரின் செல்வாக்குக் காரணமாகவும் இயல்பாகவே இப்பிரதேசம் அரச எதிர்ப்புணர்வுடையதாக அமைந்திருந்தது. இங்கு கடத்ததல் தொழிலில் முன்னணியிலிருந்த தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மாணவர் பேரவையின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் கடத்தலை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், அரசிற்கு எதிரான அரசியற் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.



சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூர்ந்து ஒன்றை எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான் நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும் அரச எதிர்ப்பு விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.


குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டது.



தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத் தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத் தொடர்ந்தவண்ணமிருந்தனர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில் தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார். சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை எடுக்கிறார்.

அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு ஏற்படுகிறது.

இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.



இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள் செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச் சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார்.
அவ்வேளையில் தான் இன்பம், செல்வம் பொன்ற சில இளஞர்களைப் பிரபாகரன் இணைத்துக்கொள்கிறார். இன்பம் செல்வம் இருவரும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள்.



இவ்வாறு பிரபாகரன் துரையப்பாவை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, செட்டி பொலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவர் வைத்திருந்த கொள்ளைப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி தனது ஊரினுள்ளேயே உலாவித் திரிந்ததால் பொலீசாரின் கண்ணுக்குள் அகப்பட்டு விடுகிறார், இதனாலேயே கைதும் செய்யப்படுகிறார்.

இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே. அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் உணர்ச்சிகரப் பேச்சுகளால் உந்தப்பட்டுப் பல இளைஞர்கள் துரையப்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்ற முடிபிற்கு வந்திருந்தனர். துரையப்பாவைப் பொறுத்தவரை உரிமைகளை விட அபிவிருத்தியே முதன்மையானது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர். இதனால் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டுகொண்டதில்லை. இன்றைய டக்ளஸ் தேவானந்தாவின் அதேவகையான நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்தவர். இந்த அடிப்படையில் பொலீசாரின் அடக்குமுறைகளுக்கும் துணைபோனவர். பல்வேறுபட்ட இளைஞர்கள் இந்த முயற்சியில் தன்னிச்சையாக ஈடுபடலாயினர். இப்போதெல்லாம் இக்கொலைகளை நாம் நியாயப் படுத்துவதென்பது ஆயுதக் கலாச்சரத்தை அறிமுகப்படுத்துவதாகவே அமையும் ஆனால் அன்றோ நிலைமை மாறுபட்டதாக இருந்தது. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த, மிகுந்த பாதுகாப்புடன் வாழ்ந்த துரையப்பாவைக் கொலைசெய்தல் என்பது ஒரு சமூக அங்கீகாரமாகவே கருதப்பட்டது.



பல இளைஞர்கள் இந்த முயற்சியில் குழுக்களாகவும் தனியாகவும் ஈடுபட்டிருந்த போதும் கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் இவர்கள் நால்வரும் தான். இவர்கள் நால்வருமே 20 இற்கு உட்பட்ட வயதுடையவர்களாகவே இருந்தனர்.



ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர். இவ்வேளையில் பிரபாகரன் தனது வீட்டில் தங்கியிராததால் தப்பிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இவ்வேளையிலேயே இதில் தொடர்பற்ற பலர் கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக சந்ததியார் போன்ற இளைஞர் பேரவை முக்கியஸ்தர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.



இந்த வேளையில் பிரபாகரனுடன் சார்ந்த அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பழைய தொடர்புகள் அனைத்தையும் இழந்த தேடப்படும் நபராகவே காணப்படுகிறார்.

இவ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார். அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார். இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால் செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை நிராகரித்திருந்தோம்.



அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.



அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான் பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது.


பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.



அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.

அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவளாரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.


ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியவிற்கு அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.



அப்போது கிடைத்த பணம் எனது பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதில் ஈடுபட்ட இருவர் தமக்குக் குடும்பச் சுமை இருப்பதாகவும் தமக்கு பண உதவி செய்தாலே முழு நேரமாக இயங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் நான், ராகவன் தவிர்ந்த ஏனையோருக்கு கடவுள் பற்று இருந்தது. குறிப்பாகப் பிரபாகரன் மிகுந்த கடவுள் பக்தி உடையவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால் பிரபாகரனின் முன்மொழிவின் பேரில் செல்லச் சன்னதி கோவிலில், வங்கிக்கொள்ளைப் பணத்தில் ஒரு அன்னதானம் வழங்கப்பட்டது. என் போன்றவர்களுக்கு மார்க்சிய தத்துவங்கள் குறித்துத் தெரிந்திராவிட்டாலும், கடவுள் மறுப்பு என்பது பெரியாரியக் கொள்கைகளூடான தாக்கத்தினால் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தச் செல்லச்சனதிக் கோவில் நிகழ்வை முற்றாக மறுத்திருந்தேன். குலம், நான் , ராகவன் மூவரும் தான் இதை முழுமையாக எதிர்த்தோம்.



வேடிக்கை என்னவென்றால் இவ்வேளையிலும் கூட நான் தொழில் ரீதியாக கோவிலில் பிராமணராக இருந்தேன் என்பதுதான்.

எது எவ்வாறாயினும் பிரபாகரன் அப்போது எமக்கெல்லாம் ஒரு ஹீரோ போலத்தான். துரையப்பா கொலையை வெற்றிகரமாக முடித்தவர் என்பது தான் இதன் அடிப்படைக் காரணம்.

ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடவில்லை. இது கூட ஒரு கடவுள் மறுப்பின் காரணமாகத் தான். வங்கிக் கொள்ளைக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளை வாங்குவதற்காக பிரபாகரன் ராகவனை வேறொரு இடத்திற்கு அனுப்பிவைக்கிறார். அவ்வேளையில் அங்கு கோவில் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் ராகவன் கடவுள் இல்லை என்று சொல்வதால் அவரைத் தீக்குளித்துக் காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடந்த வாக்குவாததிலெல்லாம் ஈடுபட்டதால் பிரபாகரன் ஆத்திரமடைந்திருக்கிறார். போன வேலையில் ஈடுபடாமல் வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ராகவனை சில காலம் நீக்கி வைத்திருந்தார். இதனாலேதான் ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் கூடப் பங்குபற்றவில்லை. ஒரு சில நாட்களுக்கே விலகியிருந்த ராகவன் மீண்டும் இணைந்து கொள்கிறார்.



இதன் பின்னர் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிபிற்கு வருகிறோம். புளியங்குளம் காட்டில் ஒரு இடத்தையும் தேர்ந்து கொள்கிறோம். அங்குதான் எமது பயிற்சிகளை ஆரம்பிக்கிறோம். இந்த முகாமில் முழு நேரமாக பங்கெடுத்துக் கொண்டவர்கள் நானும் பிரபாகரனும் மட்டும்தான். மற்றவர்கள் பகுதி நேரமாக அங்கு பயிற்சிக்கு வந்து போவார்கள்.


அவ்வேளையில் எமது குழுவிற்கான மத்திய நிர்வகக் குழு ஒன்றை அமைத்துக் கொள்கிறோம். அக்குழுவில் நான், பிரபாகரன், குமரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு என்கிற உதய குமார் என்ற ஐந்து பேரும் அங்கம் வகிக்கிறோம். அப்போது பருமட்டான திட்டம் ஒன்றினை முன்வைக்கிறோம்.



1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.



இவையெல்லாம் அன்று எமக்கு நியாயமான சுலோகங்களாகத் தான் தெரிந்தன. இவற்றின் அடிப்படைகளே இன்று ஆயிரமாயிரம் உட்கொலைகளை உருவாக்கி ஈழப்போராட்டத்தில் இரத்தம் உறைந்த வரலாற்றை உருவாக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.



ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் சொல்லப் போவதெல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புக்களும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்ரைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் உண்மைச் சம்பங்களை முன்வைத்து எழுத்துருவாக்குவதை இன்றைய கடமையாக எண்ணுகிறேன். என்னோடு பங்களித்த ராகவன், குலம், கிருபாகரன்,கலாபதி உள்ளிட்ட அனைவரும் இது முழுமை பெறத் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.


தொடரும்

தமிழரைத் தேடி

தமிழரைத் தேடி - 2



திராவிட மாயை அல்லது வேளாள மாயை

ஆரிய மாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் "கடல்கொண்ட தென்னாடு" என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொன்மத்தையும் ஐரோப்பியப் புவியியலாளர் முன்வைத்த லெமூரியக் கண்டக் கருதுகோளையும் இணைத்து மிக அருமையான வரலாற்றுப் புதினத்தைப் படைத்துவிட்ட தமிழ் ஆர்வலர்கள், அதனையே தமிழ்ச் சமூக வரலாறு எனவும் கூறத் தலைப்பட்டுவிட்டனர். தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் தொடர்பான தொன்மம் உண்மையில் தமிழ் மொழியின் செழுமைக்கு விடை கூறுவதாக இருக்கமுடியும்; ஆனால் தமிழ்ச் சங்கங்களை இந்துமாக் கடலில் தேடுவதாக நினைத்துக்கொண்டு, தமிழரின் வரலாற்றை அக்கடலுக்குள் புதைக்கின்ற பணியைச் செய்துவருகின்றனர். பிராமணர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அந்நியமானவர் எனக் காட்டுவதற்காக, ஆரியர் வெளியிலிருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய மக்கள் என்ற கருதுகோளைத் தமிழ் ஆர்வலர்கள் வலுவாகப் பிடித்துக்கொண்டனர். அறிவியல்பூர்வ ஆய்வுகள், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமுமே வந்தேறிகள் என்பதற்கான சான்றுகளைத் தரும்பொழுது அதனை அவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழ் ஆர்வலர்களின் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அ) திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், தங்களை ஆரியருடன் அடையாளங் காட்டிக்கொள்ளும் பிராமணர்கள் இந்திய நாட்டிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அந்நியர்.

ஆ) திராவிட மொழிகளைத் தாயாகக் கொண்டு உலக மொழிகள் பிறந்துள்ளன. திராவிட மொழிகளுள் தமிழ் உயர்தனிச் செம்மொழி.

இ) உலகின் சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே, இதனைத் தோற்றுவித்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உயர் சாதியினரான வேளாளர்களாவர். பதினெண் குடி வேளிரும், மூவேந்தர்களும் வேளாளர்களேயாவர்.

இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனைத் திராவிட மாயை என்பர். வேளாளரின் பெருமையை நிலைநாட்டுவதே இக்கோட்பாட்டின் முக்கிய நோக்கமாக இருப்பதனால் இதனை வேளாள மாயை என அழைப்பது பொருத்தமாக இருக்கும். வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர். வேளாளரைக் கீழோராக ஏற்க மனம் ஒப்பாத மறைமலையடிகள் இச்சூத்திரத்திற்குப் புதிய வகை விளக்கம் அளித்துள்ளார்.

“மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்”, என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கித் தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார்.

“இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று...”

அடிகளார், தற்காலச் சமூக நிலைமைகளைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு இப்பட்டியலைக் கூறுகிறார். ஆனால், தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளவாறு காணப்படவில்லை. இன்று "பார்ப்பானுக்கு முந்திய பறையோன்" எனக் கூறிக்கொள்ளும் பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியன் என்றும் அழைக்கப்பட்டுப் பார்ப்பாருக்கு நிகரான சாதியாக விளங்கியுள்ளனர். மருத்துவரும் நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயில்களாக இருந்த பார்ப்பார் இம்மருத்துவரே. வட இந்தியாவில் ‘வைத்யா' என்ற பட்டத்துடன் கூடிய பிராமணரும் தமிழ் மருத்துவரும் ஒத்த மரபினர் ஆவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய மாணிக்கவாசகரும், பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். வேந்தர்களுக்கு மகற்கொடைக்குரியோராகிய இம்மரபினர் சங்ககால வாழ்வியலில் அமாத்தியர் பட்டம் பெற்ற மிக உயர்ந்த சாதியினராவர். தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த "பஞ்ச கம்மாளர்" என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சாதியினரும் ஒரு வகையான பிராமணர்களே. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது. மட்பாண்டங்கள் செய்யும் குயவர் சாதியினர் சங்க காலத்தில் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பிராமண சாதியினராவர். இவர்களை "வேளாப் பார்ப்பார்" எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

மொத்தத்தில், வெள்ளாளர்களுக்கான ஏவல் மரபினராக மறைமலையடிகள் பட்டியலிட்டுள்ள எந்த சாதியினரும் சங்க கால வாழ்வியலில் வேளாளரை விடத் தாழ்ந்த நிலையில் இருந்திருக்கவில்லை. இவ்வகையில் வேளாளரை உயர்த்திக் கூறுவதற்காக ஏற்றம் மிக்க பிற குடிகளைக் கீழோராகச் சித்திரிப்பது வேளாள மாயையின் வழிமுறையாக உள்ளது. தொல்காப்பியம் கூறும் நான்கு வர்ண சமூக அமைப்புப் பற்றி வே. கனகசபைப் பிள்ளை என்ற வரலாற்றறிஞர்(?) தனது 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் என்ற புகழ்பெற்ற நூலில் கூறியுள்ள கீழ்க்கண்ட கருத்துகள் வேளாள மாயையின் உள்நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

“இதுதான் தமிழர்களைத் தங்கள் சாதியமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ, தண்ணீர் குடிக்கவோமாட்டார்கள்.”

