
அலை கடலின் ஓசையிலே
அஸ்தமிக்கும் நேரத்திலே
அரை உயிராய் மறைந்தவரை
அடையாளம் சொன்னதுவோ ..?
அவனியிலே உதித்ததனால்
அவன் தமிழன் என்பதினால்
அணு அணுவாய் சிதறுண்டு
அகாலமாய் போனதுவோ ...?
அந்தி சாயும் பொழுதுகளில்
அன்னையரின் வயிற்றினிலே
அக்கினியை கட்டி வைக்கும்
அகோரங்கள் மறந்ததுவோ ...?
அன்பு மிக்க தமிழ் மொழியை
அறுக்க துடிக்கும் கயவர்களை
அம்பெய்து கொன்றாலும்
அழுவதற்கு யாரும் உண்டோ ...?
அள்ளி அள்ளி கொடுத்தாரை
அகதியாக்கி துரத்தி விட்ட
அரக்கர்களின் ஈனச் செயலை
அறிந்தும் தலையை குணிவதுவோ..?
அருகதையே அற்றவர்கள்
அண்டி வாழ நினைக்கையிலே
அல்லலுறும் எம்மவர்கள்
அனாதையாய் போலாமோ ...?
அழகான எம் மண்ணில்
அசைந்தாடிய மரச் செடிகள்
அவமானம் தாங்காமல்
அழியும் கதையை அறிவீரோ ...?
அத்தி மர நிழலினிலே
அப்பம் சுட்ட ஆச்சி கிழவி
அடுப்பில் தள்ளி எரித்தகதை
அத்தனையும் நினைவிலுண்டோ...?
அம்மன் கோவில் தேர் இழுக்க
அர்ச்சகரை தான் விரட்டி
அநியாயமாய் கொன்ற நினைவு
அதுக்கிடையில் மறைந்திடுமோ...?
அட்டைகளாய் ஒட்டிக் கொண்டு
அபய குரலை எழுப்புகின்ற
அறுந்து போன துரோகிகளும்
அசராமல் நிற்பதுவோ ...?
அல்லும் பகலும் பாடு பட்டு
அரிதரிதாய் சேர்த்து வைத்த
அத்தனையும் ஒரு போரில்
அலங்கோலம் ஆகிடுமோ ...?
அட்டகாச விளைச்சல்களை
அறுவடைகள் செய்ய முன்பே
அச்சுறுத்தி நசுக்கியதை
அந்நியரும் அறிவாரோ ...?
அம்பிலியே ஒளி கொடுக்க
அகதியாக மர நிழலில்
அமர்ந்திருக்கும் நம் உறவை
அப்படியே விடலாமோ ...?
அப்பு ஆச்சி வாழ்ந்த வீட்டில்
அப்புஹாமி வாழ்வதற்கு
அதிகாரம் கொடுத்தவர்கள்
அலட்டுவது சரி தானோ ...?
அரும்பு மீசை முலைக்கு முன்னே
அவர்கள் கழுகு பார்வையிலே
அகப்பட்ட இளசுகளை
அடித்தடித்தே முடித்ததுவோ ...?
அண்டை நாட்டு பெரியோரும்
அன்று நடந்து முடிந்தவற்றை
அலசி பார்க்க மறுக்கும் நிலை
அவசரமாய் தோனலையோ...?
அருவருப்பாய் பார்த்து எம்மை
அவமானப் படுத்தியதை
அயர்ந்து தூங்கும் நேரத்திலும்
அடி நெஞ்சை தொட வில்லையோ ...?
அற்புதமாய் ஓங்கி நின்ற
அருமையான எம் தேசம்
அகந்தை கொண்ட மனிதர்களால்
அம்மணமாய் ஆனதுவோ ...?
சிந்து சிவசங்கர் .
No comments:
Post a Comment