பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Friday, 3 June 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-6

 

விவேகானந்தா சந்தித்த சாது அவருடைய எண்ணத்திலும், அவருடைய நண்பர்கள் எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தியது போல் ரஷியாவில் ஒருவர் சர்வாதிகாரி ஸ்டாலினையே ஆச்சரியப்படுத்தினார். ரஷிய மருத்துவரும் ஆழ்மன ஆரார்ய்ச்சியாளருமான லியோனிட் லியோனிடோவிச் வாசிலிவ் (1891-1966) என்பவர் சர்வாதிகாரி ஸ்டாலினை ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி கேட்டு அணுகினார். கம்யூனிஸ்டான ஸ்டாலினிற்கு இந்த ஆழ்மன சக்திகளில் சுத்தமாக நம்பிக்கை இருக்கவில்லை.




தன்னிடம் உள்ள சக்தியை நிரூபிக்க ஸ்டாலினை அவருடைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவருடைய தனியறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பதாக வாசிலிவ் சொன்ன போது ஸ்டாலினுக்கு சிரிப்பு தான் வந்தது. அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் விருப்பப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார். உடனடியாக தன் பாதுகாவலர்களை அழைத்து வாசிலிவ் பற்றிச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அவரை தன்னை வந்து சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிய ஸ்டாலின் பின் அந்த விஷயத்தையே மறந்தார்.

வாசிலிவ் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இரவு நேரத்தில் அவரது தனியறையில் வந்து நின்ற போது ஸ்டாலினிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. உடனடியாக வெளியே நின்றிருந்த தன் பாதுகாவலர்களை அழைத்த ஸ்டாலின் வாசிலிவைக் காட்டி தன் கட்டளையை மீறி அவரை உள்ளே விட்டது ஏன் என்று கேட்டார். மிரண்டு போன பாதுகாவலர்கள் அவரைத் தாங்கள் பார்க்கவேயில்லை என்று சாதித்தனர். கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின் அவர்களுக்கு அந்த இடத்திலேயே மரண தண்டனை விதித்து ஆணையிட வாசிலிவ் இடைமறித்து தவறு அவர்களிடத்தில் இல்லையென்று சொன்னார். ஸ்டாலினிற்கு மிக நெருக்கமான ஆலோசகர் ஒருவருடைய உருவத்தை பாதுகாவலர்கள் மனதில் ஏற்படுத்தி தான் அவர்களைக் கடந்து வந்ததாக வாசிலிவ் சொன்னார். விசாரித்த போது பாதுகாவலர்கள் அனைவரும் அந்த ஆலோசகரைப் பார்த்ததாக ஒருமித்து சொன்னார்கள். வியப்புற்ற ஸ்டாலின் மரணதண்டனையை விலக்கிக் கொண்டார்.

ஆனாலும் இந்த மனோசக்தி ஸ்டாலினைக் குழம்ப வைத்தது. ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தந்த ஸ்டாலின் வாசிலிவை இன்னொரு அதிசயத்தைச் செய்து காட்டச் சொன்னார். ஒத்துக் கொண்ட வாசிலிவ் ஸ்டாலினுக்கு நம்பகமான இருவரைத் தன்னுடன் ஒரு வங்கிக்கு அனுப்பச் சொன்னார். உடனடியாகத் தன் ஒற்றர் படையில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அவருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

வங்கிக்குச் சென்ற வாசிலிவ் ஒரு வெள்ளைக் காகிதத்தை வங்கி கேஷியரிடம் தந்து அதற்கு ஆயிரம் ரூபிள்கள் தரச் சொன்னார். அதை வாங்கிய கேஷியர் மனதில் வாசிலிவ் அது ஆயிரம் ரூபிளுக்கான வங்கிக் காசோலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர். அந்தக் கேஷியர் அதை வாங்கிப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஆயிரம் ரூபிள்களை எண்ணி அவரிடம் தந்ததை ஸ்டாலினின் ஒற்றர்கள் விழிகள் பிதுங்கப் பார்த்தனர். பின் அந்தக் கேஷியரிடம் மீண்டும் அந்தப் பணத்தைத் தந்த வாசிலிவ் அந்தக் காகிதத்தை இன்னொரு முறை பார்க்கச் சொல்ல, வெள்ளைக் காகிதத்தைப் பார்த்த வங்கி கேஷியர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபிள்கள் என்பது மிகப் பெரிய தொகை.

இறுதியில் ஸ்டாலின் உறுதியளித்தபடி ஆழ்மன ஆராய்ச்சிக்கூடத்தை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் நிறுவ அனுமதியளித்தார். நாட்டு விஷயங்களிலும், தனிப்பட்ட அரசியல் விஷயங்களிலும் கூட ஸ்டாலின் வாசிலிவின் சக்தியினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. எல்லா சர்வாதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய சந்தேகமும், பயமும் ஸ்டாலினிற்கும் இருந்ததால் அவர் அவ்வபோது அந்த ஆராய்ச்சிகளுக்குக் காட்டிய உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டார். அரசியல் கலக்காத மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகள் பற்றிய விவரம் கூட வெளிவருவதை ஏனோ அவர் விரும்பவில்லை. அதனால் 1920, 1930களில் வாசிலிவ் மனோசக்தி குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து வெற்றி கண்ட விவரங்கள் 1960 கழிந்து ஸ்டாலின் மறைவிற்குப் பின் தான் வெளி வந்தன.


ஆரம்பத்தில் ஆழ்ந்த ஹிப்னாடிச மயக்கத்தில் சோதனையாளர்களை ஆழ்த்தி தான் சொன்னபடி அவர்களை செயல்படுத்த வைத்த வாசிலிவ் பின் வாய் விட்டு சொல்லாமலேயே நினைத்தவுடன் அது போல் நடந்து கொள்ள வைப்பதில் வெற்றி கண்டார். "வலது கையை அசை. இடது காலைத் தூக்கு. இப்போதே உறங்க ஆரம்பி. விழித்துக் கொள்" என்பது போன்ற கட்டளைகள் அவர் மனதில் எழுந்தவுடன் ஹிப்னாடிச நிலையில் இருந்த சோதனையாளர்கள் தங்களை அறியாமல் அதை செய்தார்கள். அந்த ஹிப்னாடிச உறக்கத்தில் பல நோயாளிகளை அவர் குணப்படுத்தியும் காட்டினார்.

அடுத்த கட்டமாக சோதனையாளர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் மிகச் சுலபமாக இதை நடத்திக் காட்ட முடியும் என்று நம்பிய வாசிலிவ் அதை நிரூபித்தும் காட்டினார். செவஸ்டோபோல் என்ற நகரம் லெனின்கிராடிலிருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்தது. அங்குள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளரான டொமாஷெவ்ஸ்கீ என்பவரை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தினை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நேரத்தில் இந்த மனோசக்தி பரிசோதனைகளை நடத்தி எண்ணங்களின் சக்தியை அனுப்பவோ, பெறவோ, தூரம் ஒரு தடை அல்ல என்று கண்டுபிடித்தார். ஒரு நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த ஒரு பதிவும் பதியாததைப் பார்த்த வாசிலிவ் பிறகு செவஸ்டோபோல் ஆராய்ச்சிக் கூடத்தை தொடர்பு கொண்ட போது டொமாஷெவ்ஸ்கீயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் எந்த சோதனையும் அன்று செய்யவில்லை என்பது தெரிந்தது.

எண்ண அலைகளின் சக்தி எப்படியெல்லாம் வெற்றி பெறுகிறது என்பதைக் கண்ட வாசிலிவ் அந்த எண்ண அலைகளில் காந்தத் தன்மை இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு இரும்புச் சுவர்கள் கொண்ட அறையில் சோதனையாளர்களை அமர வைத்து பரிசோதனைகள் செய்து பார்த்தார். அந்த ஆராய்ச்சிக் கூட பரிசோதனைக் கருவிகள் எந்தக் காந்த சக்தியும் அந்த இரும்புச் சுவரை ஊடுருவுவதையும் கண்டுபிடிக்கவில்லை. எந்த பரிசோதனைக் கருவியிலும் பரிசோதிக்க முடியாத, ஆனால் எல்லையில்லாத சக்திகள் கொண்ட ஆழ்மன எண்ணங்கள் செய்ய முடிகின்ற அற்புதங்கள் தான் எத்தனை என்று தோன்றுகிறதல்லவா?

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....

-என்.கணேசன்

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-5

 

எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.


"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.

நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?

இனியும் ஆழமாய் பயணிப்போம்.

-என்.கணேசன்

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-4

 

அனுபவம் மிக்க மருத்துவரே தடுமாறும் சில மருத்துவப் புதிர்களில் அனாயாசமாக எப்படி எட்கார் கேஸால் பதில் கண்டு பிடிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு எட்கார் கேஸ் எளிமையாகப் பதில் சொன்னார்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாக எட்கார் கேஸ் சொன்னார். அவற்றை அவர் Akashic Records (ஆகாய ஆவணங்கள்) என்றழைத்தார். அதைப் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அறிவையும், தகவலையும் சுலபமாகப் பெற முடியும் என்றார். எட்கார் கேஸ் உபயோகித்த அந்த ஆகாசம் என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். அவர் சொன்ன கருத்தும் நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.

கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி·பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். "நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?"

யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார்.

யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி·ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் "இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார்" என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.

யுக்தேஸ்வர் சொன்னார். "இப்போது அவன் திரும்புவான் பார்".

அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி·ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.


யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். "அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி·ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி·ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்....."

யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி·ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.

யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது "விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும்" என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.

சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.

இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.

"நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்"

அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார். அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.

எட்கார் கேஸ் சொல்வதையும் யோகானந்தர் சொல்வதையும் பார்த்தால் தொலைக் காட்சியில் விருப்பப்பட்ட சேனல் பார்க்க முடிவதும் வானொலியில் விருப்பப்பட்ட ஸ்டேஷன்களைக் கேட்க முடிவதும் எவ்வளவு இயல்போ இதுவும் அவ்வளவு இயல்பே. நம் மனதை ஒரு ஏண்டனாவாக அமைத்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில் அலைகளாக இருக்கின்ற, நமக்குத் தேவைப்படுகின்ற தகவல்களை ஈர்த்துப் படிக்கும் வித்தையையும் கற்றுக் கொள்ள முடியும் என்கிறது பலரது அனுபவங்கள்

இது பெரிய அற்புதமாகத் தோன்றினாலும் அதீத சக்தி படைத்த அனைவருமே இதை ஆழமாக நம்பியதாகவும், இதை உபயோகித்து இருப்பதாகவும் தெரிகிறது. இன்று ரேடியோவும் தொலைக்காட்சியும் நம்மை எப்படி அதிசயிக்கச் செய்வதில்லையோ அது போல் இதுவும் ஆழ்மனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதில்லை. இப்படி விண்வெளியிலிருந்து தகவல்களைப் பெறும் வித்தைகளை அறிந்திருந்த வேறு சிலரின் சுவாரசியமான அனுபவங்களையும் பார்ப்போமா?

