பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Wednesday, 8 June 2011

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?

>
ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?


”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

-என்.கணேசன்

இவை உங்களுடையவை அல்ல!

இவை உங்களுடையவை அல்ல!




ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”

ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”

சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”

பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”

சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”

பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”

பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.

பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இது கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம் போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன் விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால் பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின் பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம்.

1. இந்த உணர்ச்சிகள் என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.

2. இந்த உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல.

3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது.

இந்த உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும், இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை.

இது போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே போய் விடு” என்று அனுப்பி விடுங்கள்.

இந்த உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.

-என்.கணேசன்

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்



சிறு வயதிலிருந்தே நமக்கு நினைவு வைத்துக் கொள்ள சொல்லித் தருகிறார்கள். படிக்கும் பாடமாகட்டும், மற்ற விஷயங்கள் ஆகட்டும் அதிகமாய் நினைவு வைத்துக் கொள்வது எல்லோராலும் பாராட்டப்படுகிறது. துரதிர்ஷடவசமாக அதையும் விட முக்கியமான கலை ஒன்றை யாரும் நமக்கு சொல்லித் தருவதில்லை. அந்தக் கலை மதிப்பெண்கள் வாங்கித் தராதென்றாலும் மன அமைதியை அடைய வைக்கும். அது தான் மறக்கும் கலை.

நம் மனதில் நாம் சேர்த்து வைத்துள்ள நினைவுகளில் எத்தனை நினைவுகள் நம் மனதில் ரணங்களாக இருக்கின்றன. எத்தனை நினைவுகள் வரப்பிரசாதமாக இருப்பதற்கு பதிலாக சாபக்கேடாக இருக்கின்றன. ஒவ்வொரு முறை நினைவுபடுத்தப் படும் போதும் எப்படியெல்லாம் நாம் நிம்மதியில்லாமல் தவிக்கிறோம். பழைய தமிழ் திரைப்பாடல் போல "நினக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று எத்தனை முறை நமக்குள்ளே கேட்டு நொந்திருக்கிறோம்? அப்படி நிறையவே நம் மனதில் சேர்த்து வைத்துள்ளோம். கடலளவு பலரும் சேர்த்து வைத்திருக்கிறோம். அலைகளாய் ஓயாமல் எழுந்து அவை நம்மை அழுத்துகின்றன. கடந்ததெல்லாம் பழங்கதை ஆகாமல் நம்மை நிகழ் காலத்திலும் வாழ விடாமல் செய்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை அடுத்தவர்கள் நமக்குச் செய்த துரோகங்களாகவும், அவர்கள் நம்மை இழிவு படுத்திய நிகழ்ச்சிகளாகவுமாக இருக்கின்றன. பிரபல ஆங்கில எழுத்தாளர் டேல் கார்னகி கூறுவார்: "நம் எதிரிகளை நாம் அதிகமாய் வெறுக்க வெறுக்க அவர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறோம். அவர்களால் நாம் நம் தூக்கத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறோம். அவர்களால் நாம் எப்படி நிம்மதியின்றித் தவிக்கிறோம் என்று மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தால் நிஜமாகவே அவர்கள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். நமது வெறுப்பு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. மாறாக நமது நாட்களை அது நரகமாக்குகின்றது". அவர் கூறியதில் பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

நமக்கு இழைக்கப்படும் நன்மைகளை நாம் தண்ணீரில் எழுதுகிறோம். தீமைகளையோ கல்லில் செதுக்குகிறோம். நண்பர்களை விட நம் நினைவுகளை எதிரிகளே அதிகமாக ஆக்கிரமிக்கிறார்கள். இதை நாம் உணர்வதாகவே தெரிவதில்லை. ஒரு நாளில் எத்தனையோ இதமான சம்பவங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கலாம். ஆனால் யாரோ ஒருவர் சொன்ன சுடுசொல் எல்லாவற்றையும் மறக்க வைத்து அன்று முழுவதும் நம் மனதில் தனி ஆவர்த்தனம் செய்கிறது. அந்த நபரைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் பின் எப்போதும் அந்த ந்¢னைவு வந்து மனம் கொதித்து அமைதி இழக்கிறோம்.

ஒன்றை நாம் என்றும் மறந்து விடலாகாது. ஒவ்வொரு மனிதனின் தவறான குணாதிசயங்களும், நடத்தைகளும் அறியாமையால் அல்லது தவறான அறிவால் தான் ஏற்படுகின்றன. வளர்த்த விதம், அமைந்த வாழ்க்கை, சூழ்நிலைகள், சேர்க்கை, விதி என்று பலதும் ஒருவன் எண்ணங்களையும், குண நலன்களையும், நடத்தைகளையும் ந்¢ர்ணயிக்கின்றன. இறைவன் தந்த ஆறாவது அறிவை முறையாகப் பயன்படுத்தினால் இவற்றின் தாக்கங்களையும் மீறி ஓருவன் பண்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் எத்தனை பேர் அந்த ஆறாவது அறிவை பயன்படுத்துகிறார்கள்? அதைப் பயன்படுத்தாதவன், அடுத்தவர்களைப் புண்படுத்துபவன், 'இன்னாத சொற்களைக்' கூறுபவன், ஏமாற்றுபவன் அவனது 'கர்மா'வின் பலனைக் கண்டிப்பாக அனுபவிப்பான். ஆகவே அவனுக்காக அனுதாபப் பட வேண்டுமேயொழிய தொடர்ந்து வெறுப்பதும், உள்ளே கொதிப்பதும் அறிவிற்கு உகந்ததல்ல.

