பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 10 June 2011

அலைகள் ஓய்வதில்லை.

அலைகள் ஓய்வதில்லை.


அந்த அலைகள் கரைக்கு வெறும் காட்சிகளே. கரை சலனமோ சஞ்சலமோ படுவதில்லை. வெறும் ஜடப் பொருளாக இருந்து அலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இப்படித்தான் நானும் இருக்கின்றேன். எப்படி?! ஆயிரமாயிரம் என்ன அலைகள் என் உள்ளமெனும் கரையை ஓயாமல் வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன.அந்தக் கரையைப் போலவே நானும் சும்மாயிருக்கின்றேன்.வந்து வந்து மோதும்

முடிவிலா அலைகள்

பார்வயாலனகக் கரை



ஆயிரமாயிரம் எண்ணங்கள்

பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்

பதிவு செய்யாமல் நான்

முரண்



கரையை மோதும் அலைகள் ஒவ்வொரு நாளும் கரையில் புதிய மாற்றங்களைச் செய்து கொண்டே உள்ளன.கரையை உடைத்து, அரித்து , கரைத்து, அழித்து என்று பல மாற்றங்கள்.





இப்படித்தான் நானும் இருக்கின்றேன். ஆயிரமாயிரம் என்ன அலைகள் என் மனக் கரையை மோதிச் செல்கின்றன.ஒவ்வொன்றிலும் நான் பாதிப்பைச் சந்திக்கின்றேன். அன்பு, பாசம், கருணை, சோகம், கோபம், தாபம், ஆத்திரம், மானம், விருப்பம், காமம் என்று என்ன அலைகள் என்னைப் படுத்தும் பாடு, அப்பப்பா சொல்லி மாளாது. அலைகளைக் கரை என்ன செய்ய முடியும்? எண்ணங்களை மனம் நிறுத்த முடியுமா?!!


துரை முருகன்

விட்டதைப் பிடிக்கும் வியாதி

விட்டதைப் பிடிக்கும் வியாதி



மகாபாரதத்தில் தர்மபுத்திரனைப் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை. எமதர்மனால் முன்பு நச்சுப்பொய்கையிலும் பின்பு சொர்க்கத்திலும் பரீட்சிக்கப்பட்டு தேர்வு பெற்றவன் அவன். தன் தேகத்துடன் சொர்க்கம் போக முடிந்தவன் அவன் ஒருவனே. அப்படிப்பட்டவன் சூதாட்டத்தில் கலந்து போன போது கடைநிலை மனிதன் கூடச் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்தான். தன் சகோதரர்களையும், மனைவியையும் பணயம் வைத்து ஆடினான். சூதாட்டம் ஆனானப்பட்ட தர்மபுத்திரனையே அப்படிச் செய்ய வைத்தது என்றால் மற்றவர்கள் விஷயத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கேட்க வேண்டுமா?

சூதாட்டத்தில் பங்கேற்கும் பலரும் விட்டதைப் பிடிக்கும் வியாதியால் பீடிக்கப்படுகிறார்கள். அடுத்த முறை வென்று விடுவோம், விட்டதை எல்லாம் பிடித்து விடுவோம் என்று சூதாட்டத்தைத் தொடர்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி விடுகிறார்கள். அது வரை அவர்களை சூதாட்டம் விடுவதில்லை.

தர்மபுத்திரன் விஷயத்திலேயே சூதாட்ட நாள் நடந்த கடைசி நிகழ்ச்சி பல பேர் கவனத்தை எட்டவில்லை. பாஞ்சாலியின் மானத்தைப் பகவான் காப்பாற்றிய பிறகு நரிகள் ஊளையிட, நாலா பக்கங்களில் இருந்தும் கழுதைகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் விகாரமாய் கத்த குலநாசம் வரப் போகிறதென்று பயந்து திருதராஷ்டிரன் தர்மபுத்திரன் இழந்ததை எல்லாம் அவனுக்குத் திருப்பித் தந்தான். பாண்டவர்களை இந்திரப்பிரஸ்தத்திற்குத் திரும்பிப் போகச் சொன்னான். ஆனால் அப்படிக் காப்பாற்றப்பட்டும் கூட தர்மபுத்திரனுக்குப் புத்தி வரவில்லை. சபையோர் தடுத்தும் கூட கேட்காமல் மீண்டும் ஒருமுறை சகுனியுடன் ஆடி 12 வருடம் வனவாசம், ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என்ற நிபந்தனையுடன் ஆடித் தோற்றான். வியாசர் அவன் கடைசியாக ஆடியதை "கலிபுருஷனால் பீடிக்கப்பட்டவனாய் மறுபடி ஆட உட்கார்ந்தான்" என்கிறார். கடைசியில் கூட விட்டதைப் பிடிக்கும் வியாதி அவனையும் விட்டு வைக்கவில்லை.

இன்றைய காலத்தில் சூதாட்டம் பல ரூபங்களில் நடக்கின்றது. கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் ஆசை பலரையும் படாத பாடு படுத்துகிறது. உழைத்து சம்பாதித்து நாலு காசு சேர்க்க ஆகும் கால அளவு வரை பொறுத்திருக்க பலருக்கும் பொறுமை இல்லை. சூதில் இப்படி ஒரு பேராசையுடன் தான் அனைவரும் நுழைகிறார்கள். பின் சூது அவர்களை விடுவதில்லை. கடைசி வரை தன் தூண்டிலைப் போட்டு அது சபலப் படுத்துகிறது. இனியொரு முறை ஆடு, விட்டதைப் பிடித்து விடலாம் என்று ஆசை காட்டுகிறது.

ஒரு நம்பர் லாட்டரி நம் நாட்டில் எத்தனை குடும்பங்களை நிர்க்கதியாக்கியது என்பது நமக்குத் தெரியும். எத்தனையோ தினக்கூலிக்காரர்கள் தினமும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் லாட்டரிக் கடை முன் நிற்பதை சில வருடங்களுக்கு முன் பலரும் பார்த்திருக்கலாம். அன்றைய அனுபவம் அவர்களுக்கு அடுத்த நாளுக்கு உதவியதில்லை. விட்டதைப் பிடிக்கும் வியாதி தினம் தினம் அவர்களை லாட்டரியின் பக்கம் திருப்பியிருக்கிறது.