- என்.கணேசன்

(தொடரும்)

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-3

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-3

"என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்" என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.

அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.


எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.

எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.

அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.

கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். "கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை."

ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். "அந்த மனிதர் இறந்து விட்டார்". உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.

பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். 'மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?'

இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.

எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. "சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது". அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.

1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். "மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்" என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.

எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?

மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....

- என்.கணேசன்

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-2

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-2

"அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை" என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.


ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. "தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்" என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.

இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.

1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.

1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."

இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.

1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.

1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு. உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.

இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.

ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

அவற்றையும் பார்ப்போமா?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

- என்.கணேசன்

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1

ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.




அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

இந்த கி.மு, கி.பி நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

 நன்றி. என் .கணேசன்  அண்ணா

மனக்கோலங்கள்-8

இந்தத் தொடரில் சைக்கோபாத்(psychopath)(மனநிலை திரிந்தவர்) என்ற ஒரு முக்கியமான விடயத்தை பற்றி ஆராய்வோம். இவர்கள் பிரகாசமானவர்களாகவும், சராசரி மனிதரை விட புத்திக் கூர்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பார்கள்,அதிபர்களாக இருப்பார்கள், பெரும் நிறுவனங்களில் முக்கிய பதவி வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பார்வைக்கு கண்ணியமானவர்களாக இருப்பார்கள். நெருங்கிப்ப் பழகாதவர்கழுக்கு இவர்கள் கண்ணியமானவர்கள் தான்.ஆனால் நெருங்கி வாழ்பவர்கள் பாடு அதோ கதி தான். அவர்களை மிகவும் சித்திரவதைக்கு உட்படுத்துவார்கள்.இவர்கள் புத்திசாலிகள் என்ற படியால் சட்டத்துடனே கொடுமைப் படுத்துவார்கள்.இவர்களது வழ்க்கைத் துணை,பிள்ளைகளே பெரிதும் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப் படுகிறார்கள்.
நீங்கள் எவ்வளவு ஒரு சிறந்த வைதியசாலையை அமைத்து விட்டு சைக்கோபாத்தின்(Psychopath) வருகைக்காக காத்திருந்தால், எவரும் சிகிச்சைக்கு வர மாட்டார்கள்.இவர்களது நிலமை எல்லை மீறிப் போகும் பொழுது எங்கோ முறையாக மாட்டுவார்கள்.அப்படியாகச் சிறையில் சந்தித்தவர்களையும்,அவர்களால் பாதிக்கப் பட்டவர்களையும் வைத்தே ஆராட்சியாளர்கள் இவர்களின் குணாதிசயங்களை அறிகிறார்கள்.
நோர்வேயியர்களில் 3% ஆனோர் சைக்கோபாத் , இது இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் 25% ஐயும் தாண்டலாம். (ஒரு புள்ளிவிபரமும் இல்லை).
சைக்கோபாத் எனப்படுபவர் மூளைக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பைத் துலைத்தவர்கள்.இவர்கள் மிகவும் சுயநலவாதிகள், பதவிவெறி கொண்டவர்கள்,குற்ற உணர்வு அற்றவர்கள்,உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்கள்,மற்றவர்களை புரிந்து கொள்ளாதவர்கள்,தங்களைச் சுற்றியே எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.தங்களையே முதன்மைப் படுத்துவார்கள். செத்த்வீட்டில் கூட பிரேதமாக இவர்கள் இருந்தால் இவர்களுக்கு சந்தோசம் தான். இவர்களுக்கு உளச்சோர்வு(depression) போன்ற நோய் அறிகுறிகள் தெரியாது.மன அழுத்தம்(stress) உள்ளவர் போல் ஓடித்திரிந்து அவர்களுக்கு நெருங்கியவர்களை , மனச்சோர்வுக்கும் மன அழுத்ததிற்கும் உள்ளாக்குவார்கள்.
ஒரு பெண் நிகம் கடித்தல் நிற்பாட்டுவதற்காக வந்தார் . ஆரம்பித்த காரணத்தை அறிந்த பொழுது அவரின் தந்தை ஒரு சைக்கோபாத்.மகளை பாலியல் ரீதியில் அணுகிய பொழுது அப் பெண் ஓடிச்சென்று கழிவறையைப் பூட்டிவிட்டு நிகத்தைக் கடிக்கத் துவங்கினவர் தான்,தாய் வந்தது கதவைத் திறந்தாலும் நிகக் கடியை விடவில்லை . அவர் சிகிச்சையின் பின் குணமடைந்தார்.
இவர்களால் பாதிக்கப் பட்டவர்கள் பலர் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தாலும் , இரு தமிழ் குடும்பங்களின் கதையைச் சொல்கிறேன்.
ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். அவர்கள் பாடசாலையில் அமைதியாக இருந்தாலும் யாரும் எதிர்பாராத விதமாக சிறந்த புள்ளிகள் பெற்று வந்தார்கள்.அவர்களுக்கு மனக் கவலை,மன அழுத்தம் , சோர்வு போன்றன இருந்தது.அவர்களது தாயின் கட்டுப்பாட்டிலே வீடு இருந்தது.தாய் எப்பொழுதும் சுறு சுறுப்பாகவே தன்னைக் காட்டிக்கொள்வார்.தொடர்ச்சியாகக் கணவனையும் பிள்ளைகளையும் பேசியவண்னமும், திட்டியவண்ணமுமே இருப்பார்.பிள்ளைகளினதும், கணவனதும் தன்நம்பிக்கை குறையும்படியான கதைகளையே அடிக்கடி கூறுவார்.அவர் – கணவன் பிள்ளைகளை நோக்கிக் கூறும் வசனங்கள் சில.
உனக்கு ஒண்டும் உருப்படியாகச் செய்யதெரியாது.
உனக்கு 5 ம் வகுப்புப் படித்தவனின் அறிவு இல்லை..
உன்ன்னுடைய குணத்திற்கு உனக்கு ஒரு நண்பனும் இருக்க மாட்டார்கள்…
உன்னுடைய கூடாத குணத்திற்கு நீ அன்பு வைக்கிறவர்களும் உடனே செத்துப் போவார்கள்..
உண்மை அதுவல்ல , பிள்ளைகள் தமது பாடசாலையில், நல்ல புள்ளிகள் வேண்டுகிறார்கள்,அவர்களது அமைதியான குணத்தால் பல நண்பர்கள் அவர்களை வீடு தேடி வருவார்கள்.இவர்கள் அன்பு வைத்திருந்த தூரத்து உறவினர் விபத்தொண்றில் இறந்து விட்டார்.கணவன் உயர்வகுப்புப் படித்த ஒரு அமைதியானவர்.பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் பொழுது முழு பேச்சும் கணவருக்கே சென்றது.இப்பொழுது பிள்ளைகள் 14 வயதைத் தாண்டியதும் ,அவர்களுக்கும் பேச்சு திட்டு கிடைக்கின்றது.
கணவர் அதிஸ்டவசமாக நோர்வேயிய வானொலியில் சைக்கோபாத் பற்றி கூறியதை கேட்டவுடனே, தனது மனைவி சைக்கோபாத் என்பதை உணர்ந்து பிள்ளைகளைச் சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.
கணவர் வீட்டினிலே சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, மனைவி யாருடனும் உரையாடினாலும் தனே, வீட்டு முழு வேலையும் செய்வதாகக் கூறுவார்.அவரது உரையாடலில் கனவன் என்று ஒருவர் வீட்டில் இருப்பதே வராது என்றார்கள்.கணவன் எப்படிச் சமைத்தாலும் அதில் குறை தொடர்ச்சியாகக் கூறுவார்.கணவனை சமைக்க வேண்டாம்,என்று சண்டை பிடிப்பார். மற்றவர்களது ஆலோசனயில்லாமல் தான் விரும்புவதையே சமைப்பார்.பிள்ளைகள் முறையிட்டால் சும்மா , கேள்விக்காக கேட்பார்.
சைக்கோபாத் மனப்பூர்வமாக ஒருபொழுதும் தவறை ஏற்றுக் கொள்வதில்லை-தவறு செய்யாத மனிதனாகவே காட்டுவார்.பிள்ளைகளினதோ , கணவனதோ விருப்பத்தைக் கேளாது தானே பிள்ளைகள் என்ன கலை படிக்க வேண்டும்,யாரிடம் படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்.
சைகோபாத் பரம்பரை இயல்பு என்று வானொலியில் சொல்லியதை கேட்ட சிறுவன் தானும் அம்மாவைப் போல் வருவனா என்று கேட்டான்.பரம்பரை இயல்பு மாத்திரம் அல்ல வளரும் சூள்நிலையும் தான் தீர்மானிக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப் பட்டது.
அச்சிறுவன் இப்பொழுதே சிகிச்சைக்கு வந்த படியால் அவருக்கு அப்படியான நோய்கள் வராது என்பதையும் விளங்கப் படுத்தினேன்.சைகோபாத் ஒருநாளும் சிகிச்சைக்குச் செல்லமாட்டார்கள் என்ற விளக்கத்தையும் பெற்றார்கள்.
அவர்கள் தமிழ் சமூகக் கட்டுக் கோப்பில் வாழ்ந்து வருகின்ற படியாலும், பிள்ளைகள் தாயின் சொற்படியே நடப்பதாலும் அவர்களால் அப்பெண்னை விட்டுப் பிரிய முடியவில்லை. அது தான் சைக்கோபாத்தின் திறமை- சேர்ந்து வாழ்வதுவும் கடினம் , பிரிந்து செல்வதுவும் கடினம். புலிவால் பிடித்த நாய் மனிதரின் கதை தான். விட்டால் கடித்து விடும்.ஆனால் பிடித்திருப்பாதோ புலி வால். அடுத்த தொடரில் அடுத்த குடும்பத்தைப் பார்ப்போம்..
அன்புடன்
ந.பத்மநாதன்


