
என்னை எல்லோருக்கும் தெரியும்
ஆனால் கண்டுக்க மாட்டார்கள் .
சில பேருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
சிலருக்கு என்னை பிடிக்காது
பிடித்த சிலரும் என்னை
ஆரம்பத்தில் நன்றாக பாதுகாப்பார்
அறைக்குள்ளே பூட்டி வைப்பார்
பார்ப்பதற்கு பலபேர் வருவார்
பெண்களில் பல பேர்
ஆண்களில் சில பேர்
என்னை தொட்டு தொட்டு பார்ப்பார்
நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன்...
கடைசியில் என்னை பிடிக்க வில்லை என்பார்
நான் நொந்து போய் விடுவேன் ...
என்னோடு அறையினுள் அடை பட்ட
மற்றவர்களில் சிலர் எம்மை விட்டு பிரிகையில்
வேதனையுடன் விடை கொடுப்போம்
எம் வேதனை எம் எஜமானிகளுக்கு புரிவதே இல்லை ...
இப்படி தான் நானும் அவர்களை போல்
ஒரு நாள் அனுப்ப பட்டேன்
பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றேன் ...
என்னை கூட்டி போன என் எஜமானி
அங்கு ஓர் அறையினுள் என்னை பூட்டி வைத்தார் ...
மறு நாள் தன்னோட சேர்த்தே என்னையும்
போகிற இடமெல்லாம் அழைத்து சென்றாள் ..
நானும் என் எஜமானி கூடவே ஒட்டிக் கொண்டேன் ...
சில பேர் என்னை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்
பெருமை பட்டு கொண்டேன்
சில பேர் இதை எதுக்கு கூட்டி வந்தே என்றது போல் பார்த்தனர்
அப்போ எல்லாம் கூணிக் குறுகிப் போவேன் ...
நாள் பூரா எஜமானி கூடவே இருந்தேன்
அவர்கள் இழுத்த இழுப்புகெல்லாம் இழுப்பட்டேன் ..
பொழுது சாய்ந்ததும் என்னை
மூலையில் இருத்தி விட்டாள்..
அதற்க்கு பிறகு என்னை கண்டுக்கவே இல்லை ..
அவர்கள் போகும் போதும் வரும் போதும்
உழக்கு பட்டேன் சீண்ட பட்டேன் தீண்ட பட்டேன்
பகல் எல்லாம் உழைத்த களைப்பு
ஒரு புறம் இப்ப படும் அவஸ்தை ஒரு புறம்
அசதியில் உறங்கி விட்டேன் ...
என் உடலில் எதோ பாரமாய் விழ
திடுக்கிடுகிறேன் என்னை போல இன்னும்
பல பேர் எனக்கு மேலே நசுக்க பட்டு அடியில் கிடக்கிறேன் ...
எதோ பேசுகிறார்கள் ஆரவாரமாய் ...
எதுவுமே விளங்கவில்லை ...
அம்மா என்று ஒரு குரல் கேட்கும்
வந்துட்டியா என்று எஜமானி சொல்வாள்
மறு நிமிடம் நான் இருக்கும் திசைக்கு
எஜமானியின் கைகள் நீளும் ..
வந்தவன் எங்களை குண்டு கட்டாய் கட்டி தூக்குவான்
உடல் நோகும் நாம் கத்தினாலும்
வந்தவன் பொருட்படுத்த மாட்டான்...
எங்கேயோ கொண்டு போவார்
கட்டுகளை அவிழ்ப்பார்
தண்ணிக்குள் அமுக்கி வைத்திருப்பார்
மூச்சடைக்கும் வரை
அவனுக்கு கவலையே இல்லை ..
அவன் கோபம் தீரும் வரை அடிப்பான்
நான் குமுறுவது அவனுக்கு கேட்குதோ இல்லையோ
மீண்டும் மீண்டும் இது தொடரும்
அவன் அலுவல் முடியும் வரை ..
.
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருப்பேன் .....
தினம் தினம் இதே கொடுமை ...
ஒருநாள் உடம்பெல்லாம் காயப்பட்டு
தோல் கிழிந்து தொங்கும் நிலைக்கு வந்தேன் ..
ரொம்ப நொந்து போனேன்...
ஆனால் எஜமானி என்னை கண்டதுமே
என்னை அடித்தவனை திட்ட
மனம் குளிர்ந்து போனேன்
எனக்காக பேசுகிறாளே என்று எண்ணம்
பார்த்து செய்ய படாதா என்றாள்..
கவலையோடு என்னை பார்த்தாள்
அடுத்து அவள் செய்த விடயம்
என்னை சோகத்தில் ஆழ்த்தியது
வீட்டு சமையல் காரியிடம்
கை மாற்ற பட்டேன்
சமையல் காரி எல்லா பற்களும் தெரிய சிரித்தாள்
என்னம்மா எனக்கா என்றாள் ..?
நான் அதிசயமாய் பார்த்தேன்
அட இவளுக்கு என் மேல இவ்ளோ பாசமா ..
ரொம்ப சந்தோஷமாய் அவள்
என்னை கூட்டி போனாள்..
ஆனால் அங்கும் அதே கொடுமை
தினம் செத்து பிழைச்சு வந்தேன் ...
கடைசியில் ஒரு நாள் அவள்
என்னை துண்டு துண்டாய் வெட்டினாள்...
அழுது கொண்டே அவளை பார்த்தேன்
என் அங்கங்கள் ஒவ்வோன்றும்
தவணை முறையில் நெருப்புக்கு இரையானது .
கடைசி அங்கம் நான் தான் ...
அடுப்படியில் முடங்கி கிடப்பதும்
அடிக்கடி சூடு வாங்குவதும்
என் பிழைப்பாய் போச்சு
உழக்கு பட்டு உழக்கு பட்டு
அடி உதை வாங்கி
என் கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறேன்
குப்பை மேட்டில் அனாதையாய் ...இதோ சாம்பலாகிறேன் ...
மானம் காத்தவளுக்கு சம்பளம் மரணம்
முதலில் புதியவள்
பின்பு பழையவள்
அடுத்து கிழிந்தவள்
கடைசியில் அடுப்படி பிடி துண்டு
இப்போ குப்பையோடு குப்பையாய் நான் .....
என்ன செய்வது நான் ஒரு புடவையாகிப் போனேன் ..!!!
சிந்து சிவசங்கர்.
No comments:
Post a Comment