
ஆயிரமாயிரம் உறவுகள் உண்டு
ஆலம் விழுது போல் படர்வதும் உண்டு
ஆடிக்கொரு முறை வருவதும் உண்டு
ஆட்டங்கள் காட்டி செல்வதும் உண்டு
ஆலயமதிலும் தெய்வங்கள் உண்டு
ஆறாத மனங்கள் செல்வதும் உண்டு
ஆசீர்வாதம் கேட்பது உண்டு
ஆசிகள் பெற்றதாய் சொல்வதும் உண்டு
ஆபத்து பலதும் வருவதும் உண்டு
ஆறா கஷ்டத்தில் விழுவதும் உண்டு
ஆண்டவன் உண்டென்று சொல்பவர் உண்டு
ஆவிகள் உண்டென்றும் சொல்பவர் உண்டு
ஆணவத்துடனே அழைபவர் உண்டு
ஆற்றினில் உண்மைகள் கரைவதும் உண்டு
ஆதவன் தினமும் வருவதும் உண்டு
ஆதியிலிருந்தே தொடர்வதும் உண்டு
ஆசைகள் நெஞ்சில் சுமப்பவர் உண்டு
ஆழியில் அதனை தொலைத்தவர் உண்டு
ஆகாய உயரத்தில் கனவுகள் உண்டு
ஆயுள் முடிய முன் செல்வதும் உண்டு
ஆற்றிய பணியை விடுவதும் உண்டு
ஆழும் ஆசையில் விழுவதும் உண்டு
ஆண் என்று கூறி முறைப்பவர் உண்டு
ஆதிக்கம் மிகையாய் வாழ்பவர் உண்டு
ஆசான் ஒருவன் இருப்பதும் உண்டு
ஆடு மேய்க்கும் சிறுவனும் உண்டு
ஆடவர் என்று செருக்கும் உண்டு
ஆண்டுகள் தோறும் மாற்றமும் உண்டு
ஆபத்தில் உதவும் நண்பனும் உண்டு
ஆறா துயரத்தில் தள்ளுபவரும் உண்டு
ஆஹா என்று புகழ்பவர் உண்டு
ஆத்திரம் கொண்டு அடிப்பவர் உண்டு
ஆவேஷம் கொண்டு கொல்பவர் உண்டு
ஆறா நோயை போக்கும் மருத்துவர் உண்டு
ஆடி அசைந்து வரும் ஆறுகள் உண்டு
ஆற்றங்கரையில் நாணல்கள் உண்டு
ஆறேழு தெரியா பாமரனும் உண்டு
ஆறெழுத்து அறிஞ்ச அறிஞனும் உண்டு
ஆஸ்தியை ஆழும் மனிதனும் உண்டு
ஆண்டியாய் திரியும் மனிதனும் உண்டு
ஆடும் கலையை அறிந்தவர் உண்டு
ஆட்டி வைக்கவும் பல பேர் உண்டு
ஆச்சியின் கதைகளில் உண்மையும் உண்டு
ஆட்சியில் பொய்யே கதையாய் உண்டு
ஆதரவெனும் சொல்லொன்று உண்டு
ஆணைகள் இட்டு சொல்வதும் உண்டு
ஆரிரோ பாடும் தாயும் உண்டு
ஆழியின் நடுவில் சுழலும் இந்த உலகினிலே ...!!!
சிந்து சிவசங்கர் .
No comments:
Post a Comment