பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

நான் உயிருள்ள ஜீவன்

17.நான் உயிருள்ள ஜீவன்

வீட்டில் ஒரே ஆரவாரம்
அவன் இன்று வெளிநாடு போகிறானாம் ...
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே
இதே பேச்சு தான் ...
அவன் போவது உறுதி ஆனதுடன்
என்னிடம் ஓடி வந்தான் ..
ஏய் உனக்கு ஒன்று தெரியுமா ..?
நான் வெளிநாட்டுக்கு போக போறேன் என்றான் .
தலையை அசைத்தேன்
இனிமேல் உன்னோட பேச முடியாதே
இருந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்றான் ..
கவலையாய் இருந்தது ...
சோகமாய் அவனை பார்த்தேன்
அவன் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது
அவன் சொன்னான் கவலை படாதே
நான் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும்
உனக்காக ஒரு வரி இருக்கும் என்றான் ...
அதற்கும் தலையை அசைத்தேன் ..
மெதுவாய் புன்னகைத்தவன்
என்னை இறுக கட்டி அணைத்துக் கொண்டான் ...
துக்க மிகுதியில் உயிரே போவது போல் உணர்ந்தேன் நான் ...
அவன் தலையை மெதுவாய் கோதி விட்டேன் ...
போய் வரவா என்றவன் வீட்டுக்குள் சென்றான் ...
இதோ தோளில் பையுடன் புறப்பட்டுவிட்டான்
வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றவன்
என்னை ஒரு முறை திரும்பி பார்த்தான் ...
அவன் விழிகளில் இத்தனை சோகம் இன்றைக்கு ...
எண்ணிக் கொண்டேன் நான் ...
சோகமாய் அவன் என்னை பார்த்து தலை அசைத்தான் ..
அந்த தலை அசைப்பு போய் வரவா என்பது போல் இருந்தது
பதிலுக்கு போய் வா என்பது போலவே நானும்
தலை அசைத்தேன் கணத்த மனதுடன் ...
கண்ணீர் கண்களில் தத்தளிக்க எல்லோருக்கும்
சொல்லிக் கொண்டு புறப்படுகிறான் ..
தொலை தூரப் பாதையில் அவன் உருவம்
சிறு புள்ளியாய் மறையும் வரை
கையசைத்து கொண்டே இருந்தேன்
அவனையே பார்த்தபடி
அவனும் கையசைத்த படியே
சென்று மறைந்தான் ...
என்னால் ஜீரணிக்க முடியவில்லை
அவன் என்னருகில் இல்லை என்பதை
அவனையே நினைத்தபடி இருந்தேன் அன்று நாள் பூராவும் ..
பொழுது சாய்ந்ததும் ஊரே அமைதியாய் இருந்தது
அவன் நினைவு என்னை ஆட்கொண்டதால்
சிந்தனையில் மூழ்கி இருந்தேன் நான் ...
அவனுக்கும் அவன் பெற்றோருக்கும் அடிக்கடி
சின்னச் சின்னச் சண்டைகள் வரும்
அவன் கோபித்து கொண்டு என்னிடம் வருவான்
ஏனோ தெரியவில்லை அவனுக்கும் என்னை
ரொம்ப பிடிக்கும் எனக்கும் தான் அவனை பிடிக்கும் ...
எல்லா பிரச்சினைகளையும் என்னிடம் சொல்லுவான் ..
நான் மௌனமாய் இருப்பேன் ...
ஏன் என்றால் என்னால் தான் பேச முடியாதே .
கேட்டு கொண்டே அவன் தலையை கோதி விடுவேன் ...
பேச முடியாத ஊமை நான்
ஆனாலும் அவன் என்னோடு அடிக்கடி பேசுவான்
நான் புரிந்து கொள்வேன் ....
அவன் ஆசைகள் சந்தோஷங்கள் துக்கங்கள்
எல்லாமே என்னிடம் சொல்லி இருக்கிறான்
ஏனோ தெரிய வில்லை அவன் இன்று போக போறதை சொன்னதும்
எனக்குள் இந்த மாற்றம் ... ஏன் என்று புரியவில்லை ...
எனக்கு தேவையானவற்றை நான் கேட்காமலே
சரியான நேரத்துக்கு எனக்கு தந்து விடுவான்
என்னை பார்க்காமால் அவனால் இருக்கவே முடியாது
எனக்கும் ஒரு நாள் கூட அவனை பார்க்காமல் இருக்கவே முடியாது ...