இதிலிருந்து தெரிவதென்ன? கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் போன்ற பெருமக்கள், தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை இல்லை என நிறுவ முற்படுவது, வேளாளர் நாலாஞ் சாதியாகி விடக்கூடாது என்ற உயர்ந்த (கேவலமான) சாதி மறுப்புக் கொள்கையினால்தானேயன்றி வேறல்ல. தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை உண்டென்று ஏற்றுக்கொண்டால், தமிழர் அனைவரும் சூத்திரராகிவிடுவர், அதுவும் மேற்சூத்திரராகிய வேளாளரையும்விட இழிந்த கீழ்ச்சூத்திரராகிவிடுவர் என இக்கனவான்கள் கதைக்கின்றனர். உண்மையில் நான்கு வருணப் பகுப்பு முறை தமிழகத்தில் உண்டு என ஏற்றுக்கொண்டால், வேளாளர் தவிர்த்த பிற அனைத்துத் தமிழ்க் குடிகளும் மேல் மூன்று வருணத்தில் அடங்கிவிடுவர். உண்மையில் மேல் மூவராகிய பிற தமிழ்க் குடிகளின் ஆணைவழி நிற்றல் வேளாளருக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். புறப்பொருள் வெண்பாமாலை, வேளாண் வாகையில் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி யொழுகின்று (வாகைத் திணை 10 : 165)

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, வேளாளருக்குரிய தொழில்கள் என கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறது.

வேளாளர் அறுதொழில் உழவு, பசுக்காவல்,
தெள்ளிதின்ன வாணிகம், குயிலுவம், காருகவினை, ஒள்ளியன
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு, “மேல் மூவரின் ஆணைவழி நிற்றல்” என்பதை வேளாளரின் முதன்மைத் தொழிலாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற தமிழ்க் குடிகளின் ஏவல் வழி நின்றுவந்த வேளாளர், களப்பிரர் கால அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் படிப்படியாக சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றம் பெற்றுள்ளனர். இது குறித்து திண்ணை இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட, "நான்கு வருணக் கோட்பாடு - தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை” என்ற கட்டுரையிலும், புது விசை காலாண்டிதழில் பிரசுரிக்கப்பட்ட, “நாடும் நாயன்மாரும் மூடுதிரை வில(ள)க்கம்” என்ற கட்டுரையிலும் இக்கட்டுரையாசிரியரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றம் பெற்ற வேளாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் இன்னமும் தமிழ்ச் சமூக வரலாற்றை முடிந்த அளவு குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

வேளிரும் வேளாளரும்

வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாகவும் எழுதுதற்குச் சுகமாகவும் இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் உடன்படுவதில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். "வேளாண்மையாகிய உழவுத் தொழில்" செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்:

“வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத்தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.” (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.)

துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் ‘வேளாண்மை' எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல.

வேளாண்மை - உபகாரம்

தொல்காப்பியத்தில்தான் ‘வேளாண்' என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 105ஆம் சூத்திரத்தில் “வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்” என்ற அடிக்கு, "தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும்" என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இங்கு ‘வேளாண்' என்ற சொல், ‘உபகாரம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 112ஆம் சூத்திரத்தில் கூறப்படும் “வேளாண் பெருநெறி” என்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், "வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க" என்கிறார். ஆக, வேளாண்மை என்ற சொல், ‘உபகாரம்' என்ற பொருளிலேயே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலித்தொகை 101ஆம் பாடலில் “வேளாண்மை செய்தன கண்” என்ற வரிக்கு "தலைவனைக் கண்டு என் கண்கள் உபசாரம் செய்தன" என்றே உரை கூறப்பட்டுள்ளது. ‘வேளாண்மை' என்ற சொல்லிற்கு ‘விருந்தோம்பல்' என்ற பொருளை நிகண்டுகள் அனைத்தும் கூறுகின்றன. வள்ளுவரும் ‘வேளாண்மை' என்ற சொல்லை உபகாரம் எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறார்:

“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள் 81)

“விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பதற்கு ‘விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு' என்று பரிமேலழகர் உரை கூறுகின்றார். பாரதி தீபம் நிகண்டு, ‘வேளாண்மை' என்ற சொல்லுக்கு "உபகாரமும் மெய்யுபசாரமும்" என்றே பொருள் கூறுகின்றது. எனவே வேளாண்மை என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளில் தொடக்க காலங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்ல முடிகிறது. வேளாண் மாந்தர்கள், மேல் மூன்று வர்ணத்தவர்க்கும் குற்றேவல் செய்து வந்ததுடன் உழவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததினால் பிற்காலத்தில் உழவுத் தொழில், வேளாண்மை என்று கூறப்பட்டுவிட்டது.

உழவுத் தொழிலும் வேளாளரும்

"வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” (தொல். பொருள். 628)

முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட வேளாண் மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. ‘சூத்திரர்' என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வேளாளருடன் ஏர் (கலப்பை) தொடர்புபடுத்தப்படுவதால் உழவுத் தொழிலுக்கும் வேளாளருக்குமான தொடர்பு நிச்சயமாகிறது.

அரசு உருவாகிய பின் சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருந்த போர் அடிமைகளாலேயே உழவுத் தொழில் உலகின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நிலமானிய முறை பற்றி தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட ஐரோப்பிய வரலாறு என்ற நூலில் டி.வி. சொக்கப்பா கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:

“நிலத்தை ஆண்டவனிடமிருந்து அரசர் பெற்றார். அரசர் தாம் பெற்ற நிலத்தில் தமக்குப் போக மிஞ்சியவற்றை நிலமானியக் கட்டுப்பாட்டு முறையில் பகிர்ந்து, மானியங்களாய் மற்றவர்களுக்குக் கொடுத்தார்...... மானியதாரர்கள் நிலங்களின் பெரும்பகுதியை மற்றவர்களுக்குப் பிரித்து வழங்கினர். மானியதாரர்களிடம், நிலம் பெற்றவர்கள் கீழாள்களாவார்கள். மேலும், நிலத்தைக் கீழாள்கள் உட்குடிகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள். நிலத்தில் உழைத்தவர்களை அடிமை ஊழியர்கள் (serf) என வழங்கினார்கள். அவர்கள் நிலத்தை விட்டு விலக முடியாது. நிலம் கை மாறினால் அவர்களும் அதனுடன் மாற வேண்டும்.”

ஐரோப்பிய நில மானிய முறையில் கூறப்படும் கீழாள்களை உழுவித்துண்ணும் வேளாளருக்கும் (காராளர்), அடிமை ஊழியர்களை உழுதுண்ணும் வேளாளருக்கும் ஒப்பிடலாம். ஐரோப்பிய நிலப் பிரபுக்கள் வேட்டைக்குச் செல்லும்போதும், வேறு அலுவல்கள் காரணமாகப் பயணம் செய்யும்போதும், அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்து, உண்ண உணவும் கொடுத்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது கீழாள்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். தமிழ் இலக்கண நூல்களும், நிகண்டுகளும், வேளாளருக்குரிய தொழில்களில் விருந்தோம்பலை முதன்மையாகக் கூறுவதுடன் இதனை ஒப்பிடலாம்.

பொதுவாகப் போர் அடிமைகளே அவ்வாறு உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்மாந்தர் சொத்துரிமையும், மண வாழ்க்கையும் மறுக்கப்பட்டு, பண்பாட்டு அடையாளங்கள் அற்றவர்களாகவே நடத்தப்பட்டனர். ஜெர்மானியரிடையே, அரசு உருவாக்கத்தின்போது தோன்றிய கொலோன்கள் என்ற கீழ்நிலை உழுகுடிகளைப் பற்றி "குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றி" என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“இச்சிறு நிலத்துண்டுகள் கொலோன்கள் என்பவர்களிடம்தான் பிரதானமாக விநியோகிக்கப்பட்டன. அவர்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள். நிலத்தோடு இணைக்கப்பட்டிருந்தார்கள். நிலங்களுடன் சேர்த்து அவர்களையும் விற்பனை செய்யமுடியும். அவர்கள் அடிமைகளல்ல. அதே சமயத்தில் சுதந்திர மனிதர்களும் அல்ல. அவர்கள் சுதந்திரமான குடிமக்களை மணக்க முடியாது. அவர்கள் தமக்குள்ளேயே மணந்து கொள்வதும் செல்லத்தக்க திருமணமாகக் கருதப்படவில்லை. அடிமை விஷயத்தில் இருந்ததைப் போலவே வெறும் காமக் கிழத்தி முறையாகவே கருதப்பட்டது.”

ஐரோப்பியக் கீழாள்கள் மற்றும் கொலோன்களைப் போன்றே வேளாளரும் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே பூமி புத்திரர் எனவும் அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் வேளாளர்கள் கூலிச் சேவகர்களாகவும், நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமைகளாகவும் இருந்துள்ளதைப் பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டில் உள்ள,

“அதலையூர் நாட்டு நாடாள்வான் கூலிச் சேவகன் திருவழுதி நாட்டு ஸ்ரீகுருகூர் வெள்ளாளன்”

என்கிற வாசகம் ஒரு வேளாளரைக் கூலிச் சேவகனாகக் காட்டுகிறது. மேலும் ஒரு கல்வெட்டு, வெள்ளாளடிமைகளில் சூடியார் எனக் குறிப்பிடுவதன் மூலம் வெள்ளாளரில் அடிமைகள் இருந்ததைத் தெளிவாக்குகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டு, சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில்

“பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழ
ரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில்
ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்”

என்பதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிக்காக) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின் வாரக்குடிகளான வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கு நடைமுறையில் இருந்ததையும் அது பின்னர் தடைசெய்யப்பட்டதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கொலோன்களைப் போன்றே வெள்ளாளரும் திருமணச் சடங்குகள் இன்றி வாழ்ந்த நிலையைத் தொல்காப்பியம் சித்திரித்துள்ளது.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)

இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரையாசிரியர்கள் கீழ்க்கண்டவாறு உரை கூறியுள்ளனர்:

நச்சினார்க்கினியர் உரை

“முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்த்தது என்பதூஉம் தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று...”

இளம்பூரணர் உரை

“மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.”

கீழோராகிய வேளாளர், மணவினைச் சடங்குகள் மறுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. நுணுகி ஆராய்ந்தால் சங்க கால வாழ்வியலில் அகத்திணைக்கு உரியோராக ஏற்றுக் கொள்ளப்படாமல், புறத்திணைக்குரியோராக வாழ்ந்த அடியோரும், வினைவலருமே பிற்காலத்தில் வேளாளர் என அழைக்கப்பட்டனர் என்பதை அறிய முடியும். அடியோரை ஐரோப்பிய அடிமை ஊழியர்களுக்கும், வினைவலரைக் கீழாள்களுக்கும் ஒப்புமைக் காட்டலாம். ஆரம்பக் காலங்களில் போர் அடிமைகள் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்ட மக்களாக நடத்தப்பட்ட நிலையே அடியோராகும். ஏவல் தொழிலில் இருந்து காலப்போக்கில் பண்பட்ட பிரிவினர் வினைவலராக ஏற்றம் பெற்று விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வினைவலரில் ஒரு பிரிவினர் திருமணச் சடங்கு அனுமதிக்கப்பட்ட அகத்தினைக்குரியோராக ஏற்றம் பெற்று உயர்குடி வேளாளராகி விடுகின்றனர்.

