பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

எதனாலே

20.எதனாலே ?

உற்றாரும் தூர நிற்பார்
உறவினரும் தூர நிற்பார் எதனாலே ...?
உண்மைகளை மறைத்திடுவார்
உற்ற நீதி அகற்றிடுவார் எதனாலே ?
உணவு வகை மறந்திருப்பார்
உறக்கத்திலும் பசி இருப்பார் எதனாலே ?
உச்சத்திலே அமர்ந்திருப்பார்
உருக்கி ஏழை வயிற்றிலடிப்பார் எதனாலே ?
உசுப்பி தப்பை செய்ய வைப்பார்
உருண்டு விட்டால் கை விரிப்பார் எதனாலே ?
உலையில் அரிசி கொதிக்குதென்பார்
உதைத்து பிச்சை இல்லை என்பார் எதனாலே ?
உரசி பெண்ணை காதலிப்பார்
உயந்த வீட்டில் பெண்ணெடுப்பார் எதனாலே ?
உபாதையால் படுத்திருப்பார்
உண்டு பல நாட்கள் என்பார் எதனாலே ?
உமையவளை வணங்கி நிற்பார்
உரியவளின் வாழ்க்கை என்பார் எதனாலே ?
உத்தரவுக்கு காத்திருப்பார்
உதிர்ந்து விட்டால் மாண்டிடுவார் எதனாலே ?
உள்ளம் தனை கொள்ளை அடிப்பார்
உரிமை என்றால் விலகிடுவார் எதனாலே ..?
உற்சவங்களை மறந்திருப்பார்
உயர் படிப்பை நிறுத்தி வைப்பார் எதனாலே ?
உப்பளத்தில் வேலை செய்வார்
உப்பு வீட்டில் இல்லை என்பார் எதனாலே ?
உச்சி மரத்தில் காகமென்பார்
உடனே வீட்டை பூட்டி வைப்பார் எதனாலே ?
உழுந்து இல்லை விதைக்க என்பார்
உழவன் தான் அவர் என்பார் எதனாலே ?
உள்ளிருந்தே குளிபறிப்பார்
உருட்டு கட்டைக்கு வேலை வைப்பார் எதனாலே?
உச்சு கொட்டி சிலர் உண்டிருப்பார்
உலர்ந்த கண்ணால் சிலர் பார்த்திருப்பார் எதனாலே ?
உறிஞ்சி குடிக்க சிலர் பானமென்பார்
உயிர்ப்பின்றி சிலர் பார்த்திருப்பார் எதனாலே ?
உடையை பார்த்து மதிப்பிடுவார்
உடம்பை பார்த்து மதிப்பிடுவார் எதனாலே ?
உடுக்கை அடித்து பாடிடுவார்
உய்யாத பேயென்பார் எதனாலே ?
உப்பி சிலர் உடம்பெடுப்பார்
உருகி சிலர் நோயாவார் எதனாலே ?
உண்டியலை உடைத்திடுவார்
உத்தியோகத்தை குறை சொல்வார் எதனாலே ?
உடும்பை போல பணம் பிடிப்பார்
உருசி அறியா உண்டிருப்பார் எதனாலே ?
உமியை கூட விற்றிடுவார்
உறியில் எறும்பை ஏற விடார் எதனாலே ?
உதிரத்துக்கும் விலை வைப்பார்
உருக்குலைந்து போய் விடுவார் எதனாலே ?
உளியால் சிலைகள் செதுக்கிடுவார்
உறுதிமொழியை மறந்திருப்பார் எதனாலே ?
உலகெங்கும் அலைந்திடுவார்
உனக்கும் விலை உண்டு என்பார் எதனாலே ?
உறையும் பணியை கரைத்திடுவார்
உதவி செய்ய மறுத்திடுவார் எதனாலே ?
உமிழ் நீரும் துப்ப மாட்டார்
உடைந்த சட்டி வீச மாட்டார் எதனாலே ?
உதைத்தாலும் வாங்கிடுவார்
உரைத்தாலும் உண்டிடுவார் எதனாலே ?
உக்கிரத்தையும் பொருத்திடுவார்
உளுப்பினாலும் அசைய மாட்டார் எதனாலே ?
உதித்த உடன் கதிரவனும்
உறுமியோட கிளம்பிடுவார் எதனாலே ?
உறுமும் புலி சிங்கத்துக்கும்
உறைகள் போட்டு மாட்ட வைப்பார் எதனாலே ?
உத்தரத்தில் பிறந்ததென்பார்
உல்லாசமாய் வாழ்க்கை என்பார் எதனாலே ?
உரலில் நெல்லை கொட்டிடுவார்
உலக்கை கொண்டு குத்திடுவார் எதனாலே ?
உடைகள் மானம் காக்க என்பார்
உருவி அதையும் எறிந்திடுவார் எதனாலே ?
உள்ளி இன்றி சமைத்திருப்பார்
உரிக்கும் தோலும் சமைத்திடுவார் எதனாலே ?
உண்ணாத விரதமென்பார்
உரைகள் பல நடத்திடுவார் எதனாலே ?
உலவி எங்கும் நடந்திடுவார்
உன்னையும் என்னையும் பிரித்திடுவார் எதனாலே ?
உரிமை என்று பொய்யுரைப்பார்
உழைப்பு இன்றி வாழமாட்டார் எதனாலே ?
உயிலை மாற்றி எழுத சொல்வார்
உருக்கமாக பேசிடுவார் எதனாலே ?
உத்தமியாம் தாயவளின்
உயிரை கூட எடுத்திடுவார் எதனாலே ?
உள்ளங்கையில் பணம் வேண்டும் அதனாலே ...!!!

சிந்து சிவசங்கர் .

No comments:

Post a Comment