எனக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் மிக சௌகரியமாக இருந்தார். அவருக்கு ஷேர் பிசினஸில் ஆரம்பத்தில் சிறிது லாபம் வர பின் அவர் தன்னுடைய சேமிப்பு எல்லாவற்றையும் அதில் போட்டார். சமீபத்திய நிலவரத்தில் அவர் எல்லா பணத்தையும் இழக்க நேரிட்டது. பல வெளிநாட்டு வங்கிகளில் க்ரெடிட் கார்டுகள், கடன்கள் எல்லாம் வாங்கி அதையும் ஷேரில் போட்டார். நண்பர்களிடமும் கடன் வாங்கிப் போட்டார். எல்லாம் இழந்து விட்டார். இழந்த அத்தனையையும் திரும்பப் பெறும் நம்பிக்கையில் கடைசியில் அரசாங்க வேலையையும் விட்டு அதில் கிடைத்த பிராவிடண்ட் ·பண்ட் முதலான தொகைகளைப் பெற்று அதையும் ஷேரில் போட்டு அத்தனையும் இழந்து இன்று மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கிறார். விட்டதைப் பிடிக்கும் வியாதி அவரை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டது பாருங்கள்.

அந்த வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் அறிவைப் பயன்படுத்துவதில்லை. அடுத்தவர் அறிவுரையைப் பொருட்படுத்துவதில்லை. அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க
மனம் வைப்பதில்லை.

உண்மையான புத்திசாலித்தனம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடாமலேயே இருப்பது தான். ஈடுபட்டபின் அதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் விரைவிலேயே அதிலிருந்து மீள்வது தான். இழந்தவை நமக்குப் படிப்பினைகளாக இருக்கட்டும் என்று உணர்வது தான். அதை விட்டு அதை மீட்க மீதி இருப்பதையும் பணயம் வைக்கத் துணியாமல் இருப்பது தான். அப்படி மீட்டு விடுவேன் என்று பிடிவாதத்துடன் மீண்டும் அதில் புகுவது புதைகுழியில் கால் வைப்பது போல் ஆபத்தானது. எனவே இந்த வியாதிக்கு ஆளாகாமல் இருப்போமாக!.

- என்.கணேசன்

இதுவல்லவோ பெருந்தன்மை!

இதுவல்லவோ பெருந்தன்மை!


அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது. கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப்படிப்பை முடித்த அவனால் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை. மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை.

அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம் சுமார் 2000 வெள்ளைத் தாள்கள் வேண்டியிருந்தது). தெருவில் காணும் காகிதங்களை எல்லாம் பத்திரப்படுத்தி அதில் எழுதிப் பார்ப்பான். சிலேட்டில் எழுதிப் பார்த்து முடிவுகளை மட்டும் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வான். காகிதங்களிலேயே பென்சிலில் முதலில் எழுதுவது, பின்பு அதன் மேல் பேனாவில் எழுதுவது என்று இருமுறை ஒரே காகிதத்தை உபயோகப்படுத்தினான்.

வேலை தேடி அலைந்த போது பலரிடமும் தான் நோட்டு புத்தகங்களாக சேர்த்து வைத்திருந்த அந்த கணித உண்மைகளைக் காட்டினான். பலருக்கு அவன் கணிதக் கண்டுபிடிப்புகளும், தேற்றங்களும் என்னவென்றே புரியவில்லை. முழுவதும் புரியா விட்டாலும் அந்த இளைஞன் ஒரு மேதை என்று புரிந்த சென்னை துறைமுக டிரஸ்ட் டைரக்டர் ஒருவர் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலையை போட்டுக் கொடுத்தார். மாதம் ரூ.25/- சம்பளம். காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். அந்த இளைஞன் ஸ்ரீனிவாச ராமானுஜன். பின் வேறு சில ஆசிரியர்களும், அறிஞர்களும் முயற்சிகள் எடுத்து ராமானுஜனுக்கு சென்னை பல்கலைகழகத்திலிருந்து மாதாந்திர ஆராய்ச்சித் தொகையாக ரூ.75/- வர வழி வகுத்தார்கள்.

ஆனால் ராமானுஜனின் கணிதக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மேதைகள் இந்தியாவில் அச்சமயம் இருக்கவில்லை. எனவே அவன் தன் தேற்றங்களில் 120ஐ தேர்ந்தெடுத்து கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கணித மேதையான ஜி.எச்.ஹார்டிக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைத்தான். உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல கணித ஈடுபாட்டுடையவர்களூடைய கடிதங்களை தினந்தோறும் பெறும் அந்தக் கணித மேதைக்கு அந்தத் தடிமனான தபாலைப் பிரித்து முழுவதும் படித்துப் பார்க்க நேரமில்லை. சில நாட்கள் கழித்தே கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.

தான் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிவதாகவும், தனக்கு பட்டப்படிப்பு இல்லையென்றும், தான் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்துள்ளதாகவும் ஆரம்பத்திலேயே ராமானுஜன் எழுதியிருந்தார். அவருடைய ஆங்கில நடையும் உயர்தரத்தில் இருக்கவில்லை. ஹார்டியைப் போன்ற ஒரு மனிதருக்கு மேற்கொண்டு படிக்காதிருக்க இது போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனாலும் இணைத்திருந்த தேற்றங்களை மேற்போக்காகப் படித்தவருக்கு அவற்றில் இரண்டு பெரிய முரண்பாடுகளைப் பார்க்க முடிந்தது. சிலவற்றில் மிக அபூர்வமான மேதைமை தெரிந்தது. சில இடங்களில் சமகாலத்தைய கணித முன்னேற்றத்தின் அடிப்படை ஞானம் கூட இருக்கவில்லை. அவர் எழுதிய ஒரு சில தேற்றங்கள் பற்றி முன்பே சிலர் எழுதி வெளியிட்டு விட்டிருந்தனர். அது கூட ராமானுஜனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ராமானுஜனுக்கு கற்றுத் தர ஆரம்பப் பாடங்களே நிறைய இன்னும் இருந்ததை ஹார்டி உணர்ந்தார்.

இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற அந்த மேதைக்கு இந்தியாவில் அடிமட்ட நிலையில் இருந்த ராமானுஜனைப் பொருட்படுத்தாமல் விட எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால் அத்தனை காரணங்களையும், குறைபாடுகளையும் மீறி அந்தத் தேற்றங்களில் ஆங்காங்கே தெரிந்த அந்த அபூர்வமான கணிதப் பேரறிவு ஹார்டியை அசைத்தது. பெரும் முயற்சி எடுத்து ஹார்டி ராமானுஜனை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வரவழைத்தார். ராமானுஜனுக்கு கணிதத்தில் பல அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்து தேற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மீதி சரித்திரமாகியது. ராமானுஜன் என்ற இந்தியக் கணித மேதை உலக அரங்கில் பிரபலமானார்.

தன்னுடைய துறையில் தன்னைக் காட்டிலும் திறமை மிக்கவனாய் ஒருவன் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் முழுத்திறமையும் வெளிப்பட சில அடிப்படைப் பாடங்கள் அவன் கற்பது அவசியம் என்பதை அறிந்து அவனை அழைத்து வந்து அவற்றை கற்றுத் தந்து அவன் பெருமையை உலகறிய வைக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகில் அடுத்தவருக்கு இருக்கின்ற திறமைகளை முடிந்த அளவு அமுக்கப் பார்க்கும் மனம் படைத்த மனிதர்களுக்குக் குறைவில்லாத உலகில் இத்தனை சிரமம் எடுத்து இது போல் செய்ய எந்த அளவு பெருந்தன்மை இருக்க வேண்டும்!

தீட்டாத வைரமாய் சோபையிழந்து பிரகாசிக்காமல் போக இருந்த நம் நாட்டு மேதையை அடையாளம் கண்டு பட்டை தீட்டி கணிதம் உள்ளளவும் பிரகாசிக்க வைத்த அந்த மாமனிதருக்கு கணிதத்துறையும் நாமும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

(ராமானுஜன் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:-

* ஹார்டியின் சகாவான லிட்டில்வுட் என்ற கணித அறிஞர் ராமானுஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் எண்கள் தான் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு எண்ணைக் குறித்தும் பார்த்தவுடன் பல சுவையான தகவல்களை கூறும் பழக்கம் ராமானுஜனுக்கு இருந்தது.

* ராமானுஜனும் ஹார்டியும் இங்கிலாந்தில் ஒரு முறை 1729 என்ற எண் உடைய டாக்ஸியில் பயணம் செய்யும் போது அந்த எண்ணைப் பார்த்து ராமானுஜன் கூறினாராம். "இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உண்டு. இருவேறு ஜதை எண்களின் க்யூப்(cube)களின் மிகக்குறைந்த கூட்டுத் தொகை இந்த எண் தான்". பிரமித்துப் போனாராம் ஹார்டி. கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதன் விவரம்: 1729 = (1x1x1)+(12x12x12) = (9x9x9)+(10x10x10) )

* ராமானுஜனுக்கு கணிதத்தில் எத்தனை கஷ்டமான கேள்விகளுக்கும் எப்படி சுலபமாக பதில் கிடைக்கிறது என்று கேட்ட போது அவர் தன் குல தெய்வமான நாமகிரியம்மன் அவற்றிற்கெல்லாம் பதில் தருவதாக ஒரு முறை குறிப்பிட்டார்.

* காசநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பிய ராமானுஜன் தன் கடைசி காலத்தில் உடல்வலியை மறக்க கடைசி வரை நோட்டுப் புத்தகத்தில் எண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். கணிதத்தில் மூழ்கும் போது எல்லாவற்றையும் மறந்து விடும் அவருக்கு கணிதமே வலி நிவாரணியாக அமைந்தது.)

- என்.கணேசன்
நன்றி: விகடன்

கனவு

கனவு


மனிதனின் கருவறை தானே அவன் என்னங்களும் நினைவுகளும்
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் அவனில் பிறந்தது தானே.
அவனோடு சேர்ந்தே வருவது வேறு யாரு சொல்லு.
பிறந்தவுடன் பெற்றோர்களின் நெஞ்சினிலே உதிர்த்திடுவாய்.
பள்ளி நாட்களில் வாழ்வை எண்ணி நொந்திடுவாய்
வாலிப வயதில் வரும் துணையை நினைத்தே மிதந்திடுவாய்
துணையும் வந்துவிட்டால் குழந்தைகளுக்காய் ஏங்கிடுவாய்
குழந்தைகளும் கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்விற்காய் உன்னை வருத்திடுவாய்.
பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஆசையும் உன்னை விட்டு வைக்காதே.
காலத்தின் கட்டாயம் கனவுகள் நீ கண்டுதானே ஆகவேண்டும்
கண்ட கனவுகள் நிஜமாகும் போது.மறுபடியும் மறுபடியும் பிறந்திடுவாயே.



கவிஞர் இராஜேந்திரகுமார்

தனிமை=

தனிமை=


வாழ்வில் கொடியதும் வெறுமையும் கொண்டதே.
எத்துணையும் இல்லை இனிமையும் காணோம்.
எதற்க்காக இந்த நிலையற்ற வாழ்வு.
புரியாத மனிதரிடம் புழுவாக துடிக்கின்றேன்.
புரிந்து தான் அவர்கள் என்ன செய்தார்கள்.
காலமும் நினைவுகளும் நிரந்தரம் இல்லையே.
கனவுகள் சிதைந்து கண்ணீர் மட்டும் மிஞ்சியதே.
ஏன் இந்த கொடிய நிலை எனக்கு மட்டும்.
புள்ளி மான் மாதிரி துள்ளி திரிந்த என்னை.
தள்ளி வைத்து அழகு பார்ப்பது ஏன் தானோ.
காற்றலைகள் ஒன்று சேர்கின்றதே,
இந்த அபலை வாழ்வு தான் எப்போ?