நச்சினார்க்கினியர் உரையில், முதல் ஊழிக் காலத்தில் வேளாளருக்கும் மணவினைச் சடங்குகள் உண்டு எனக் கூறுகிறார். போர் அடிமையாகாமல், சுதந்திர குடிகளாக வாழ்ந்த நிலையில் வேளாளருக்கு கரணம் இருந்ததை இது சுட்டுவதாகலாம். மகற்கொடை மறுத்து வேந்தர்களின் மேலாண்மையை ஏற்க மறுத்த சீறூர் மன்னர் மரபினரும், முதுகுடி மன்னர் மரபினரும் போர் அடிமைகளாக்கப்பட்ட நிலையில் அடியோராயினர். பின்னர் அடியோர், வேந்தர்களுக்கு உண்மையான ஏவலராக நடந்து கொள்வதைக் கணக்கில் கொண்டு சிறுகுடியாக அங்கீகரித்து அவர்களுக்கு மணவினைச் சடங்குகள் அனுமதிக்கப்படுகின்றன. இதனையே இரண்டாம் ஊழியில் வேளாளரும், கரணம் தவிர்க்கப்பட்டுப் பின்னர் முதனூலாசிரியர் கூறிய முறையில் கரணம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என நச்சினார்க்கினியர் கூறுகின்றார் எனலாம்.

நான்கு நிலத் தெய்வங்களையும் ஆண் தெய்வங்களாகக் கொண்டிருந்த சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில், பெண் தலைமைக் குடிகள் அதிகம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெண் தலைமைக் குடிகளாக வாழ்ந்ததற்கான எச்சங்களை வேளாளர் சமூகத்தினரிடமே அதிகளவில் காணமுடிகிறது. நெல்லை மாவட்டத்தில் வாழும் நற்குடிவேளாளர் (சிவகளைப் பிள்ளைமார்) சாதியினரிடம், சொத்துரிமை பெண்களுக்கு உள்ளதை இன்றும் காணலாம். மிகச் சமீப காலம் வரையிலும் நாஞ்சில் வேளாளர் சாதியினரிடம் நடைமுறையில் இருந்த மருமக்கள் வழிச் சொத்துரிமை பெண் தலைமை சமூகத்தின் திரிந்த வடிவமாகும். தமிழக வேளாளரைப் போன்று, தங்களை ‘சூத்திரர்' என அழைத்துக் கொள்ளும் கேரளாவின் நாயர் சமூகத்தினர் சென்ற தலைமுறையில்கூடப் பெண் தலைமைச் சமூகமாகவே வாழ்ந்தனர். இன்று உலகில் பண்பாட்டுப் படிநிலையில் மிகவும் கீழ்நிலையில் வாழும் பழங்குடிகளிடம்கூட இத்தகைய பெண் தலைமை காணப்படவில்லை. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, பண்பட்ட சமூகத்தின் ஒரு அங்கமாக வாழ்ந்து வரும் வேளாளரிடம், இன்று வரையிலும் பெண் தலைமைச் சமூகத்தின் பல பண்புகள் நிலவுவது ஒரு பெரும் புதிரேயாகும்.

ஏற்கெனவே, ஆண் தலைமைச் சமூகங்களாக வாழ்ந்த குடிகள் போர் அடிமைகளாக்கப்பட்டபோது, பெரும்பாலும் பெண்களே கைக்கொள்ளப்பட்டு ‘கொண்டி மகளிர்' ஆக்கப்பட்டனர். தோற்ற குடிகளின் ஆண்கள் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது துரத்தப்பட்டனர். கைக்கொள்ளப்பட்ட பெண்டிரின் வாழ்விடங்கள் ‘வேளம்' எனப்பட்டது. வேளத்துப் பெண்களை வேளாட்டி அல்லது வெள்ளாட்டி என அழைத்தனர். இந்த அடிமைப் பெண்களின் மூலம் இச்சமூகம் தழைத்ததால், இவர்களிடையே பெண் தலைமை தோன்றிவிட்டது போலும். சூத்திரர் (நாயர்) என்றும், வேளாளர் என்றும் அழைக்கப்படும் சாதிகளிடமே மருமக்கள் வழிச் சொத்துரிமை வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணச்சடங்குகள் மறுக்கப்பட்டு, அடிமை மாந்தராக வாழ்ந்த இம்மக்களைப் புறத்திணைக்குரியோராக சங்க இலங்கியங்கள் சித்திரிப்பது இயல்பானதே. உலகம் முழுவதும் நிலவிய நிலமானிய அரசுகளில் அடிமை மாந்தருக்கு இவ்வாறு திருமணச்சடங்குகள் மறுக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. இத்தகைய அடிமை மாந்தரே உழவுத் தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

வேள் - தலைமை

மூல திராவிட மொழியில் ‘வேள்' என்பதற்கு விருப்பம், ஒளிவிடு, தலைமை என்ற பொருள்கள் தரப்படுகின்றன. வேத மொழியில் காணப்படும் ‘ராஜா' என்ற சொல்லுக்கும் ஒளிவீசுதல், தலைமை பெறுதல், சிறப்பாயிருந்தல், தன்வயப்படுத்தல் ஆகிய பொருள்கள் உள்ளதாகக் கூறும் வரலாற்றறிஞர் ரொமிலா தாபர், ‘வேள்' என்ற சொல்லிற்கு அளிக்கப்படும் பொருள்களும் ‘ராஜா' என்ற சொல்லுக்கான பொருள்களும் ஒன்றுபட்டிருக்கின்றன என்று வலியுறுத்துவார். தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் நூற்பா 34க்கு நச்சினாக்கினியர் உரை கூறுமிடத்து “.... முதலிய பதியிற்றோன்றி ‘வேள்' எனவும் ‘அரசர்' எனவும் உரிமையெய்தினோரும்” எனக் குறிப்பிடுகின்றார். இச்சான்றுகளைக் கூறி, ‘வேள்' என்ற சொல்லும் ராஜா (அரசர்) என்ற சொல்லும் குலத்தின் தனிப்பெரும் தலைவன் என்ற ஒரே பொருளைக் குறிப்பதை ஆர். பூங்குன்றன் நிறுவுகின்றார்.

ஆனால், தமிழ் நிகண்டுகள் அனைத்துமே ‘வேளாளர்' என்ற சொல்லிற்கு நேர்ப் பொருளாக ‘சூத்திரர்' என்ற சொல்லையே குறிப்பிடுகின்றன. அரசர்களாகிய வேளிரையும், வேளத்துப் பிள்ளைகளாகிய வேளாளரையும் ஒரே வகையினராக நம்பிக்கொண்டு இன்புறுவது மிகப் பெரும் கேலிக் கூத்தாகும். ‘கஞ்சி' எனுஞ் சொல்லும், ‘கஞ்சா' எனுஞ் சொல்லும் ஒரே மாதிரியான உச்சரிப்பையே கொண்டுள்ளதைக் கொண்டு இவ்விரு பண்டங்களுக்கும் தொடர்புண்டு என யாரும் எண்ணுவதில்லை. சங்க காலத்தில் நெய்தல் நிலக் குடிகளை ‘பரதவர்' என அழைப்பர், வணிகர்களாகிய செட்டிகளுக்கும் ‘பரதர்' என்ற பட்டம் சூடுகின்றனர். இவ்விரு குடிகளும் சங்க காலத்திலிருந்தே தனித்தனிக் குடிகளாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. எனவே வேளிரும் வேளாளரும் ஒன்று என்பது போன்ற சொல் ஆராய்ச்சி சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவாது என்பதை அறிய வேண்டும்.

தமிழரைப் பழகுடிகளாக்கி மகிழும் மாயைகள்

ஆரிய மாயை, பார்ப்பனரை உயர்த்துவதற்காகத் தமிழ்ச் சமூகத்தை ஆரியருக்குக் கடன்பட்டதாகக் காட்ட முயல்கின்றது. இவ்வகையில் தமிழரைப் பழங்குடிகளாக்கி மகிழ்ந்த டி.டி. கோசாம்பியின் குறிப்புகளை முன்னரே பார்த்தோம்.

வேளாள மாயையோ, வேளாளரை உயர்வுபடுத்துவதற்காகப் பிற தமிழ்க் குடிகளை வேளாளருக்குக் கடன்பட்டதாகக் காட்ட முயற்சிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அனைத்து மாண்புகளுக்கும் வேளாளரே காரண கர்த்தாக்கள் என்ற அடிப்படையில் வேளாள மாயையினரின் வரலாற்றாராய்ச்சி உள்ளது. அதே சமயத்தில் "தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடான சாதிய அமைப்பு வடக்கிலிருந்து வந்த ஆரியப் பார்ப்பனரின் சூழ்ச்சியால் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது" என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. சாதியச் சமூக அமைப்பு தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் இயல்பாக பரிணமித்தது என்று கருதினால், வேளாளர், தமிழரில் நாலாஞ் சாதியாகிவிடுகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காகவே சாதியச் சமூக அமைப்பின் தோற்றத்திற்கு ஆரியப் பார்ப்பனரைக் காரண கர்த்தாவாகக் காட்ட வேளாள ஆர்வலர்கள் முயல்கின்றனர். சில பிராமண ஆர்வலர்களோ "சாவு வீட்டிலும் பிணமாக இருக்க விரும்புபவனைப் போல்" இருக்கருதுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.

தமிழரில், நாலாஞ்சாதி என்ற நிலையிலிருந்து வேளாளரை மீட்க உதவும் இக்கருதுகோள் பிற தமிழ்ச் சாதிகளால் எட்ட முடியாத இடத்தை பிராமணருக்கு அளிக்கின்றது. இவ்விடத்தில் வேளாள ஆர்வலருக்கும், பிராமண ஆர்வலருக்கும் இடையில் ஒருவிதமான கள்ளக்கூட்டு உள்ளதைக் காணமுடிகின்றது.

வேளாளர், தங்களை உயர்வுபடுத்திக் கூறிக் கொள்வதில் ஆட்சேபிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இப்போலியான உயர்வை, பிற தமிழ்க்குடிகளைப் பழங்குடிகளாக்கிச் சாதித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. முனைவர் க. கைலாசபதியின் கருத்துகள் வேளாள மாயையினரின் இப்போக்கினை உணர்த்தும்:

“சிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஒயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச் சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சங்க காலத் தமிழகத்தில் மெல்ல, மெல்ல அரசுகள் தோன்றலாயின. சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசரும், தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருந்தல் வேண்டும். சங்க காலத்தின் நடுப்பகுதியில், அவர் அரசராய் மாறும் நிலையை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈற்றில் பொருளாதாரத்திலும், தொகையிலும் சிறந்த உழவர் (மருதநிலத்) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலிமை சிறந்து விளங்கினான். புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாகவமைந்த குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருதிய நிலையிலே அளவு மாறுபாடு குண மாறுபாடாக உருமாறியதே சங்க கால அரசியல் நிறுவனமாகும். அவர்களை நிலக்கிழார்கள், நிலப்பிரபுக்கள் அல்லது வேளாளர்கள் என நாம் குறிப்பிடலாம்.”

சங்க காலத்திற்கு முந்திய தமிழரை டி.டி. கோசாம்பி போன்று முனைவர் க. கைலாசபதியும் பழங்குடியாகவே சித்திரிக்கிறார். இவ்வாறு பழங்குடிகளிலிருந்து வளர்ச்சியடைந்த, பண்பட்ட குடிகளை இவர்கள் வேளாளராகச் சித்திரிக்கின்றனர். வேளாளரை பண்பட்ட குடியாகக் கூறி மகிழும் மறைமலையடிகள், பிற தமிழ்க் குடிகளை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடுகிறார் பாருங்கள்:

“தமிழ்நாடு புகுந்தப் பார்ப்பனர் பண்டு தொட்டே ஊன் மறுத்த சைவ அருளொழுக்கத்தினரான உயர்குடி வேளாளருடன் கலக்க இடம் பெறாமல் தம் போல் ஊன் உணவு கொள்வாரான ஏனைய இழிகுடித் தமிழருடன் மட்டுமே கலக்க இடம் பெற்று....” (மறைமலையடிகள், தமிழர் மதம் - பக். 56)

சங்ககால வாழ்வுக்கு முந்திய தமிழ் குடிகள் சாதி பேதமற்ற மிக எளிய மேய்ச்சல் வாழ்க்கை குடிகளாக இருந்திருந்தால் மட்டுமே, வேளாளர் மருதநிலத் தலைவனாக ஏற்றம் பெற்றதாகக் கதை புனைய முடியும். எனவே வேளாளரை உயர்வுபடுத்தும் நோக்கில், ஒட்டு மொத்தத் தமிழக் குடிகளுமே 2500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகளாக வாழ்ந்தனர் என்ற கருதுகோளை வேளாள மாயையினர் கொண்டுள்ளனர். இவ்வாறு, ஆரிய மாயையினரும் வேளாள மாயையினரும் ஒருசேர, சங்க கால வாழ்வியலுக்கு முற்பட்ட தமிழ் குடிகளைப் பழங்குடிகளாகத் தொடர்ந்து சித்திரித்து வருகின்றனர்.

