பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

அவளும் நானும்

21.அவளும் நானும்...!!!

தூரத்து மலை முகடுகளில்
மோதிச் செல்லும் முகில் கூட்டங்களின்
இடையே தெரிந்தும் தெரியாமலும்
நீல வானம் அமைதியாய் ...!!!
இயற்கையை ரசித்தப் படி
பயணிக்கிறேன் சொந்த ஊருக்கு
நாளை காதலர் தினம்
நிச்சயம் சந்திப்பேன் அவளை
ஏற்கெனவே எடுத்த முடிவு தான்
ஏழு ஆண்டுகளுக்கு பின்
வரும் காதலர் தினத்தில்
அவளை சந்திப்பேன் என்பது ...
ஆண்டுகள் ஏழு போனது தெரியவில்லை
அதற்குள் எத்தினை சோகங்கள்
எத்தினை உறவுகள்
எத்தினை பிரிவுகள்
வெளி நாட்டுப் பணமும் தமிழரும்
என்றொரு புத்தகமே எழுதலாம்
அவளின் வாழ்க்கை வரலாற்றை வைத்து
இப்படி நான் அடிக்கடி எண்ணியதுண்டு ...
அரபு நாடுகளில் தெரியாத முகங்களின் நடுவில்
கஷ்ட பட்டு உழைச்சதெல்லாம்
பட்ட கடனுக்கு வட்டியாகவும்
தந்தையின் மருந்துகளாகவும்
உரு மாறி போனது ...
எல்லா கஷ்டமும் மறந்து போகும்
அவள் ஒருத்தியின் அன்பை எண்ணுகையில் ...
பாவம் அவள் எண்ணிக் கொண்டேன்
எப்பவும் அன்பு காட்ட மட்டுமே தெரியும் அவளுக்கு ...
மற்றவர் துன்பத்தை கண்டாலே மனம் இலகிடுவாள் ... !
அவள் ஒருத்தியை எண்ணி எண்ணியே
என் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டேன் ...
நான் வெளிநாடு செல்வது அறிந்த உடனே
சந்தோஷப் பட்டவளும் அவளே
துன்பப் பட்டவளும் அவளே
என் கஷ்டங்கள் தீருவதை எண்ணி
சந்தோஷப் பட்டாள்...
என்னை பிரிய நேரிடுவதை எண்ணி
கவலை பட்டாள் ....
அவளிடம் நான் சொன்னேன்
ஏழேவருடங்கள் தான் வந்து விடுவேன் ...
கண்களில் நிறைந்த கண்ணீர் துளிகளாய்
கன்னங்களை நனைக்க என்னையே
பார்த்துக் கொண்டிருந்தாள் ....
அடிக்கடி அவள் சிரிக்கையில்
கன்னத்தில் விழும் குழி ...
வரிசையான அவளின் பற்கள் ...
அவள் சேலை கட்டு கூட ஒரு அழகு தான் ...
அம்மா இறந்த நாள் அடக்க முடியாமல்
கதறி அழுத என்னை ஆதரவாய் அணைத்தவள் ...
உனக்காக தான் நான் இருக்கேனே ...
கவலை படாதே என்றாள்....
இப்படி தான் வெளிநாடு பயணத்தின் போது
நீர் ததும்பும் கண்களால்
நிமிர்ந்து பார்க்காமல் விடை கொடுத்தாள்
பிரிகையில் பற்றி இருந்த அவள் கைகளின் இறுக்கத்தில்
அறிந்தேன் அவளின் மன கஷ்டத்தையும்
பிரிவின் சோகத்தையும் ...
என் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு புறப்பட்டேன் ..
வாரம் தவறாமல் வரும் அவள் கடிதங்களுக்காக
ஏங்கி தவிக்கும் என் மனது ...
கடந்த பத்து மாத காலமாக
அவளின் கடிதங்களை காணவில்லை ...
இடை இடையே என் நண்பர்களின் கடிதங்களில்
வீட்டு விடயங்களையும் அவர்களின்
இடம் பெயர்வுகளையும் அறிய கூடியதாய் இருந்தது ....
நானும் எத்தனையோ கடிதம் அனுப்பியும் பலனில்லை
அவர்களின் கடிதங்களிலும் அவளை பற்றி
எந்த ஒரு வரியும் இல்லை ....
தந்தையுடனான தொலைபேசி உரையாடலில்
அவளை பற்றி கேட்கலாம் என்றாள்
அதற்கும் தொலைபேசி துண்டிக்க பட்டது ...
என்னவோ தெரியவில்லை
கொஞ்ச நாளாக என் மனது ஒரு நிலையில் இல்லை
பலவாறாக மனது எண்ணத் தொடங்கியது ....
மிகவும் கவலையாக இருந்தேன் ...
என் பொறுமையும் நிலை கொள்ளவில்லை
வேலைக்கான நாட்களும் நீடிக்கவில்லை
கிளம்புகிறேன் ஊரை நோக்கி ...
புகையிரத வண்டி மெதுவாய் அசைந்த வண்ணம் இருந்தது
மூடி இருந்த கண்களின் ஊடே அவள் முகம் வந்து வந்து மறைந்தது
அவளுக்காக ஆசை ஆசையாய் வாங்கி வைத்த
