பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Sunday, 12 June 2011

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?




இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். மேலும் மன்னர்களாக உயர்பவர்களும் சரித்திரம் படைக்கும் மன்னர்களாக இருப்பார்களா இல்லை சரித்திரம் பழிக்கும் மன்னர்களாக இருப்பார்களா என்பதும் ஊகத்திற்குட்பட்ட விஷயமே. எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு படைக்கும் மன்னர்களாவது சாத்தியமா என்பது தான் நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதிலை ஒரு கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு முனிவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த முனிவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த முனிவரிடம் சென்றான்.

“முனிவரே. என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா? உயிரற்றதா?” என்று முனிவரிடம் அவன் கேட்டான்.

அவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்று விட்டு ’பாருங்கள். உயிரில்லையே’ என்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு “உயிருடன் இருக்கிறது பாருங்கள்” என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த முனிவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது தான் அவன் குறிக்கோள்.

அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த முனிவர் புன்னகையுடன் சொன்னார். “அது உயிருடன் இருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது”

அது போல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்தது.

பதினாறு வயதில் அரபு வியாபாரிகளிடம் வேலைக்குச் சென்ற திருபாய் அம்பானி என்ற இளைஞன் மனதில் பெரியதொரு கனவிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் மன உறுதியும் இருந்தது. அதை நனவாக்க என்ன விலையும் தரவும் அந்த இளைஞன் தயாராக இருந்தான். அந்த இளைஞன் இந்திய வணிகத்துறையில் முடிசூடா மன்னனாக மாறியதை சரித்திரம் இன்று சொல்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற குஜராத்தி இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. ஒடிசலான உடல்பலமற்ற அந்த இளைஞன் வக்கீல் படிப்பு படித்த போதும் பெரிய வக்கீல் ஆகும் திறமை ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த இளைஞன் மனதில் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதி இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சரித்திரம் படைத்தது. எத்தனையோ இளைஞர்கள் காந்தியடிகளால் கவரப்பட்டு விடுதலை வேட்கையுடன் சுதந்திரத்திற்காகப் போராட்டத்தில் குதித்தார்கள். ‘கத்தியின்றி, இரத்தமின்றி’ நடந்த ஒரே மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் உலக சரித்திரத்தில் பதிவாகியது.

சிறுவனாக இருந்த போது முதல் முறையாக திசை காட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தான் ஐன்ஸ்டீன் என்ற அந்த சிறுவன். எப்படி திசையை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் அறியத் துடித்தான். அவனுடைய அந்த ஆவல் விஞ்ஞானத் துறை நோக்கி அவனைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம் சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக பின்னாளில் அவனை மாற்றியது. அது வரை இருந்த பல விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு புதிய சரித்திரம் படைத்தார் ஐன்ஸ்டீன்.

இப்படி வியாபாரமாகட்டும், ஆட்சியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், வேறெந்த துறையுமாகட்டும் இளைஞர்கள் இளமைக் காலத்தில் தங்கள் மனதில் விதைத்த கனவுகள், சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்து தான் பெருத்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

இளமைக்காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை “கற்பூரப் பருவம்” என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளுமாம். அந்தக் காலத்தில் இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.

இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இராமேசுவரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 16-8-1947 தேதிய தமிழ் நாளேட்டில் நாட்டு மக்களுக்கு பண்டித நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது. நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க் கொண்டிருந்த படத்துடன் விவரித்திருந்த அந்த செய்தி அப்துல் கலாமை மிகவும் நெகிழ வைத்து விட்டது. தேசத்தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டிய மனிதர் அதை விட்டு விட்டு பொது சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். தன்னலமில்லா ஒரு விஞ்ஞானியாகவும், தலைவராகவும் பின்னாளில் அவர் உருவானதற்கான விதை என்று கூட அதைச் சொல்லலாம்.

“ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்” என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் கூறும் போது முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிடுகிறார். விதையாக இருந்தவை எவை, விளைச்சலாக நேர்ந்தது என்ன என்பது சிந்திக்க வேண்டிய செய்தி. எனவே இந்த இளைஞர் சக்தி இன்று எந்த நிலையில் இருக்கிறது. எப்படி பயன்படுத்தப் படுகிறது, பதப்படுத்தப்படுகிறது என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் மனித குலம் மேம்பட பயன்படுத்தப்பட்ட கல்வி இன்று அந்த ஆரம்ப நோக்கத்திலிருந்து நிறையவே விலகி விட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம். இன்று கல்வி வேலை வாய்ப்புக்கான சாதனமாக மட்டுமே மாறி விட்டது. ஏராளமான தகவல்களை மாணவர்களுக்குள்ளே திணிக்கிறதே ஒழிய அவர்களுடைய பண்புகளை வளர்ப்பதில் அலட்சியமே காட்டுகிறது. ஒரு காலத்தில் நல்ல விஷயங்களைச் சொல்ல நீதிப்பாடம் (Moral Science) என்று ஒரு பாடவகுப்பு இருந்தது. அதில் நீதிக்கதைகள், சான்றோர் பற்றிய செய்திகள், பெரியோர்களின் வாழ்க்கை வரலாறெல்லாம் மாணவர்களுக்கு சொல்லித் தருவார்கள். இன்று அது போன்ற பாடவகுப்புகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

எந்த அறிவும் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றால் எது நன்மை, எது தீமை என்ற சிந்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அழிவே விளையும் என்பதற்கு இக்காலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அணுவைப் பிளந்து பெரும் சக்தியைக் கண்டு பிடிக்க விஞ்ஞானிகளால் முடிந்தது. ஆனால் அதை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதை விட அதிகமாக அழிவுக்காக அல்லவா உலகம் அதிகம் பயன்படுத்துகிறது. அணுகுண்டாக விழுந்து அந்த அறிவு எத்தனை கோடி உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.

இளம் வயதிலேயே எத்தனை இளைஞர்களை மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளை சிலர் உருவாக்கி அழிவை அரங்கேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களில் பலர் மிக நன்றாகப் படித்தவர்கள் என்பதை செய்தித்தாளில் படிக்கிற போது நம் மனம் பதைக்கிறது. மனிதத்தன்மையைக் கூட அவர்கள் கற்ற கல்வியால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லையே!

கவிஞர் கண்ணதாசன் குறள் வடிவில் ஒரு முறை நகைச்சுவையாக எழுதினார்.

கற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுவதே
தற்கால நாகரி கம்!

ஆனால் நம் முன்னோர் கல்வியை தகவல்களைச் சேர்க்கும் சாதனமாக நினைத்ததில்லை. சம்ஸ்கிருதத்தில் “தத் த்வித்யம் ஜன்மா” என்ற வாக்கியம் உண்டு. இதற்கு ’கல்வி இரண்டாம் பிறப்பு போன்றது’ என்று பொருள். படிப்பது இன்னொரு முறை பிறப்பது போல், புதுப்பிறவி பெறுவது போல் மேன்மையானது என்று நம் முன்னோர் நினைத்தார்கள். கல்வி கற்றவனை மேம்படுத்தி மற்றவனையும் மேம்படுத்தப் பயன்பட வேண்டும். அப்படிக் கல்வி கற்ற இளைஞர்களே வரலாறு படைக்கும் நாளைய மன்னர்களாகப் பரிணமிக்க முடியும்.

அப்படி இல்லாமல் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவும், வேலைக்காகவும் கற்கும் கல்வியை வைத்து நம் நாட்டில் இத்தனை பேர் கல்வி பெற்று விட்டார்கள் என்று புள்ளி விவரம் சொல்வது பேதைமை. கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால் அந்தக் கல்வியால் என்ன பயன்?

இக்காலக் கல்விமுறை பெரிதும் ஒருவரைப் பண்படுத்தப் பயன்படுவதில்லை என்ற போதும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. இக்காலக் கல்வியின் உதவியில்லா விட்டாலும் சிந்திக்க முடிந்த, நன்மை தீமை என்று பகுத்தறியக் கூடிய நல்ல இளைஞர்கள் இன்றும் கணிசமான அளவில் உள்ளார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகள் இருந்தால், வழி நடத்தக் கூடிய பண்பாளர்கள் இருந்தால் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக கண்டிப்பாக மலர்வார்கள்.