கைகேயியின் செயலால் வெகுண்ட இலக்குவனுக்கு இராமன் சொல்லும் சமாதானத்தை கம்பன் அழகாகக் கூறுவான்:

"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"

விதியின் செயல் என்று உணர்ந்ததால் இராமன் அமைதியடைய முடிந்தது. பதினான்கு வருட வனவாசத்திற்கு கைகேயி காரணமாகி அதன் விளைவுகளில் ஒன்றாய் சீதையை இழந்து பெரும் வேதனை அடைந்த போதும் ஒரு முறையாவது இராமன் "எல்லாம் இந்தக் கைகேயியால் வந்தது" என்று ஒரு முறை கூட மனதளவிலும் நினைத்ததாய் இராமாயணத்தில் செய்தி இல்லை.

சிலர் நம்மிடம் மிக நன்றாகப் பழகியிருப்பார்கள். ஏதோ ஒரு சிறு மனஸ்தாபம் அவர்களுடன் ஏற்பட்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்க நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. எத்தனையோ நல்லது உள்ள இடத்தில் ஓரிரு குறைகள் இருப்பது பெரிய குற்றமல்ல. நம்மிடம் குறைகள் இல்லையா? குறைகளே இல்லாத அந்த தனிப்பெரும் தன்மை இறைவனைத் தவிர யாரிடம் இருக்கிறது? திருவள்ளுவர் கூறுவார்-

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்"

இராமன் செய்தான், திருவள்ளுவர் சொன்னார் என்பதற்காக மறக்கவும் மன்னிக்கவும் கூறவில்லை. நம் நிம்மதிக்காக, மன அமைதிக்காக மன்னித்து மறப்பது உத்தமம். குறுகிய வாழ்க்கையில் நாம் சாதிக்கவும், சந்தோஷப்படவும் வேண்டுமானால் இறந்த காலம் என்ற பிணத்தை நம்முடன் கட்டிக் கொண்டு அலைவது முட்டாள்தனம். இறந்ததைப் புதையுங்கள். கட்டிக் கொண்டு காலம் முழுவதும் புலம்பாதீர்கள்.

கால்குலேட்டர் உபயோகிக்கும் போது ஒரு கணக்கு முடிந்த பின்னர் அதை அழித்து விட்டு பின்பு அடுத்த கணக்கு போட்டால் தான் சரியான விடை கிடைக்கும். அதைச் செய்யாமல் தொடர்ந்து கணக்கு போட்டுக் கொண்டே போனால் தவறான விடை தான் வரும். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். நிகழ்காலத்தில் கவனமாக வாழுங்கள். அதை விட்டு பழைய கவலைகளில் நிகழ்காலத்தை கோட்டை விட்டால் இந்த நிகழ்காலத்திற்கும் சேர்த்து எதிர்காலத்தில் வருந்த வேண்டி இருக்கும்.

சிலர் மறக்க என்று மதுவையும் போதைப் பழக்கத்தையும் நாடுகிறார்கள். இதை விட முட்டாள்தனம் வேறிருக்க முடியாது. தற்காலிகமாக நிம்மதி கிடைக்கிற மாதிரி தோன்றினாலும், இது நம்மை பரிபூரணமாக அழித்து விடும். கவலையை மறக்க போதையை நாடுபவன் பின்பு போதையை மறக்க படாத பாடு பட நேரிடும்.

ரமண மகரிஷியும், ஜே.கிருஷ்ணமூர்த்தியும் சரியான பூரணமான சிந்தனையால் (விசாரம்), இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள். அரைகுறை ஆராய்ச்சியும் அலசலும் தான் சிலவற்றை மனதிலிருந்து முழுவதுமாகக் களையத் தடையாக இருக்கின்றன. முழுவதுமாய் சிந்தித்து உண்மையை உணர முடிந்தால், அந்த உண்மையே ஒருவனை விடுவிக்கும் என்கிறார்கள். அரவிந்தாஸ்ரமத்து அன்னை இன்னொரு வழி சொல்கிறார். "தேவையற்ற மறக்கப் பட வேண்டிய ஒரு எண்ணம் அடிக்கடி உங்களை தொந்தரவு செய்யுமானால் அதை முழுமையாக கவனமாக உணர்வு பூர்வமாக ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின்பு 'சரி மனமே நீ சொல்வதெல்லாம் சொல்லியாகி விட்டது. உன் வேலை முடிந்தது' என எண்ணி அக்காகிதத்தை கவனத்துடனும், உறுதியுடனும் எடுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போடுங்கள். அந்த எண்ணங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள்".

தியானமும், பிரார்த்தனையும் பல வேதனைகளை மறக்க மருந்தாக இருக்கின்றன. எல்லா பாரத்தையும் அந்த இறைவனிடம் இறக்கி வையுங்கள். காலமும், கடவுள் அருளும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மறக்கும் பக்குவத்தை அளிக்க உதவும்.

வாழ்வில் நல்ல குறிக்கோள் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தால், அதை அடைய வேண்டும் என்ற உள்ளே ஒரு அக்னி இருந்தால் எல்லாவற்றையும் மறந்து உற்சாகத்தோடு வாழ்க்கையைத் தொடர முடியும்.

குறைகளும் நிறைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. எதைப் பெரிது படுத்துகிறோமோ அவையே அதிகமாய் மனதில் தங்குகின்றன. வாழ்வது ஒரு முறை. அது குறைகளின் கணக்கெடுப்பாக இருக்க வேண்டாம். கவலைகளின் தொகுப்பாக இருக்க வேண்டாம். நல்லதை நினைவில் வைப்போம். தீயதை மறக்கக் கற்போம்.

-என்.கணேசன்

காதல் என்பது காத்திருப்பது

காதல் என்பது காத்திருப்பது


"ஐயா, இதுக்கு முன்னால் கோயமுத்தூர் வந்திருக்கீங்களா?"

புரோக்கர் பொன்னுசாமி ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டான். நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து கிளம்பியது முதல், காரில் தன்னுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருந்த அந்த பெரிய மனிதரின் மௌனம் அவனுக்கு என்னவோ போலிருந்தது.