சின்ன சின்ன பரிசு பொருட்கள் எல்லாமே
அவள் ஆசை பட்டவைகள் ....
நான் ஊர் போக விடிந்து விடும் ...
நாளைக்கு எப்படியும் அவளை பார்ப்பேன் ...
விடியும் வேலை
ஊர் வந்து விட்டேன்
உடைந்து போன வீடுகளும்
சரிந்து கிடந்த மரங்களும்
பாதி கிடங்கும் பாதி கல்லுமாய்
கிடந்த வீதி வழியே வாகனம் செல்ல முடிய வில்லை
இறங்கி நடக்கின்றேன் ...
எங்கள் தெருவில் பாதி வீடுகளை காணவில்லை
பார்த்துக் கொண்டே சென்றேன் ...
எங்கள் வீடு வந்து விட்டது
படலையை திறக்கும் போதே
அப்பாவின் இருமல் சத்தம் கேட்கிறது ..
வீட்டுக்குள் நுழைகிறேன் ...
அப்பாவின் இருமலை தவிர
வீடே அமைதியாய் இருந்தது ...
அப்பா என்னை கண்டதும் சிரிக்கின்றார் ...
சிரித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்கின்றேன்
என்னடா பார்க்கிறாய்
அது அப்பாவின் குரல் ...
இல்லை ஒன்றும் இல்லை
சொல்லி கொண்டே
பின் வாசலுக்கு வருகின்றேன்
அங்கும் அவள் இல்லை ...
வராந்தாவில் பேச்சு சத்தம்
வந்து விட்டாளோ ஓடி வருகிறேன்
அங்கு சேது அண்ணா........
என்னை கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொள்கிறார்
கண்ணாலேயே அவரை கேட்கின்றேன்
அவளை காணவில்லை எங்கே என்று ?
அப்பா என்னையும் அவரையும்
மாறி மாறி பார்க்கின்றார்
பின் அவருக்கு கண் ஜாடை செய்கின்றார்
சொல்ல வேண்டாம் என்பது போல்
அப்பாவின் முகத்தில் சோகம் நிழலாடுகிறது
சேது அண்ணா முகமும் தான் ..
அவரின் பரிசு பொருள்களை காட்டுகிறேன்
கண்ணீர் மல்க பார்க்கின்றார்
அவளின் பரிசுகளையும் காட்டுகிறேன்
கட்டுபடுத்த முடியாமல் அழுகின்றார்
என்ன என்கின்றேன் ...
எல்லாம் எடுத்துட்டு வா அவளிடமே கொடுத்திடலாம்
என்றவர் பின்னாடியே போகின்றேன்
பரிசுகளையும் கொண்டு
வழியில் அவரிடம் சொல்கின்றேன்
இதை அவளிடம் கொடுத்து கட்டி பிடிக்க வேண்டும் என்கின்றேன்
அழகிய கடுதாசி ரோஜாவை காட்டி
அதை அவர் கைகளில் வாங்கி கொண்டார்
சரி சொல்லலாம் என்றார்
சரி அவள் ஏன் அங்கு இருக்கிறாள் என்கிறேன்
வா சொல்லுறேன் என்கிறார்
நானும் செல்கிறேன் ...
அடுத்து அவர் சென்று நிண்ட இடம்
ஒரு கணம் என்னை நிலை குலைய வைத்தது
ஆடிப் போய் விட்டேன் ...
நிமிர்ந்து சேது அண்ணாவை பார்கின்றேன்
கண்ணீருடன் தேம்புகிறார்
ஓடி போய் கல்லறையில் விழுகின்றேன்
ஏன் இப்படி செய்து விட்டாய்
சொல்லாமல் போய்விட்டாயே
ஐயோ என்று கதறுகிறேன்
சேது அண்ணா என் கைகளை பற்றுகிறார்
பல பேரை காவு கொண்ட
அகோர யுத்த வெறியர்களின் வேட்டைக்கு
இவளும் பலியாகிட்டாடா
என் தலையில் அடித்துக் கொள்கிறேன்
நீ வந்த உடனே விருப்பத்த சொல்றேன்னு சொன்னாளடா
இப்படி ஆகி போச்சுடா
இந்த பூவை அவள் கல்லறையில் வைக்கிறேண்டா
அலுத்து கொண்டே அந்த பூவை கல்லறையில் வைக்கிறார்
காதலர் தினத்தில் சேது அண்ணாவிடம் உன் காதலை
சொல்கிறேன் என்று சொன்னாயே அக்கா
இப்போ உயிரை விட்டுட்டியே அக்கா
துக்கம் தொண்டையை அடைத்தது
அம்மாவின் படத்துக்கு பக்கத்தில்
அக்காவின் படத்துக்கும் மாலை போடுகிறேன்
அக்கா நீ அக்கா இல்ல நீயும் என் அம்மா தான்
சேது அண்ணா சொல்கிறார் என்னடா
இன்னுமா நிற்கிறாய்
வா வா ரயிலுக்கு நேரமாகிட்டு ....
இன்னும் மூன்று வருடங்களுக்கு
வேலை வெளிநாட்டில் செல்கிறேன் விரக்தியில்
அக்காவின் கல்லறையை
கட்டி முடிக்கவும் காசு வேணுமே ...!!!

---சிந்து சிவசங்கர்.

No comments:

Post a Comment