உண்மை அவ்வாறாயின் தமிழ்ச் சமூகப் பண்பாட்டினை வட ஆரியரே வளர்த்தெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலரின் கருதுகோளே சரியானதாகிவிடும். ஆனால் தமிழ்ச் சமூகத்தைப் பண்பாட்டுத் தளத்தில் வளர்த்தெடுத்ததாக நம்பப்படும் வட ஆரியச் சமூகத்தை விடச் சிறப்பான பல தனித்தன்மையுடைய பண்பாட்டுக் கூறுகளை தமிழ்ச் சமூகத்தில் காண முடிகின்றது.

உலகின் பண்பட்ட குடிகள் எவற்றிடமும் காணமுடியாத பல தனித் தன்மையுடைய பண்பாட்டுக் கூறுகளைத் தமிழரிடையே காண முடிகின்றது. தன்னை வளர்த்தெடுத்ததாகக் கூறப்படும் வட ஆரிய சமூகத்தைவிட சிறப்பான, பல மேம்பட்ட பண்புகளைத் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது எவ்வாறு என்பதை இரு மாயையினரும் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர். தமிழரின் தனித் தன்மைகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

Saturday, 18 June 2011

லெப்டினன்ட் சங்கர் வீர வரலாறு

லெப்டினன்ட் சங்கர்


ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.


அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..

ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.



ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.


சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.


தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.
ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.

நன்றி - எரிமலை

தலைவர் பிரபாகரனின் "போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்

தலைவர் பிரபாகரனின் "போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்"




இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.

-தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு.வே.பிரபாகரன் அவர்கள

இந்திய - புலிகள் போர்

‘தமிழீழ விடுதலை’ என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. ‘தமிழீழவிடுதலை’ என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.

ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதி, சமய, பிரதேச வேறுபாடு இன்றி, தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்தார். உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ் சிறிய தமிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது.

இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழந்தனர். இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை ‘தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்’ என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத் தொடங்கினர்.

இந்திய தமிழீழப் போர்

1987ஐப்பசி 10ம் நாள் இந்திய – தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் M.G. இராமச்சந்திரனுக்கு 1987 ஐப்பசி 11ம் நாள் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.



‘எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு. பரத், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா சனாதிபதி ஜெயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர்.



அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.



யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டை கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப் புலிகளை வழிநடத்தினார். தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப் படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தனது போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார்.

கெரில்லா போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர் கொள்ளத் திராணியற்ற இந்தியப் படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொது மக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது

இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987 இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதி மொழிகளின் படி இடைக்கால அரசைத் தமிழ்ப்பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார். ஆனால் ராஜீவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலை அரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் தன்னுடைய ஆயுதப் படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.

சுதுமலைப் பிரகடனம்



இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.

நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன்.

தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு, தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.



*ஒரு இந்திய இராணுவத் தளபதியின் அரசியல் வாக்குமூலம்*

*'இலங்கையில் தலையீடு"*

மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள் என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார். 79 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்;கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் - இந்தியத் தூதர் ஜே.என்.டிக்சிற்- மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்; ஆகியோர் பலாலிப் படைத்தளத்தில் - ஒரு சந்திப்பின் பின் - ஒன்றாக நின்று எடுத்த நிழல்படம் நூலின் முன் அட்டையை அலங்கரித்துள்ளது. இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் முதல் 137 பக்கங்களுடன் நூல் நிறைவடைகின்றது. ஏனைய பக்கங்கள் இலஸ்ரேட்டட் வீக்லி என்ற இந்தியச் சஞ்சிகைக்கு நூலாசிரியர் 1991 இல் வழங்கிய செவ்வி மற்றும் இந்தியத் தளபதிகளின் கடிதங்கள் - கட்டளைகள்-தகவல்; அட்டவணைகளுடன் நிறைக்கப்பட்டுள்ளது.

*நூலாசிரியர் கூறும் தகவல்கள்*

ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தினால் ஆரம்பம் முதலே இந்திய சமாதானப்படை குழப்பகரமான நோக்கங்களுடன்- பிழையாக வழிநடத்தப்பட்டன என்று நூலாசிரியர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குழப்பங்களை, பிழைகளைச் சரிசெய்யத் தான் முயன்று தோற்றதாக நூலாசிரியர் சம்பவங்களுடன் கூறுகின்றார்.

தனி ஈழம் என்ற தமிழரின் அரசியல் அபிலாசையை ஈடேற்றக்கூடிய ஒரே இயக்கம் புலிகள் இயக்கம் தான் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்ததைத் தான் கண்டுணர்ந்ததாக நூலாசிரியர் பிரகடனப்படுத்துகின்றார். ஆனால் தமிழ் மக்களிடமிருந்து புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்துவதுதான் இந்திய சமாதானப்படையின் பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று டிக்சிற் கருதினார். இது நடைபெறாதென்று தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

புலிகளின் ஆயுதக் கையளிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் பிரதம மந்திரியின் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செயலிழந்து போன மற்றைய இயக்கங்களுக்கு ~றோ| அமைப்பினர் புதிய ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தனர் என்று நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுத வழங்கலைப்பற்றி டிக்சிற் உட்பட தேவையான அனைவருக்கும் தான் அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் வீடியோச் சுருள் ஆதாரத்தையும் தான் டிக்சிற்றிற்குக் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோச் சுருள் புலிகளால் தனக்குத் தரப்பட்டது என்றும் கூறியுள்ளார் சமாதான காலத்தில் பேச்சிற்கு அழைத்துவிட்டு அங்கே தலைவர் பிரபாகரனைக் கொல்ல டிக்சிற் தீட்டிய சதித் திட்டமொன்றையும் நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

செப்ரெம்பர் 14 ஆம் திகதி (1987) தொலைபேசியூடாக டிக்சிற் தன்னை அழைத்து 'பலாலி படைத்தளத்திற்குச் சந்திப்பிற்காகப் பிரபாகரன் வரும்போது அவரைக் கைது செய்யவும் அல்லது சுட்டுக்கொல்லவும்" என்றார். இந்தச் செய்தியைத் தனது மேலதிகாரியான லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் நூலாசிரியர் கூறினார்.

இதற்கு திபேந்தர்சிங் கூறினார் 'வெள்ளைக் கொடியின் கீழ் ஒரு சந்திப்பிற்காக பிரபாகரன் வரும் போது அவரைச் சுட்டுக்கொல்ல முடியாது" என்று டிக்சிற்றுக்கு அறிவிக்கச் சொன்னார். அதை டிக்சிற்றுக்கு அறிவித்தேன். அதற்கு டிக்சிற் சொன்னார் 'ராஜீவ் காந்திதான் இந்த அறிவுறுத்தலை எனக்குச் சொன்னார். ஆனால் அதை நிறைவேற்ற இந்தியப்படை தயங்குகின்றது. இதற்கு இந்திய சமாதானப்படையின் கட்டளை அதிகாரி என்ற வகையில் நீர்தான் பொறுப்பு" என்று தன்னைக் குற்றம் சாட்டியதாக நூலாசிரியர் தகவல் தெரிவிக்கின்றார்.

டிக்சிற்றுடன் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அடுத்தநாள் ஜெனரல் சுந்தர்ஜி தனது கோபத்தை என்னிடம் காட்டினார் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

*திலீபனின் ஈகச்சாவு*



திலீபனைச் சாகவிடக் கூடாது என்று திபேந்தர்சிங்கிற்கும் - டிக்சிற்றுக்கும் வலியுறுத்திச் சொன்னதாக நூலாசிரியர் எழுதியுள்ளார். அப்படி நடந்தால் அது இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழ் மக்களை மாற்றிவிடும் என்று எச்சரித்ததாகவும் கூறுகின்றார்.

செப்ரெம்பர் 25, திலீபனின் உயிர்பிரிவதற்கு முதல்நாள், திபேந்தர்சிங் ஒரு அறிவித்தலைத் தந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்திக்க டிக்சிற் விரும்புகின்றார் என்பதே செய்தி. அதைப் புலிகளிடம் சேர்ப்பிக்கச் செல்லும் போது வழியில் ஒரு மாபெரும் மக்கள் ஊர்வலம் எதிர்ப்பட்டது என்று நூலாசிரியர் விபரிக்கின்றார்.

'தீப்பந்தங்கள்- மாலைகளுடன் பெண்களும் ஆண்களும் இணைந்து நல்லூர் ஆலயம் நோக்கிச் சென்றனர். சாவின் வாசலில் நின்ற திலீபனைச் சந்திக்க அந்த மக்கள் கூட்டம் சென்றது. இந்திய எதிர்ப்பு சிங்கள எதிர்ப்புக் கோசங்களைக் கூவியவாறு கூட்டம் நகர்ந்தது" என்று நூலாசிரியர் விபரித்துள்ளார்.

பிரபாகரன் - டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர்நீத்தார். பலாலியில் இருந்த தனது தலைமைப்பணிமனையை நோக்கி தலைவர் பிரபாகரன் வந்துகொண்டிருந்த போது திலீபன் மரணித்திருந்தார்" என்று நூலாசிரியர் தனது நினைவுகளை மீட்டுள்ளார்.

'திலீபனின் சாவுடன் ஐ.பி.கே.எவ். மீதான நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் இழந்துவிட்டது" என்று நூலாசிரியர் கூறுகின்றார்.

இந்தச் சம்பவத்திற்கு முன் இந்திய அமைதிப்படையையும் றோ|வையும் புலிகள் சரியாகவே இனம் பிரித்து அறிந்து வைத்திருந்தனர். ~றோ|வின் சதிவேலைகளைப் புலிகள் ஆதாரங்களுடன் தம்மிடம் சமர்ப்பித்தனர் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

*படகுத் துயரம்*

தளபதிகள் புலேந்திரன் - குமரப்பா உட்பட 12 புலிகளின் இழப்பை நூலாசிரியர் ~படகுத்துயரம் என்ற மகுடத்தில் எழுதியுள்ளார். கடலில் 17 புலிகள் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி புலிகளிடமிருந்து கிடைத்த உடனேயே அவர்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பிரிகேடியர் பெர்னாண்டசை அனுப்பினேன் என்று நூலாசிரியர்
தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனைப் பல தடவைகள் தான் சந்தித்திருந்ததால் தலைவரின் மனவோட்டத்தைத் தான் நன்றாக விளங்கிக் கொண்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அந்தப் 17 புலிகளையும் இந்திய அமைதிப் படை பாதுகாக்கத் தவறினால் பிரபாகரனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தான் நன்றாக அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார். அந்தப் 17 புலிவீரர்களும் பலாலி வான் தளத்தின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அது இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த இடத்தைச் சூழ 60 சிங்களப் படையினர் சிங்களத் தள பதிகளால், நிலைகொள்ள வைக்கப்பட்டனர். அந்த 60 சிங்களச் சிப்பாய்களையும் சுற்றி ஒரு பலமான பாதுகாப்பு வேலியைப் போடுமாறு ஒரு இயந்திரப் படைக்கொம்பனிக்கும் - பரசூட் படையணிக்கும் உத்தரவிட்டேன் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

17 புலிகளையும் கொழும்புக்குக் கொண்டுசெல்ல சிங்களப்படை முயற்சித்தால் சயனைட் உண்டு புலிகள் சாகத்தயாராக இருப்பதாகத் தனது மேலதிகாரியான லெப்.ஜெனரல் திபேந்தர்சிங்கிற்கு அறிவித்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 05 ஆம் திகதி (1987) பிற்பகல் 2.15 மணியளவில் தனக்கு ஒரு அவசரச் செய்தி அனுப்பப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். (இந்திய) 'இராணுவத் தளபதியிடமிருந்து கர்கிரத்சிங்கிற்கு" என்று அந்தச் செய்தி இருந்தது.
அந்தச் செய்தியில்...........