"நான் நாற்பது வருஷத்திற்கு முன் இங்கே ஒரு மில்லில் மூன்று வருஷம் வேலை பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இப்ப தான் வர்றேன்". ரகுவரன் ஒரு கணம் தாமதித்து பதில் சொன்னார்.

"அப்படீங்களா? இப்ப ஊரு எப்படி மாறிடுச்சு பார்த்தீங்களா? அப்ப எந்த ஏரியாவில் குடியிருந்தீங்க?"

ரகுவரன் பதில் சொல்லவில்லை. அவனது கேள்வி காதில் விழாதது போல் இருந்து விட்டார். ஒரு பதில் இன்னொரு கேள்வியை உருவாக்கும். இப்படி சங்கிலித் தொடராக அவனுடன் பேசும் மனநிலையில் அவர் இல்லை.

சிறிது நேரம் அவரது பதிலை எதிர்பார்த்த பொன்னுசாமி பின்பு தானும் மௌனமாகி விட்டான்.

ஆனால் அவனது கேள்வி அவர் வாழ்வின் வசந்த கால நினைவுகளை மனதில் கிளப்பி விட்டது. இன்று பம்பாயில் கோடிக்கணக்கில் சொத்தும் பல விலை உயர்ந்த கார்களும், பங்களாக்களும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த நகர வீதிகளில் ஒரு பழைய சைக்கிளில் அவர் வலம் வந்த காலம் அது. சில சமயங்களில் அவர் தோளைப் பிடித்துக் கொண்டு ஒரு அழகான பெண் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருப்பாள். அந்தப் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு சுகம் இருந்தது. அவளை அவர் உயிருக்கு உயிராக அன்று காதலித்தார். அவளது தந்தையின் வீட்டில் தான் ஒரு போர்ஷனில் குடியிருந்தார். அவளும் அவர் மீது உயிரையே வைத்து இருந்தாள்.

அந்த மூன்று வருடங்களில் அவர் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். அவரது முதல் கவிதை ஒரு பத்திரிக்கையில் பிரசுரமான போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"காணாத போது
காணாமல் போவது
காதல் அல்ல.
காதல் என்பது
காத்திருப்பது"

"உங்களால் எப்படி இவ்வளவு அழகாக கவிதை எழுத முடிகிறது" என்று ஒரு முறை அதிசயித்து கேட்டாள்.

"நீ என்னுடன் இருக்கையில் கவிதை தானாய் வருகிறது" என்று புன்னகையுடன் அவர் பதில் சொன்னார். அது உண்மை தான். அவளைப் பிரிந்த பிறகு அவர் கவிதை எழுதியதில்லை.

அவர் வேறு ஒரு நல்ல வேலை கிடைத்து பம்பாயிற்குப் பயணமான தினம் அவள் கண்ணீரோடு சொன்னாள். "நீங்க கண்டிப்பாய் வருவீங்க இல்லையா? நான் உங்களுக்காக இங்க காத்துகிட்டு இருப்பேன்"

அவரும் போகும் போது திரும்ப வந்து அவளை அவள் தந்தையிடம் பெண் கேட்கும் எண்ணத்துடன் தான் போனார். ஆனால் பம்பாயில் நிறைய பணத்துடன் தன் மகளையும் அவருக்குத் திருமணம் செய்து தர ஒரு பணக்காரர் முன் வந்த போது இது போன்ற சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்று அவரது பெற்றோர் புத்திமதி சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் தன் காதலைச் சொல்லி மறுத்தார். ஆனால் அவரது தந்தை "பிராக்டிகல்" ஆக இருக்கும் படி புத்திமதி சொன்னார்.

"பிராக்டிகல்" ஆக யோசித்ததில் காதல் கரைய ஆரம்பித்தது. அந்தப் பணக்காரப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மாமனார் தந்த பணத்தை முதலீடு செய்து ஆரம்பித்த வியாபாரம் பல மடங்கு இலாபத்தைத் தந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வாழ்க்கையில் தேடிய பணம் கிடைத்தவுடன் காதலும், கவிதைகளும் பழங்கதை ஆகின. எப்போதாவது சில சமயங்களில் பழையவை நினைவுக்கு வரும். வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்களின் இனிமை பின்பு எப்போதும் இருந்ததில்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தும். அதெல்லாம் சில நிமிடங்கள் தான். பின்பு பழையபடி "பிராக்டிகல்" ஆவார். எல்லாமே சௌகரியமாக மறந்து போகும்.

வியாபார நண்பர் ஒருவரின் மகன் திருமணம் கோயமுத்தூரில் நடக்கவே அதற்கு அவர் வர வேண்டியதாயிற்று. அப்போது தான் அங்கு ஒரு இடம் வாங்கி ஒரு வீடு கட்டினால் என்ன என்று தோன்றியது. சாதாரண மில் தொழிலாளியாக இருந்த ஊரில் ஒரு பெரிய வீடு கட்டிப் பார்க்க மனம் திடீரென்று ஆசைப் பட்டது. அதுவும் தான் முன்பு குடியிருந்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் இடம் கிடைத்தால் பரவாயில்லை என்று பேச்சு வாக்கில் நண்பரிடம் சொல்ல, அவர் புரோக்கரிடம் சொல்ல, அதன் விளைவு தான் புரோக்கருடன் இந்த பயணம்.

இப்போது ஏனோ மனம் காதலியை நினைத்துப் பார்த்தது. அவளும் இப்போது பேரன் பேத்திகள் எடுத்து எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று தோன்றியது. தன்னைப் போல் அவளும் எப்போதாவது நினைத்துப் பார்ப்பாளோ?