கவிஞர் இராஜேந்திரகுமார்

குறையையும் நிறையாக்கலாம்!

குறையையும் நிறையாக்கலாம்!



ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான்.

சில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற்சிகளையும் கற்றுத் தாருங்களேன்”

அந்த வயதான ஆசிரியர் “நீ இந்த ஒரு பயிற்சியை சிறு குறையும் இல்லாமல் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தால் அதுவே போதுமானது. இதைத் தவிர வேறு எந்த பயிற்சியும் நீ கற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறி விட்டார். அந்த சிறுவனுக்கு அவர் வேறு பயிற்சிகள் கற்றுத் தராமல் இருப்பது ஏமாற்றத்தைத் தந்த போதும் அவர் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தபடியால் அவர் கூறியபடி அந்த ஒரு பயிற்சியையே தொடர்ந்து மேலும் சில மாதங்கள் செய்து அதில் முழு ஆளுமை பெற்றான்.

அவன் அந்த ஒரு பயிற்சியில் ஒரு சிறு குறையும் இல்லாமல் முழுமையான ஆளுமை பெற்று விட்டான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் அந்த வருடத்திய தேசிய ஜுடோ போட்டியில் அந்தச் சிறுவனைக் கலந்து கொள்ளச் செய்தார் அந்த ஆசிரியர். அந்த சிறுவனுக்கோ திகைப்பு தாளவில்லை. அந்த தேசியப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல திறமையான வீரர்கள் கலந்து கொள்வார்கள். அவனோ ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறான். ஜூடோவில் அவனுக்குக் கற்றுக் கொள்ள இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
“ஐயா எனக்கு அந்த ஒரு பயிற்சி தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில் தேசிய அளவு போட்டியில் எப்படி கலந்து கொள்வது?”

அப்போதும் அந்த ஆசிரியர் அவனுக்குச் சொன்னார். “உனக்கு அந்த ஒரு பயிற்சி போதும். உனக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உன் எதிரியிடம் இந்த ஆக்கிரமிப்பு முறையை பயன்படுத்து. மற்ற எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே”

அவர் அந்த அளவு உறுதியாக கூறிய பிறகு அவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள சம்மதித்தான். ஆசிரியர் அவனை போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சொன்னது போலவே செய்து அவன் மிக எளிதாக வென்று காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றான். அவனுக்கே அது அதிசயமாக இருந்தது.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் சிரமங்களுக்கு இடையில் அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பிரயோகித்து வென்று முன்னேறினான்.

இறுதிப் போட்டியில் அவனுக்கு எதிராக போட்டியிட்ட ஆள் வயதிலும், வலிமையிலும், திறமையிலும் அவனுக்கு மேற்பட்டவனாகவே இருந்தான். போட்டியில் ஆரம்பத்தில் அவனால் அந்த நபரை வெல்ல முடியவில்லை. அவனுடைய இடது கை இல்லாத குறையையும், படும் சிரமத்தையும் பார்த்த நடுவர்கள் இடைவேளையின் போது அவன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள அனுமதி தருவதாகக் கூறினார்கள். அவனுடைய ஆசிரியரோ அதற்கு சம்மதிக்கவில்லை. “அவன் போட்டியில் தொடர்வான்” என்று உறுதியாகக் கூறினார்.
அவர் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்ட அந்த சிறுவனுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது. இடைவேளைக்குப் பின் தொடர்ந்த போட்டியில் எதிராளி சற்று அசந்திருந்த போது தன் முழு பலத்தையும் திரட்டி அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பயன்படுத்தி எதிராளியை செயலிழக்க வைத்து வெற்றி பெற்றான். அவனுக்கே அந்த வெற்றி ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பதக்கத்தைப் பெற்ற போதும் அவனுக்கு பிரமிப்பு நீங்கவில்லை. வீடு திரும்புகையில் அவன் ஆசிரியரிடம் தன்னால் எப்படி அந்த ஒரு பயிற்சி மட்டும் கற்றுக் கொண்டு வெற்றி பெற முடிந்தது என்று கேட்டான்.

ஆசிரியர் சொன்னார். “அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, நீ அந்த ஒரு பயிற்சியில் குறைவில்லாமல் முழுமையாகப் பயிற்சி செய்திருக்கிறாய். இரண்டாவது, இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட எதிராளிக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி ஆக்கிரமிப்பவரின் இடது கையைப் பிடித்துக் கொள்வதில் தான் இருந்து தான் ஆரம்பிக்கிறது”
இடது கை இல்லாதவன் ஆக்கிரமித்தால் அந்தப் பிடியில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. அந்த சிறுவனின் மிகப் பெரிய குறை மிகப் பெரிய பலமாகப் போய்விட்டது பாருங்கள்.

பல சந்தர்ப்பங்களில் குறைகள் வேறு விதத்தில் நிறைகளாக முடியும். சில குறைகள் இருப்பவர்கள் அதை ஈடுகட்ட முயற்சித்து அந்த குறையில்லாதவர்களை விடவும் அதிகமாக சாதித்து விடுவதை பல சமயங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று ஊனங்களை உதாசீனப்படுத்தி விட்டு உலக அளவில் பெரும் சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

குறைகளை மீறி சாதிப்பதற்குத் தேவையான மிக முக்கியமான பண்பு தன்னிரக்கத்தோடு தளர்ந்து ஒடுங்கி விடாமையே. தன்னிரக்கத்தில் ஆரம்பித்து அடுத்தவர் இரக்கத்தையும் தேடி நிற்பவர்கள் வாழ்க்கை தேக்கமடைந்து விடுகிறது. ’எனக்கு இந்தக் குறை இருப்பதால் நான் இனி ஒன்றும் செய்வதற்கில்லை’ என்ற அறிவிப்புக்கு குடும்பத்தினரும், மற்றவர்களும் கூட அங்கீகாரம் தந்து ஆதரிக்க ஆரம்பிக்கும் போது அந்த மனிதரின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது.