நன்றி . ந. பத்மநாதன்  அண்ணா

மனக்கோலங்கள் 7

நோறா என்ற பெண் பல நண்பர்களைக் கொண்ட ஒரு குதூகலமான,கலகலப்பான மகிழ்ச்சியான பெண். நண்பர்கள் மத்தியில் நின்றால் எப்பொழுதும் அவர்களைக் கலகலப்பாக வைத்திருப்பார். ஆனால் அவரால் தனிமையில் வீட்டை விட்டு வெளியேற முடியாது.அந்த 23 வயதுப் பெண்ணுக்கு எப்பொழுதும் துணை தேவை. தனது காதலன்,நண்பர்கள் அல்லது தாயாருடன் தான் வெளியேறுவார். தன்னுடைய காதலனுடனே வசித்து வந்தார்.
அவரால் தனிமையில் வெளியே செல்ல முடியாதது.அவரது வாழ்க்கயை பெரிதும் பாதித்தது. வழமை போல் பல மருத்துவர்களிடம் அணுகியும் அவர்களால் அந்தப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அந்தப் பெண் திறந்த மனம் உடைய நேர்மையான , கெட்டித்தனமுடையவராக இருந்த படியால் உடனடியாக்வே அவரது நோய்க்குரிய காரணத்தைக் கண்டு பிடிப்பதர்காக அவரைக் ஹிப்னாடிஸம் செய்து அவரது சிறு வயது நோக்கி நகர்த்தினேன்.
எந்தக் காரணத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.அவர் முதல் முதல் உலகுக்கு வரும் அக்கணத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் தனது கழுத்தை சுற்றி எதோ அமத்துவதை வெளிப்படுத்தி வேதனைப் பட்டார். மூச்சு விடுவதற்கும் சிறிது கஸ்ரப் பட்டார்.எனது அனுபவத்தினூடாக பிரச்சனை விளங்கி விட்டது.அவரது கழுத்தை தொப்புள் கொடி இறுக்கியதை என்னால் ஊகிக்க முடிந்தது. தயாரிடம் அதை உறுத்திப் படுத்தி அவருக்கு சிகிச்சை அளித்தேன்.
காதலனின் ஆச்சரியம்
அன்று மாலை நோறா தனது காதலனிடம் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, காதலனை எதிர்பார்க்காது வெளியேறினார்.காதலனால் நம்ப முடியவில்லை அவரும் அமைதியாகவே இருந்து விட்டார்.நோறாவும் நடு வளியில் செல்லும் பொழுது தான் தனிமையில் பயமில்லாது வருவதை உனர்ந்து, பத்மனின் ஹிப்னாடிஸம் தனக்கு உதவி செய்கின்றது என்று மகிழ்ந்தார். கடைக்கு தனிமையில் சென்று வந்த காதலியால் காதலன் ஆச்சரியப் பட்டான்.அடுத்த நாள் நோறாவிற்கு தனது மனோ தத்துவ மருத்துவரைச்(Psychologist) சந்திக்கும் நேரம் இருந்தது.
மனோ கத்துவ மருத்துவரிடம் சென்று அவரிடம் கூறினாள்.நான் உங்களிடம் பலவருடமாக் வந்தும் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆனால் பத்மன் ஒரு சந்திப்புடன் தனது பெரும் பிரச்சனையை தீர்த்து விட்டதாகவும் கூறினார்.இது உளவியல் டாக்டர்கள்(Psychologist) மத்தியில் சிறு சலசல்ப்பை ஏற்படுத்டியது.
இதனால் பொறாமைப் பட்ட ஒருவர் 100 வருடங்களுக்கு முற்பட்ட சட்டத்தை மீட்டெடுத்து பத்மனுக்கு ஹிப்னாடிஸம் செய்ய சட்டம் இல்லை என்று என்னிடம் வாதிட்டார். நான் அவருக்கு பல முறைகளிலும் விளங்கப் படுத்தினேன். 100 வருடங்களிற்கு முன்பு ஹிப்னாடிஸத்திற்கு இருந்த வரையறை வேறு. இப்பொழுது வேறு என்பதை உணர்த்தினேன்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 100 வருடத்து பழைய சட்டம் கூறுவது என்ன வென்றால் ,பல்மருத்துவர்(dentist),மருத்துவர்(doctor) , உளவியல்மருத்துவர்கள்(Psychologist) மாத்திரமே ஹிப்னாடிசம் செய்ய முடியும்.
அப்பொழுது பழைய வரையறையின் படி ஒருவரது விருப்பத்திற்கு மாறாக ஹிப்னாடிஸம் செய்ய முடியும் என்பதே. அனால் புதிய முறையின் படி அனைத்துக் ஹிப்னாடிசமும் சுய ஹிப்னாடிஸமே(self hypnosis). ஒருவரது விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ய முடியாது என்பது புதிய விதிமுறை.அந்த மனோ தத்துவ மருத்துவர் பிரச்சனையை விடவில்லை. மேலதிகமாக மானிலப் பொறுப்பான டாக்டரிடம் முறயிட்டார்.இது பத்திரிகையிலும் வந்தது. உண்மை என்னவெனில் மாநிலப் பொறுப்பான டாக்டர் அலுவலகத்தில் இருந்து பலரும் என்னிடம் சிகிச்சை பெற்று திருப்தியடைந்தவர்களே.ஆதலால் மாநில பொறுப்பு மருத்துவர் என்னைப் பற்றி நன்றாக்வே அறிந்திருந்தார். அவர் என்னிடம் கூப்பிட்டு கலந்தாலோசித்து விட்டு, பத்திரிகயில் என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேட்டி கொடுத்தார்.மாநில மருத்துவர் ஒருவரைப் புகழ்வது என்பது மிகவும் அருமை.இது சுய புராணம் அல்ல, பலரது சந்தேகங்களிற்கு தெளிவு.
தொப்புள் கொடி சிக்கிய எல்லோருக்கும் சமூக பயம் வரும் என்பது அர்த்மாகாது. சிலருக்கே அவை அதிர்ச்சியாக பதிந்து விடுகிறது.நோராவிற்கு அந்தப் பிரச்சனை தீர்க்காவிட்டால் , அது அவரது பிள்ளைக்கும் பராமரிப்பினூடாக பரவும். பல பெற்றொருக்குள்ள பயங்கள் பிள்ளைகளிற்கும் உண்டு. அவை பெரும்பாலும் பராமரிபினூடாக் பரவியதே.
எம்மில் பலருக்கு குறிப்பாக் பெண்களுக்கு சமூக பயக் கோளாறு இருப்பதே தெரியாது.பயம் ஓரளவு இருப்பது பாதுகாப்பானதே. ஆனால் எல்லை மீறும் பொழுது அது பிரச்சனையாகி விடுகின்றது. சில பெண்கள் தான் எப்பொழுது கணவனுடனே தான் வெளியே செல்வேன் என்றும், இளமையில் பெற்றோருடன் தான் வேளியே செல்வேன் என்றும் பெருமையாகக் கூறுவதும் உண்டு. அவர்களும் சமூக பயக்கோளாறு உடையவர்களே
இப்படியாக நாங்கள் இலங்கைப் பிரச்சனையைப் பார்ப்போமானால், பல பிள்ளைகள் குண்டுச் சத்தத்திலிம் பிறந்து இருக்கின்றன,பலருக்கும் பல அதிர்ச்சிகள் நடந்திருக்கின்றது.இலங்கைப் பிரச்சனை மே 19.2009 இல் முடியவில்லை. அப்பொழுது தான் உள்வியல் ரீதியாக ஆரம்பித்துளது. இது என்னும் எத்தனை பரம்பரைக்கு எம்மைப் பாதிக்குமோ தெரியாது.உடனே எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