இப்படி தான் ஒரு நாள் அவன் என்னை தேடி வந்தான்
வந்தவன் என்னருகில் அமர்ந்து கொண்டு சொன்னான்
ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா ...
உன்னை பார்க்கலைனா என்னால தூங்கவே முடியலை என்றான் ...
நான் திடுக்கிட்டு அவனை பார்த்தேன் ...
அவன் பார்த்த பார்வையில் பாசம் தெரிந்தது அன்பு இருந்தது ...
நான் உருகி போனேன் ... அன்போடு அவனை பார்த்தேன் ...
அவன் அன்று பார்த்த பார்வை இன்றும் என்னால்
மறக்கவே முடியவில்லை ....
சில நேரங்களில் அவனை காணவில்லை என்றதும்
அவனது அம்மாவுக்கு தெரியும்
அவன் என்னோடு இருக்கிறான் என்று
சத்தமாய் கூப்பிடுவாள் அங்கே என்ன செய்றாய் என்று ...
அவன் எழுந்து ஓடுவான் ...
ஒன்றொன்றாய் நினைவுக்கு வந்து வந்து மறைந்தது ...
அவன் வெளிநாடு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது .
அவன் அம்மாவை விட நான் தான் அவன் கடிதத்தை
எதிர்ப்பார்த்து காத்திருந்தேன் ....
அன்று தபால் காரன் வந்தான் ...
எனக்கோ ஒரே சந்தோசம்
எல்லோரும் கடிதத்தை பிரித்து படிக்க
எனது பெயர் கேட்குதா என்று கேட்டுக்கொண்டே இருந்தேன்
ஆம் அவன் சொன்னது சரி தான்
எல்லோரையும் சுகம் கேட்டதா அவன் எழுதிய கடிதத்தில்
என்னையும் கேட்டு எழுதி இருந்தான்
அதை படித்ததும் எல்லோரும் சிரித்தார்கள் ...
ஆனால் எனக்கோ இன்பம் பாதி துன்பம் பாதி ...
அவன் இன்னும் என்னை மறக்கவில்லை
சந்தோஷமாய் உணர்ந்தேன் ....
மெலிதாய் வீசும் தென்றல் காற்றில்
அவன் பேசிய வார்த்தைகள்
ஒவ்வொன்றும் என் மனதில் வந்து போனது ...
ஒரு வருடம் ஓடி போனதே தெரியவில்லை ..
அந்த ஒரு வருட காலத்துக்குள்
அவனின் கடிதங்களுக்காக ஏங்கினது
அவன் நினைவுகளோடு வாழ்ந்தது
எல்லாமே சுகமான சுமைகளாய் இருந்தது...
திடீரென ஒரு நாள் பெரும் சத்தம்
எதோ விழுந்தது போல் இருந்தது ...
ஒரு கணம் ஊரே அதிர்ந்து போனது
சற்று நேரத்துக்கெல்லாம் ஆள் ஆளுக்கு
ஒவ்வொரு பையுடன் சைக்கிள்களை
உருட்டிக் கொண்டு எங்கோ போகிறார்கள் ..
அவர்களுடன் நடக்க நானும் எத்தனிக்கின்றேன் ..
முடியவில்லை .. என்னால் தான் நடக்கவும் முடியாதே ...
மெல்ல நகர முயற்சிக்கிறேன் ..
என் உடம்பு வலித்தது ...
திரும்பி பார்கிறேன் என் ஒரு பக்க உடம்பு எரிந்து
கருகிப் போய் இருந்தது ....
வலி தாங்க முடியவில்லை ..
கத்துறேன் கதறுகிறேன் எல்லோரும் ஓடுகிறார்கள் ...
யாருமே எனக்கு செவி மடுக்கவில்லை ...
துடித்து போகிறேன் ...
ஒரு இரவுக்குள் ஊரே மாறி போய் இருந்தது ...
யாருமே ஊரில் இல்லை ..
காக்கா குருவி கூட இடம் பெயர்ந்துவிட்டது ...
திடீரென்று தனித்து விட்டதாய் உணர்கிறேன் ...
வீட்டிலும் யாரும் இல்லை ..
அவன் கடிதம் வருகிறதா இல்லையா அறிய முடியவில்லை ...
கலங்கிப் போய் விட்டேன் ...
தினம் தினம் பாதி உடலோடு
காயப்பட்ட மனசோடும்
காத்திருந்தேன் யாரும் வரவில்லை ...
அதிகாலையில் சூரியன் ...
மாலையில் சந்திரன் ...
இடைவிடாது உரசும் காற்று ..
இவைகள் மட்டுமே என்னை பார்த்து செல்லும் ...
சிறிது சிறிதாய் நான் செத்துக் கொண்டிருந்தேன் ...
எல்லோருக்கும் உபயோகமாய் இருந்த நான்