"நாம பார்க்கப் போற இடம் பத்து சென்ட். பழைய ரெண்டு போர்ஷன் இருக்குங்க. வீட்டுக்காரர் தன் மகள் கல்யாண செலவுக்காக தான் விற்கிறார்ங்க. கல்யாணம் அடுத்த மாசம்ங்க. அதனால் விலையைக் கொஞ்சம் குறைச்சு பேரம் பேசலாங்க. ஒத்துக்குவார்ங்க"

மௌனம் புரோக்கர் பொன்னுசாமிக்குத் தாங்க முடியாத சித்திரவதையாக இருக்கும் போலிருக்கிறது அன்று ரகுவரன் எண்ணியபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தார். ஊரும் அவரைப் போலவே நிறையவே மாறியிருந்தது.

அவரிடம் பதில் வராவிட்டாலும் பொன்னுசாமி பேசிக் கொண்டு போனான். "வீட்டுக்காரர் திருநள்ளாறு போயிருக்கிறார். வீடு பார்க்க ஒன்றுமில்லைங்க. அது மகா பழசுங்க. அதை இடிச்சு தானே கட்டப் போறீங்க....ஆ...டிரைவர் நிறுத்துப்பா. இந்த இடம் தான்"

ரகுவரன் ஒரு கணம் சிலையானார். பொன்னுசாமி காண்பித்த இடம் அவர் ஒரு காலத்தில் வசித்த அதே வீடு. சுற்றும் முற்றும் பங்களாக்கள் இருந்த அந்தப் பகுதியில், இரண்டு போர்ஷன்கள் கொண்ட அந்த ஓட்டு வீடு மாத்திரம் மாறாமல் அப்படியே இருந்தது. விதி என்பது இது தானோ? தன்னை சுதாரித்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினார். பக்கத்து போர்ஷன் பூட்டி இருந்தாலும் அவர் இருந்த போர்ஷன் வீடு பூட்டப் படாமல் இருந்தது.

"இந்த வீட்டில் யார் இருக்காங்க பொன்னுசாமி"

"அந்த வீட்டுக்காரரோட அக்கா இருக்கு. அது பைத்தியமுங்க. அதனால தான் அதை விட்டுட்டு அவங்க போயிருக்காங்க"

"எனக்கு இந்த வீட்டுக்குள்ள போய் பார்க்கணுமே"

பொன்னுசாமி பதறினான். "ஐயோ வேண்டாங்க. அந்தப் பைத்தியம் இருக்கிற இடம் ரொம்ப மோசமாய் தான் இருக்கும். எப்படியும் இடிச்சு தள்ளிட்டு தானே கட்டப் போறீங்க. பார்க்க என்னங்க இருக்கு?"

"பரவாயில்லை. நான் பார்க்கணும்"

தர்மசங்கடத்துன் பொன்னுசாமி அவரைப் பார்த்தான். "சரி வாங்க பார்க்கலாம்"

ரகுவரன் கதவைத் தட்டினார். ஆனால் திறந்தே இருந்ததால் கதவு மெள்ள திறந்து கொண்டது. ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. உள்ளே போகலாமா என்று பொன்னுசாமியை அவர் பார்வையாலேயே கேட்டார்.

பொன்னுசாமி பரிதாபமாய் எச்சிலை விழுங்கினான். " இது வரைக்கும் வீட்டுக்கு வெள்ளை அடிக்க வந்தவங்களை எல்லாம் அந்தப் பைத்தியம் விளக்குமாறால அடிச்சுத் துரத்தி இருக்கு. அதோட தம்பி, அதான் வீட்டுக்காரர், அவர் கூட அதிகம் உள்ளே போக மாட்டாருங்க. எனக்குப் பெரிய பெரிய ரௌடிகளைப் பார்த்தா கூட பயமில்லை. ஆனா பைத்தியம்னா கொஞ்சம் திகில் தானுங்க.... என்ன செய்யும் ஏது செய்யும்னு சொல்ல முடியாதுங்களே..."

"சரி நானே போறேன். நீ இங்கேயே இரு"

ஒரு கணம் யோசித்து விட்டு அதுவே நல்லது என்ற முடிவுக்கு பொன்னுசாமி வந்தான். கோட்டு சூட்டுடன் உள்ளே போகும் இந்த பெரிய மனிதர் எந்த நிலையில் வெளியே வரப் போகிறாரோ, மாற்று உடை இருக்கிறதோ இல்லையோ என்ற கவலையுடன் உள்ளே போகும் அவரைப் பார்த்தபடி வெளியே சற்று தள்ளியே நின்றான். ஒரு வேளை அவர் ஓடி வந்தால் தன் மீது மோதி விடக் கூடாதே என்ற பயம் அவனுக்கு இருந்தது.

நெஞ்சு படபடக்க உள்ளே நுழைந்த ரகுவரன் தான் நாற்பது வருடங்கள் பின்னுக்கு வந்து விட்டதைப் போல உணர்ந்தார். அந்த வீடு அவர் விட்டுப் போனபடியே இருந்தது. 1964 வருடத்திய காலண்டர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் உபயோகப்படுத்தி வந்த நாற்காலி அறையில் நடு நாயகமாய் வைக்கப்பட்டிருந்தது. அவரது கவிதைகள் பிரசுரமான பத்திரிக்கைகளும், அவரது பழைய டைரி ஒன்றும் அந்த நாற்காலி மீதிருந்தன. சுவரின் ஒரு பகுதியில் அவர் எழுதியிருந்த பால் கணக்கு கூட மங்கலாகத் தெரிந்தது. 1964ல் இருந்து காலம் அந்த அறையில் ஸ்தம்பித்து விட்டது போல் அவருக்குத் தோன்றியது.

"யாரது?"

சமையலறையில் இருந்து ஒரு குரல் பலவீனமாய் கேட்டது. உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த அவர் குரல் வந்த திசையைத் திகைப்புடன் பார்த்தார். சமையலறையிலிருந்து ஒரு கிழவி மெள்ள வந்தாள்.