மனக்கோலங்கள் 6

அவர்களை விட்டு விடயத்திற்கு வருவோம்
உங்களுக்கு கூறியபடி எழுதவேண்டியதை எழுதாது வேறு எங்கோ நித்தியானந்தா திசை திருப்பி விட்டார். இந்து மதத்தில் மாத்திரம் அல்ல கிறிஸ்தவ மதத்திலும் பல பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெற்றதை அனைவரும் சமீப காலங்களில் ஊடகங்களினூடாக அறிந்து இருப்பீர்கள்.இலங்கையில் கூட பல பாதிரிமார்கள் தமக்கு உதவிக்கென்று ஓரிரு அழகிய சிறுவர்களை வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே.அவர்களை பற்றிய சந்தேகம் இளைஞர்கள் மத்தியில் இருந்து வந்தது.ஐரோப்பா போல் இளஞர்கள் வந்து சாட்சி சொன்னால் தான் உண்மை வெளிவரும்.இவர்கள் செய்யும் சேட்டைகள் மதுபோதையில் உள்ளவர்கள் செய்யும் சேட்டைகளை விட பாரதூரமானது.அதனால் தான் கார்ள் மார்க்ஸ் கூறினார் மதம் ஒரு அபின் என்று. அவர்களின் பாலியல் உணர்வை மதிக்கிறேன். அவர்கள் மக்களை ஏமாற்றாது,மக்களைச் சுரண்டாது உழைத்து குடும்ப வாழ்வில் ஈடுபடட்டும்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வாழ்வார்கள்.அவர்களை விட்டு விடயத்திற்கு வருவோம்.
அந்தப் பெண்ணுக்கு நடந்தது என்ன ?
அவர் என்னிடம் வந்து கூறினார், “நான் ஏதோ இருக்கிறேன் ஆனால் வாழவில்லை”.கலியாண வீட்டிற்கும் போனால் என்ன சாவீட்டிற்கு சென்றால் என்ன தன்னால் எல்லாம் ஒரே மாதிரியே உணர முடிகின்றது எனவும் உணர்ச்சிகள் எல்லாம் மருந்துக் குளிசைகளால் கட்டுபடுத்தப் பட்டு விட்டதாகவும் கூறினார்.
அவருக்கு சிறிய வயதில் இருந்து ஏற்பட்ட பல மன அதிர்ச்சிகளால் அவர் இன்நிலைக்கு ஆளானார்.மன அதிர்ச்சிகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணத்தால் அவரின் வாழ்வு பாதிக்கப் பட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.பல மருத்துவ விடுமுறைகள் எடுத்தார்.பின்பு வேலைக்கு முற்று முழுதாகவே செல்லாமல் விட்டுவிட்டார் மருத்துவரின் அனுமதியுடன்.மருந்துக் குளிசைகளே அவரின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியது. அவரால் மகிழ்ச்சி,கவலைகளை உணர முடியவில்லை.
கடந்தகாலம்
ஹிப்னாட்ஸத்தின் உதவியுடன் அவரைக் கடந்த காலதிற்கு அழைதுச் சென்றேன்.அவர் உடனடியாகவே மூச்சுத்திணறி வருந்தினார். காரணம் அறிந்த பொழுது,அவரின் கடந்த காலக் காதலன் அவருடன் வாழும் பொழுத் அவரை தண்ணீரில் அழுத்திக் கொலை செய்ய முயன்றான். அதிஸ்டவசமாக் தப்பி விட்டார்.இதுவும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது.பின்பு வேறு வயதிற்கு அழைதுச் சென்ற பொழுது பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதை அறிந்தேன். 16 க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு நடைபெற்றதை அறிய முடிந்தது.இதை வெவ்வேறு நபர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்திருந்தார்கள்.அவர் காவல்துறையிடம் முறையிடவில்லை.அவரது மன அழுத்தம் , பயம் அவரைக் காவல் துறையிடம் செல்ல விடவில்லை.
எமது ஊரில் ஒருவர் இருந்தார், தெருவால் போற வாறவர்களை எல்லாம் விட்டு விட்டு அவரை அவ்வூர் நாய்கள் கடிக்கும். பலமுறை நாய்களிடம் கடி வேண்டினார்.அந்நபரின் பய உணர்வுச் சமிக்கைகள் நாய்களைக் கடிக்கத் தூண்டியது. அதுபோலத்தன் இந்தப் பெண்ணின் ஆழ்மனதுப் பய உணர்வு அந்த மனித நாய்களைத் தூண்டியது.ஆதலால் அப்பெண்ணின் வாழ்வு அழிந்தது.மன அழுத்தம் ஏற்பட்டால் எல்லோரும் நிச்சயமாக மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும்.இவரும் மருத்துவரிடம் சென்றார். மருதுவர் சில பலம் கொண்ட குளிசைகளினாலே அவரது மன அழுத்ததைக் கட்டுப படுத்த முடிந்தது. அதே நேரம் அவரது ஏனைய உணர்வுகளையும் கட்டுப்படுத்தி விட்டது.
அதனால் தான் அவர் உண்ர்ச்சிகளுடன் வாழ விரும்ம்பியே ஹிப்னாடிஸ மருத்துவ முறையை அணுகினார்.அவரின் அதிர்ச்சிகள் படிப்படியாக நீக்கப் பட்டது.அவரிடம் கூறப்பட்டது மருத்துவரின் உதவியுடன் மாத்திரையின் அளவைக்க் குறைக்கும் படி . ஆனால் அவர் மருத்துவரிடம் கேட்காமலே மாத்திரையை குறைத்தார். ஆதலால் அவருக்கு உடனடி ஹிப்னாடிச சிகிச்சை அடிக்கடி தேவைப் பட்டது.இப்படியாக 15 தடவைகளுக்கு மேல் அப்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினார். வாழ்க்கையை வாழத்தொடங்கினார்.
மன அழுத்தம் ஓரளவு ஆரம்ப நிலயில் இருந்தால் ஹிப்னாடிஸ முறை மூலம் முற்று முழுதாக தீர்வு காணலாம். அது நிலமையை மீறினால், ஹிப்னோதெரபிஸ்டுடன் கதைக்க முடியாத நிலமை ஏற்பட்டால், மருத்துவரிடமே சென்று மாத்திரைகள் எடுக்க வேண்டும்.பின்பு ஹிப்னாடிஸ முறை மூலம் மாத்திரையில் இருந்து விடுபடலாம்.
கவிதைச் சாலை என்ற வலைப் பதிவில் ஓசைக்களஞ்சியம் இதழில் இருந்து ஒரு ஆக்கம் இருந்தது. அதில் சில காரணங்கள் குறிப்பிட்டிருந்தது.
ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை
இலங்கயில் ஏற்பட்ட சுனாமி,அதையடுத்து வந்த போர்கள்,என்பன பலருக்கும் மன அதிர்ச்சிகளைக் கொடுத்து இருக்கும்.நேரடியாக போரைப் பார்க்காவிட்டாலும், தொலைகாட்சிச் செய்திகள், படங்கள்,தொலைபேசிச் செய்திகள் என்பன கூட மன அதிர்ச்சியை ஏற்படுத்தும்.இச்செய்திகளால் பாதிக்கபட்ட பெற்றொரின் பிள்ளைகளுக்குக் கூட மன அதிர்ச்சிகள், மன அழுத்தங்கள் ஏற்படலாம்.
சுனாமியால் தனது கைக்குழந்தையை பறிகொடுத்த தாய் தனது கையை அசையாது குழந்தையை தூக்கும் பாவனையில் வைத்திருந்ததை தீபம் தொலைக் காட்சி செய்தி மூலமாக அறிந்தேன்.அவர் போன்றவர்களிற்கு ஹிப்னோதெரபி ஒரு சிறந்த தீர்வாகும். அவரது கையை சாதாரண நிலைக்கு உடனடியாகக் கொண்டு வர முடியும். சில வலைத்தளங்கள் பொறுப்புணர்வு இல்லாது சர்வதேசத்துக்கு நிலமையை காட்டுகிறோம் என்று கூறி தமிழர்கள் மாத்திரம் வாசிக்கும் தளங்களில் பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளை வெளியிட்டது பாரிய தவறாகும்.இதனால் பலருடைய மனதும் பாதிக்கப் பட்டிருக்கும். பல தமிழர்கள் மேலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
பிரச்சனை உடனே தெரியாது
பல 60 வயதிற்கு மேற்பட்ட நோர்வேயியர்கள்-பெண்கள், ஹிப்னொதெரபி உதவி வேண்டி வந்தார்கள்.முன்பு கூறிய தொடர்களில் உள்ளது போல் மன அதிர்ச்சியால் ஏற்பட்ட நோய் அறிகுறிகளிற்கு தீர்வு வேண்டி வந்தார்கள்.அவர்களை ஹிப்னாடிஸம் செய்து நோய்க்குரிய காரணத்தை அறிய முயன்ற பொழுது அக்காரணங்களின் தொடக்கம் இரண்டாம் உலக் யுத்தமும்,அப்பொழுது நோர்வேயில் வந்திருந்த நாசிப்படைகளுமே காரணமாகும்.ஒரு பெண் தனது தந்தையை 2 வயதாக இருக்கும் பொழுது கைது செய்ததால் அதிர்வுற்றார்.இன்னும் சற்று வயது கூடிய நோர்வேயில் வாழும் யப்பானியப் பெண் சிறு (13)வயதில் தனது சினேகிதி யப்பானிய இராணுவத்தால் கடலில் வீசியது அதிர்ச்சியாகியது.தனது பாட்டனாரை இராணுவம் கொலை செய்ததும் அதிர்ச்சியாகியது.அவற்றால் ஏற்பட்ட பிரச்சனைகள் இப்பொழுது தான் அவருக்கு தாக்கத்தைக் கொடுக்கிறது.நித்திரயின்மை,உடம்பில் நோ இன்னும் பல பிரச்சனைகள்.இது போல எம்மவரின் ஆழ் மனதில் பதிந்த பிரச்சனைகள் எப்பொழுதும் எம்மைத் தாக்கலாம்.இரண்டாம் உலக யுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிள்ளைகளுக்கு முழுமையான அன்பைக் கொடுக்க முடியவில்லை ஆதலால் பிள்ளைகளும் பாதிக்கப் பட்டார்கள்.இதனால் பரம்பரையே பாதிக்கப் படும்.அது போல் எம்மவரும் நோய் அறிகுறிகளுக்கு உடனே சிகிச்சை எடுக்காவிட்டால் எமது சந்ததியும் பாதிக்கும்.அடுத்த தொடரில் சந்திபோம்…