எனவே உடலின் குறைகளையோ, வசதி வாய்ப்புகளின் குறைகளையோ கண்டு தளர்ந்து விடாதீர்கள். அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். சில குறைகளை இன்னொரு கோணத்தில் பார்த்தீர்களானால் அதுவே வேறு சில முன்னேற்றங்களுக்கு அனுகூலமாகலாம். உண்மையான குறை மனதின் குறைகளே. வெளிப்புறக் குறைகள் தோற்றத்தில் இருக்குமளவு நம் முன்னேற்றத்தை தடுக்க சக்தி படைத்தவை அல்ல. இதை தங்களுக்கு இருக்கும் குறைகளைப் பெரிதாக நினைக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதே போல அவர்கள் நம்பிக்கை இழக்கும் தருணங்களில் நண்பர்களும், உறவினர்களும் அந்த அவநம்பிக்கைக்கு துணை போகாமல் தங்கள் அன்பாலும் நம்பிக்கையாலும் அவர்களைத் தாக்குப் பிடிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குறைகள் ஒருவரைக் குறைத்து விடாமல் நிறைகளாகப் பரிணமிக்க முடியும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

உங்கள் காலம் திருடப்படுகிறதா?

உங்கள் காலம் திருடப்படுகிறதா?



வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று காலம். வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு காலம் நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய மாட்டோம். செயல்படுகிறோமோ, வீணடிக்கிறோமோ காலம் இரண்டிலும் செலவாகிக் கொண்டே தான் போகின்றது. காலம் செல்லச் செல்ல நாம் மரணத்தினை நெருங்கிக் கொண்டே போகிறோம். அது எத்தனை நெருக்கம் என்பதை அறியாததால் அதற்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்ற பிரமையில் இருந்து விடுகிறோம்.

காலத்தின் மதிப்பைக் குறிப்பிடும் போது ஒரு நிமிடத்தின் மதிப்பை அறிய புறப்பட்டுப்போன ரயிலைத் தவற விட்டவரைக் கேட்க வேண்டும,. ஒரு நொடியின் மதிப்பை அறிய விபத்திலிருந்து தப்பியவரைக் கேட்கவேண்டும், ஒரு மில்லிசெகண்டின் மதிப்பை அறிய ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.

பணத்திற்கு தரும் முக்கியத்துவத்தை நாம் அதை விடப் பல மடங்கு மதிப்புள்ள காலத்திற்குத் தருவதில்லை. இழந்த செல்வத்தை ஒருவன் மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால் இழந்த காலம் இழந்தது தான்.

ஜனனம் முதல் மரணம் வரை நமக்கு அளக்கப்பட்ட அளவான காலத்தை பெரும்பாலான சமயங்களில் நாம் செலவு செய்வதில்லை. மாறாக அந்த காலப் பொக்கிஷம் நம்மிடமிருந்து நிறையவே திருடப்படுகிறது என்ற உண்மை நமக்கு புலப்படாமலேயே போய் விடுகிறது. நம்மிடமிருந்து பணமோ, சொத்தோ திருடப்பட்டால் கொதித்தெழுகிற நாம் நம் காலம் திருடப்படுவதில் கொதித்தெழுவதில்லை என்பது மட்டுமல்ல அப்படி திருட்டுப் போக நாம் முட்டாள்தனமாக உதவியும் செய்கிறோம்.

காலப் பொக்கிஷம் நம்மிடம் இருந்து எப்படியெல்லாம் திருட்டுப் போகிறது, அதைத் தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

1) தொலைக்காட்சி – டெலிவிஷன் என்று சொல்லப்படும் தொலைக் காட்சிப் பெட்டியை முட்டாள் பெட்டி என்று பலரும் கூறுவதுண்டு. மூளையை மழுங்கடிப்பதில் அதற்கு இணை வேறு எதுவும் இல்லை என்பதால் அப்படி அழைக்கப்படுகிறது. அதை காலத் திருட்டுப் பெட்டி என்று அழைப்பது மேலும் பொருத்தமாக இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதன் முன்னால் அமர்ந்து கொண்டு நாம் வீணாக்கும் காலத்திற்கு அளவே இல்லை. அதை முழுமையாக நாம் ரசித்து மகிழ்கிறோமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. பிடிக்கிறதோ இல்லையோ சேனல்களை மாற்றிக் கொண்டே எதிலாவது ஒரு நல்ல சுவாரசியமான நிகழ்ச்சி எதிலாவது போட மாட்டார்களா என்ற எதிர்பார்த்து காலத்தை வீணாக்குகிற வேலையை நம்மில் பலரும் செய்கிறோம். பிடித்த நிகழ்ச்சி என்றாலும் கூட இடையிடையே நிகழ்ச்சி நேரத்தை விட அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பாவதை வேறு வழியில்லாமல் (?) பார்க்க நேரிடுகிறது. பல சமயங்களில் ஐந்து நிமிடங்கள் பார்க்கிறேன் என்று அமர்ந்து அதை மணிக்கணிக்கில் பார்த்து விட நேர்ந்து விடுகிறது. சில தொடர் நிகழ்ச்சிகளோ தினம் தினம் கண்டிப்பாக பார்க்கக் கட்டாயப்படுத்தும் பழக்கமாகி விடுகிறது.