நல்ல முன்மாதிரி என்று சொல்லும் போது நமக்கு அப்துல் கலாம் நினைவு தான் வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று மாணவர்களை சந்திக்கும் வழக்கம் உள்ள அவர் இளைய சமுதாயத்தில் பெரும் நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் அவருக்கு இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை உணர முடிகிறது. அவர் அனுபவம் இன்றைய இளைஞர்கள் நாளைய நல்ல மன்னர்களாக மாறுவது சாத்தியமே என்று சொல்கிறது.

ஆனால் இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை அப்துல் கலாம் போன்றவர்களுக்கு ஒதுக்கி விட்டு மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும். நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை நம்மை சுற்றி ஆரம்பித்து வைக்கும். அந்த அலைகளால் உங்கள் வீட்டிலோ, நீங்கள் இருக்கும் பகுதியிலோ ஒரு இளைஞர் ஈர்க்கப்பட்டு நல்ல விதத்தில் மாறினாலும் அது பெரும் வெற்றியே. நம்மில் ஒவ்வொரு மனிதராலும் இப்படி நல்ல அலைகளை அனுப்ப முடிந்தால், இளைய சமுதாயத்திடம் நல்ல விதைகளை விதைக்க முடிந்தால் அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றை மேன்மையான முறையில் எழுதும் மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே!

-என்.கணேசன்
நன்றி: ஈகரை

சோம்பல் ஒரு சோக காரணி

சோம்பல் ஒரு சோக காரணி




ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா?

அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் .....”

அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?”

அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்”

அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த நிபந்தனை என்ன?”

அவன் சொன்னான். “உறக்கத்தில் இருந்து விழித்த உடனேயே சிறிதாவது சாப்பிட வேண்டும்”

அந்த செல்வந்தரிடம் ஆரம்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி கோபமாக மாறியது என்பதைச் சொல்லத் தேவையில்லை. உண்பதும் உறங்குவதுமே அவனுக்கு முழு நேர வேலை என்றால் அதற்கு சம்பளம் தர அவருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது. அவனை அவர் அடித்து விரட்டினார்.

இது படிக்க ஒரு நகைச்சுவைக் கதை போல் தெரியலாம். ஆனால் நிறைய பேர் ஆசைப்படுவது இப்படித் தானிருக்கிறது. இந்த மனநிலை தான் சோம்பல். வாழ்க்கை சுமுகமாகப் போக வேண்டும், ஆனால் அது தங்கள் முயற்சியில்லாமல் நடந்தேற வேண்டும் என்று ஆசைப்படும் மனநிலை பலரிடம் இருக்கிறது. வார்த்தைகளில் சொல்லா விட்டாலும் எதிர்பார்ப்பு என்னவோ இப்படித்தான்.

சோம்பேறிகள் எந்த வித உழைப்பையும் மலைப்போடு பார்ப்பார்கள். கடுகளவு வேலையும் மலையளவாய் அவர்களுக்குத் தோன்றும். முயற்சி, வேலை என்றாலே ஒருவகை வெறுப்பை தங்கள் மனதில் வளர்த்து வைத்திருப்பார்கள். அப்படி வேறு வழியில்லாமல் வேலை செய்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தம் வந்தால் அந்த வேலை தங்கள் வசதிக்கேற்ப இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த வேலையும் குறைந்த அளவாக இருக்க வேண்டும் என்றும், வேலையில் எந்த சிரமங்களும் இருக்கக்கூடாது என்று எண்ணுவார்கள். வேலை செய்வது எப்படி என்பதை அறிவதற்குப் பதிலாக அந்த வேலையில் இருந்து தப்பிப்பது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்.
முடிந்த வரை அடுத்தவர்கள் தயவில், அடுத்தவர்கள் உழைப்பில் வாழத் துடிக்கும் இவர்கள் சோம்பல் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய சோக காரணி என்பதை உணர மறந்து விடுகிறார்கள்.

ஜெரிமி டெய்லர் சொல்வார். “உயிர் வாழும் மனிதனைப் புதைப்பது போன்றது சோம்பல்”. செஸ்டர் ஃபீல்டு பிரபு கூறுவார். “முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடைக்கும் சோம்பலை நான் ஒரு விதத் தற்கொலையாகவே கருதுகிறேன்”. அவர்கள் சொல்வது போல சோம்பேறித்தனம் மரணமடைவதற்கு சமமானது. இறந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. சோம்பேறியோ ஒன்றும் செய்ய மாட்டான். இந்த இயக்கமின்மையை வைத்துப் பார்க்கும் போது இருவரும் ஒன்று தானே. இறக்கும் வரை இயங்கவே பிறந்திருக்கிறோம். இயங்க மறுப்பது வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.