 நன்றி . ந. பத்மநாதன்


மனக்கோலங்கள் 5


முனைவர் கோவூர்
தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்!
ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!!
சரி பார்த்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!!
-முனைவர் கோவூர்.
படித்தவர்கள் நம்புகிறார்கள் என்று ஆராயாது எதையும் நம்பாதீர்கள்.
எத்தனை கோவூர்கள் வந்தாலும், எம்மிடையே உள்ள சில படித்தவர்கள்,டாக்டர்கள் வலது கையால் பட்டத்தைப் பெற்றுவிட்டு , மறுகையால் மிகவும் மூட நம்பிக்கைகளையும் பெறுகிறார்கள். நித்தியானந்தா, கல்கி பாபா,டென்மார்க் அம்மன், சாய் பாபா போன்றவ்ர்களிடம் வரிசையில் நிற்கிறார்கள். கல்கி பாபா மாம்பழத்தில் போதையூட்டி தனது பக்தர்களை அடிமையாக வைத்திருப்பது சண் TV யில் பலரும் பார்த்திருப்பீர்கள்.
அமெரிக்காவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பக்தராக இருந்த டக்ளாஸ் மெக்கல்லர் என்பவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நித்யானந்தாவை 2007ம் ஆண்டு சந்தித்து 4 லட்சம் டாலர் நிதி கொடுத்து ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும், அதன் பிறகு தனது பெயரை நித்யபிரபா என்று மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆசிரமத்தில் இருந்த போது நித்யானந்தா தனக்கு போதை பொருளை கொடுத்து மயக்கியதாக கூறியுள்ள அவர் ஆசிரம நிதியை நித்யானந்தா மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
நித்யானந்தா அழகான இளம்பெண்களை விரும்பி வசியம் செய்ததாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதில் கூடுதலாக சென்று மாட்டிக்கொள்பவர்கள், படித்த பட்டதாரிகள்,டாக்டர்கள் போன்றோரே. கிராமிய மக்கள் இவர்கள் விடயத்தில் மாட்டிக்கொள்ளாது வாழுகிறார்கள். கிராமிய மக்கள் கொள்ளிவால் பிசாசு போன்ற்வற்றிகு பயப்பட்டாலும் இந்தச் சாமியார்களிடம் மாட்டிக்கொள்ளாத அளவிற்கு சமூக அறிவுடனே வாழுகிறார்கள்.
படித்தவ்ர்கள் நம்புகிறார்கள் என்று ஆராயாது எதையும் நம்பாதீர்கள். உங்கள் பகுத்தறிவைப் பாவியுங்கள். இப்பொழுது எத்தனையோ தகவல் தொழில் நுட்ப வசதிகள் வந்து இருக்கிறது. பெருமளவு வாசியுங்கள்.ஆரோக்கியமாக விவாதியுங்கள்.உங்கள் பகுத்தறிவைப் பாவித்தே நம்புங்கள்.உங்கள் பிரச்சனைகளை தீர்ப்போம் என்று கூறி பல சாத்திரி மார்களும்,சாமிமார்களும் செய்வினை சூனியம் என்று சொல்லி உங்களை ஏமாற்ற வரிசையில் நிற்கிறார்கள்.TV யில் விளம்பரம் செய்கிறார்கள். இவர்கள் மீது யாக்கிரதையாக இருங்கள். பேய் பிசாசு போன்ற மூட நம்ம்பிக்கைகள் எமது தமிழர்கள் மத்தியில் மாத்திரம் அல்ல நோர்வே மக்கள் மத்தியிலும் இருக்கின்றது.
பேய்க்குப் பயந்த 7வயதுச்சிறுமி
சாப்பாட்டுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல்,இனிப்புப் பண்டங்களில் தங்கி வாழ்வது, அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்ரைக் கட்டுப்படுத்தி உடற்பயிற்சி செய்வதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தி உங்கள் உடல் நிறையை ஹிப்னோதெரபி மூலம் குறைக்க முடியும்.வேறு காரணங்களை வரும் தொடர்களில் ஆராய்வோம். இப்படியாக ஒரு பெண் நிறை குறைப்பதற்கு என்று வந்தார். அவரிடம் ஹிப்னாடிசம் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டு அவரது பிரச்சனைகள் அராயப்பட்டது. தங்கள் குடும்பத்தை ஒரு பேய் தொல்லைப் படுத்துவதாகவும்,தான் அவ்வுருவத்தைக்க் கண்டதாகவும் கூறினார். ஆனால் நோர்வே நாட்டில் உள்ள பேயோட்டுனரின் உதவியுடன் தன்னை தொந்தரவு செய்த பேயை ஓட்டி விட்டதாகவும், தனது 7 வயது மகளுக்கு பேய்த்தொந்தரவு தொடர்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இரவு வந்தவுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்.இரவில் தனிமையிலே இருக்கமாட்டார்.தனிய நித்திரகொள்ள மாட்டார். நோர்வேயியப் பிள்ளைகள் எல்லாம் சிறு வயதிலே தனிமையில் நித்திரை கொள்வார்கள். இச்சிறுமியும் பழைய வீட்டில் தனிமயிலே நித்திரை கொண்டார்.புது வீட்டிற்கு வந்தபின்பே அவருக்கு பேய்த் தொந்தரவு.
பேயாகிய வயோதிபர்
அந்தச் சிறுமியின் தாய் , எனக்கு மேலதிக விளக்கம் அளித்தார். அவ்வீட்டில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்ததாக்வும் அவரே பேயாக வந்து தம்மை துன்புறுத்துவதாகவும் கூறினார். தன்னையே முதல் துன்புறுத்தியதாகவும் , இப்பொழுது மகளைத் துன்புறுத்துவதாகவும் கூறினார். தாயின் பிரசனைகளை எனது அலுவலக்த்தில் தீர்த்து விட்டேன். அவரிற்கு சிறு வயதில் இருந்த சில மன அதிற்சிகளே சிறு விடயத்திற்கும் பயப்பட வைத்தது. அவற்றை நீக்கிவிட்டேன்.தாய் கூறிய கதைகளாலும் அங்கு பேய் சுத்திகரிக்கவென்று சென்றவர்கள் செய்த சேட்டைகளாலும் சிறுமியின் மனதில் பேய் நம்பிக்கை வந்து விட்டது.
பேய் மறைந்தது வாழ்வு மலர்ந்தது.
அவரைக் ஹிப்னாடிசத் தூக்கத்திற்கு கொண்டு சென்று ஆழ்மந்தில் இருந்த அந்த மூட நம்பிக்கைகளை ஒரு மணித்தியாலத்திலே போக்கக் கூடியதாக் இருந்தது. அடுத்த நாள் காலையில் தாயார் மகளிற்கு இரவு சிறுநீர்ப் பிரச்சனை இருக்கவில்லை என்றும், இரவு ஆரோக்கியமாக தனிமையில் தூங்கினார் என்றும் தொலை பேசித்தகவல் அனுப்பினார்.பேய் மறைந்தது வாழ்வு மலர்ந்தது.
தற்காலிக தோல்வி
இப்படியான கதைகள் நோர்வேயிய மக்களிடம் மாத்திரம் அல்ல தமிழ் மக்களிடமும் பரவியது. என்னை ஒரு தமிழ் பிரமுகர்(இரகசியம் காக்க வேண்டி அவரது தொழில் எழுதவில்லை) அணுகினார். ஒரு பெண் சிறுமிக்கு அம்மன் பிடித்து விட்டதாகவும் கூறினார்.நான் கேட்ட பொழுதும் மேலதிக விபரங்களை அவர் கூறவில்லை .பிள்ளை மருத்துவ சாலையில் அனுமதிக்கப் பட்டு மாத்திரைகள் பாவித்து ஓரளவு ஆரோக்கியமாகவே இருந்தது. எனது அனுமதியில்லாமலே-எனக்கு நோய் அறிகுறி முழுவதையும் காட்டுவதற்காக- மாத்திரைகள் பாவிக்காது என்னை அழைத்துச் சென்றார்.மாத்திரைகள் பாவிக்காது விட்டதால் நோய் அறிகுறிகள் அதிகரித்து விட்டது அப்பிள்ளையை என்னால் இருதரம் முயன்றும் ஹிப்னாடிசம் செய்ய முடியவில்லை.அவரது நிலமை மோசமகவே இருந்தது. நான் பிள்ளையை மாத்திரைகள் பாவித்து ஒரு அளவு சுகமானவுடன் தொடர்பு கொள்ளும்படி கூறிவிட்டு வந்து விட்டேன் . இதுவரை அவர்கள் தொடர்பு கோள்ளவில்லை. ஹிப்னோதெரபி முறையில் மாத்திரைகள் படிப்படியாகவே குறைக்கவேண்டும். அச்சிறுமியை பற்றிய சரியான தகவல் பெற முடியாததால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. இது அணுகு முறையில் ஏற்பட்ட ஒரு தோல்விதான். ஆனால் ஹிப்னாடிசம் இப்படியான பிரச்சனைகளை முழுமையாகத் தீர்த்திருக்கிறது. அச்சிறுமியின் பிரச்சனையும் முற்று முழுதாகத் தீர்க்க முடியும்.
மிகப்பெரும் பாராட்டு
நோர்வேயில் 19 மாநிலங்கள் இருக்கிறது அதில் மத்திய மாநிலமான தெற்கு துரண்டலாக் (Sør Trondelag)படிப்பவர்களின் மாநிலம் என்று அழைக்கப் படுகிறது. அங்கு அம்மாநிலத்துக்குப் பொறுப்பான மருதுவர் ஏன் என்னைப் பாராட்டினார் ?. “பத்மன் உண்மையாகவே தன்னிடம் வருபவர்களை சிற்ப்பாகக் கையாள்கிறர்” என்று ஒரு பிரபல் பத்திரிகைக்கு பேடியளித்தார். «Pathman tar sin oppgave som behandler seriøst» sier Jan Vaage, Fylke lege i Sør Trøndelag til adressa avisa
( Pathman takes his task to treat serously ) says Jan Vaage, county physician in South Trøndelag to ‘adressa avisa’ newspaper என்பது பற்றியும் அடுத்த தொடரில் சமூக பதட்ட கோளாறு நோயிலிருந்து குணப்படுத்திய பெண் பற்றியும் ,சமூக பதட்ட கோளாறு பற்றியும் ஆராய்வோம்.
சாய் பாபா எப்படி எமாற்றுகிறார் என்று பாருங்கள்
<iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/oNVJyycAZYw" frameborder="0" allowfullscreen></iframe>
 நன்றி . ந. பத்மநாதன்

