
இதமான காற்று மெல்ல
என்னை தொட்டுச் செல்ல சில்லிட்டது உடல் ...
மெதுவாய் திரும்பி பார்க்கின்றேன் .....
அசைய முடியவில்லை
நேற்று வாங்கிய அடி உதை காரணமாய்
நொறுங்கி போய் இருந்தேன் ...
நேற்று இரவெல்லாம் பெய்த மழையில்
தெப்பமாய் நனைந்து போய் இருந்த எனக்கு
இன்று எரிக்கும் வெயில் கதகதப்பாய் இருந்தது ...
ஏதோ குத்துவது போல் உணர்வில்
அவசரமாய் பார்க்கின்றேன்
ஈர்க்கு குச்சி ஒன்று என் மேல்
குத்திக் கொண்டிருந்தது ...
ஒரு தடியின் மேல் சாய்ந்தபடி
மீண்டும் கண்ணயர்கிறேன் ...
என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்து கொண்டிருக்கும் வேளை
எனக்கு ஏற்பட்ட இன்ப துன்பங்களை
அசைபோடுகிறது மனது ...
என் பிறப்பை பற்றி சொல்ல
எனக்கு தெரியவில்லை
ஏனெனில் என்னை செய்தவரை
தான் எனக்கு தெரியும் ...
விதம் விதமாய் உடைகள் எனக்கு ...
என் உடலை அலங்கரிக்கும் உடைகள்
மற்றவர் கண்களை பறிக்கும் அளவு
பிரகாசமாய் இருக்கும் ...
குழந்தை முதல் கிழவி வரை
என்னை தேடாதவர்களே இல்லை
எல்லோருக்கும் நான் தேவை படுவேன் ..
அது அவர்களுக்கு தேவை ஏற்படும் வரை தான் ..
அதன் பிறகு இப்படி தான் செத்து மடிய வேண்டும் ..
கொண்டாட்டங்கள் திருவிழாக்கள்
நடக்கும் இடங்களில்
நானும் நிற்பேன் என் தோழிகளுடன் ...
பல பேர் வருவார்கள் விலை பேசுவார்கள்
அடி மாட்டு விலைக்கு கேட்பார்கள்
வேண்டாம் என்பார்கள் வேண்டும் என்பார்கள் ...
எம் தலை எழுத்தை பார்த்தீர்களா?
வேண்டாம் என்றாலும் நாம் பேச கூடாது ..
வேண்டும் என்றாலும் நாம் பேச கூடாது ..
எம் சந்தோஷத்தை எப்பவுமே யாருமே கேட்பதில்லை ..
வலுகட்டாயமாய் அனுப்ப படுவோம்
இஷ்டம் இருந்தாலும் இல்லை என்றாலும் ..
ஒவ்வொரு வீட்டு பெண்களும் எம்மை கண்டால்
ஒரு கணம் நிண்டு பார்ப்பது வழமை
எனக்கு கூட பெண்களை ரொம்ப பிடிக்கும் ...
அதுவும் என்னை விருப்ப பட்டு கேட்ட
சுகுணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
சுகுணா ஒரு அழகு தேவதை ...
அவளோடு நானிருந்தால் இன்னும் அழகு என்று
அவள் கணவன் எண்ணி இருப்பான் போலும் ..
ஆறு மாத காலமாய் சுகுனாவுடன் பழகிய எனக்கு ..
அவள் எப்பவுமே தீங்கு செய்ய வில்லை ...
அப்பப்போ என்னை தொட்டு பார்ப்பாள் ...
அடிக்கடி என்னை சுத்தம் செய்வாள்
அவள் உறக்கத்தில் அசைகின்ற போதெல்லாம்
நான் சிரித்துக் கொள்வேன் ...
அவள் அவசரமாய் வேலைகள் செய்யும் போது
அவளோடு பேசிக்கொள்வேன் அடிக்கடி ...
பதிலே சொல்ல மாட்டாள் ..
பதிலுக்கு ஒரு புன்னகை ..