பலாலிப் படைத்தளத்தின் சிங்களத் தளபதி பிரிகேடியர் ஜெயரட்ணா தான் விரும்பியதைச் செய்யட்டும். நீர் ஏன் சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தலையிடுகின்றீர்....

சிறிலங்காவின் விமானங்களை நீர் தடுக்க வேண்டாம்... என்றிருந்தது. என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ். இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர்.

*புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.*

புலேந்திரனும் - குமரப்பாவும் ஆளுக்கு இரண்டு சயனைட்டுக்களை உண்டு உயிர் நீத்ததாகத் தனது மருத்துவர்கள் அறிக்கை தந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

'(சிங்கள) எதிரிக்கு அச்சமூட்டும் ஒரு தளபதியாக புலேந்திரன் இருந்துள்ளார்" என்று கூறும் நூலாசிரியர், அவரை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்கும்படி சிங்கள இராணுவத் தளபதி ஜெனரல் ரணதுங்கா தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமலை நகரில் இன மோதல் நடந்த இடங்களைத் தான் நடந்து சுற்றிப் பார்த்த போது தன்னுடன் புலேந்திரனும் வந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி குமரப்பா பற்றி நூலாசிரியர் குறிப்பிடும்போது 'யாழ்ப்பாணத்தில் தான் சந்தித்த முதல் புலித்தளபதி குமரப்பாதான்" என்று எழுதியுள்ளார். தளபதிகள் புலேந்திரன், குமரப்பா ஆட்களைப் பாதுகாக்க தான் முயன்றதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களைக் கைவிட்டது டிக்சிற்தான் என்றும்
கூறியுள்ளார்.

ஒக்டோபர் 08 ஆம் திகதி 1987 ஜெனரல் சுந்தர்ஜி பலாலி வந்து புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி தனக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் டிக்சிற்றுடன் நீர் ஒத்துழைக்கின்றீர் இல்லை என்பது தெரியும். அவர் தனது வேலைகளைத்தான் செய்கின்றார். அவருடைய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தனக்கு அறிவுரை வழங்கினார் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

அத்துடன் சில பிங் கலர் தாள்களைத் தன்னிடம் தந்து வாசிக்கும்படி கட்டளையிட்டார். புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான ஜெனரல் சுந்தர்ஜியின் சிபார்சுகளைப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பது அந்தப் பிங்கலர் தாள்களைக் கண்டதும் தனக்குப் புரிந்து விட்டதாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.

'இன்றிரவே (08 ஆம் திகதி) தாக்கு" என்று லெப். ஜெனரல் திபேந்தர்சிங்கின் முன்னிலையில் ஜெனரல் சுந்தர்ஜி தனக்கு உத்தரவிட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

உத்தரவை நடைமுறைப்படுத்த கிளிநொச்சி - வெள்ளாங்குளம் - முழங்காவில் போன்ற இடங்களில் புலிகளின் முகாம்களைத் தாக்குமாறு தான் படையினரைப் பணித்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் நடந்தது.

*ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய புலிகள் போர் தொடங்கியது.*



பல முனைகளைத் திறந்து யாழ். நகரைக் கைப்பற்ற நான் படைநகர்த்தினேன்" என்கின்றார். தான் நடாத்திய சண்டைகளை நூலாசிரியர் வரைபடங்களின் உதவியுடன் விளக்க முயன்றுள்ளார்
.
I. ஆனைக்கோட்டை சமர்
II. யாழ் - பழைய பூங்காவைக் கைப்பற்றும் சண்டை
III. சுதுமலை நடவடிக்கை
IV. உரும்பிராய் சந்தியைக் கைப்பற்றும் சண்டை
V. கோப்பாய் சமர்
VI. கந்தரோடைச் சமர்
VII. மருதனார்மடம் சமர்

இவ்வாறாகச் சண்டைகளை இனங் காட்டி அந்தச் சண்டைகளின் தன்மைகள் பற்றிச் சுருக்கமாக விபரம் தந்துள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு இராணுவச் சதிமுயற்சி நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கொழும்பிலுள்ள தாஜ் தங்கு விடுதியில் 100 சிறப்புக் கொமாண்டோப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் நூலாசிரியர்
தகவல் வெளியிட்டுள்ளார். சண்டை தொடங்கியதும் இந்தக் கொமாண்டோப் படையினர் பலாலிக்கு அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(பெப்ரவரி 1988) இந்திய - புலிகள் போர் தொடங்கி 4 மாதங்களின் பின்னர் லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கின் இடத்திற்கு லெப். ஜெனரல் கல்கட் நியமிக்கப்பட்டார் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

லெப். ஜெனரல் திபேந்தர் சிங் ஓய்வுபெற்றுச் செல்ல சில வாரங்களுக்கு முன்னர் (சனவரி 1988) நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்கும் பணி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா சென்றார். பணிமாற்றத்திற்கான காரணம் தனக்குத் தெரியாதென்று கூறும் நூலாசிரியர் டிக்சிற்றுடனான முரண்பாடு காரணமாக இருக்கலாம். பிரபாகரனைக் கைது செய் அல்லது சுட்டுக்கொல் என்ற டிக்சிற்றின் உத்தரவைத் தான் மறுத்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

1155 இந்தியப்படையினர் புலிகளுடனான போரில் கொல்லப்பட்டனர் என்று நூலாசிரியர் விபரம் தந்துள்ளார்.

03 தொடக்கம் 07 நாட்களுக்கிடையில் படை நடவடிக்கையை முடித்து - புலிகளை அழிக்க முடியும் என்று தான் சொன்னதாக வெளியாகியிருந்த செய்திகளை நூலாசிரியர் மறுத்துள்ளார்.

இந்தக் காலக்கெடுவை ராஜிவ் காந்தியிடம் சொன்னவர் ஜெனரல் சுந்தர்ஜிதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டள்ளார். புலிகளுடன் சண்டை தொடங்கினால் அந்தப் போர் பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் நடக்கும் என்று மிசோராம் - நாகலாந்து உதாரணங்களைக் குறிப்பிட்டு லெப். ஜெனரல் றொட்டிற்கோவிற்கு தான் சொன்னதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

றொட்றிற்கோ அதை நம்பவில்லை 'நகர்ப்புற போர்முறையில்தான் புலிகள் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள்" என்றும் காரணம் சொன்னார் என எழுதியுள்ளார். சமாதானக் காலத்தில் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்தது போல போர்க் காலத்திலும் தலைவரைக் குறிவைத்து இந்தியப்படை நடாத்திய மூன்று சம்பவங்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

*முதலாவது சம்பவம்*

போர் தொடங்கிய மறுநாள் நிகழ்ந்தது அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.....

பலாலியில் இருந்த சிங்கள இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து நான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றைப் பெற்றேன். அதாவது, கொக்குவில் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் போரை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் என்பதே அந்தத் தகவல்.

இந்தத் தகவலை லெப். ஜெனரல் திபேந்தர் சிங்குடன் விரிவாகக் கலந்தாலோசித்தேன். தலைவரின் இருப்பிடத்தைத் தாக்கி அழிப்பதற்கான அனுமதியையும்-அதற்குத் தேவையான மேலதிக உதவிகளையும் திபேந்தர்சிங் வழங்கினார். எனது கட்டளைப்பீடத்திலிருந்த திபேந்தர்சிங் அங்கிருந்து மேஜர். ஜெனரல் கல்கட்டிடம் ஒரு அறிவுறுத்தலை விடுத்தார். அந்தத் தாக்குதலுக்கான மேலதிக துருப்புக்களை (இந்திய) இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து கேட்டுப்பெறுமாறு அறிவுறுத்தினார். இந்தத் தாக்குதல் தமது படையினரின் ஒருங்கிணைப்பின்மையாலும் புலிகளின் நேர்த்தியான எதிர்த் தாக்குதல்களாலும் தோல்வியடைந்தது, என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்

*இரண்டாவது சம்பவம்*

டிசம்பர் 1987 இல் நடந்தது.

வடமராட்சியிலுள்ள ஒரு வைத்தியசாலை வளாகத்தில் நின்றபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் கடலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்ததாக 'றோ' அமைப்பினர் ஒரு தகவலை வழங்கியிருந்தனர். தாக்குதலுக்காகப் படையினர் அனுப்பப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கட்டளை அறையிலிருந்து தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். ஆனால் நடு இரவு தாண்டியும் கடல்வழி தரையிறக்கத்திற்கான கடற்கலம் வந்து சேரவில்லை. விடியத் தொடங்கியதால் துருப்புக்களைப் பின்வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டேன். அப்போது நாங்கள் எங்கே தரையிறங்க இருந்தோமோ! அங்கிருந்து புலிகள் கடுமையாகத் தாக்கினர் என்று நூலசிரியர் விபரித்துள்ளார்.

கடலிலிருந்து பீரங்கிச் சூட்டாதரவு செறிவாகக் கிடைத்துக்கொண்டிருந்தாலும் எங்களால் அந்த இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்று களத்தில் தலைமை வகித்துக்கொண்டிருந்த கேணல் சொன்னதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

*அடுத்த சம்பவம் வித்தியாசமானது*

தமது உளவுத்துறையினரின் தகவல் சேகரிப்புக்களையும்- தமது படைத்தளபதிகளையும் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.

மட்டக்களப்பில் ஒரு புலி பிடிபட்டிருக்குது. அவரை விசாரித்த கொமாண்டர் தான் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டேன், அவரைப் பிடித்த மாதிரித்தான் என்பது போல லெப். ஜெனரல் றொட்றிக்கோவுக்கு (மட்டு. ஐ.பி.கே.எவ். தளபதி) அறிவிக்க, இவரும் நம்பிவிட்டார். பிரபாகரனைப் பிடித்து விட்டதாகத் தான் அறிவிக்கலாம் என்று லெப். ஜெனரல் நம்பிவிட்டார். அதனால் என்னையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்புக்குப் பறந்தார். அங்கே சென்று பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது பிரபாகரனைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவித் தமிழன்தான் பிடிபட்டிருந்தான் என்று தெரிந்தது" என்று நகைச்சுவையாக எழுதியிருந்தார்.



*முடிவுரை *
முறுக்கு மீசை - வெங்கல ஓசைச்சிரிப்புடன் நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங் புலிகளுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்திய சமாதானப் படைத் தளபதிகள் சிலர் எழுதி வெளியிட்ட நூல்களுடன் ஒப்பிடுகையில் கர்கிரத் சிங்கின் இந்த நூல் சற்று வேறுபடுகின்றது.

மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் கருத்துக்களில் ளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. அவரின் கணிப்பீடுகளில் ஒரு நேர்மை வெளிப்படுத்தப்படுகின்றது. பல உண்மைகளையும் அவர் அம்பலமாக்கியுள்ளார். புலிகளுக்கும் மக்களுக்குமான பிணைப்பை அவர் சரியாக இனங்கண்டு நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சமாதானப் படைத் தளபதியாக இங்கே அவர் பணியாற்றிய காலம் குறுகியது. சமாதான காலத்தில் மூன்று மாதமும் - போர்க்களத்தில் மூன்று மாதமும் என மொத்தம் ஆறு மாத காலம் மட்டுமே இங்கே பணியாற்றியிருந்தார். 1988 ஜனவரியில் பணிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

டிக்சிற்றுடனான முரண்பாடும் - அவரது அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்ததும்தான் தனது பணிமாற்றத்திற்குப் பிரதான காரணம் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

டிக்சிற்றுடன் உடன்பட்டு வேலை செய்யத் தவறுவது பற்றி ஜெனரல் சுந்தர்ஜி தன்னைக் கடிந்து கொண்டதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார். பிரதமர் ராஜிவ் காந்தியின் குரலாகத் தான் ஒலிப்பதாக டிக்சிற் தன்னிடம் கூறியதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்திய சமாதானப்படைக்கு ஒரு உத்தரவு - இந்திய புலனாய்வுத்துறை றோ வுக்கு இன்னொரு உத்தரவு என்று குழம்பி எழுதும் நூலாசிரியர், அரசியலில் - இராணுவ ரீதியில் பெரும் குழப்பம் இந்தியத் தரப்பில் இருந்ததாகவும் எழுதியுள்ளார். நூலாசிரியரின் குழப்பம் பற்றி இங்கே அதிகம் ஆய்வு செய்வதற்கு எதுவுமில்லை. நூலாசிரியர் கூறுவதுபோல அவை ஒரு ~குழப்பமான செயற்பாடு அல்ல. அவை ஒரு நாடகத்தின் பல்வேறு காட்சிகள். இந்திய அரசிற்குப் பெருந் தோல்வியாக முடிந்த அந்த நாடகம் பற்றிய விளக்கங்கள் இங்கே தேவையில்லை.