மனக்கோலங்கள் 4

மூன்று தொடர்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . பலரும் சில சந்தேகங்களை நேரடியாகவும் , தொலைபேசியூடாகவும் , மின் அஞ்சல் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.நன்றிகள்.அவர்களுடைய சந்தேகங்களிற்கு விளக்கம் கொடுக்க முன் ஒரு பெண்ணிற்கு (அமலா) எற்பட்ட பிரச்சனையை பார்ப்போம்.அவர் தன்னுடைய பிரச்சனையை வெளிப்படையாக கூறுவதற்கு அனுமதி தந்திருந்தும் வேறு பெயரையே இங்கு பாவிக்கிறேன். அவருக்கு இருந்தால் போல் கவலை , மன அழுத்தம் ஏற்படும் (anxity,depress). வீட்டில் தனிமையில் இருக்கும் பொழுது கூடுதலாக எற்படும் . அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால் , அவர் உடனே வெளியில் சென்று ஒரு சிறிது நேரம் நடை நடந்த பின்பே பிரச்சனை குறையும்.இரவிலும் அதே நிலை தான். விடிய 2 மணியிலும் ஏற்பட்டிருக்கு.அவருடைய குடும்பத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இதய அறுவைச்சிகிச்சையின் பின், அவர்கள் பூரண சுகம் அடைந்த பின்பு தான் கவலை , மன அழுத்தப் பிரச்சனை கூடுதலாக் இருந்தது.
சாதாரண மருத்துவர்களை அணுகி பிரச்சனை தீரவில்லை . பின்பு அக்குபஞ்ஞர் முறையும் செய்து பார்த்தார்கள் முனேற்றம் ஏற்படவில்லை.அவர்களுடைய படித்த ஒரு உறவினர் மூலமாக ஹிப்னாடிஸத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிப்னாடிஸ முறையை அணுகினார்கள்.அப்பொழுது இருந்த நேரப் பிரச்சனை காரணமாக , அவர்களிற்கு ஹிப்னாடிஸம் பற்றிய முதல் விளக்கம் ஒரு 30 நிமிடம் வரை கொடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது. அவர்களது திறந்த மனம் காரணமாக் உடனடியே ஹிப்னாடிச சிகிச்சை அளிக்கப் பட்டது. 25 நிமிடங்கள் மட்டுமே பாவிக்கக் கூடியதாக இருந்தது. பிரச்சனை தீராவிட்டால் அடுத்த முறை நீண்ட நேரம் செலவளித்து அராய்வதாகவும் முடிவு எடுக்கப் பட்டது. அவருக்கு அந்தப் பிரச்சனை உடனே தீர்ந்து விட்டது.அவருக்குப் பல உறவுகள் , பல வசதிகள் இருந்தும் ஆழ்மனது தேவையில்லாது பயப்பிட்டது . ஆழ்மனதிற்கு அவரது உறவுகளின் பலத்தையும் , நோர்வேயின் மருத்துவ வசதிகளையும் விளங்கப் படுத்தும் பொழுது ஆழ்மனது அதை அதிஸ்டவசமாக் ஏற்றுக் கொண்டது. அவரது பிரச்சனை தீர்ந்தது. எப்படியாயினும் இப்படியான பிரச்சனைகள் 4முறை சிகிச்சைக்குள் தீர்க்க முடியும்.
இப்படியாக ஒரு இரு மணித்தியாலங்கள் , 25 நிமிடங்கள் என்று கூறும் பொழுது சிலருக்கு பலத்த சந்தேகம் வருகிறது. 7 வருடத்திற்கு மேல் படித்த மருத்துவப் பட்டம் தேவையில்லையா என்பது.அந்த மருத்துவர்கள் பல சிறந்த பரிசோTகனைகள் செய்து உடலில் எந்த நோயும் இல்லை என்று கண்டு பிடித்த பின்பே , மனப் பிரச்சனை என்பது உறுதியாகியது.மனோதத்துவ மருதுவர்களின் உரையாடல் முறை பலனளிக்கத போது அது ஆழ்மனப் பிரச்சனை என்பது உறுதியாகியது.இது ஹிப்னாடிச முறையை இலகுவாக்கியது.
ஹிப்னோதெரபி மூலம் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கலாம் என்று குறுக்கு வளி தேடாதீர்கள்.ஹிப்னோதெரபி – முதல் சந்திப்பில் நீங்கள் , மருத்துவர்களிடம் சென்றீர்களா , மருத்துவர்களின் பதில் என்ன ? உடலியல் ரீதியான் பிரச்சனைகள் அவருடைய மனப் பிரச்சனைக்கு காரணம் இல்லை என்பதை அறிந்த பின்பே அவரிற்கு ஹிப்னோதெரபி வழங்கப் படுகிறது. ஹிப்னோதெரபிஸ்டுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் தான் காரணமென சந்தேகம் வரும் பொழுது மீண்டும் அவர்கள் மருத்துவரிடம் , மேலதிக சோதனைகளுக்காகச் செல்வார்கள். சில மருத்துவர்கள் ஹிப்னோதெரபிஸ்டுடன் இணைந்து செயற்படுகிறார்கள். மன அழுத்ததிற்கு ஆளானவர் ஹிப்னோதெரபி மூலம் மாத்திரைகளைக் குறைத்து மாத்திரைகளை முற்றாக நிறுத்த முடியும். மருத்துவரின் அனுமதியுடனேயே மாத்திரைகள் குறைக்கப்படும். மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்க ஹிப்னாடிஸம் வளி காட்டுகிறது. ஹிப்னாடிசத்தால் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது உடனுக்குடன் புதினம் தரும் நவீன உலகில் ஆதாரம் எதுவும் இல்லை.ஹிப்னாடிஸம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.
கடந்த காலத்தில் திட்டமிடப்பட்ட மேடைக் ஹிப்னாடிசத்தாலும் ,சில மிகைப் படுத்தப்ப் பட்ட படங்களாலும் , சில சிறு பிள்ளைகளின் தொலைக்காட்ட்சித் தொடர்களினாலும் பிளையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுளது. உதாரணமாக போக்கெமோன்(Pokemon) என்று ஒரு ஜப்பனிய அமெரிக்க கூட்டுத்தயாரிப்பில் ஹிப்னோ போக்கெமோன்(hypno pokemon) என்று ஒரு உருவம் வரும் பொழுது எல்லா மற்ற உருவங்களும் மயங்கி விழுவார்கள். இது சில மேடைக் ஹிப்னாடிசங்களிலும் காட்டப் படுகிறது. இது ஏற்கனவே திட்டமிடப் பட்டவர்களுடன் மற்றவர்கள் விரும்ம்பிச் செய்யும் பொழுது போக்கு நிக்ழ்ச்சி. ஹிப்னாடிச நிலையில் ஒருவர் கண்னைத் திறந்து பார்ப்பார் முன்னே உலக அழகி நிற்பதாக அவருக்கு கூறப்படும் . அவர் ஒரு தூணையோ பொம்மையையோ உலக அழகியென்று தனது விருப்பத்துடன் அணைப்பார் . அவர் பின்பு விழித்த நிலையில் அவை கனவு போல் ஞாபகத்தில் இருக்கும்.இவற்றின் சில முறைகளை ஹிப்னோதெரபியில் உபயோகித்தாலும் , ஹிப்னொதெரபி முற்றிலும் விஞ்ஞான பூர்வமானதே. படத்தில் ஒரு கராட்டிக் காரன் பத்துப் பேரை அடிக்கலாம், உண்மை என்பது வேறு. கராட்டி என்பது சிறந்த கலை என்பது எல்லோருக்கும் தெரியும்.
James Braid (1785-1860) என்ற பிரித்தானிய மருத்த்துவரே ஹிப்னாடிசம் என்ற சொல்லை அறிமுகப் படுத்தினார் .இது கிரேக்கத்தில் தூக்கம் என்று அர்த்தப் படுவதாலும் , வேறு காரணங்களுக்காகவும் அந்தப் பெயரை மாற்ற விரும்ம்பினார் முடியவில்லை . அதுவே நிலையாகி விட்டது. மேடைக் ஹிப்னாடிசமும் , ஹிப்னோதெரபியும் வேறு வேறு என்பதைப் புரிந்து கொண்டால் சரி.
ஒருவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை ஹிப்னாடிஸம் செய்ய முடியாது என்பதும் உண்மையே. சதாரண விவேகம் உடையவர்கள் அல்லது அதி வீவேகம் உடைய அனைவரும் அவர்களுடைய விருப்புடன் ஹிப்னாடிச தூக்கத்திற்குச் செல்வார்கள். சொல்வதை புரியாத மன நிலையுடையவர்களை ஹிப்னாடிசம் செய்வது கடினம்.
எப்படியான விளக்கங்கள் கொடுத்த பொழுதும் சிலரால் இந்த விஞ்ஞானத்தை புரிய முடியவில்லை . அதற்கு ஒரு கதை கூறலாம். ஒரு கிராமத்தில் பலரும் கொள்ளிவால் பேய்க்கு பயந்து இருந்தார்கள்.ஒரு படித்த அயலூர்க் காரன் , கொள்ளி வால் பேய் என்று உலகில் ஒன்றும் இல்லை என்று கூறி மெதேன்(CH4) வாயுவைக் கொண்ண்டுசென்று எரித்துக் காட்டினான்.அவ்வூர் அறிவு குறைந்த மக்கள் எல்லோரும் அவன் கோள்ளிவால் பிசாசை போத்தலுக்குள் வைத்திருப்பதாக்க் கூறி விலகிச் சென்று விட்டாரகள்.
இப்பொழுது நவீன உலகிலும் சிலர் புதிய விடயங்களை வாசிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். மனநோய்களை பற்றி வாசிப்பவன், பயித்தியக்கரன் என்று அடம்பிடிக்கிறார்கள்.இப்படியாக அடம் பிடிக்கும் தமிழர்கள் கூறுவார்கள் விடயத்தை வாசிக்கமலே- தாங்கள் மூளை சாலிகள் என்றும கண்டகிண்டதெல்லாத்தையும் நம்ப மாட்டோம் என்று அடம்பிடிப்பார்கள். அவர்களை விடுங்கள் – அவர்கள் நித்தியானந்த சுவாமிகள் என்ற ஏமாற்றுப் பேர்வளியிடம் காற்வரும் போது (கதவைத்) திறப்பார்கள் , டென்மார்க அம்மனிடம் (தேசிக்காய்) உருட்டுவார்கள்.கல்கி பாபாவிடம்(மாம்பழம்) சூப்புவார்கள் , சத்திய சாய்பாபாவிட மற்றதெல்லம் செய்வார்கள். ஒருபக்கத்தால் பெரிய பட்டப் படிப்புகளையு கையில் வைத்திருபார்கள். நிதியானந்தா என்ற ஏமாற்றுப் பேர்வளிக்கு வக்காலத்து வேண்டியவர்கள் பலர் மிகவும் படித்த பட்டதாரி, பேராசிரிய டாக்டர்கள் சமூக அறிவற்ற முட்டாள்களே.
அவர்களை விடுங்கள் அவர்கள் விரும்பாவிட்டால் எத்தனை முனைவர் கோவூர் வந்தாலும் அவர்களை திருத்த முடியாது. அடுத்த முறை ஒரு மன அழுத்த மாத்திரை பாவிக்கும் பெண் “நாங்கள் ஏதொ இருக்கிறொம் ஆனால் வாழவில்லை”(we exist in the world, but we are not living in the world)என்றார்.ஏன் அவர் அப்படிச் சொன்னார் . அவரின் பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்.
  நன்றி . ந. பத்மநாதன்

மனக்கோலங்கள் 3

இந்தத் தொடருக்கு எதிபார்த்ததை விட பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. நன்றிகள் . நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் யாவும் வரும் தொடர்களில் உள்ளடக்குவேன் . இன்று அந்த அழகிய பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். இது நடந்தது 84 ம் ஆண்டு . உண்மைச் சம்பவங்களுக்கு – வாடிக்கையாளரின்(Client) பெயர் மாத்திரம் கற்பனையாகும் . ஒரு பெண் என்பதை விட வாடிக்கையாளரின் நலன் கருதி கற்பனைப்பெயருடன் எழுதுகிறேன். ஏனையோரின் பெயர்களும் , அனைத்துச் சம்பவங்களும் உண்மையே. நாவண்ணன் என்ற காலம் சென்ற சிறந்த கலைஞரை பலரும் அறிந்திருப்பீர்கள்.அவருக்கு தெரிந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுளதாகவும் , அவருக்கு ஹிப்னாடிசம் மூலம் தீர்வுகாண முயற்சித்தார்.குறிப்பிட்ட காலை நேரத்துக்கு சாரு இலங்கையர் வீட்டுக்கு சென்றோம். அங்கு வயது முதிர்ந்த ஒரு பாட்டி , சாருவின் தாய் , அவர்களது உறவினர் ஒருவர், சாருவின் சகோதரனும் அவ்வீட்டில் இருந்தனர் . சாரு வெளியில் வரவில்லை . சாருவுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன் . அப்பெண் 8 ம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மாணவியாக வந்ததாகவும் . கடந்த இரண்டு வருடமாக் எல்லம் போய்விட்டது என்றும் கூறினார்கள் . நித்திரையின்மை , பாடசாலை செல்ல விருப்பமின்மை – அடிக்கடி கவலைப்பட்டு அழுதல் – சிறிய விடயங்களுக்கும் பயப்படுதல் .அவர்களது கூட்டான முடிவு பாம்பு அல்லது பேய்க்கு அப்பெண் பயந்து இருக்கலாம் என்பதே.பல மருத்துவர்கள் , பாதிரிமார்கள் , சைவசமயச் சாமி மார்களுடன் தொடர்பு கொண்டும் அவர்களால் அப்பெண்ணை பழைய நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. அவர் ஓரிரு உறவினரைத்தவிர மற்ரைய ஆண்களை பார்த்து பயப்பிட்டார். முற்றத்தில் இருந்தே எமது உரையாடல் நடை பெற்றது . வீட்டிற்குள் வெளியாட்கள் போகும்பொழுது சாரு பயப்பிட்டார். நானும் சாருவை உறவினர்களின் உதவியுடன் வெளியில் கூட்டி வரும்படி அழைத்தேன்.பயந்து மிருண்ட விழிகளுடன் வெளியே வந்தார்.முகத்தில் கறுப்புக் கோடுகள் தெரிந்தது. நான் தூரத்தில் இருந்தவாறே கதைத்தேன் . ஏன் பயப்படுகிறிர்கள் என்ற கேள்விக்கு தனக்குத் தெரியாது என்றே சொன்னார் . தான் பாம்பைப் பார்த்து பயந்ததையும் ஒத்துக்கொண்டார். அவருக்கு நான் கிட்டச்சென்று கதைப்பதை அவர் விரும்பவில்லை. முற்றத்தில் ஒருபுறத்தில் நானும் , நாவண்ணனும் , மறுபுறத்தில் சாருவும் உறவினரும். 6 – 7 மீற்றர் தூரத்தில் இருந்தே அவரை ஹிப்னாடிசம் செய்ய முயற்சித்தேன் . அவ்வளவு தூரத்தில் இருந்து முயற்சித்தது அதுவே முதல் முறை. என்னால் இயன்றளவு முயற்சித்தேன் . அவர் உடனே ஹிப்னாடிசத் தூக்கத்திற்குச் சென்று விட்டார் .பின்பு அருகில் சென்று அவரை இரண்டு வருடம் பின்னால் கொண்டு சென்று கேட்ட பொழுது அவர் நடந்தைக் கூறினார்.
நடந்தது என்ன ?
வகுப்பிலே நன்றாகப் படித்து ஒரு திறமையான பெண்ணாக் வாழ்ந்து வந்தார், எல்லாப் பேண்களைப்ப் போல் அவரும் பருவம் அடைந்தார்.சாருவின் அழகு மேலும் அதிகரித்தது .வழமை போல் பூப்புனித நீராட்டு வரை பள்ளிக்கூடம் போகவில்லை.
பூப்புனித நீராட்டு முடிந்து பள்ளிக்கூடம் சென்றார். வீடு திரும்ம்பு வழியில் ஒரு ஒழுங்கையால் சென்று திரும்பும் பொழுது ஒரு இளைஞன் மார்பில் பிடித்து விட்டு ஓடிவிட்டான். அவன் அப்பெண்ணின் மைத்துணனே. சாரு உடனே வீட்டில் வந்து முறையிட்டர். அவர்கள் அவ்விளைஞனைக் கண்டித்து விட்டு – விட்டார்கள்.அச்சம்ம்பவத்தையும் எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனால் இச்சம்பவம் அவரது ஆழ்மனதில் சென்று அதிர்ச்சியாக (trauma) பதிந்து விட்டது. அவரது வெளி மனதிற்குத் தெரியவில்லை தான் ஏன் பயபடுகிறேன் என்று .
அதன் சில நாட்களின் பின் ஒரு பாம்பைப் பார்த்த பொழுதும் அவர் அளவுக்கதிகமாக பயப்பிட்டது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அவரை நான் அதிர்ச்சியில் இருந்து விடுவித்து ஹிப்னாடிச தூக்கத்தால் விழிக்கச் செய்த பொழுது என்ன ஆச்சரியம். எனது கண்களையே நம்ப முடியவில்லை. அவரது முகத்தில் இருந்த கறுப்புக் கோடுகள் மறைந்து விட்டது .அவரது உண்மையான சிரிப்பும் அழகும் அவருக்கு திரும்ம்ப கிடைத்து விட்டது. அவரே பின்பு எங்களுக்கு தேனீர் வழங்கி எங்களை அன்பாக வழியனுப்பி வைத்தார்.நான் ஹிப்னாடிசம் படிக்கும் பொழுது எனது ஆசிரியர் இப்படியான உதாரணங்களை கூறுவார் . என்னால் நம்புவது கடினம்மாக இருந்தது.நானே நேரில் சந்தித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும்- ஹிப்னாடிசத்திலும் எனது ஆசிரியரிலும் மதிப்புக் கூடியது. மறுநாளே ஆசிரியரிடம் சென்று கூறி பாராட்டைப்பெற்றேன்.
ஏன் பாம்பைக் கண்டு பயந்தார் ?
நாங்கள் பயத்தைக் கற்பனை அளவு கோலால் அளப்போமாயின் , கூடிய பயம் பத்து(10) என்றும் குறைந்த பயம் பூச்சியம்( 0)என்றும் வைத்துக் கொள்வோம் , அவருக்கு பாம்பிற்கு பய அளவு இரண்டு(2) என்று வைத்துக் கொள்வோம்.அதிர்ச்சியால் வந்த பயத்தின் அளவு 10 ஆக இருக்கிறது . அவர் அந்த நிலையில் பாம்பைக் காணும் பொழுது ஏற்பட்ட பயம் பன்னிரண்டு ஆகும் . இது ஒரு கற்பனை அளவே . ஆளுக்கு ஆள் வேறு படும். ஏற்கனவே அவருக்கு ஒரு அதிர்ச்சியிருந்தால் மற்றச் சின்னப் பிரச்சனைகள் காந்தம் போல் சென்று ஒட்டிக் கொள்ளும். அவரது அதிர்ச்சியின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும். அவர் தற்பொழுது பல் வைத்தியரிடம் சென்றால் , அந்த நோவின் அளவு ஒன்று என்றால் அவருக்கு இப்பொழுது 13(அலகு) மடங்கு நோ தெரியும் . அதிர்ச்சியை எடுத்து விட்டால் , ஒரு அலகு நோவே தெரியும்.

