பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

தேவதையே நீ மண்ணில் வந்திறங்கும் நேரம்

7."தேவதையே நீ மண்ணில் வந்திறங்கும் நேரம்"



இளங்காற்று இதமாக தழுவிக் கொண்டு செல்லும்
தெருவோர தென்னைகள் தாலாட்டிக் கொள்ளும்
பொடி கல்லும் குறும் மணலும் சிறு தூரம் தாவும்
கிணற்றுக்குள் தவளைகள் கூட்டமாய் கத்தும் ...

காற்றசைவில் மூங்கிலும் குழல் ஊதிக் கொள்ளும் ...
வெண் மேகம் கருமையாய் தான் மாறி போகும்
சூரியனும் அதனுள்ளே தான் ஒழிந்து கொள்ளும்
குடில்களின் கதவுகளும் தான் மூடிக் கொள்ளும் ....

பறவைகள் கூட்டமாய் சிறகடித்து செல்லும்
பொடி நடையில் செல்பவரை ஓடிடச் செய்யும்
விலங்குகளும் குகைகளில் தான் அடைந்து கொள்ளும்
கோழியொன்று கொக்கரித்து குஞ்சுகளை அழைக்கும் ....

வானை விட்டு நீல நிறம் காணாமல் போகும்
பகல் தனில் இருள் கூட ஓடி வந்து சேரும்
படகுகள் கரை நோக்கி வேகமாய் செல்லும்
கடல் அலை ஓசையாய் ஒரு வீணை மீட்டும் ...

விளையாட்டில் மேகங்கள் தாம் மோதிக் கொள்ளும்
வானமது இடியாக ஒரு மேளம் கொட்டும்
தென்றலோ இசையாக ஒரு காணம் பாடும்
சிறு தோணி கடல் மீது ஒரு ஆட்டம் போடும் ...

தட தட எனும் ஓசை செவிகளை கிழிக்கும்
மின்னலும் ஒரு நொடியில் ஒளி தந்து மறையும்
செடிகளும் மலர்களும் தலை அசைத்து சிரிக்கும்
மழை தேவதையே நீ மண்ணில் வந்துதிரும் நேரம் ...!!!


சிந்து சிவசங்கர் .

No comments:

Post a Comment