தொலைக்காட்சியில் வீணாக்கும் நேரத்தை எத்தனையோ வழிகளில் நம் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த முடியும். இந்த உண்மையை மனதில் ஆழமாக உணர்கையில் இந்த வகைக் காலத் திருட்டை நாம் தவிர்க்க முடியும். முக்கியமாக குறிப்பிட்ட ஒருசில நல்ல நிகழ்ச்சிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டு அதை மட்டுமே பார்த்து மற்ற நேரங்களில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்து வையுங்கள். பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்கும் போதும் இடையிடையே விளம்பரங்கள் வரும் போது வேறு சேனலில் என்ன இருக்கிறது என்று வெறுமனே பார்க்கப் போகாமல் அந்த இடைவெளி நேரங்களில் வேறு சிறு சிறு வேலைகளைப் பாருங்கள். இந்த விதத்தில் நீங்கள் காலத் திருட்டை பெருமளவு தடுத்து விடலாம்.

2) அலை பேசி – செல் போன் என்றழைக்கப்படும் அலைபேசி அடுத்த பெரிய காலக் களவாணி என்று சொல்லலாம். அலை பேசியில் மணிக்கணக்கில் பேசி காலத்தை வீணாக்குவது இக்காலத்தில் இளைய தலைமுறையிடம் நிறையவே நாம் பார்க்க முடிகிறது. அலைபேசியில் பேசக் கட்டணத்தைக் குறைத்தும், அடியோடு விலக்கியும் சலுகை செய்யப்படுவதால் அதை முழுமையாகப் பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி காலத்தை முழுமையாக வீணாக்குகிற முட்டாள்தனத்தை பலரும் செய்கிறோம்.

அலைபேசியில் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்து விட்டு உடனடியாக அணைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் நேரத்தை மட்டுமல்ல அடுத்தவர் நேரத்தையும் நீங்கள் வீணாக்காமல் தவிர்க்கிறீர்கள்.

3) ஒழுங்கின்மை – நமது வாழ்க்கை முறையில் ஒழுங்கின்மை இருக்கும் போது காலம் பெருமளவில் வீணாகிறது. உதாரணமாக ஏதாவது ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் எல்லா இடங்களிலும் தேடி காலத்தை வீணாக்குகிற வேலையைப் பலரும் செய்வதுண்டு. அது போல செய்கிற வேலையில் ஒழுங்குமுறை இல்லாத போது அது தவறாகப் போக வழி இருக்கிறது. அந்த வேலையை இரண்டாவது முறையாகச் செய்தாலும், திருத்தம் செய்ய முனைந்தாலும் அதனால் காலம் தேவை இல்லாமல் வீணாகிறது.

வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கப் பழகுங்கள். உபயோகப்படுத்திய பிறகும் அதனதன் இடத்திலேயே வைக்க நீங்கள் பழகிக் கொண்டால் “தேடுதல்” என்ற பெயரில் நீங்கள் காலத்தை வீணாக்க நேரிடாது. அது போல வேலை செய்யும் போதும் ஒரு ஒழுங்குமுறையோடு நீங்கள் செய்தீர்களானால் குறைவான நேரத்தில் நிறைவான வேலையை உங்களால் முதல் முறையிலேயே செய்ய முடியும். காலத்தையும் சேமிக்க முடியும்.

4) தேவையற்ற செயல்கள், பேச்சுகள் – நமக்கு சம்பந்தமில்லாத வேலைகளை நாமாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு அவற்றில் ஈடுபடுவதும் காலத்தை நம்மிடம் இருந்து திருடிக் கொள்கிறது. பல நேரங்களில் நாம் அடுத்தவர் வேலையைக் கூட செய்து கொண்டிருக்க நேரிடலாம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அடுத்தவருக்கு உதவ முனைவது வேறு, தேவையே இல்லாமல் அடுத்தவர் வேலையை நாம் செய்வது வேறு. இந்த இரண்டிற்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது. அது போல ஊர்வம்பு பேசுவதிலும் காலம் நிறைய வீணாகிறது.

எனவே தேவையில்லாமல் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத, உங்கள் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவாத செயல்களை செய்யப் போகாதீர்கள். எந்த வேலையில் ஈடுபடும் முன்னும், அடுத்தவர் பற்றி பேசும் முன்னும் அது உங்கள் வேலை தானா, அதற்கு அவசியம் உள்ளதா என்ற ஒரு சிறிய கேள்வியைக் கேட்டுக் கொண்டால் அது அந்த வகைக் காலத் திருட்டைத் தவிர்க்கும்.

5) திட்டமிடத் தவறுதல் – முன் கூட்டியே நம் காலத்தைத் திட்டமிடத் தவறும் போது காலம் நம்மிடமிருந்து அர்த்தமில்லாத வழிகளில் திருட்டுப் போவதை நாம் தடுக்க முடிவதில்லை. ஒரு நாளில் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் உங்கள் கவனம் எல்லாம் அந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகளில் தான் இருக்குமே ஒழிய மற்ற அனாவசிய வேலைகளில் கவனம் செலுத்த தங்களுக்கு நேரமிராது.

உங்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் லட்சியங்களை நீண்ட கால லட்சியம், குறுகிய கால லட்சியங்கள் என்று திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நாட்களைத் திட்டமிடும் போது இருவகை லட்சியங்களை அடைவதற்கும் செய்ய வேண்டிய செயல்களுக்கு கண்டிப்பாக இடமிருக்கட்டும். எப்போதும் அப்படிக் ஒழுங்காகத் திட்டமிட்டு லட்சியங்களில் எப்போதும் கவனமாக இருந்தால் காலம் கண்டிப்பாக உங்களிடமிருந்து திருட்டுப் போகாது.


காலம் இந்த வகைகளில் மட்டும் தான் என்றில்லை இன்னும் பல வகைகளிலும் நம்மிடம் இருந்து திருடப்படுகிறது என்றாலும் இவை ஐந்தும் காலத் திருட்டில் பெரும் பங்கு வகிப்பவை. இந்த ஐந்து வகைத் திருட்டுகளை நீங்கள் தடுத்தால் நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய உங்களுக்குத் தேவையான காலம் கண்டிப்பாகக் கிடைக்கும். ’எனக்கு நேரமில்லை’ என்ற சப்பைக்கட்டு கட்டி செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருக்க நேரிடாது. செய்ய வேண்டியவற்றை செய்ய முடிந்த எந்த மனிதனும் தன் முன்னேற்றம் உறுதியானது என்பதில் சந்தேகப்படவும் அவசியமில்லை. எனவே குறுகிய வாழ்வில் மிகுதியாய் சாதிக்க காலத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள்!