"யாரது?" அவள் மறுபடி கேட்டாள்.

அவர் முன்பு நினைத்தது பொய். காலம் அங்கே ஸ்தம்பித்து நிற்கவில்லை. அவர் காதலியை காலம் சின்னா பின்னப்படுத்தி இருந்தது. அடையாளமே தெரியாதபடி அவள் உருக்குலைந்து போயிருந்தாள்.

"வசந்தா" ரகுவரன் அழைத்தார். ஆனால் அவள் அவரை அடையாளம் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

"நான் ரகுவரன்.."

"ஆமாம். அது தான் அவர் பெயர். அவர் இன்னும் வரலையே"

"நான் யார்னு தெரியலையா வசந்தா?" என்று சத்தமாகக் கேட்டார். அவளுக்குக் காது கேட்கவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

"சத்தம் போடக் கூடாது. அவர் கவிதை எழுதிட்டு இருக்கார். கவிதை எழுதும் போது சத்தம் போட்டால் அவருக்குப் பிடிக்காது. அவர் வர்ற வரை இந்தப் பத்திரிக்கை படிங்க. இதில் இருபதாம் பக்கம் அவர் எழுதின கவிதை இருக்கு. முதல் பரிசு வாங்கின கவிதை" என்று சொல்லி அந்த நாற்காலியில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தாள்.

கைகள் நடுங்க அந்தப் பத்திரிக்கையைப் பிரித்தார். இருபதாம் பக்கம் அவர் படத்துடன் அந்த முதல் பரிசுக் கவிதை பிரசுரமாகி இருந்தது.

விடை இல்லாத கணக்கு


ஒன்றான இரண்டிலிருந்து
மீண்டும் ஒன்று போனால்
மீதம் இருப்பதென்ன என்றேன்.
பூஜ்ஜியம் என்றும் ஒன்று என்றும்
புரியாமல் சொல்கிறார்கள்.
மீதமிருந்து சிதறும் இதயம்
எத்தனை துகளாய் உடையும் என்று
எவரால் தான் சொல்ல முடியும்?

படிக்கையில் அவர் கண்கள் கலங்கின. கவிஞனாக எழுதியதன் உண்மையை மனிதனாய் நேரில் உணர்கையில் ஏற்பட்ட துயரம் அது.

"உன்னை இங்கே நான் எதிர்பார்க்கலை வசந்தா. நான் இந்த இடத்தை விலைக்கு வாங்க தான் வந்தேன்..."

அவள் கண்கள் கலங்கின. "சார், இது அவர் வாழ்ந்த வீடு. அவர் வர்றேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார். கண்டிப்பாய் வருவார். உங்களுக்கு விலை கொடுத்து வாங்க ஆயிரம் வீடு கிடைக்கும். தயவு செய்து இந்த வீட்டை விட்டுடுங்களேன். ஒரு நாள் அவர் வர்றப்ப நான் இல்லாமல் போயிட்டா அவர் துடிச்சுப் போயிடுவார், அவரோட அந்தக் கவிதையில் சொன்ன மாதிரி. சார், நீங்க யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா? நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா?"

ரகுவரன் உடைந்து போனார். இதயம் ரணமாகி ரத்தம் கசிந்தது. தன்னை விடப் பெரிய பாதகன் இந்த உலகில் இருப்பானா என்று சந்தேகப் பட்டார். கைகளைக் கூப்பி கனத்த மனத்துடன் குரல் கரகரக்க சொன்னார். "பிராக்டிகல் என்று ஒரு இங்கிலீஷ் வார்த்தை சொன்னாங்க வசந்தா. நான் விலை போயிட்டேன். இப்ப என் கிட்டே என்னைத் தவிர எல்லாமே இருக்கு. உனக்கு நான் செஞ்ச துரோகத்திற்கு இது தான் நான் கண்ட பலன். என்னை மன்னிச்சசுடு வசந்தா"

அவரது வார்த்தைகள் அவளைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அவள் அவரது டைரியைக் கையில் எடுத்துத் தடவியபடி ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கியது போல் தெரிந்தது. நிமிடத்திற்கு நிமிடம் மனதில் கனம் அதிகரிக்க அவளைப் பார்த்தபடி ரகுவரன் சிலையாக நிறைய நேரம் நின்றார். அவள் அவர் இருப்பதையே மறந்து விட்டதாகத் தோன்றியது.

அவர் வெளியே வந்த போது பொன்னுசாமி காரில் சாய்ந்தபடி டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்தவுடன் ஓடி வந்தான்.

"வாங்கய்யா. நல்ல வேளை அந்தப் பைத்தியம் உங்களை ஒன்றும் செய்யலை" அவன் நிஜமாகவே சந்தோஷப் பட்டான்.

காரில் திரும்பிப் போகும் போது சொன்னான். "கிரயமான அடுத்த நிமிஷமே அந்தப் பைத்தியத்தைக் கூட்டிட்டு போயிடுவாங்க. வீடு காலி செய்யறதுல உங்களுக்குப் பிரச்னையே இருக்காது"

ரகுவரன் உடைந்த குரலில் உறுதியாகச் சொன்னார். "இந்த இடத்தை அவங்க சொல்ற விலை கொடுத்து முடிச்சுடலாம் பொன்னுசாமி. ஆனா அந்த வீட்டை அந்தம்மா காலி செய்ய வேண்டாம். அவங்க காலம் முடியற வரைக்கும் அங்கேயே இருக்கட்டும். புரிஞ்சுதா பொன்னுசாமி"

"புரிஞ்சுதுங்கய்யா" என்று வாயளவில் சொன்னாலும் பொன்னுசாமிக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. கிடைக்கப் போகும் கமிஷனைக் கணக்குப் போட ஆரம்பித்ததால் அவன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

-என்.கணேசன்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 8

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 8


நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்குப் பல அற்புத சக்திகள் இருந்த போதிலும் அவற்றை அவர் அடையாளம் கண்டு கொள்ள சாதகமான சூழ்நிலைகள் அவருடைய இளமையில் ரஷியாவில் இருக்கவில்லை. நாசிகள் லெனின்கிராடு நகரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆக்கிரமிக்க முற்பட்ட போது லெனின்கிராடு நகரவாசியான நினா குலாகினா தன் பதினான்காம் வயதிலேயே இராணுவத்தில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தப் போரில் வீரசாகசம் புரிந்து, காயமடைந்து, பின் குணமாகி, திருமணமாகி இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு தான் தன்னிடமிருந்த சக்திகளை அவரால் அடையாளம் காண முடிந்தது.