ஆனால் மேலும் ஆராய்ந்து பார்த்தால் சோம்பேறி பிணத்தைக் காட்டிலும் மோசமானவன். பிணம் மற்றவரை உபத்திரவிப்பதில்லை. சோம்பேறியோ யாரையெல்லாம் சார்ந்து இருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் பெரும் பாரமாகவும் உபத்திரவமாக இருக்கிறான். பிணம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காது. ஆனால் சோம்பேறிக்கோ அடுத்தவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மனிதன் பயன்படுத்தாத எதுவும் வலிமை குன்றிப் போகிறது. உடலை உழைக்க வைக்காத போது உடல் வலிமை குறைந்து கொண்டே போய் உடல் நோய்வாய் படுகிறது. அறிவைப் பயன்படுத்தாத போதோ சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே போய் புத்தி மந்தமாகி விடுகிறது. சோம்பேறி இந்த இரண்டையும் பயன்படுத்தாமல் ஆரோக்கியத்திலும், புத்தியிலும் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறான்.

உலகில் உழைப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடந்து விடுவதில்லை. நம்மைச் சுற்றிப் பாருங்கள். நாம் வசிக்கும் வீடு உழைப்பால் உருவாக்கப்பட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் உழைப்பால் உருவானவை. உழைப்பில்லாமல் உருவாவது களைகள் மட்டுமே. நல்ல செடிகளை நட்டு, நீருற்றி பேணிக்காக்க வேண்டி இருக்கிறது. அங்கு உழைப்பு தேவைப்படுகிறது.

சோம்பேறித்தனத்தால் நல்லது எதுவும் நடப்பதில்லை என்பது மட்டுமல்ல, ஏராளமான தீமைகளுக்கு சோம்பல் விளைநிலமாக இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சோம்பேறியின் மூளை தீமைகளின் தொழிற்சாலை என்று சொல்வார்கள். அது உண்மையே. தேங்கிக் கிடக்கும் நீரில் நோய்க்கிருமிகளும், புழு பூச்சிகளும் உருவாவது போல இயக்கம் இல்லாத சோம்பேறியின் மூளையில் தீய சிந்தனைகள் தழைக்கின்றன. திருட்டு, கொள்ளை எல்லாம் உழைக்கத் தயங்கும் சோம்பேறித்தனத்தின் விளைவுகளே அல்லவா?

சோம்பலின் தீமைகளை திருவள்ளுவரும் அருமையாக விளக்குவார்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)

(முயற்சி செல்வத்தை உருவாக்கும். சோம்பலோ வறுமையை சேர்த்து விடும்)

603 ஆம் குறளில் “மடிமடிக் கொண்டொழுகும் பேதை” என்பார். ”அழிக்கும் இயல்புடையதாகிய சோம்பலை தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவிலி” என்பது இதற்குப் பொருள்.

அவர் சொல்வது போல சோம்பேறித்தனம் முட்டாள்தனமே ஆகும். உழைப்பு கடினமானது என்பது ஒரு தவறான அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட கருத்து ஆகும். உண்மையில் பார்த்தால் உழைப்பை விட சோம்பலே கடினமானது. உழைக்கும் போது உடலுக்கும் அறிவிற்கும் வேலை இருப்பதால் காலம் வேகமாக ஓடி விடும். முடிவில் செல்வமும் நன்மையும் விளைந்திருக்கும். ஆனால் சோம்பலில் காலம் நகர்வதே இல்லை என்று தோன்றும். முடிவில் வெறுமையும் துக்கமுமே மிஞ்சும்.

எனவே சோம்பலை உங்களிடம் இருந்து விலக்குங்கள். சோகத்தையும், அர்த்தமின்மையையும் சேர்த்து நீங்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்குவதாக அது அமையும்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

தனியே ஒரு குரல்

தனியே ஒரு குரல்




பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.

பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி(Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.

தன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.


அரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.

கலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒரு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.

அதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.

அந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.

கலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவன் சொல்வதாகக் காரணம் சொல்லி அவனை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.

கலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை "Dialogue" புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.

கோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய "Dialogue" நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.

சில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.

எனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்