பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

என்னுயிர் தோழி

18.என்னுயிர் தோழி ...!!!

அமைதியான இரவுகளில்
மெலிதாய் வீசும் தென்றலில்
கரையோரங்களில் அசைந்தாடும்
நெட்டையாய் வளர்ந்த மூங்கில்களின்
சங்கீதம் செவிகளுக்கினிமையாய்...
இமைகள் மூட மறுத்து நித்திரையோட
யுத்தம் செய்யும் தருணங்களில் ...
யாருக்காக? ... எதற்காக? ... ஏன் ....?
என்று கூட தெரியாமல்
மனசு அலைபாயும் ....
முதல் பிடிக்காதது பிறகு பிடித்து போகலாம் ...
முதல் பிடித்தது பிறகு பிடிக்காமலும் போகலாம் ..
சில விஷயங்கள் அப்படி தான் ...
அப்படி தான் அந்த அழகியும் எனக்கு ....
அழகென்று சொல்வார்கள் அவளை ...
அப்போது அப்படி எனக்கு தோன்றியதில்லை
சிறுவயதில் எனக்கு அவளை பிடிப்பதில்லை
அவளும் என்னை விட்டு தள்ளி தள்ளியே இருப்பாள் ...
சண்டையும் இல்லை நேசமும் இல்லை ...
சில காலம் அப்படி தான் இருந்தேன் ...
யௌவனம் என்னை தொற்றிக் கொண்டதும்
அந்த உண்மை பொய்த்தது ...
ஓரக் கண்ணால் அவளை ரசிப்பதுண்டு ...
அவளை மற்றவர் புகழ மகிழ்ந்ததுண்டு
அவளை பற்றின கவிதைகள்
பக்கம் பக்கமாய் எழுதி குவிப்பார்
என் நண்பர்கள் ... பார்த்ததும் உண்டு ...
ஆனால் அவளுக்காக நான் எழுதிய கவிதைகளை
யாருக்குமே காட்டியதும் இல்லை
சொல்லிக் கொள்ளவும் இல்லை
எப்பவும் அவளைச் சுற்றி தோழிகள் கூட்டமாய் ...
கவனிக்க தவறவில்லை ...
அவளை காணாத நாட்களில்
அவள் வந்திருக்கலாம் என்றும் எண்ணியதுண்டு ...
எதோ ஓர் உணர்வில்
உடல் சிலிர்த்துக் கொள்ளும் ....
அவள் வந்திருப்பாளோ ...?
எட்டி எட்டிப் பார்க்கின்றேன் ...
ஆம் வந்து விட்டாள் ... அழகே உருவாய் ...
கருப்பு உடை அவளுக்கு மட்டும் தான் அழகு
என்று எண்ணிக் கொண்டேன் ....
என்னை கண்டதும் அவள் முகத்தில் தான்
எத்தினை பிரகாஷம் ...
அவளை பார்த்துக் கொண்டிருந்தால்
பசியும் மறந்திடும் ...
அவளை பார்த்து மெலிதாய் தலை அசைக்கிறேன் ..
அவள் முகத்தில் வெட்கத்தின் ஒளி தெரிகிறது ...
பூரித்துப் போகிறேன் ....
அவள் வெட்கத்தை கண்டதும்
ஒரு கவிதை நினைவுக்கு வந்தது ...
''தேவதையே ஒளியாக நீ வந்தாய் என்னருகில்
வாழ்வின் இருள் தனையே துரத்தி விட்டாய் நீ விரைவில் ''
உண்மை தான் .... இப்பொழுதெல்லாம்
இன்பமாகவே இருக்கின்றன என் பொழுதுகள் ...
தினமும் அவளுக்காக நான் எழுதும் கவிதைகள்
அவளிடம் சென்றடையாத காரணத்தால்
பெட்டகங்களுக்கும் லாச்சிகளுக்கும்
இடம்பெயர ஆரம்பித்து விட்டன ...
பாவம் அந்த பேசத் தெரியா கவிதைகள் ...
அந்த கவிதைகள் கூட சில நேரம் என்னை திட்டி இருக்கும் ...
அழகின் இலக்கணமான அவளிடம் செல்ல வில்லை என்ற
கோபம் அவைகளுக்கு அதிகமாகவே ...
பரிதாபமாய் பார்க்கின்றேன் அந்த கவிதைகளை ...
பெட்டகுத்துள் பூட்டி வைக்கிறேன் ....
உறங்கலாமென கண்களை மூடுகிறேன்
உறக்கம் வர மறுத்தது ...
நாளைக்கு மறுபடியும் இடம்பெயர்வு ...
இனி அவளை சந்திப்பேனா?
நினைவு அறிந்த நாள் முதல்
எத்தினை உறவுகள் எத்தினை பிரிவுகள் ...
ஒவ்வொரு உறவாய் இழந்து இப்பொழுது தனிமையாய் ...
நாளைய பயணம் தனிமையாக ....
நினைக்கையில் கண்கள் கலங்கியது ...
எல்லாம் அடுக்கி வைத்தாயிற்று ...
பயணப் பையில் வைக்கின்றேன் பெற்றோரின் புகைப்படத்தை ...
அடுத்து நான் ஆசை ஆசையயாய் அவளுக்காக