ஒரு நாள் ஏதோ கோபத்துடன் அவர் வீட்டினுள் நுழைந்த போது அலமாரியில் வைத்திருந்த ஒரு ஜக் தானாக நகர்ந்து விளிம்புக்கு வந்து கீழே விழுந்து நொறுங்கியது. அவரால் அப்போது உடனடியாக அதற்குக் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்த நாட்களில் விளக்குகள் அணைவது, பொருள்கள் அவர் இருப்பால் அசைதல் போன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. பின்னர் தன்னிடம் ஏதோ சக்தி உள்ளது என்று தோன்ற ஆரம்பித்தது. அவராகவே சில முயற்சிகள் எடுத்துப் பார்த்த போது தன்னால் பொருள்களைத் தொடாமலேயே அசைத்து, கட்டுப்படுத்த முடிகிறது என்பது அவருக்கு விளங்க ஆரம்பித்தது.

1964ல் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணமடைய ஆரம்பித்த போது அந்த மருத்துவமனையில் பொழுது போக்கிற்காக நிறைய தைக்க ஆரம்பித்தார். டாக்டர்கள் அவர் பையில் பல நூல்கண்டுகள் இருக்கும் பையிலிருந்து பார்க்காமல் வேண்டிய நிற நூல்கண்டை எடுக்கும் விதத்தைப் பார்த்து அசந்து போனார்கள். இந்த விஷயம் உள்ளூரில் வேகமாகப் பரவியது. உள்ளூர் அறிஞர்கள் மறு வருடம் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது நினா குலாகினா உடனே தயக்கமில்லாமல் ஒத்துக் கொண்டார். அப்போது செய்த ஆராய்ச்சிகளில் நினா குலாகினா தன் விரல் நுனியின் தொடு உணர்ச்சி மூலமாக நூல்கண்டின் நிறத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் என்பது நிரூபணமாகியது.


அதோடு அவருக்கு காயங்களைக் குணப்படுத்தும் அபார சக்தியும் இருந்தது. காயங்களுக்கு சற்று மேலே சிறிது நேரம் கையை வைத்திருந்தே குணப்படுத்திக் காட்டினார். அவர் ஒரு மேசையின் முன் அமர்ந்து மேசை மேல் இருக்கும் தீப்பெட்டி அல்லது தம்ளர், பேனா போன்ற பொருள்களை வெறித்துப் பார்த்தே, தொடாமலேயே நகர்த்திக் காட்டும் சக்தியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்தி எல்லா சமயங்களிலும் உடனடியாக அவருக்குக் கிடைப்பதில்லை. மனதில் மற்ற எண்ணங்களை விலக்கி, ஒருமுகப்படுத்திய பின்னரே அந்த சக்தி அவருக்கு சாத்தியமாயிற்று. அந்த சமயத்தில் தண்டுவடத்தில் அதிக வலியும் பார்வையில் மங்கலும் தனக்கு ஏற்படுவதாக அவர் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரை ஆராய்வதில் முதலில் அதிக ஆர்வம் காட்டியவர் எட்வர்டு நவ்மோவ். அவர் செய்த ஆரம்ப பரிசோதனை ஒன்றில் ந்¢னா குலாகினாமேசை மேல் பரப்பி வைத்திருந்த தீப்பெட்டி குச்சிகளைத் தொடாமல் சற்று தூரத்தில் தன் கைகளை வைத்து அவற்றையெல்லாம் மேசை நுனிக்கு வரவைத்து ஒன்றன் பின் ஒன்றாக விழ வைத்துக் காட்டினார்.

ஸ்டாலினிடம் தன் சக்திகளை நிரூபித்து லெனின்கிராடில் ஆராய்ச்சிக்கூடம் ஏற்படுத்திய வாசிலிவும் நினா குலாகினாவை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். அறுபதிற்கும் மேல் பரிசோதனைகளை நிழற்படமாகவே எடுத்து வைத்திருந்தார் வாசிலிவ். ஆனால் ஸ்டாலினின் ரகசியக் கட்டுப்பாடு காரணமாக வெளிவராமல் இருந்த அந்த படங்களைப் பின்னர் திரையிட்டுப் பார்த்த போது பல திரைப்படங்களில் தரம் தெளிவாக இருக்கவில்லை.

நினா குலாகினாவின் அபூர்வ சக்திகள் பற்றிய செய்திகளும், படங்களும் மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்தது. 1968ல் ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் முதல் மாஸ்கோ கருத்தரங்கில் நினா குலாகினாவின் பரிசோதனை பற்றிய தெளிவான சில நிழற்படங்கள் காட்டப்பட்டதை மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகளும் கண்டார்கள்.