மன அதிர்ச்சி(Trauma) ?
(Trauma)மன அதிர்ச்சி எனப்படுவது ஒரு நோயல்ல , அது ஒரு ஆழ் மனத்தில் ஏற்படும் தடையே . ஆழ்மனம் எப்பொழுதும் எமது மனதையும் உடலையும் சுத்திகரித்துக் கொண்டும் , திருத்திக் கொண்டுமே இருக்கின்றது , ஒரு கவலையான சம்பவத்தை பார்த்து விட்டு , அதை மறந்து சிறிது நேரத்தின் பின் எம்மால் மகிழ்ச்சியாக கதைக்க முடிகின்றது . சிரிக்க முடிகின்றது .ஆழ் மனதில் மன அதிர்ச்சி இருக்குமாயின் , அது ஆழ் மனதின் வழமையான இயக்கத்தை தடுக்கும் . ஒரு சிறிய கவலையைப் பார்த்தாலும் அதிலிருந்து மீள பலகாலம் செல்லும் . மன அதிர்ச்சி என்பது நோயல்ல , அது ஆழ் மனத்தின் செயற்பாட்டைத் தடுக்கும் ஒரு தடையே (block).

எந்த சம்பவங்களால் மன அதிர்ச்சி ஏற்படும் ?
வீட்டில் பெற்றொர் சண்டை இடும் பொழுது , குடும்பம் பிரியும் பொழுது ,ஏதாவது பயப்படும் பொழுது, பாலியல் வன்முறை ,காதல் தோல்வி . பிரிவு , இடம்பெயர்வு , உயிராபத்தான் வருத்தங்கள் , விபத்து , வன்முறை படங்களை பார்த்தல் , கொலைகளை பார்த்தல் ,உறவினரின் இளப்பு,பெற்றொரின் தண்டனைகள் , பெற்றொரின் கடுமையான் வார்த்தைப் பிரயோகங்கள்,ஆசிரியரின் தண்டனைகள் , இளம் வயதில் பராமரிப்பு குறைந்து இருத்தல் ,இளவயதில் பிள்ளைகளுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் போன்றன . இவை எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் அல்ல . சந்தர்ப்பம் சூள்நிலைகளைப் பொறுத்து சிலருக்கு மன அதிர்ச்சியாகி விடுகின்றது . சிலருக்கு சம்பவமாகி விடுகிறது – இன்னும் சிலருக்கு புதினமாகி விடுகிறது.
இவை உடலுக்கு நேரடியாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது , மனதுக்கே ஏற்படுத்தும்.
மன அதிர்ச்சிகளால் வரும் நோய் அறிகுறிகள்.
சாப்பாட்டுப் பிரச்சனைகள் , நித்திரைப்பிரச்சனை ,பாலியல்பிரச்சனைகள்(sexual disorder), விரக்தி , கவலை ,மனஅழுத்தம் (Stress, Anxiety, and Depression), பயம்(phobia) -(ஆழ்மனதிற்கு தர்க்கம் , பகுப்பாய்வு , பகுத்தறிவு இல்லை , விடயம் பெரிதாக் இருக்கலாம் , சிறிதாக இருக்கலாம் அது பயப்படும்), கோபம்,தற்கொலை போன்றவற்றிற்கு தூண்டுதல்(compulsions) ,உணர்வுகள் மங்கிய நிலமை ,ஞாபக மறதி, ஒவ்வாமை(Allergy) ,அமைதியின்மை,இடுப்பு – கழுத்துக்குக் கீள் நோ போன்றன .இருவர் ஒரு இடத்தில் ஒரே மாதிரியான விபத்தை அனுபவித்து இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் நோய் அறிகுறி வேறு வேறாக இருக்கும்.நோய் அறிகுறி தோன்ற பல வருடங்களும் எடுக்கலாம் . துப்பாக்கியில் நிரப்பிய குண்டுகள் போல் மன அதிர்ச்சிகள் நிரம்பியிருக்கும் . எப்பொழுது வேண்டுமானாலும் தட்டுப்பட்டு வெடிக்கலாம் இவற்றின் உதாரணங்களை அடுத்த தொடரில் பார்ப்போம் .

 நன்றி . ந. பத்மநாதன் 

மனக்கோலங்கள் 2

சென்ற தொடரில் ஆழ்மனதால் ஏற்படும் சில பிரச்சனைகளை பார்த்தோம், அவற்றை எப்படித்தீர்க்கலாம் என்று இத்தொடரில் பார்க்கலாம் .ஆழ்மனதுடன் தொடர்பு கொள்வதற்கு ஒருவர் ஹிப்னாடிசத் தூக்கத்திற்கு சென்றால் அவரது ஆழ்மனதுடன் தொடர்பு கொள்ள்லாம் . அதற்கு முன் ஒரு பெண்ணின் பிரச்சனையை பார்த்துவிட்டு மேலே செல்வோம் .
தாயுமானார்

ஒரு இளம் பெண்ணின் தாய் , தனது பெண்ணிற்கு இடுப்பிற்கு மேற்பகுதியிலும் கழுத்துப்பகுதியிலும்( hofte og nakken ,hip and neck) பக்கத்திலும் நோ இருக்கிறது என்றும், அவரது திறமைகளையும் சாதனைகளையும் விளக்கிக் கூறினார் . அவர் இப்பொழுது முழுநேர வேலை செய்ய முடியாமல் இருப்பதாகக் கூறினார்.அவ ர் ஒரு முறை வன்புணர்ச்சிக்கு உட்படதாகவும் கூறினார். அப்பெண்ணை பல மருத்துவர்கள் , மனோதத்துவ நிபுணர்களும் அக்குப்பஞ்சர் போன்ற மருத்துவ முறைகளும் பல மருத்துவங்கள் செய்தும் அவர்களால் குணப்படுத்த முடியவில்லை. ஆதலால் அந்தத் தாய் ஹிப்னாடிசம் முறை மூலம் நோய் தீர்க்க விரும்பினார்.அடுத்த நாள் அப்பெண் விளக்கமாக தனது பிரச்சனையை கூறினார். அவருக்கு நோக்கள் மாத்திரம் அல்ல , ஒரு மருத்துவர் அவர் ஓய்வாக இருக்கவிட்டால் அவருக்கு பிள்ளை பெறும் தன்மை இல்லாது விடும் என்றும் கூறியிருந்தார். அதை விட அந்தப் பெண் உடலுறவின் பொழுது திருப்தி – உச்சநிலை அடைவ்தில்லை. உடலுறவு இல்லாது வேறு முறைகளில் அடைவார். அவர் தான் அந்த வன்புணர்ச்சி சம்பவத்தை மறந்து விட்டதாக கூறினார் . அவரால் நினைவு படுத்த முடியவில்லை. அவரிற்கு உயர் தர ஹிப்னாடிச சிகிச்சை முறை பாவிக்கப்பட்டது , சம்பவங்கள் யாவும் நினைவுக்கு வந்தன , நோக்கள் யாவும் மறைந்து விட்டன. சில மாதஙளின் பின் வயித்தில் பிள்ளையுடனும் புன்னகையுடனும் முழுநேர வேலை செய்தார் . தாய் கூறினார் அவரிற்கு பாலியல் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாகவும் நல்ல மகிழ்சியாக வாழ்கிறார் என்றும்.பலரால் தீர்க்க முடியாத பிரச்சனையை ஹிப்னாடிசம் தீர்த்தது.
ஹிப்னாடிசம்