அரசியல் கணிப்பீடுகளில் நேர்மையும் - வெளிப்படைத்தன்மையும் காட்டிய நூலாசிரியர் தான் நடாத்திய போரில் தமிழ்மக்கள் அடைந்த கொடுமைகள் - அழிவுகள் பற்றிய விடயங்களில் நேர்மையையும் கடைப்பிடிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையையும் கைக்கொள்ளவில்லை. அவற்றை ஒட்டுமொத்தமாகவே இருட்டடிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துள்ளார். நூலாசிரியர் நடாத்திய மூன்று மாதப் போர் என்பது யாழ் நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மும்முனையில் நடாத்தப்பட்ட ஒரு பாரிய மரபுச்சமர். இந்த மூன்று மாதப் போர்க்காலத்தில் யாழ் குடாநாட்டில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல்.

பிரம்படிப் படுகொலை - கொக்குவில் பாடசாலைப் படுகொலை - யாழ் வைத்தியசாலைப் படுகொலை.... என்பன அவற்றில் முக்கியமானவை. மக்களின் வாழிடங்கள் மீது ஆட்டிலறிகள் - டாங்கிகளால் சுட்டு - மக்களைக் கொன்றும் - அகதிகளாக்கியும் - பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் யாழ் நகரை ஆக்கிரமித்த சாதனையை அவர் எழுதவில்லை. மாறாக, மிக உயர்ந்த கட்டுப்பாடு - ஒழுக்கத்தை இந்தியப் படையினர் கடைப்பிடித்தனர். தமிழ் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றனர் என்று மனச்சாட்சியில்லாமல் நூலாசிரியர் பொய் கூறியுள்ளார்.

அதேபோன்று, யாழ்ப்பாண ஊடகங்களான ஈழமுரசு, முரசொலி மற்றும் புலிகளின் ஒளி - ஒலிபரப்பு நிலையங்களை அழித்த செயலைக் கர்கிரத் வெட்கமின்றி நியாயப்படுத்தியுள்ளார். அந்த ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளை - தகவல்களை மக்களுக்கு நேர்த்தியாக வழங்கி வந்தன. புலிகளின் இராணுவ சாதனைகளை மெச்சிப்பேசி மக்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தன என்று தாக்குதலுக்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.

இந்திய - புலிகள் போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும், இரண்டு மாதங்களுக்கும் நடந்திருந்தன. இதில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நடந்த போரின் கதையைத்தான் தனது பார்வையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்த மூன்று மாதகாலப் போருக்குள்ளேயே தலைவர் பிரபாகரன் மீது மூன்று - நான்கு தடவைகள் இந்தியப்படைகள் கொலைத் தாக்குதலுக்கு முயன்றன. ஆனால், போர் தீவிரமடைந்து வன்னி நிலப்பரப்பு முக்கிய போர்க்களமாகிய பின்னர், தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய இந்தியப் படைகள் பல சமர்களையே நடாத்தியிருந்தன. எல்லாவற்றிலும் இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்தியப்படையின் தோல்விக்கு இந்திய அரசின் குழப்பகரமான கொள்கை - பலரின் தலையீடு என்பன பிரதான காரணம் என்று நூலாசிரியர் கூறியுள்ளார். தனது இதே கருத்தையே தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் - ஜெனரல் சர்தேஸ் பாண்டேயும் சொல்லியுள்ளார். என்று நூலாசிரியர் நியாயம் சொல்லி - அதற்கு மற்றைய தளபதிகளையும் துணைக்கு அழைத்துள்ளார்.

ஆனால், தோல்விக்கான காரணம் புலிகள் இயக்கத்திடம் இருந்தது என்பதே உண்மையாகும். *தலைவர் பிரபாகரனின் போரியல் திட்டங்களும் - அவரது* *தலைமைத்துவ ஆளுமையும்தான்*முக்கிய காரணங்களாகும். அத்துடன், *போராளிகளினதும் - மக்களினதும் வீரத்திலும் - ஓர்மத்திலும் - சுதந்திர உணர்விலும்* இருந்தது.*

தமிழரைத் தேடி - 1

1. முன்னுரை:
தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்றனர். தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இவர்கள் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு அமைந்த தொல்லியல் அறிஞர்களின் விளக்கங்களை மட்டுமே, பெரும்பாலும் இவ்வரலாற்றறிஞர்கள் கணக்கில் கொள்கின்றனர். இத்தகைய போக்கினை தமிழக (தென் இந்திய) வரலாற்றாய்வாளர்களிடையே அதிக அளவில் காணமுடிகின்றது. இதன் விளைவாக, பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பல புதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விருப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட உள்ளது. எனவே சற்று விரிவாக எழுதவேண்டிய தேவையைக் கருதி இதனை ஒரு தொடராக எழுதுகிறேன்.

1.1. தமிழ்மொழி தோன்றியபொழுதே செம்மொழியான விந்தை:

கி.மு.300-கி.பி.200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்ககால பாடல்கள், இலக்கிய, இலக்கண வளம் நிறைந்ததாக காணப்படுகின்றன. இக்காலக் கட்டத்தில் தமிழ் எழுத்திற்கும், சொல்லிற்கும் மிகத்தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுவிட்டதை தொல்காப்பியம் மூலம் அறியமுடிகின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமகாலத்தில் உலகில் பேசப்பட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிகராக தமிழ்மொழி விளங்கியது என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

மனிதகுல வரலாற்றில் உலோகப் பயன்பாடு தோன்றி அரசு நிலை கொண்ட பின்னரே மொழியைச் செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகில் முதன்முதலில் மருதநில வாழ்க்கைத் தோன்றிய சுமேரியாவில், ஊருக் நகரில் கி.மு.3400 வாக்கில் ஏறத்தாழ 700 குறியீடுகளைக் கொண்டிருந்த எழுத்துமுறை புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. இக்காலக் கட்டத்தில், சுமேரியாவிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் நிலையான பல நகர அரசுகள் வாழ்ந்தன. அந்நகர மாந்தர் செம்பு பயன்பாட்டுடன் கூடிய நீர்ப்பாசன, விவசாய வாழ்வை மேற்கொண்டிருந்தனர். கி.மு.2900ல் அதே சுமேரிய பகுதியில் நில பிரபுத்துவ அரசுகள் பல தோன்றிய நிலையில், கூனிபார்ம் (ஆப்பு எழுத்து) என அழைக்கப்பட்ட எழுத்துமுறை தோன்றியது. அக்காலக் கட்டத்தின் மேற்காசியாவில் பல்வேறு அரசுகளில் வாழ்ந்த, பல்வேறு மொழி பேசிய மக்களும் 'கூனிபார்ம்' எழுத்து முறையையே பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் நெடுக்கணக்கு (alphabet) எழுத்துமுறை, பாலஸ்தீனப் பகுதியில் அமைந்திருந்த கானன் தேசத்தில் கி.மு. / 600 வாக்கில் தோன்றியது. மொழி வளர்ச்சியில் பூர்வ குடிகளாகக் கருப்பர்கள் வாழ்ந்த மேற்காசியா இத்தகையை நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டிருந்த போதும் இக்காலக்கட்டத்தில் அங்கு பேசப்பட்ட மொழிகள் எதுவும் செம்மொழிகளாகப் பரிணமித்து விடவில்லை. அதன்பின் இப்பண்டைய மேற்காசிய (சுமேரிய) பண்பட்ட குடிகளுடன் உறவுகொண்டு அப்பண்பாடுகளைத் தமதாகச் சுவீகரித்துக்கொண்ட, வெள்ளையினக் குடிகளின் மொழிகளான ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன், அரேபியம் போன்ற மொழிகள் மிகவும் பிற்காலத்தில் செம்மொழிகளாகப் பரிணமிக்கும் வாய்ப்பைப் பெற்றன.

சமஸ்கிருதம் சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் குடியேறும் முன் ஈரான் (பண்டைய எல்லாமைட்) பகுதியில் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்ததால், அம்மொழியும் மேற்காசிய மொழி வல்லுநர்களின் துணையுடன் செம்மொழியாகப் பரிணமித்துவிட்டது. மேற்காசியாவுடன் நேரடித் தொடர்பில்லாத சீன மக்கள், ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் நிலையான அரசுகளுடன் கூடிய மருதநில வாழ்க்கையை மேற்கொண்ட பின்பே சீன மொழி செம்மொழியாகப் பரிணமித்தது.

இச்செம்மொழிகளுக்கெல்லாம் விதிவிலக்காக தமிழ்மொழி உள்ளது. தொன்றுதொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களாலேயே சங்க காலத் தமிழ்ச் சமூகம் தோற்றுவிக்கப்பட்டதாகத் தமிழக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்களோ, கி.மு.800க்கு முன் உலோகப் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. தென்தமிழ்நாட்டில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.4000லிருந்து சிறுகற்காலப் பண்பாட்டு மட்டத்திலும், பிற பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் கி.மு.1800லிருந்து புதிய கற்காலப் பண்பாட்டு மட்டத்திலும் வாழ்ந்து வந்ததைத் தொல்பொருள் தடயங்கள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விரு பண்பாட்டுக் குடிகளும் மிக எளிமையான பொருளியல் வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். மொழி வளர்ச்சிக்கான எந்தவிதமானத் தடயங்களையும் இப்பண்பாடுகளில் காண முடியவில்லை. இத்தகைய எளிய மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களிடம் மொழி வளர்ச்சி தோன்றியிருக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானதாகும். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால், கி.மு.800க்கு முன் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் பல்வேறு மொழிகளையே பேசினர் எனத் துணிந்து கூறலாம்.

தமிழகத்தில், கி.மு. 800-கி.மு.500 வாக்கில் சேர நாட்டிலும் (இன்றைய கேரளா), தென்பாண்டி நாட்டிலும் இரும்பு பயன்பாடு தோன்றியதைத் தொல்லியல் தடயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வுலோகப் பயன்பாடு கி.மு.300 வாக்கில் தமிழகம் முழுவதும் பரவி, மருத நில வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த அரசுருவாக்கத்திற்கு அடிகோலியது. இச்சூழல் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்த பூர்வகுடி, பழங்குடி மக்கள் ஒரே மொழியைப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மருத நில நாகரிகம் தோன்றிய சில நூற்றாண்டுகளுக்குள் இலக்கிய மொழியாகப் பரிணமித்துவிட்ட தமிழ், மிகவும் எளிமையான கொடுமொழியாகவே இருந்திருக்க முடியும். மாறாக, சமகாலத்திய செம்மொழிகள் அனைத்தையும்விட ஒரு படி மேலாகவே தமிழ்மொழி செவ்வியல் தன்மையை அடைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மிக நீண்ட கால மருதநில வாழ்க்கையை மேற்கொண்டு மொழி வளர்ச்சியைப் படிப்படியாகத் தோற்றுவித்திருந்த மக்களின் மொழிகளான சுமேரியன், எல்லாமைட் போன்ற மொழிகள்கூட செவ்வியல் தன்மையை அடைந்திருக்கவில்லை. ஆனால், திடீரென நாகரிக மக்களாக மாறிய தமிழரின் மொழி சிறப்பான செவ்வியல் தன்மையுடன் விளங்கியது மிகப்பெரும் புதிரேயாகும்.

மொழியியலில் மட்டுமல்லாமல், சங்க காலத் தமிழர் தொழில்நுட்பம், வணிகம், போக்குவரத்து, விவசாயம், போர்முறை, அறநெறி போன்ற பல்வேறு துறைகளிலும் சமகாலத்திய வளர்ந்த சமூகங்களுக்கு இணையாக வளர்ந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இப்புதிரை விடுவிக்கும் வகையில் தமிழக வரலாற்றாய்வாளர்களிடையே இருவகையான கருதுகோள்கள் நிலவுகின்றன.