சில நேரம் நான் அவளை காய படுத்தி இருக்கிறேன்
திட்டவே மாட்டாள் ஷ் ஷ் என்று சொல்லுவாள் ..
அத்தோடு சரி ......
அவள் கணவன் இல்லாத நேரங்களில்
அவள் தனியாக பேசுவதை எல்லாம் கேட்பது நான் தான்
பரதமும் ஆடுவாள் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல்
அப்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரிப்பேன் ...
அவள் ஆடி அசைகையில் என் சிரிப்பு அதிகமாகும்
சில நேரங்களில் அவள் சோகமாய் இருப்பாள்
அந்த சோகம் என்னையும் ஒட்டிக் கொள்ளும் ..
அப்போ கூட என்னை எண்ணிக் கொள்
என்று அமைதியாய் இருப்பேன்..
பாவமாய் இருப்பாள் அவள் நல்லவள்
நான் நினைத்துக் கொள்வேன் ...
நான் அவளோடு போன இடங்கள்
ஒரு நாளும் மறக்காது ..
அவள் கிராமத்தில் அழகிய நீர்வீழ்ச்சியில் குளித்தது ..
கோயில்களுக்கு சென்றது ...சினிமா பார்க்க சென்றது ..
இப்படி நிறைய இடங்கள் .. அங்கு எல்லாம்
அவள் கூடவே இருந்தேன்
அவள் துக்கங்களின் போது கூட
நான் பிரிய முற்படவில்லை ..
என்றும் போல் அன்றும் வேலைகளில்
மும்முரமாக இருந்தாள் அவள் ..
தொலைபேசி மணி அழைத்துக்கொண்டே இருந்தது ..
தனக்கு தானே பேசி கொண்டாள் .
. ''யாரு இந்த நேரத்துல ''
நானும் அவளை பார்கின்றேன்
என்னிடம் தான் கேட்டாளோ?
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் யாருமே இல்லை ..
தொலைபேசியை கையில் எடுத்தவள்
''யாரு பேசுறது ''என்றாள்..
அந்த பக்கம் கேட்ட ஆண் குரலில் பதற்றம் தெரிந்தது ....
அய்யோ.............. என்று வீறிட்டாள் சுகுணா .........
அப்படியே நிலத்தில் சரிந்து விழுந்தாள்...
எனக்கு ஒன்றுமே புரியவில்லை ..
யாரும் வீட்டில் இல்லை என்ன
செய்வதென்று தெரியவில்லை ..
கதறவேனும் போல உள்ளது ஆனால் எப்படி ?
சுகுணா எழுந்திருக்கவில்லை
எதுவும் தெரியாமல் நான் குழம்பி போனேன் ...
தொலை பேசியில் யாரோ
கூப்பிட்ட வண்ணம் இருக்கிறார்கள் ..
அடுத்த சில நொடிகளில்
வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம்
யாரோ உள்ளே வரும் அரவம் ....
கதவு பலமாக தட்ட படுகிறது ..
ஜன்னல் வழியா சத்தம் கேட்கிறது
அவங்க மயங்கிட்டாங்க போல ..
ஜன்னல் வழியாக உள்ளே வந்த ஒருவன்
கதவை திறக்கின்றான்
நான்கைந்து பெண்கள்
ஓடி வந்து சுகுணாவை தூக்க
யாரோ நான்கு பேர் எதையோ தூக்கி வருகிறார்கள்
வராந்தாவில் வைக்கிறார்கள்
வெள்ளை துணியால் சுற்றப் பட்டுள்ளது ..
எல்லோரும் அழுகிறார்கள் ..
ஒப்பாரி சத்தம் கேட்கிறது ...
செய்வதறியாமல் நான் ஸ்தம்பித்து நிக்கின்றேன் ..
சுகுணா ஓடிச் சென்று அந்த
வெள்ளை துணியை மெதுவாய் அகற்றுகிறாள்
அவள் கணவன் இறந்து கிடக்கின்றான் ..