எழுதிய கவிதைகள் ...
விட்டுச் செல்ல மனமில்லை
எடுத்து வைத்தேன் எல்லாவற்றையும் ...
அதிகாலையில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது . ...
நான் செல்ல வேண்டிய நேரம் சுட்டிக் காட்டுகிறது
மணிக்கூடு தன் வேலையை சரியாய் செய்கிறது ...
புறப்படுகிறேன் என் புதிய இடத்துக்கு ..
மனது முழுக்க அவளின் நினைவு நிறைந்திருந்தது ...
அன்பா பாசமா பதில் தெரியவில்லை ...
நன்றிக் கடனோ ... ஆமாம் அப்படி தான் இருக்கும்
நினைத்துக் கொள்கிறேன் ....
பயணப் பையை சுமந்தபடி வெளியே எட்டிப் பார்க்கிறேன்
கதவினை பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கின்றேன்
அவள் வரவில்லை ... மெல்ல மெல்ல நடக்கின்றேன் ...
இரண்டு பேருந்து பயணத்திற்கு பின்பு
மாலை புகையிரத நிலையத்தில் காத்திருக்கிறேன் ..
தூரத்தில் புகையிரத வண்டி வரும் சத்தம் ..
ஓடிப் போய் ஏறுகிறேன் ...
ஜன்னலோரமாய் அமர்ந்துக் கொண்டேன் ...
கண்களை மூடியபடி தனிமையின் கொடூரத்தை அசைபோடுகிறேன் ...
என்னையும் அறியாமல் கண்ணீர் துளிகள்
கன்னத்தில் உருண்டோடியது ....
விழிகளை துடைத்தப் படி ஜன்னல் வழி பார்க்கின்றேன்
அவள் .....!!! அவளே தான் புன்கையுடன் அவளையே பார்க்கின்றேன்
என்னை பார்க்க தான் வந்திருப்பாளோ ...
ரயில் மெதுவாய் நகர ஆரம்பித்தது ...
பின்னாலேயே ஓடி வந்துக் கொண்டிருந்தாள் ..
நீர் தேங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தேன் ....
ஓடிக் கொண்டே இருந்தாள்...
மனசு கணத்தது....
கண்களை இறுக மூடிக் கொண்டேன் ...
நீண்ட நேர பயணம் உறங்கிப் போனதே தெரியாமல்
விழிக்கின்றேன் ... அவளை காணவில்லை ...
சுற்றும் முற்றும் பார்க்கின்றேன் ...
இறங்க வேண்டிய இடம் இதோ வந்து விட்டது ...
இறங்கி நடக்கின்றேன் ...
சட்டை பையுனுள் இருந்த முகவரியை பார்க்கின்றேன் ...
வந்து விட்டேன் .....வீட்டினுள் ஓர் அறை எனக்காக
மேல் மாடியில் ... மொட்டை மாடி இருக்குமோ
அவசரமாய் வெளியே வந்து பார்க்கின்றேன் ..
ஆமாம் இருக்கிறது ...
பயண அசதியில் உறங்கிப் போனேன் ..
மீண்டும் மாலை எழுந்து மொட்டை மாடிக்கு செல்கிறேன் ..
என் கண்களை நம்பவே முடியவில்லை ..
அவள் வந்துவிட்டாள்... என்னையே பார்த்து புன்னகைப்பதாய் உணர்ந்தேன் ..
கவிதை மனதுள் தோன்றியது ..
காகிதம் பேனா சகிதம் அமருகிறேன் ...
எழுதத் துவங்குகிறேன் ...
தன்னந்தனி வாழ்க்கையிலே
துணைக்கு வரும் நல் மனமே
உன்னை தேடும் பகல் பொழுதில்
மறைந்து விடும் இளமதியே
காற்றோடும் வருகின்றாய்
இருளோடும் வருகின்றாய்
நான் அழைக்கும் வேளைகளில்
எங்கே நீ மறைகின்றாய் ...
பாதி மாதம் தெரிகின்றாய்
மீதி மாதம் ஒழிகின்றாய்
உறவாக உன்னை நினைத்தால்
வருவாயா ஒளிகீற்றே
சிந்தும் சிறு பனி துளிகள்
சேர்த்து வைப்பேன் உனக்காக
நான் முதிர்வதற்குள் வந்திடுவாய்
சிங்கார வெண்ணிலவே ....
சோகம் தாக்கும் இருள் பொழுதில்
குளிர் தந்து நீவிடுவாள்
நீண்ட நேரம் வான் வெளியில்
எனக்காக அசைந்திடுவாள்
சிமிட்டி சிரிக்கும் வெள்ளிகள் அவள்
தோழிகள் என நான் நினைப்பேன்
உன் தோழி நான் தான் என -
என்னை பார்த்து சிரித்திருப்பாள் ...
நிலா அவள் என்னுயிர் தோழி ...

சிந்து சிவசங்கர் .!

No comments:

Post a Comment