பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 21 June 2011

பிரபாகரன் போராளியானது ஏன்?

பிரபாகரன் போராளியானது ஏன்?


ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.

இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.

இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).

இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.

சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.

இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.

இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் "தரப்படுத்துதல்' என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.

இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, "மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு - தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்' என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.

இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, "நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்' என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, "இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை' என்றார்.

இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.

சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.

"இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. "இளைஞர் அணி' ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்' என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.

மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.

பாவை சந்திரன்

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்




எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.



இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.



இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.



ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்' போர்வீரனாகவே களத்தில் இறங்கினார்.



சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.

அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒர் தலைமறைவு - கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக அவர் ஒரு ‘தேடப்படும் நபராக' மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவவேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது.



காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், தேசிய கௌரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக்கொண்டார்.



தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு.பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார்.



இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும், அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளிவானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார்.



தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.



சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார்.



அவரது சில போர்த் தந்திரோபாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.பிரபாகரன் ஒரு கரும வீரர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான தத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார்.



தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. தனது போராட்ட இலட்சியத்தை பிரபாகரன் இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.



தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்திலிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டுள்ளனர். தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார்.



ஒரு முகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் அபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று. திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக்கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது.



உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.



திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.



போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிற்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார். சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவற்றைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக்கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து.



ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவுவகைகளை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்திலிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு. போர்க்கலையில் திரு பிரபாகரன் அபாரமான ஆற்றல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து.



அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ - அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது. தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபாகரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கீனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக்கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது.



மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக்கொண்டார். மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார்.



தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கௌரவிப்பார். வீரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபாகரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது.



துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.‘நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது' என்று நான் பாலாவிடம் கேட்டேன்.



‘இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்' என்று பாலா சொன்னார். தனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செயற்படும் போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது.



நீதியானது, நியாயமானது, எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம். ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் தலைவருமாவார்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும் பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக்கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடந்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை.



பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீதுபடிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதி விட முடியாது.



பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக தகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணபெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும், மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார். பிரபாகரன் குடும்பப்பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.



பிரபாகரனுக்கு ‘ஓய்வு' கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார். 1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா. 1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன். முதற் குழந்தையின் பிரசவத்தில் மதிக்கு நான் உதவி செய்தபோது, உரிச்சுப் படைச்சு தோற்றத்தில் மட்டு மன்றி குணாம்சத்திலும் தகப்பனைப் போலவே குழந்தை வளர்ந்துவருமென நான் நினைக்கவில்லை. ஒரே பெண் குழந்தையான துவாரகா படிப்பில் ஆழமான அக்கறையும் பொறுப்புணர்வும் உடையவர். பிரபாகரனின் கடைக்குட்டி பாலச்சந்திரன் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லக் குட்டி. அச்சு வார்த்ததுபோல பிரபாகரனின் மறுதோற்றம். நான் வன்னியை விட்டு புறப்பட்ட வேளையில் குழந்தை பாலச்சந்திரன் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதனால் அவரது ஆளுமைபற்றி அதிகம் என்னால் சொல்லமுடியாது.



எழுத்தாளர்,

சமுகவியலாளர்,

அரசியற் செயற்பாட்டாளர்,

போராளி. பிரித்தானியா.

அடேல் பாலசிங்கம்

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

இரண்டாம் பகுதி

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்


70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.

மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.



இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:



1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.



நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.

எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு நியாயமாகத் தெரிந்தவை தான் இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.

அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.



அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.



கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.



இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.



எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.

இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.



துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.



துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.



அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.



எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.

இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.



இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம் கண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.



என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.



20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.

இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை உருவாக்கப்படுகிறது. இந்தப் பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.



காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.



இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.



பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.



இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.

இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.



இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.



இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.



இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.



மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.



துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.



அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.

அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.



இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.

மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.

அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை.



எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.



அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.


தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின் ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்……

தொடரும் .....