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

பயத்தை வெல்வது எப்படி?

பயத்தை வெல்வது எப்படி?



பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.

பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.

நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.


அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.

அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”

அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-

முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா
என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.

ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.

மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது
ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள். அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?

நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.


அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.


-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

எல்லாம் தகரும் தருணங்களில்....!

எல்லாம் தகரும் தருணங்களில்....!


விதி வலியது. அது சில சமயங்களில் நம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடும். அந்த சமயங்களில், இருந்தது எல்லாம் தகர்ந்து போய் ஒரு பூஜ்ஜியமாய், எதிர்கால வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாய் போய் விடுவதுண்டு. இனி ஒன்றுமில்லை, வாழ ஒரு வழியுமில்லை என்கிற நிலைக்கு வந்து நமக்கு நேர்ந்ததை ஜீரணிக்கவும் முடியாமல் நம்மை திகைக்க வைத்து விடுவதும் உண்டு. அது போன்ற ஒரு நிலை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் நல்ல கதை ஒன்றில் முக்கியப் பாத்திரத்திற்கு வந்து விடுகிறது.

அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான். சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது.

அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார். இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.

அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை.

சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான்.

அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான்.

தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார்.

“எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.

இது என் மனதில் நின்ற ஒரு கதை. நான் ஆரம்பத்தில் சொன்னது போல தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.

இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது.

உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல. ஒரு வேலையோ, ஒரு உதவியோ நம்மிடமிருந்து பறிக்கப்படும் போது வாழ்க்கையே பறிக்கப்பட்டு விடுவது போல உணர்வது உடனடி மனித சுபாவம் என்றாலும் அதை அப்படியே நம்பி ஸ்தம்பித்து விடுவது விவேகமல்ல. இறைவன் ஒரு கையால் நம்மிடமிருந்து ஒன்றைப் பறிக்கையில் இன்னொரு கையால் இன்னொரு நல்ல சந்தர்ப்பத்தை நீட்டாமல் இருப்பதில்லை. எனவே ஒன்று பறிக்கப்படும் போது கண்களை மூடிக்கொண்டு எல்லாம் அஸ்தமித்து விட்டது என்று முடிவுக்கு வருவதற்கு பதிலாகக் கண்களைத் திறந்து அந்த இன்னொரு சந்தர்ப்பம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்ற நம்பிக்கையோடு சுற்றும் முற்றும் பார்ப்பது அவசியம்.

ஒரு தம்ளரில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் பாலை நிரப்ப வேண்டுமென்றால் நீங்கள் அந்தத் தண்ணீரைக் கொட்டியே தீர வேண்டும். பின்னர் தான் அந்த தம்ளரில் பாலை நிரப்ப முடியும். அப்படி தண்ணீரைக் கொட்டும் போது அதை ஒரு இழப்பாக நாம் கருதினால் எப்படி அது அறிவீனமாய் இருக்குமோ அது போல தான் சில சில்லறை இழப்புகளை நாம் பேரிழப்பாகக் கருதுவதும். அதை இழக்க வைத்து கடவுள் நம்மிடம் நிரப்ப முன் வருவதென்ன என்ற கவனமாகப் பார்த்தால் கண்டிப்பாக உங்களால் அதற்கு கண்டிப்பாக நன்றி சொல்ல முடியும்.

நாம் முன்பு பார்த்த கதையில் தேவாலயப் பணியாளன் தனக்கு தெரிந்த ஒரே வேலையை இழந்ததும், தம்ளரில் இருந்த தண்ணீர் கொட்டப்பட்டது போல உண்மையில் நல்ல நிகழ்வே. ஏனென்றால் அப்படி இழக்காமல் இருந்திருந்தால் அதை விட பன்மடங்கு மேலான உன்னதமான ஒரு நிலையை அவன் அடைந்திருக்க முடியாது.

எனவே எல்லாம் தகரும் தருணங்களில் நிலைகுலைந்து போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள். எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள். அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும், அல்லது உயர்வான நிலைக்குப் போகும் பாதையின் துவக்கமாக இருக்கும்.!

-என்.கணேசன்

உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?

உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?



(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1)

"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?"

பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானி ஒரு இந்தியரிடம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இப்படிக் கேட்டார். இங்கிலாந்தில் தற்செயலாகச் சந்தித்த அந்த இந்தியரிடம் ஏதோ ஒரு வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்ட பால் ப்ரண்டன் அவரிடம் பேச்சுக் கொடுக்க பேச்சு இந்தியா பக்கமும், இந்தியாவின் யோகிகளைப் பற்றியும் திரும்பியது. இந்திய யோகிகளிடம் இருந்த மகா சக்திகளைக் கேட்டு பிரமித்த பால் ப்ரண்டன் அப்போது தான் இந்தக் கேள்வியை ஆவலுடன் கேட்டார்.

"இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஏனென்றால் யோகிகளாகத் தெரிபவர்களில் பலர் போலிகளாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. மலிந்திருக்கும் போலிகளின் கூட்டத்தின் மத்தியில் உண்மையான யோகிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. உண்மையான யோகிகள் எத்தனை சக்திகள் பெற்றிருந்தாலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவற்றை உபயோகிப்பதில்லை. பணமும், புகழும் அவர்களுக்கு பொருட்டல்லாததால் அவர்கள் மற்றவர்களைக் கவர எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அவர்களுக்கு ஆத்ம ஞானமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் யோக சக்தியை முறைப்படியான பயிற்சியில் அடைந்த யோகிகளல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பல அபூர்வ சக்திகள் இருந்தாலும் உண்மையான யோகிகள் என்று கூறிவிட முடியாது....." என்றார் அந்த இந்தியர்.