இன்று யாரும் அற்ற அனாதையாய் ..
தனித்து நிற்கின்றேன் ....
என்னையும் ஒரு ஜீவனாய் மதித்தவன்
என்னவானான் ? ஊகிக்க முடியவில்லை ...
திடீரென பேச்சு குரல் கேட்டு பார்க்கிறேன் ...
வீட்டில் எல்லோரும் வந்து இருந்தார்கள் ...
கொஞ்சமாய் கூட்டம் ..
என்னவா இருக்கும் ..
யாரோ சொல்கிறார்கள்
பெரியவர் சாக போறாராம்
சொந்த வீட்டில் சாக இஷ்டப்பட்டார் போல ..
சோகமாய் இருந்தது ...
கொஞ்சம் சந்தோசம் எட்டி பார்த்தது ...
அவன் வருவானோ ...ஆமாம் வருவான் எல்லோரும் சொல்கிறார்கள்
இரண்டே நாள் தான் ..
பெரியவர் இறப்பை தழுவ
உறவுகள் அவன் வரவை எதிர் பார்த்து காத்திருக்க
நானும் ஆவலாய் இருந்தேன் ...
அந்த ஆவலும் சந்தோஷமும் நீடிக்கவில்லை
என் மேல் எதோ அடிவிள .. பார்க்கிறேன்
யாரோ என்னை வெட்டுகிறார்கள் ..
துவண்டு போகிறேன் அய்யோ ..
வீடு முற்றத்தில் வாகன சத்தம்
அவன் வந்து விட்டான் ..
மெதுவாய் கையை உயர்த்தி அசைக்கிறேன் ...
அவன் என்னை பார்க்கவில்லை
ஓடுகிறான் வீட்டுக்குள் ..
பாவம் அவனுக்கு அவன் தந்தையின் இழப்பு ...
அவனின் கதறலை கண்டது என் வலி மறைந்து போனது ..
அவன் தந்தை உடலை தூக்குகிறார்கள் ..
நானும் அத்தோடு செத்துக் கொண்டிருக்கிறேன் ...
சுடலையில் பெரியவர் உடலுக்கு மேல்
வெட்டப் பட்ட நான் அடுக்கி வைக்கப் படுகிறேன் ...
இதோ கொழுந்து விட்டு எரிகிறேன் ...
பிரேதமும் நானும் ஒன்றாய் எரிகின்றோம் ...
சாகும் தருணத்தில் அவன் முகத்தை பார்க்கின்றேன்
சோகமே உருவாய் ....
அவன் எனக்காகவே அழுவதை நினைத்துக் கொண்டு
முற்றும் முழுதாய் சாம்பலாகிறேன் ...
காற்றோடு காற்றாய் கலந்து விட்ட நான்
வாழ்ந்த இடத்தை போய் பார்க்கிறேன் ...
பெரும் சத்தமாய் அவன் குரல் ...
இந்த மரத்தையா வெட்டினீங்க ?
அய்யோ முதலே எனக்கு தெரியாம போச்சே ...
அம்மா சொல்கிறாள் இல்லைடா தம்பி
செல் விழுந்து அந்த மரம் பாதி பட்டு போய் இருந்தது.
அதான் வெட்டி சாய்க்க சொன்னேன் ...
அவன் கண்களில் கண்ணீரை கண்டு வியக்கின்றேன் ...
இவன் ஒரு மரமண்டை அம்மா சொல்கிறாள்
அட கடவுளே முட்டாளுக்கு உதாரணம் நானா
நினைத்து கொள்கிறேன் ...
கடிதத்திலும் கேட்டு கேட்டு எழுதினாய் தெரியும்ட ...
சரி விடு அதான் வெட்டியாசே ..
இல்லைமா இந்த மரம் கூட எனக்கு தாய் மடி போல தான்
அவன் உருக்கமாய் சொன்னான் ...
அவனின் அந்த வசங்களை கேட்டபடியே
நான் காற்றோடு கலக்கின்றேன் ....
தொட்டிலுக்கும் நான் சுடலைக்கும் நான்
வாழ் நாளெல்லாம் கால் கடுக்க நின்றேனே
ஏன் என்று கேட்டார்களா ?
கேட்காமலே நிழல் கொடுத்தேனே
ஏன் என்று கேட்டார்களா ...?
மலர் கொடுத்து கனி கொடுத்து
உயிர் வரை கொடுத்தேனே சிறிதும் தயங்காமல்
நான் வெறும் மரம் தானா
மரம் என்று சொன்னால் வெறும் மரம் மட்டுமல்ல
உயிருள்ள ஜீவன்....
உருக்குலைந்து வெட்டப்பட்டு தறிக்கப்பட்டு
கிளைகள் வேறு , இலைகள் வேறு , வேர்கள் வேறு என்று
தனி தனியாய் பிரிக்கப் பட்டு
சாகடிக்கப் பட்டுவிட்டேன்...
காற்றோடு கலந்து விட்டேன் .....
போகிறேன் வாராத ஊருக்கு ....!!!


சிந்து சிவசங்கர்.

No comments:

Post a Comment