அதிர்ச்சியால் வாயடைத்து
நிக்கின்றாள் அவள் .. ...நானும் தான்
தன் தலையில் அடித்து கொண்டு அழுகிறாள் அவள்
எனக்கும் வலிக்கிறது அவளை பார்க்கையில் ..
சன கூட்டம் அதிகமாகியது
யார் யாரோ வருகிறார்கள் போகிறார்கள்
மறுநாள் அந்த உடலை
கொண்டு போய் விட்டார்கள் ...
எரித்து விட்டதாக யாரோ பேசுகிறார்கள் ..
சுகுணா ஒரு மூலையில்
விசும்பிக் கொண்டிருக்கிறாள் ..
பாவம் அவள் நினைத்து கொள்கிறேன் நான் ...
திடீர் என்று சில பெண்கள்
வீட்டுக்குள் நுழைந்தார்கள்
சுகுணாவை அழைத்துக்கொண்டு
போனார்கள் பின் புறமாக
அவளை இருத்தி விட்டு
எதையோ சொல்கிறார்கள் ...
எனக்கு கோபம் கோபமாய் வந்தது ...
அடுத்த நொடி அவர்கள் என்னை
அடித்து நொறுக்குகிறார்கள் ..
நான் சுகுணாவை
பரிதாபமாய் பார்க்கின்றேன் ..
சுகுணா வேண்டாம் வேண்டாம்
விடுங்கள் விடுங்கள் என்று அலறுகிறாள்
அவர்கள் அதை பொருட்படுத்தாமல் என்னை
அடித்து நொறுக்குவதில் கவனமாக இருந்தார்கள் ..
அடித்த அடியில் நொறுங்கி போகிறேன் நான்
உடலெல்லாம் துண்டு துண்டாக சிதறுகிறேன்
நிலமெங்கும் சிதறிக்கிடந்த என்னை
கூட்டி குப்பையில் போட்டு விட்டார்கள் ...
நேற்று பெய்த மழையில் வெள்ளம் பெருக்கெடுத்தது ..
அழகு ஜொலிக்கும் நான் இதோ
மழை வெள்ளத்தில் அடித்து கொண்டு வந்து
ஆற்றுக்குள் விழுந்து மிதக்கின்றேன் ...
தூரத்தில் ஒரு வெள்ளை உருவம் ..
மூடத் துடிக்கும் விழிகளை திறந்து பார்க்கின்றேன் ..
வெண்ணிற உடையில் சுகுணா விதவையாய் ,,
சோகம் தொண்டையை அடைக்கிறது ....
கணவன் இறந்து விட்டால்
பூச்சூடுவதில்லை பூவுக்கு விடுதலை ...
பொட்டு வைப்பதில்லை அதற்கும் விடுதலை
மஞ்சள் பூசுவதில்லை மஞ்சளுக்கு கூட விடுதலை
இவைகளை விட்டு விடும் அவர்கள் என்னை மட்டும்
ஏன் துவம்சம் செய்கிறார்கள்
அந்த நாளில் சொல்வார்கலாமே
அவன் இறந்தால் அவளும் உடன் கட்டை ஏறுவாள் ....
அன்று தொட்டு இன்று வரை
அவள் கணவன் இறந்தால் நாங்கள்
உடன்கட்டை ஏறுவதை என்னவென்று சொல்வீர் ?
எனக்குள் நினைத்துக் கொள்கிறேன் நான்
''அவள் விதவை என்றாள் நாங்கள் நொறுங்கி விடுவோம் .''...
வளையல் எனப் பெயர் கொண்டதால் ......
மடிகின்றேன் ஆற்றிலே மிதந்து மிதந்து
உயிர் தனை தொலைக்கின்றேன் நீருக்குள் விழுந்து விழுந்து ....
அப்பொழுதும் அழுகின்றேன் பெண்களை நினைந்து நினைந்து ....
சிந்து சிவசங்கர்
No comments:
Post a Comment