அந்த இந்தியர், இந்தியாவின் யோகிகளைப் பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு ஆவல் அதிகமான பால் ப்ரண்டன் அப்படிப்பட்ட உண்மையான ஒரு யோகியையாவது சந்தித்து விட வேண்டும் என்று பேராவலுடன் உடனே இந்தியாவுக்கு வந்தார்.இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில்.அந்த இந்தியர் சொன்னது போல் பல அபூர்வமான சக்தி படைத்தவர்களை பால் ப்ரண்டன் இந்தியாவில் சந்தித்தார். அவர் தனது இந்திய ஆன்மீகப் பயண அனுபவங்களை இரகசிய இந்தியாவில் ஒரு தேடல் (A search in secret India) என்ற நூலில் 1934 ஆம் ஆண்டில் சுவைபட எழுதியுள்ளார். அவரது இந்திய அனுபவங்களில் சுவாரசியமான சிலவற்றை இங்கே பார்ப்போமா?

உண்மையான யோகியைத் தேடி பம்பாயில் வந்திறங்கிய பால் ப்ரண்டன் முதலில் கண்ட அபூர்வ சக்தி மனிதர் இந்தியரல்ல. எகிப்தைச் சேர்ந்த ஒரு மேஜிக் நிபுணர். பால் ப்ரண்டன் தங்கியிருந்த ஓட்டலிலேயே தங்கி இருந்தார் அவர். அவர் சக்திகளைப் பற்றி ஓட்டலில் பலரும் உயர்வாகச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அவரைச் சந்தித்தார். அந்த எகிப்தியர் பால் ப்ரண்டனிடம் சொன்னார். "ஒரு வெள்ளைத் தாளில் உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை பென்சிலால் எழுதிக் கொள்ளுங்கள்"

பால் ப்ரண்டன் அப்படியே ஒரு கேள்வியை ஒரு வெள்ளைத்தாளில் எழுதினார்.

"அந்தத் தாளை நான்காக மடியுங்கள்....". பால் ப்ரண்டன் மடித்தார். மேலும் நான்கு நான்காய் முடிகிற வரை மடித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே முடிகிற வரை மடித்தார். கடைசியில் அந்தத் தாளையும், பென்சிலையும் சேர்ந்தாற்போல கெட்டியாக வலது கையில் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். அப்படியே செய்தார் பால் ப்ரண்டன்.

பின் சிறிது நேரம் அந்த எகிப்திய மேஜிக் நிபுணர் கண்களை மூடிக்கொண்டு ஒருவித தியான நிலைக்குச் சென்றார். சில நிமிடங்கள் கழிந்து கண்களைத் திறந்த அவர் "நீங்கள் அந்தத் தாளில் எழுதிய கேள்வி இது தானே?" என்று கேட்டு அவர் எழுதிய கேள்வியை அப்படியே சொன்னார். பால் ப்ரண்டன் திகைத்துப் போனார்.

அந்த மேஜிக் நிபுணர் அந்தத் தாளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அதைப் பிரித்துப் பார்த்தார். அந்தக் கேள்வியின் கீழ் அதற்கான பதில் பென்சிலில் எழுதியிருந்தது. பால் ப்ரண்டனிற்கு பிரமிப்பாக இருந்தது. இது என்ன கண்கட்டு வித்தையோ என்று நினைத்த அவரை மேலும் சில கேள்விகள் எழுதிக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். பால் ப்ரண்டன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், பெயர்கள், தேதிகள் குறித்து மிகவும் கடினமான கேள்விகளாகத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டார். அந்தத் தாளையும் மடித்து முன்பை விட இறுக்கமாக பென்சிலோடு பிடித்துக் கொண்டார். ஆனால் அவை எல்லாவற்றையும் அந்த எகிப்தியர் சொன்னதோடு அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்த போது அந்தக் கேள்விகளின் கீழே பென்சிலால் சரியான பதில்கள் எழுதப்பட்டிருந்தன.

பிரிக்க முடியாதபடி தன் கையிலேயே மிக இறுக்கமாக மடித்துப் பிடித்து வைத்துக் கொண்ட தாளில் உள்ள கேள்விகள் அந்த எகிப்தியரால் எப்படி அறியப்பட்டன என்பதும் எந்த விதத்திலும் தன் வாழ்க்கையில் நெருங்கியவர்கள் கூட அறிந்திராத அந்தப் பதில்கள் எப்படி அறியப்பட்டன என்பதும் பென்சிலை மடித்து வைத்திருந்த தாளுடன் இறுக்கிப் பிடித்திருந்த போதும் அந்த பென்சிலால் அந்தப் பதில்கள் அந்தத் தாளில் எப்படி எழுதப்பட முடியும் என்பதும் பால் ப்ரண்டனுக்குப் புரியாத புதிராக இருந்தது.

வியப்பின் எல்லைக்கே போன பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்ட போது அந்த எகிப்தியர் அந்த இரகசியத்தைச் சொல்ல மறுத்து விட்டார். பால் ப்ரண்டன் வற்புறுத்திய போது "இந்த இரகசிய வித்தையை வெறும் ஆர்வமுடையவர்களுக்கு சொல்லித் தர முடியாது. நீங்கள் என் உதவியாளராக மாறி என்னுடனேயே வருவதாக இருந்தால் மட்டுமே நான் உங்களுக்கு இந்த இரகசிய வித்தையைக் கற்றுத் தர முடியும்." என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்திலிருந்து தான் இந்தியா வந்த உண்மையான காரணத்தை அந்த எகிப்தியரிடம் சொல்லிப் பின் வாங்கினார்.

தன் தேடலில் அவர் கண்ட இன்னொரு சுவாரசியமான நபர் சென்னைக்கு அருகே இருந்த ஒரு ஹத யோகி. அவரது அபூர்வ சக்திகள் பற்றி அடுத்த பதிவில் காண்போமா?

(தொடரும்)
நன்றி: கோவை இமேஜஸ்