இது ஒரு உடல் தளர்வுற்ற ஒரு தூக்கம் போன்ற நிலையாகும் ( deepere avslapning -deep relaxation), . நித்திரை அல்ல. இதை பத்திரகிரியார் தூங்காமல் தூங்கும் சுகம் என்று கூறியதாக எங்கோ வாசித்த ஞாபகம் . இது ஒரு இயற்கையான நிலையாகும் . ஒவ்வொரு நாளும் நாங்கள் பல தடவை இந்த நிலையை அடைகின்றோம் . ஒருவர் படம் பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் அழுவது , கதை வாசிக்கும் பொழுது உடல் முழுவதும் பய உணர்ச்சி பரவுவது , ஒரு பந்தடி போட்டியின் பொழுது ஆரம்பத்தில் அவருக்கு நோ ஏற்பட்டலும் 90 நிமிடங்களும் ஒரு பிரச்சனை இல்லாது விளையாடுவார் , ஆனால் 90 வது நிமிடம் முடிந்ததும் அவருக்கு நடப்பதற்கு உதவி தேவைப்படும் . இது கூட ஒரு .ஹிப்னாடிச நிலையாகும் .அது போல் ஒருவர் நித்திரை கொள்ளத்தொடங்கும் பொழுதும் , விழிக்கும் பொழுதும் இப்படியான் ஒரு நிலைக்கு செல்கிறார் .
ஆதலால் தான் நம் முன்னோர்கள் காலையில் இளவுச் செய்தி சொல்ல வந்தாலும் உடனடியாக சொல்லாது எல்லொரையும் எழுப்பி , பல கதைகள் கதைத்து விட்டு படிப்படியாக் சொல்லுவார்கள் . ஏனெனில் ஆள்மனதில் நேரடியாகச் சென்று அதிர்ச்சி ஏர்படாது இருப்பதற்காக அவர்கள் உடனே சொல்வதில்லை. பகற்கனவு காண்பதும் ஒரு ஹிப்னாடிச நிலையே.ஹிப்னாடிச நிலையை 99.9% மக்கள் அனைவரும் அடையலாம். ஒருவரது விருப்பம் இல்லாமல் அவரை ஹிப்னாடிசம் செய்ய முடியாது . ஹிப்னாடிசத்தின் மூலம் மந்திரம் மாயம் ஒன்றும் செய்ய முடியாது . இது முற்றிலும் விஞ்ஞான பூர்வமானது . இது இப்பொழுது தான் நோர்வேயில் ஓரளவு பிரபலமாக இருந்தாலும் – இது 1970 ம் ஆண்டுகளில் இலங்கையில் டாக்டர் கோவூர் அறிமுகம் செய்திருந்தார் , பல சாதனைகள் புரிந்தார் . அந்த ஆசானைப்பற்றி வேறு ஒரு இடத்தில் விரிவாக்ப் பார்போம் . மேடையிலே செய்யப்படும் ஹிப்னாடிசத்துக்கும் , மருத்துவக் ஹிப்னாடிசத்துக்கும் நேரடியாக் எந்தத் தொடர்பும் இல்லை . மேடை ஹிப்னாடிசத்தை எல்லொருக்கும் பாவிக்க முடியாது ஆனால் மருத்துவக் ஹிப்னாடிசமானது எல்லொருக்குமே பாவிக்கலாம் -அவர்களது விருப்பத்துடன். ஒரு படத்தில் வரும் கதாநாயகன் 20 பேரைத் தனியே அடிப்பான் நியத்தில் சாத்தியமில்லை . அதேபோல் படங்களில் வரும் பல ஹிப்னாடிசக் கதைகளும் நியத்தில் சாத்தியமில்லை.
ஹிப்னாடிசம் பாவிக்கும் முக்கிய இடங்கள் .

சுயமுன்னேற்றம் .(Self Improvement )

விளையாட்டுத்திறன் (Increase athletic ability), ஞாபகசக்தி (memory), மேடைப்பேச்சு (public speaking), படிக்கும்திறன் ( study skills), ஊக்கம் (motivation), சுய விழிப்புணர்வு ( self awareness )இன்னும் பல
பழக்கங்களுக்கு அடிமைத்த்தனம்(Addictions:) -
போதை (drugs), மது (alcohol), புகைத்தல் (smoking), சாப்பாடு(food), தொடர்வேலை (workaholic -arbeidsnarkoman), தீயசிந்தனைகள் (negative thinking), கட்டுப்படுத்தமுடியாத உணர்வுகள்(control tendencies), பாலியல்(sex)
பயங்கள்( Fears/Phobias)- (தென்னாலி படம் ஞாபகம் வருகிறதா?)

மூடிய அறை(closed-in places), சனக்கூட்டம் (public places),விமானம்( flying), தண்ணீர் (water), பாம்பு (snakes), நாய் (dogs), பூனை ,உயரம் (heights)
இதை விட மனக்கவக்லை மனவிரக்தி மனப்பத்ட்டம(anxiety, depression, panic attacks) ஒற்றைத்தலைவலி (migraine) நோகாமல் பிள்லைப்பெறுதல் , ஐம்புலன்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கச் செய்தல் . காதில் இரைதல்(tinutus) ,நிகம்கடித்தல்,கைசூப்புதல் , படுக்கையில் சிறுநீர்களித்தல் (Sengevæting,bedwetting) ஆகியவற்றையும் பூரண சுகப்படுத்தலாம் . அடுத்த தொடரில் அந்த அழகிய பெண் ஏன் பயந்து நடுங்கினாள், அப் பெண்ணின் முகத்தில் இருந்த கறுப்புக் கோடுகள் மறைந்தது எப்படி என்பதைப் பார்ப்போம்

மனக்கோலங்கள் 1

மனக்கோலங்கள் - கோலம் 1
இப்பொழுது மனம் பற்றியும் ,அதனது நோய்கள் பற்றியும் பலரும் எழுத , கதைக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே . மூளை உடலின் ஒரு பகுதியே , அங்கு தான் மனமும் இருக்கின்றது .உடலின் எப்பகுதியில் நோய் வந்தாலும் உடனே நாங்கள் மருத்துவரை நாடுகிறோம்- ஆனால் மனதில் வரும் நோய்களுக்கு தமிழர்கள் அதற்குரிய மருத்துவரையோ-ஆலோசகரையோ சந்திப்பது அரிது . மன நோய்கள் பற்றியும் அதன் தீர்வுகள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள் . அரைத்த மாவையே திருப்பி அரைக்காமல் உண்மையான காரணங்களை புதிய வடிவில் ஆராய்வதே இத்தொடரின் நோக்கம்.
மனம் இரண்டு வகைப்படும் , ஆள்மனம்(உள்மனம்)( subconscious - underbevisst) , புறமனம்(conscious - bevisste ) ஆகும்.
புறமனம்(conscious - bevisste )
புறமனனமானது குறுகிய கால நினைவை வைத்திருக்கும்,தர்க்கவியலானது ,பகுப்பாய்வு செய்யும் ,பகுத்தறியும்(logical ,analalyze,ratinal) தன்மை கொண்டது . விருப்பங்களையும் வைத்திருக்கும். ஒருவர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க விரும்புவார் ,கோபாப்படாமல் இருக்க விரும்ம்புவார், புகைக்காமல் இருக்க விரும்புவார் ஆனால் எல்லோருக்கும் இவை சாத்தியப்படாது .
ஆள்மனம்(அடிமனம்) ( subconscious - underbevisst)
ஆள்மனமானது நீண்டநாள் நினைவுகளை தன்னகத்தே வைத்திருக்கும்.அத்துடன் பேரதிர்ச்சியயும் தாங்கியிருக்கும்(trauma) , பழக்க்வழக்கங்களிற்கு அடிமையாகியிருக்கும் . புகைத்தல்,மது , இனிப்புப்பண்டம் சாப்பிடுதல் , அடிக்கடி சாப்பிடுதல் ,நிகம்கடித்தல் போன்றவை ஆள்மனதில் பதிந்து இருக்கும். எமது உணர்ச்சிகள் யாவும் ஆள்மனதாலே கட்டுப்ப் படுத்தப் படுகின்றது.தெறிவினை என்பதையும் தன்னகத்தே கொண்டிருக்கும்- தெறிவினை என்பது தர்க்கம் பகுப்பாய்வு , பகுத்தறிவு(logical ,analalyze,ratinal) என்பன இல்லாது தன்னைப் பாதுகாக்கும் . ஒருவர் கண்ணாடி போட்டிருந்தாலும் அவரது கண்ணிற்கு கிட்ட கையைக் கொண்டு சென்றால் கண்ணை உனனே மூடுவார் ,ஒரு பெண் முழுக்காற்சட்டை ஆணிந்து சென்றாலும் காற்று வீசும் போது கையால் கீழ் உடுப்பை அழுத்துவார் , நெருப்புச் சுடும் பொழுது கையை எடுத்தல் ,பனியில் சறுக்கும் பொழுது கையை பின்னே ஊன்றுதல் போன்றன . இவற்றில் இருந்து ஆள்மனதுக்கு தர்க்கம் பகுப்பாய்வு , பகுத்தறிவு என்பன இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
எமது மனப் பிரச்சனைகளுக்கு ஆள்மனதே முக்கிய காரணம் என்பதை ஆதாரங்களுடன் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
புறமனதில் ஒரு விடயத்தை பலதடவைகள் மீட்கும் பொழுது அவை ஆள்மனதில் பதிந்து விடும் . அதன் கொள்ளளவுக்கு எல்லை இல்லை - பலகோடி Tera byte ஐக் கொண்டது. ஒரு அழகிய எதிர்பாலாரின் தொலைபேசி இலக்கம் ,மின்னஞ்சல் முகவரி அகியவற்றை ஆள்மனதில் நினைவு வைத்துக் கொள்வார்கள். ஆள்மனதில் சாதாரண விடயங்கள் , மகிழ்ச்சியான விடயங்கள் இருந்தால் பாதிப்பு இல்லை . ஆனால் அதிர்ச்சிகள்(trauma) இருந்தால் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் . ஆள்மனமும் புறமனமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டால் , கடைசியில் வெல்வது ஆள்மனமே. ஒருவர் புகைப்ப் பழக்கத்தை நிறுத்த விரும்புவார் , ஓரிரு நாட்களோ - ஒரு கிளமையோ , ஒரு மாதமோ நிறுத்துவார் . ஆனால் மீண்டும் படு மோசமாக்த் தொடங்குவார். அவருடைய ஆள்மனம் புகைத்தல் பழக்கத்தையே கொண்டுள்ளது . அவரது புற மன விருப்பம் ஆள்மனதை வெல்ல முடியவில்லை . இது அவரது தவறு அல்ல. ஆனால்சிலர் ( எனது அனுபவத்தின் படி பல ஆண்களும் - பெண்கள் கற்பம் தரித்திருக்கும் பொழுதும் ) தமது புற மன விருப்பத்தை மீண்டும் மீண்டும் மீட்டு இறுக்கமாக்கி ஆள்மனத்தை மாற்றி உள்ளார்கள். புகைப்பதை நிறுத்தி உள்ளார்கள். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அது அவர்களது குற்றமில்லை.
சிலர் வாழ்க்கையில் ஏற்படும் பேரதிர்ச்சி காரணமாகவும் , நிகம்கடித்தல் , அளவுக்கதிகமாக் சாப்பிடுதல்,புகை மதுவுக்கு அடிமையாகுதல் , சில பயங்களைக்க் கொண்டிருத்தல் . இருட்டுக்குப்பயம் , பூச்சிக்குபபயம் , பாம்பு படத்தைப் பார்த்தாலே பயம் . தென்னாலி படத்தில் உலகநாயகன் கூறுவது போல் பயங்கள் - அல்லது அவற்றில் சில. இப்படியான பல பிரச்சனைகளை எப்படித் தீர்க்கலாம் எப்படி ஆள்மனதுடன் தொடர்பு கொள்ளலம் என்பனவற்றை ஆதாரத்துடன் அடுத்த தொடரில் பார்ப்போம் .

நன்றி . ந. பத்மநாதன்