அவர்களுடைய ஆவல் தூண்டப்படவே அவர்கள் குறுகிய காலத்திற்கு ரஷியா வந்து நினா குலாகினாவை பரிசோதனை செய்ய 1968 முதல் 1970 வரை அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களும் இந்த ஆராய்ச்சிகளில் காந்தம், கண்ணுக்குத் தெரியாத நூல் போன்றவற்றை நினா குலாகினா மறைத்து வைத்து உபயோகப்படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய பல ஆரம்ப முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தான் ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார்கள். வில்லியம் மெக்கேரி என்ற ஆராய்ச்சியாளர் முன் மேசை மேல் இருந்த பல சிறிய பொருள்களை இடம்பெயரச் செய்த அவர் ஒரு மோதிரத்தை அந்தரத்தில் சுழற்றிக் காட்டினார். இன்னொரு அமெரிக்க ஆராய்ச்சியாளரான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெய்தர் ப்ராட் எடையிலும், அளவிலும், தன்மையிலும் வித்தியாசப்பட்ட பல விதமான பொருள்களை தன் விருப்பப்படி நினா குலாகினா அசைத்துக் காட்டியதைக் கண்டு வியந்தார். விஞ்ஞானம் அன்று வரை அறிந்த எந்த சக்தியாலும் அது நடக்கவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டெனெக் ரெஜ்டாக் தன் சோதனைகளில் அடிக்கடி நினா குலாகினாவை இடம் மாறி உட்காரச் சொன்னார். இடம் மாறினாலும் அவர் செய்து காட்டிய அற்புதங்கள் குறையவில்லை. தன் சிகரெட் ஒன்றையும் மேசை மேல் வைக்க குலாகினா தன் பார்வையாலேயே உடனடியாக அதை நகர்த்திக் காட்டினார். அந்த ஆராய்ச்சி முடிந்த பிறகு சிகரெட்டை ஆராய்ந்த போது உள்ளே துகள்கள் எதுவும் இருக்கவில்லை என்றார் ரெஜ்டாக். ஆராய்ச்சிகளின் இடையே அவ்வப்போது மருத்துவர்களைக் கொண்டு நினா குலாகினாவின் உடலையும் ரெஜ்டாக் பரிசோதிக்கச் செய்தார்.

1970 மார்ச் 10 ஆம் தேதி லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு வித்தியாசமான இன்னொரு அற்புதத்தை நினா குலாகினா நிகழ்த்திக் காட்டினார். ஒரு தவளையின் இதயத்துடிப்பைத் தன் மனோசக்தியால் அதிகரித்துக் காட்டினார். பின் அதை குறைத்துக் காட்டினார். பின் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். பின் மறுபடி இயக்கிக் காட்டினார். இதைக் குறித்து வேறொரு சமயம் கிண்டல் செய்த ஒரு மனோதத்துவ நிபுணரின் இதயத்துடிப்பையும் அதிகரித்துக் காட்டி பயமுறுத்திய நினா குலாகினா அது போன்ற அபாயமான செயல்களை பின்னர் தொடரவில்லை.

நினா குலாகினா ஆராய்ச்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவரைப் பரிசோதித்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்துக் கூறுகிறார்கள். ஆராய்ச்சி செய்யும் இடங்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. சில ஆராய்ச்சிகள் திறந்த வெளிகளில் கூட நடந்தன. அவர் சக்திகளை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணோடு பார்த்த மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் எத்தனையோ சோதனைகளில் அவரை ஈடுபடுத்தினார்கள். சில ஆராய்ச்சிகளில் அவரைச் சுற்றி பல டெலிவிஷன்களை வைத்து வெளியில் வேறு பலராலும் கூட கண்காணிக்கப் பட்டார். பின்னரே அவருடைய சக்திகளை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.

ஆனால் இது போன்ற சக்தி வெளிப்பாடுகளை நினா குலாகினா தொடர்ந்து செய்து காட்டியது அவர் உடல்நிலையைப் பெரிதாகப் பாதித்தது. தன் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு டாக்டர் ரெஜ்டாக் செய்த பரிசோதனையில் நினா குலாகினா நான்கு பவுண்டுகள் எடை குறைந்ததாகத் தெரிவித்தார். முகம் வெளுத்துப் போய் தன்னால் சிறிது கூட நடக்க முடியாத அளவு அவர் சக்தி இல்லாமல் போயிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளுக்குப் பின் கடும் உடல்வலியும், மயக்க நிலையும் கூட ஏற்படுவதாக நினா குலாகினா தெரிவித்தார். ஒரு கட்டத்தில் டாக்டர்கள் அவரை இந்த அற்புத சக்திகளை செய்து காட்டுவதை நிறுத்திக் கொள்ளும் படி எச்சரித்தார்கள். அது அவர் உயிருக்கே அபாயம் தரலாம் என்று தெரிவித்தார்கள். நினா குலாகினா நிறுத்திக் கொள்ளா விட்டாலும் மிகவும் குறைத்துக் கொண்டார். 1990ல் அவர் இறந்த போது ரஷியா அவரை லெனின்கிராடு வீராங்கனை என்று போர்கால வீரதீரச் செயல்களுக்காகப் பாராட்டியது.

எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட நினா குலாகினாவின் இந்த அபூர்வ சக்திகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்ல முடியவில்லை. பதில் ஆழ்மனதின் அற்புதத்தன்மையிலேயே இருக்கிறது என்பதற்கு வேறென்ன தெளிவு வேண்டும்?

மேலும் பயணிப்போம்...

என்.கணேசன்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 7




எண்ணங்களின் சக்தியை ரஷியாவில் வாசிலிவ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த காலத்திற்கும் சற்று முன்பே, 1910ஆம் ஆண்டு, ஜப்பானில் டாக்டர் டொமொகிச்சி ·புகுரை என்ற டோக்கியோவின் இம்பீரியல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எண்ணங்களையும் புகைப்படம் எடுக்க முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் மையக் கருத்தாக இருந்தது. தன் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்ட போது ஜப்பானிய அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக எதிர்க்க அவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஆனால் தன் கருத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட ·புகுரை கோயா சிகரத்தில் உள்ள ஒரு புத்தமத ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதை 1931ல் Spirit and Mysterious World என்ற புத்தகத்தில் விவரமாக வெளியிட்டார் என்றாலும் அபோதும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதை அங்கீகரிக்கவில்லை.