1.2 ஆரிய மாயை (அல்லது) ஐரோப்பிய மாயை

தமிழ் மொழி தோன்றியபொழுதே செம்மொழியான புதிரை விடுவிக்கும் வகையில் 'ஆரியமயமாதல்' என்ற கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வட இந்தியாவிலிருந்து குடியேறிய ஆரியராகிய பிராமணரால் வளர்த்தெடுக்கப்பட்டவை என்பது இக்கருதுகோளின் சாராம்சமாகும். இக்கருதுகோள், பிறப்பிலேயே தமிழ்மொழி செம்மொழியான புதிரை எளிதில் நீக்கிவிடுகின்றது. இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனை 'ஆரிய மாயை' எனவும் கூறுவர்.

கி.மு.600 வாக்கில் வடஇந்தியாவிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய பிராமணர்கள் தமிழ் அரசர்களைக் கத்தியின்றி, இரத்தமின்றித் தங்களின் பண்பாட்டு மேலாண்மையினால் வென்றனர் என்பது இவர்களின் கருத்தாகும். இதற்கு ஆதரவாக புராணங்கள் கூறும் அகத்தியனின் தென்னகக் குடியேற்றம் தொடர்பான கதைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். வட இந்திய மார்க்ஸிய வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பியின் கீழ்க்கண்ட குறிப்புகள் ஆரிய மாயையின் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

" வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குத் தெற்கிலுள்ள இராஜவம்சப் பட்டியல் இன்பமான பொழுதுபோக்கு. இக்ஷ்வாகு, பல்லவர், பாணர், கடம்பர், சேதியர், கலச்சூரி, சாளுக்கியர், சோழர், பாண்டியர், சேரர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அர்த்தமற்றது. இடைக்கால இந்திய வரலாற்றைப் பற்றிய புத்தகங்களில் இந்த விவரங்களைப் படித்துக்கொள்ளலாம். ஆனால் இப்புத்தகங்கள், பொதுவாக இம்மன்னர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டன. உயர்ந்த பிராமணப் பண்பாடு, பழங்குடி மக்கள் மீது திணிக்கப்பட்டது, அல்லது அவர்களால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் பரிமாற்ற உணர்வின் அடிப்படையில், பிராமணர்கள் பூர்வகாலப் பழங்குடி மரபுக் கூறுகளை ஏற்றுக்கொண்டனர்". (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, முதற்பதிப்பு பிப் - 1989; பக் 349.)

சங்ககால வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்க்குடிகளை, கோசாம்பி போன்ற ஆய்வாளர்கள் பழங்குடிகளாக்கி மகிழ்வது தொல்லியல் தடயங்களுக்குப் பெரிதும் முரண்படவில்லைதான். எனினும் தமிழ்வேந்தர் குடியினர் உள்ளிட்ட தென்னக அரசர்களின் வம்சப் பட்டியலைக் கேலிக்குள்ளாக்கிப் பேசுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டுடன் கூடிய மருத நில வாழ்க்கை கி.மு.500லேயே தோன்றியிருந்ததற்கானத் தொல்லியல் தடயங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் 75 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்த நிலையில், பண்டைய தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய கோசாம்பியின் கருத்து மிகப்பெரிய கேலித்கூத்தாகும்.

"புராதன இந்திய சரித்திர அறிமுகம்" என்ற நூலில் மோரியர் பற்றிய தமிழ் இலக்கியச் சான்றுகள் குறித்த தனது கருத்தைக் கோசாம்பி வெளியிட்டுள்ளார்.

"மோரியர் காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தை நான் மாற்றிக்கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை." - என மேற்கண்ட நூலில் கோசாம்பி குறிப்பிடுகின்றார்.

மோரியர் காலமாகிய கி.மு.300ல், தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகமே நிலவியது எனக்கூறும் கோசாம்பியின் கீழ்கண்ட குறிப்புகள் அவரது உள்ளக்கிடக்கையை மேலும் தெளிவாக்குகின்றது. "மொழி விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குரிய ஊக்கம் வடக்கிலிருந்து பெரிய அளவுக்கு கி.மு.6ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தடைந்தன." (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாககீகமும் பற்றிய வரலாறு, பக் - 202)

"விந்திய மலைக்குத் தெற்கே ஊடுருவிய ஆரியக் குடியேற்றத்திற்கும், அகத்திய கோத்திரத்திற்கும் சில தொடர்புகள் உண்டு. தெற்கிலுள்ள பெருங்கற்காலத்துடன் அத்தொடர்புகளை உறுதி செய்யலாமென்ற ஆர்வம் எழுந்தாலும் அதன் அடிப்படை இன்றளவும் தெய்வீகக் கற்பனை வடிவிலேயே உள்ளன." (டி,டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, பக் - 164)

கி.மு.600ல் வடக்கிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரியப் பார்ப்பனர், பழங்குடிகளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு மொழியையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்பது கோசாம்பியின் கருதுகோளாகும். மோரியர் காலமாகிய கி.மு.300 வரை தமிழகத்தில் புதியகற்கால நாகரிகமே நிலவியது என்றும், இக்கருத்தைத் தான் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கோசாம்பி அடித்துக் கூறுகின்றார். எனவே கி.மு.600லேயே தமிழகத்திற்குள் குடியேறிவிட்டதாக் கருதப்படும் ஆரிய ரிஷி கோத்திரத்தினரும், புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்திலேயே தமிழகத்திற்குள் குடியேறினர் என்றுதான் கோசாம்பி கருதியிருக்க வேண்டும்.

புதியகற்காலப் பண்பாட்டு மட்டத்தில் வாழ்ந்த கருப்பரிடம் மொழியும் பண்பாடும் வளர்ந்திருக்கவில்லை என்றும், அதே பண்பாட்டு மட்டத்தில் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் வளர்ந்த பிராமணப் பண்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றும் மனம் போன போக்கில் டி.டி.கோசாம்பி போன்ற சிறந்த வரலாற்றறிஞர் எழுதுவது வியப்பாக உள்ளது. அகத்தியனின் குடியேற்றத்துடன் டி.டி.கோசாம்பியால் சரியாகவே தொடர்புபடுத்தப்படும் பெருங்கற்கல்லறை பண்பாடு நன்கு வளர்ந்த நிலையிலிருந்த இருப்புப் பயன்பாட்டு மருதநில விவசாயப் பண்டபாடாகும். கி.மு.600ல் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் இரும்பு பயன்பாட்டுடன் கூடிய மருத நில விவசாய நாகரிகத்தைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய வளர்ச்சியடையாத கொடுமொழியைச் செம்மைப்படுத்திச்'செந்தமிழை'த் தோற்றுவித்தனர் என்று கூறினால்கூட ஏற்புடையதாக இருக்கும்.

அவ்வாறு கூறினால், கி.மு.600லேயே செம்மைப்படுத்தப்பட்டுவிட்டத் தமிழ் மொழியில் மோரியர் காலமாகிய கி.மு.300ல் (சங்க காலம்) இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டாகி, தமிழக அரசவம்ச பட்டியலுக்கும் அர்த்தமுண்டாகிடும் என்பதால் முன்னுக்குப்பின் முரணாக கோசாம்பியார் குறிப்பிடுகின்றார் போலும். ஆரிய ஆர்வலர்கள் கருதுவது போல், வட இந்தியாவிலிருந்து தர்ப்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்ட பிராமணர் (அகத்திய கோத்திரத்தினர்) ஒருபோதும் தனிக்கூட்டமாக தென்னகத்தில் குடியேறிவிடவில்லை. தமிழக வேந்தர் வேளிர் குடியுடன் கூடவே பிராமணர்களின் தென்னகக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசகுலத்தவரின் பூர்வீகம், வடஇந்தியா என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்று பகர்கின்றது.

"நீயே வடபால் முனிவன் தடவினுட் தோன்றி
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற் போரண்ணல்" (புறம் : 201)

இப்புறநானூற்றுப் பாடலில், தமிழக வேளிர் குடியினர் சங்ககாலத்திற்கு 49 தலைமுறைக்கு முன் வட இந்தியாவிலுள்ள துவாரகையை ஆண்ட அரசகுலத்தவரின் வழிவந்தவர்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது.

கி.மு.600லிருந்து தமிழகம் முழுவதும் கிடைக்கக்கூடிய பெருங்கற்கல்லறைப் பண்பாடு குஜராத் பகுதியிலிருந்து தமிழகத்திற்குள் பரவியிருக்கலாம் என்ற தொல்லியல் அறிஞர்களின் கருத்தும் புறநானூற்றுப் பாடலின் செய்திக்கு உயிரூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர் எஸ்.இராமச்சந்திரன், "சங்க கால உற்பத்திக் கருவிகள்" என்ற கட்டுரையில், தமிழகப் பெருங்கற்கல்லறைகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் பெரும்பாலும், இரும்பினால் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதங்களாகவே உள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இச்செய்தியிலிருந்து, தமிழக பெருங்கற்கல்லறைப் பண்பாட்டினை போர்குடிகளான தமிழக அரசர் குடியினரின் குடியேற்றத்துடன் தொடர்புப்படுத்த முடிகின்றதேயன்றி, டி.டி.கோசாம்பி கருதுவதுபோல் அகத்திய (பிராமண) கோத்திரத்தவரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்த முடியவில்லை. அவ்வாறாயின் தமிழகத்தில் வழங்கப்படும் அகத்தியன் தொடர்பான கதைகளுக்குப் பொருள் ஏதும் இல்லை எனக் கூறலாமா? இச்சிக்கலுக்கு நக்கினார்க்கினியரின் உரை ஒன்று தீர்வு நல்கின்றது.

"துவராபதி போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக் கண்ணரசர்
பதினெண்மாயும், பதினெண்குடி
வேளிருள்ளிட் டாரையு மருவா
ளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி". (தொல்: எழுத்ததிகாரம்: பாயிரம்: நச்சினார்க்கினியர் உரை)

இதன் பொருளாவது, சிவபெருமானின் விருப்பத்திற்கிணங்க தென்திசை நோக்கிப் பயணித்த அகத்தியன், வழியில் துவாரகை சென்று, மாவலியிடமிருந்து பூமியை அபகரிக்க, நிலம் அளந்த நெடுமுடியண்ணலாகிய திருமாலின் வழி வந்த வேந்தர் குடியினரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும், அருவாளரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, தமிழகம் குடியேறிப் பின் அவர்களின் உதவியுடன் காடு கெடுத்து நாடாக்கினான் என்பதாகும். அதாவது அகத்திய முனிவரின் தலைமையிலேயே தமிழக அரசகுலத்தவர் வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாக நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். வடக்கிலிருந்து குடியேறிய பிராமண கோத்திரத்தினர் கத்தியின்றி, இரத்தமின்றி தங்கள் பண்பாட்டு மேலாண்மையினாலேயே தமிழகப் பூர்வகுடி மக்களை வென்றெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருதுகோள், பேனைப் பெருமாளாக்கிக் காட்டும் வித்தையே ஆகும். சிறந்த போர்க் குடிகளான தமிழக வேந்தர் குடியினர் தங்களுடன் குடிபெயர்ந்த வேளிர் மற்றும் அருவாளர் ஆகிய போர்க் குடிகளின் துணை கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களைத் தங்களின் வாளின் வலிமையால் வணக்கியதையே சங்க இலக்கியக் குறிப்புகளும், தொல்லியல் தடயங்களும் நிறுவுவதாக உள்ளன. இப்போர்க் குடிகளுக்குக் குரு நிலையில் தலைமையேற்று வழி நடத்தியவர் அகத்திய கோத்திரத்தினர் ஆவர். எனவே, தமிழக அரசர் குடியினரையும் பிராமண கோத்திரத்தினரையும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரித்துப் பார்ப்பதற்குத் தமிழகச் சூழலில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணரவேண்டும்.

எனவே, பிராமணமயமாதல் அல்லது ஆரியமயமாதல் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருகோள் அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப, பல ஆதாரங்களைத் திரித்துக் கூறியும், திரிக்கமுடியாத ஆதாரங்களை மறைத்தும் கட்டப்பட்ட ஒரு மாயையாகும். மனித இனங்களில் ஐரோப்பிய இனங்களே உயர்ந்தவை, ஐரோப்பிய இனங்களில் ஆரிய இனமே உயர்ந்தது. ஆரியரில் பிராமணரே உயர்ந்தவர் என்ற கருத்துதான் ஆரிய மாயையின் சாராம்சமாகும்.

