
எப்பொழுது விடியும்
எப்பொழுது விடியும் என
காத்திருக்கின்றது
கூவும் சேவல்கள் ...
தூரத்தில் பசுக்கன்று
அம்மா என்று அழும் சத்தம் ...
எல்லோர் வீடுகளிலும்
அதிகாலையின் பரபரப்பு ...
அவள் பெயர் தேவி
இப்படி தான் அவள் தோழிகள்
அவளை அழைத்தார்கள் ...
அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் ...
எனக்கும் தான் ...
தினமும் என்னை தேடி வரும்
அவளை தேடுகிறேன் ...
இரண்டு வாரங்களாக
அவளை காணவில்லை ....
நேற்று அவள் தோழிகள்
உரையாடியதை ஒட்டுகேட்டேன் ..
அவள் இன்றைக்கு வருவாளாம் ..
அது தான் அவளுக்காக
இந்த இனிய காத்திருப்பு ...
ஆனால் அவளை இன்னும் காணவில்லை ...
ஏன் இன்னும் அவள் வரவில்லை
ஏக்கத்துடன் பார்க்கின்றேன் ...
காணவில்லை ...
எப்பவும் இந்த நேரம்
வந்து விடுவாளே ...
அவள் வர வேண்டும் ...
கடவுளே ...
என்று எண்ணிக் கொள்கிறேன் ...
அதிகாலையில் எழுந்தாலும்
அவளை ஒரு முறை
பார்த்த பின்பே
மனது ஆறுதல் அடையும் ...
உச்சி மரத்து காகம் ஒன்று
கரைந்து மறைந்தது ...
பள்ளிக்கு செல்லும்
மாணவர் கூட்டம் கூட்டமாய்
வெள்ளைப் புறாக்களை போல
அழகாக போய் கொண்டிருந்தார்கள் ...
ஐயோ இன்னும்
அவள் வரவில்லையே ..
அவள் வரும் திசையை
பார்க்கிறேன் ....
காணவில்லை ....
யோசிக்கிறேன் ....
இன்று எங்கு சென்றிருப்பாள் ....
மனசுக்குள் எங்கோ ஒரு மூலையில்
மெலிதாய் ஒரு சோகம் எட்டி பார்த்தது ....
தினமும் என்னோடு பேசாமல்
அவள் போவதில்லை ...
ஆனால் இரண்டு வாரங்களாக
அவள் வராதது
என்னவோ போல் இருந்தது ...
எங்கே அந்த தேவதை ....
தேடுகிறேன் காணவில்லை ...
அதோ அதோ அவள் தந்தை ....
என்னை கடந்து செல்கிறார்
அவர் முகத்தில் என்றும் போல் அமைதி ...
அவள் தங்கை அங்கும் இங்குமாய்
ஓடிக் கொண்டிருந்தாள் ....
அவள் வீட்டு வாசலில் ஒரே கூட்டம்
ஆரவாரமாய் எதோ பேசுகிறார்கள் ....
எனக்கு ஒரே படபடப்பு ...
உடலில் எதோ சுரீர் என்றது ...
ஐயோ இவனா ..? அதிர்கின்றேன் ...
அதற்குள் இவனுக்கு நேரமாகிட்டுதா ...?
ஐயோ இன்னும் அவளை காணோமே ...
மனசு அங்கலாய்த்தது ....
அவனும் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான் ...
பயத்தால் அங்கும் இங்கும் தள்ளாடுகிறேன் ...
அவன் கண்களுக்கு படாமல்
மறைந்து கொள்ள எத்தனிக்கிறேன் ...
இனியாவது அவள் வருவாளா ....
பார்க்கின்றேன் இல்லை அவளை காணவில்லை ...
தூரத்தில் அவன் வந்து கொண்டிருந்தான்
இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
அவன் வந்து விடுவான் ...
அவளை பார்க்காமலே
போய் விட நேருமோ...
மனது துடிக்கிறது ....
அதோ அவள் வாசல் கதவு திறக்கப் படுகிறது ...
கூட்டமாய் அவள் தோழிகள் ...
அடுத்து அவள் வருகிறாள்
ஆஹா என்ன அழகு ..
முன்பை விட இன்னும் அழகாய் தெரிந்தாள்...
கொஞ்சம் வளர்ந்தவளாய்...
மெதுவாய் அசைந்து வருகின்றாள் ..
முகத்தில் வெட்கத்தின் ஒளி பிரகாசமாய் ....
புரிந்தது மாற்றத்தின் காரணம் ...
தங்க ரதமாய் அசைந்து வந்துக் கொண்டிருந்தாள் ...
சிரிப்பொலி கோயில் மணியாய்
ஒலித்துக் கொண்டிருந்தது ...
இதோ என்னருகில் வந்து விட்டாள்...
என்னை கடக்கும் முன்
சற்று நின்றவள் ...
என்னை பார்த்து சிரித்தாள் ...
குனிந்து என்னை பார்த்தவள் ...
அவள் தோழிகள் கூப்பிட ஓடுகிறாள் ...
என்னை திரும்பி பார்த்துக் கொண்டே ...
அதற்குள் அவன் வந்து விட்டான் ...
என்னை கோபமாய் பார்க்கிறான் ...
நான் பயத்தில் நடுங்குகிறேன் ....
எனக்கு நேரே வந்து நின்றவனை
நேர் நோக்க முடியவில்லை ....
.தூரத்தில் செல்லும் அவளின்
கொலுசொலி கேட்டவண்ணம் இருக்க ...
நான் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துக் கொண்டிருந்தேன் ..
அவளின் சிரிப்பொலியும்
காலின் கொலுசொலியும்
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்து போவதை போல்
நானும் இதோ கொஞ்சம் கொஞ்சமாய் ...
சாகின்றேன் ....
எரிகிறது உடல் இன்னும் ஒரு நொடி
என் முடிவு வந்து விடும் ...
அவள் போன திசையில் பார்க்கின்றேன் ...
தொலைவில் சிறு புள்ளியாய்
அவளும் காணாமல் போகின்றாள் ...
ஆதவனும் அருகருகே வருகின்றான் ...
நானும் தொலைந்தே போகின்றேன் ...
அப்பொழுதும் ...
அவசரமாய் அவள் சொன்ன கவிதை
மனசில் வந்து மறைகிறது ...
'' ஊசி தனில் நூலை கோர்த்து
நூலினிலே உன்னை சேர்த்து
கழுத்தில் மாட்ட இஷ்டம் இல்லை ...
பள பளக்கும் உன் உடலை
சிடு சிடுக்கும் ஊசியினால்
குத்தி விட இஷ்டமில்லை ..
பிழைத்துப் போ பனித்துளியே ...
நாளையும் நீ அதிகாலையில்
வந்து விடு பனித்துளியே ...!!!
சிந்து சிவசங்கர் .
No comments:
Post a Comment