அவருடைய ஆராய்ச்சிக் கருத்துகள் வலிமை பெற ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டிற்குப் பின் தான். அதுவும் அறிவியலுக்கு சம்பந்தமே இல்லாத டெட் சிரியோஸ் (1918-2006) என்ற சிகாகோவில் வசித்து வந்த ஒரு குடிகார நபர் மூலம் தற்செயலாக வெளிப்பட்டது. தான் போதையில் இருக்கும் போது தனக்கு வித்தியாசமான காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் கடலிலும் மண்ணிலும் புதைந்து கிடக்கும் புதையல்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் தெரிவித்தார். அவரது நண்பர் விளையாட்டாக "உனக்குத் தெளிவாக மனதில் தெரியும் காட்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது நீ வெற்று சுவரைப் பார்த்தபடி காமிராவை வைத்துப் படம் பிடித்தால் வந்தாலும் வரலாம்" என்று சொல்ல அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அப்படியே சிரியோஸ் செய்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அதில் புதையுண்ட புதையல்கள் படம் வரவில்லை. அதற்குப் பதிலாக வேறெதோ படங்கள் வந்தன. அந்தப் புகைப்படங்கள் அந்த அறையில் இருந்த பொருள்களின் படங்களாகவும் அவை இருக்கவில்லை. அப்படியானால் வெள்ளைச் சுவரை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வந்த பிம்பங்கள் அவருடைய மனதில் இருந்த புதையலைப் பற்றிய எண்ணங்களில் இருந்து வந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆச்சரியப்பட்ட சிரியோஸ் மீண்டும் மீண்டும் அது போல் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் காட்ட ஆரம்பித்தார்.


இந்தச் செய்தி இல்லினாய்ஸ் நகரின் ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கூடத்தை எட்டவே அவர்கள் டென்வர் நகரைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜூல் இய்சன்பட் (1908-1999) என்பவரை செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இய்சன்பட்டிற்கு டெட் சிரியோஸை வைத்து நடத்திய ஆய்வுகள் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. குடிகார டெட் சிரியோஸ் தனக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியாத போது போதையில் கத்துவது, உளறுவது, தலையை சுவரிலோ, தரையிலோ இடித்துக் கொள்வது போன்ற செய்கைகளில் ஈடுபட்டது இய்சன்பட்டிற்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒருசில நேரங்களில் கிடைத்த புகைப்படங்களின் தத்ரூபம் டெட் சிரியோஸை ஒரேயடியாக ஒதுக்கவும் விடவில்லை. இய்சன்பட் டென்வரில் உள்ள தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு டெட் சிரியோஸை வரவழைத்து இரண்டாண்டு காலம் ஆராய்ச்சி செய்தார்.


பலர் முன்னிலையில் டெட் சிரியோஸ் செய்து காட்டிய விந்தைகள் சில அற்புதமானவை. ஒரு முறை பார்வையாளர்கள் அவரை பழங்கால ரோதன்பர்க் என்ற நகரப் படத்தை மனதில் எண்ணிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஓரளவு சரியாகவே செய்து காட்டினார் சிரியோஸ். பின் கொலராடோவில் மத்திய நகரத்தில் உள்ள பழைய ஆப்ரா ஹவுஸ் என்ற இடத்தின் படத்தை புகைப்படமாக்கச் சொன்னார்கள். அதையும் செய்து காட்டிய சிரியோஸ் "இந்த இரண்டு புகைப்படங்களையும் கலக்கி ஒரு புகைப்படம் உருவாக்கட்டுமா?" என்று சொல்ல பார்வையாளர்கள் உற்சாகமாக செய்து காட்டச் சொன்னார்கள். டெட் சிரியோஸ் உருவாக்கிக் காட்டிய புகைப்படம் அவர் சொன்னது போலவே பழைய ஆப்ரா ஹவுஸில் குறுக்கே உள்ள குதிரை லாயத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் செங்கல் கட்டிடத்திற்குப் பதிலாக ரோதன்பர்க் நகரப் படத்தில் உள்ளது போல கல்லால் ஆன கட்டிடத் தோற்றம் இருந்தது. ஆப்ரா ஹவுஸ் குதிரைலாயப் புகைப்படத்தையும், இரு காலக்கட்டத்தை இணைத்து அவர் எடுத்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.


1967ல் இய்சன்பட் "டெட் சிரியோஸின் உலகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் தன் ஆராய்ச்சிகளை விரிவாக ஆதார புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். ஒருசில இடங்களை சிரியோஸ் எண்ணப் புகைப்படங்களாக எடுத்து தந்தது மேலிருந்தும், மரக் கிளைகளின் நடுவிலிருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இய்சன்பட் வியப்புடன் கூறியிருக்கிறார். அது போன்ற கோணங்களில் இருந்து எடுப்பது போல் புகைப்படம் எடுக்க முடிவது எப்படி என்பது கேள்விக்குறியாக இருந்தது. பலரும் டெட் சிரியோஸின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே செய்தார்கள் என்றாலும் இது போன்ற ஆற்றல் வெளிப்படுத்துவதில் பல ஏமாற்று வேலைகள், தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்பதால் மிகக் கவனமாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்ததாக இய்சன்பட் கூறினார்.

பிற்காலத்தில் இது போன்ற ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடக்கத் துவங்கின. ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் டெட் சிரியோஸை ஆராய்ச்சிக்காக அணுகிய போது அவருடைய அபூர்வ சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் உதவ முடியவில்லை. ஆனாலும் எண்ணப் புகைப்படங்கள் என்றாலே மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு டெட் சிரியோஸின் நினைவு தான் முதலில் வரும் நிலை இன்றும் இருந்து வருகிறது.

இனியும் ஆழமாகப் பயணிப்போம்....

- என்.கணேசன்