டி.டி. கோசாம்பி கருதுவது போல், மொழி வளர்ச்சியில் சிறிதும் முன்னேற்றம் பெற்றிராதப் புதியகற்காலப் பண்பாட்டுக் குடிகள் வாழ்ந்த தமிழகத்தில், ஆரியமயமாதல் நடைபெற்றிருக்குமேயானால் தமிழ் மொழி, அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான பல சொற்களைச் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொற்கள் தமிழுக்கே உரியனவாக நாடு, கூற்றம், ஊர், சீறூர், பாடி, பட்டணம், பாக்கம், குறும்பு, வேந்தன், நாடன், ஊரன், மகிழ்னன், வேளிர், வெற்பன், சிலம்பன், சேர்ப்பன், புலம்பன், கிழவன், சான்றோன், ஏனாதி, எட்டி, சீறூர் மன்னன், பெருமகன், பெருங்குடி, சிறுகுடி, நாள்மகிழ் இருக்கை, சான்றோர் அவையம், ஐம்பெருங்குழு, என்பேராயம், நெடுமுடி, குறுமுடி, செங்கோல், அரசுகட்டில், அரியணை, வெண்கொற்றக்குடை, கொடி, முத்திரை, முரசு, கடிமரம், தேர், கஞ்சுகமாக்கள், தூதர், ஒற்றர், திருமுகக்கணக்கு, உழைச்சுற்றாளர், அகவர், படைச்சிறுக்கன், கட்டியங்காரன், உழையர், பெருங்கணி என்று ஒரு பெரும் பட்டியலையே கொடுக்கலாம். சமயத் துறையிலும் தேவையான அளவிற்குத் தனித்தமிழ்ச் சொற்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ் மொழி சமஸ்கிருதச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல், சமஸ்கிருதமும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைக் காண முடிகின்றது. எனவே, சில சொல் பரிமாற்றகளைக் கொண்டு சமஸ்கிருதம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியது என்றோ அல்லது தமிழ்மொழி சமஸ்கிருதம் மீத ஆதிக்கம் செலுத்தியது என்றோ கூறுவது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.

ஆரிய மாயை, பண்டைய உலக வரலாற்றைத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரித்துச் சித்திரித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மாயையின் இந்திய வடிவமாகும். ஐரோப்பிய மாயையினரால் தோற்றுவிக்கப்பட்டக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய சித்திரத்தைக் கொண்டு ஐரோப்பியரே உலகின் முதல் ஆணாதிக்க சமூகத்தினராகப் பரிணமித்தவர் எனப் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் இந்தோ ஆரியரே முதல் ஆண்வழிச் சமூகத்தவர் என ஆரிய ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் ஆரிய இன மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் காகேசியப் பரப்பில், நால்சிக் என்ற இடத்திலுள்ள புதிய கற்காலக் கல்லறைகளில் ஆண்களை வலது புறமும் பெண்களை இடது புறமுமாகச் சாய்த்துப் புதைத்திருந்ததை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். இது ஏற்கக்கூடியதுதான். ஆனால் சமகாலத்தில் மேற்காசியாவில் வாழ்ந்துவந்த கருப்பின மக்கள் வேட்டை நிலையில் தோன்றியிருந்த ஆண்வழிச் சமூக அமைப்பைக் கடந்து உலோகப் பயன்பாட்டையும், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயத்தினையும் அறிந்து மிக வளர்ந்த பண்பாட்டு நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி மேற்காசியாவிலிருந்து பரவிய பண்பாட்டின் மூலமே ஆரியர் உட்பட்ட ஐரோப்பியரிடம் புதிய கற்காலப் பண்பாடு தோன்றியது என்பதைத் தொல்லியல் தடயங்கள் தெளிவாக நிறுவுகின்றன.

மேற்காசியக் கருப்பின மக்கள் புதிய கற்கால நாகரிகத்தை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லும் வரையிலும், ஆரியர் தாய் தலைமையிலான இரத்த உறவுக் குடும்ப அமைப்புக் கூட்டங்களாகவே வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இதற்குக் கிரேக்கப் புராணங்கள் சான்றாக உள்ளன. கிரேக்க புராணங்கள்படி முதலில் சூனியத்திலிருந்து கேயா என்ற பூமித் தாயும் டார்டாரஸ் (Tartarus) என்ற பாதாள உலகக் கடவுளும் ஈராஸ் (Eros) என்ற காதல் தெய்வமும் தோன்றினர். பூமித்தாய் கேயா ஆண் துணையின்றி கன்னித் தாயாகி யுரேனஸ் (Uranus) என்ற ஆகாயக் கடவுளையும் அவுரியா என்ற மலை தெய்வத்தையும் பாண்டஸ் (Pontus) என்ற கடல் தெய்வதத்தையும் தோற்றுவித்தாள். பின் யுரேனஸைக் கணவனாக்கிக் கொண்ட கேயா, மூன்று ஒற்றைக் கண் அரக்கர்களையும் மூன்று 50 தலைகள் கொண்ட அரக்கர்களையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதிய யுரேனஸ் அவர்களைப் பாதாள உலகிற்குள் தள்ளிவிடுகிறான். இச்செயல் கேயாவை வெறுப்படையச் செய்தது. இந்நிலையில் இவ்விருவருக்கும் டைட்டன் (Titan) என அழைக்கப்பட்ட அசுரர்கள் பிறந்தனர்.

கடைசி டைட்டனாகிய குரோனஸ் (Cronus) தனது தாயின் விருப்பப்படித் தந்தை யுரேனஸைக் கொன்றுக் கடவுளர்களின் தலைவனாகிறான். பின் குரோனஸ் தன் சகோதரி ரியா (Rhea)- வை மனைவியாக்கிக் கொள்கிறான். அதன் பின் குரோனசின் மகன் ஜீயஸ் (Zeus) தந்தையை வென்று மேலுலகத்தின் கடவுளாகிறான். ஜீயஸ் தனது சகோதரி ஹீரா (Hera)- வை மணந்து வேறோர் கடவுளின் மனைவியாகிவிட்ட மற்றோர் சகோதரி டெமடரைக் (Demeter) காதலிக்கிறான் என்பதாகச் சொல்கிறது கிரேக்கப் புராணம்.

கிரேக்கப் புராணப்படி கேயா தனது மகன் யுரேனஸைக் கணவனாக்கிக் கொள்கிறாள். மேலும் சகோதர, சகோதரிகளுக்குள் மணவுறவிருப்பது மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. தந்தை சொந்த மகன்களைப் போட்டியாளனாகக் கருதி பாதாள உலகிற்கு அனுப்பிவிடுவதும் பிள்ளைகள் தந்தையைக் கொன்று பதவியைக் கைப்பற்றுவதும் கூறப்படுகின்றன. பிள்ளைகளைப் போட்டியாளராகக் கருதுகிற கடவுளர்களையோ அல்லது தந்தையைக் கொன்றுப் பதவியை எடுத்துக் கொண்ட மகன்களையோ இந்துப் புராணங்களில் காணமுடியாது.

மேலும், சகோதர-சகோதரி மண உறவு இந்துப் புராணங்களுக்கு முற்றிலும் அன்னியமானது. மாறாக இந்துப் புராணங்கள் காட்டும் மணஉறவுகள் மாற்று சகோதர மண உறவை (Cross Cousin Marriage) அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாற்றுs சகோதர மண உறவு வட இந்திய ஆரிய சமூகத்திற்கும்கூட அன்னியமானதாகும். கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போதாயன தர்ம சூத்திரம் மாற்று சகோதர மண உறவு தென்னிந்தியருக்கே உரியது எனக் கூறுகிறது. இந்துப் புராண மரபுகள் திராவிடருக்கே, குறிப்பாகத் தமிழருக்கே பொருந்தி வருவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழி உறவுப் பெயர்களான பிரதர் - இன் - லா, சிஸ்டர் - இன் - லா, சன்- இன் - லா, டாட்டர் - இன் - லா போன்றவை இரத்த உறவுக் குடும்ப அமைப்பின் சாயலைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர், காட்டுமிராண்டி நிலையிலிருந்து மிகவும் பிற்காலத்திலேயே நாகரிகத்திற்குள் நுழைந்ததால்தான் இத்தகையப் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நீடித்திருக்கின்றன. வேறு சில பண்பாட்டு எச்சங்களும்கூட இதற்கு வலு சேர்க்கின்றன.

பெண்களின் கற்புநெறி என்பது ஆண்களின் தனிவுடைமையைப் பாதுகாக்கக் கூடிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மிக முக்கியக் கூறாகும். கி.மு. 1750-இல் பாபிலோனிய அரசன் ஹமுராபி வகுத்த சட்டங்கள் முதல் மனு ஸ்மிருதி வரையிலும் உலகின் நிலப்பிரபுத்துவ சமூகச் சட்டங்கள் அனைத்தும் பெண்களின் கற்பு நெறிக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய சமூகம், பெண்கள் கற்பு நெறியைப் பேணுவதற்காகக் கொடுமையான சட்டங்களைப் பழங்காலத்திலிருந்தே பெற்றிருந்த போதிலும்கூட கற்பு நெறியைக் கடைப்பிடித்துக் காக்க முடியாமல் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அங்கு நட்புள்ள எந்த ஒரு ஆணும், பெண்ணும் பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. விவாகரத்தும், மறுமணமும் வெகு இயல்பானதாக அங்கு உள்ளன. விழாக்களில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடுவதும் பாடுவதும் வரைமுறையற்ற நிலையில் மேட்டுக்குடியினரிடமும் நடைபெறுகிறது. இவ்வாறு இருபாலரும் சேர்ந்து ஆடுவதைத் தமிழகக் கிராமப்புறங்களில்கூட நாம் காணமுடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க கால உண்டாட்டுகளில்கூட இருபாலரும் சேர்ந்து வரைமுறையின்றி கூத்தாடும் வழக்கம் இருந்ததில்லை. ஐரோப்பியரின் இன்றைய நடனக்கலை பழங்குடி நிலை இனக்குழு நடனங்களின் ஒரு வளர்ந்த வடிவமாகவே தெரிகின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் வளர்ந்த வடிவத்தைத் தமிழ்ச் சமூகம் சங்க காலத்திலிருந்து கொண்டுள்ளது. கற்புநெறி, தமிழ்ச் சமூகத்தின் மனதளவிலேயே பதிவாகியுள்ள அளவு வேறெந்த சமூகத்திலும் இல்லை. கி.மு. 1500லேயே பாபிலோனியா, அக்காடியன், அசிரியா, ஹிட்டைட், காசைட், மிட்டானி போன்ற நிலப்பிரபுத்துவ அரசுகளை மேற்காசியாவில் கருப்பின மக்களிடமிருந்து கைப்பற்றித் தமதாக்கிக் கொண்ட போதும்கூட ஐரோப்பியரிடம் தமிழர் அளவுக்கு கற்புநெறி மனதிலே பதிந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 1500க்கும் முன்பே, மிக நீண்ட காலமாகத் தந்தை வழிச் சமூகமாகவும் அதனடிப்படையில் தோன்றிய தனிவுடைமைச் சமூகமாகவும் வாழ்ந்திருந்ததாலேயே பெண்களின் கற்புநெறி இவ்வளவு ஆழமாகத் தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்க காலத் தமிழ் வேந்தர் குடியினரில் பாண்டியரும், சோழரும் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சிறு பகுதியையேனும் ஆட்சி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. சேரரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். இந்நீண்ட கால வரலாற்றில் ஒரேயொரு பெண் அரசிகூட வேந்தர்கள் சார்பில் அரசுக் கட்டிலில் அமரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம், ஆண்வழிச் சமூக அமைப்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று எனலாம்.

ஆரிய (ஐரோப்பிய) மாயையினர், அம்மாயையிலிருந்து விடுபட்டு விவாதிக்கப்படும் விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வளவு நீண்ட விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்துப் பண்பாட்டு மானுடவியலாளர் பரிசீலனை செய்வாராயின் அது பயனுடையதாக அமையும்.

ஆரிய மாயைக்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட மற்றுமொரு மாயை, தமிழ்ச் சமூக வரலாற்றை ஆட்டிப்படைத்து வருகின்றது. ஆரிய மாயையைவிட மிக மோசமான அளவில் தமிழ்க் குடிகளின் வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்து வரும் இம்மாயையை அடுத்துக் காண்போம்.