பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

கல்லறைக்குள் புதைத்ததினால்

24.கல்லறைக்குள் புதைத்ததினால்...!!!

கனவினிலே மிதந்திடுவார்
கற்பனையில் மூழ்கிடுவார்
கடிதம் பல வரைந்திடுவார்
கன்னி வேட்டை செய்திடுவாரே ...
கவிதை எழுதி கொடுத்திடுவார்
கரம் பிடிப்போம் என்றிடுவார்
கல்யாணம் எனும் பெயரில்
கரகாட்டம் ஆடி நிற்ப்பாரே ...
கல கலப்பாய் வாழ்ந்திடுவார்
கவலைகளை மறந்திருப்பார்
கம்மல் வாங்கி அவளுக்கும்
கடிகாரம் அவனுக்கும் பரிசளித்து கொள்வாரே ....
கண்மணி என்று கொஞ்சிடுவார்
கணவன் அன்பில் தன்னை மறப்பாள்
கடுகளவும் அவன் அன்பு
கரையாமல் இருக்க வைப்பாளே ...
கருவொன்று தரித்ததென்பார்
கர்பிணி தான் என்றுரைப்பாள்
களிப்புடனே கவிதையவளை
கசங்காமல் பார்த்திடுவாரே ...
கண்டு வந்த கனவு படி
கண்ணனவன் பிறந்து விட
கதர் துணியில் தொட்டிலொன்று
கட்டி அதில் தூங்க வைப்பாரே ...
கஞ்சிக்கு வரும் ஏழை பெண்ணுக்கு
கரி நாக்கு என்று சொல்லி
கன்னத்திலே கண்ணனுக்கு
கருப்பு பொட்டு வைத்திடுவாறே ...
கந்தன் கோவில் வாசலிலே
கணபதிக்கு விளக்கேற்றி ...
கற்பூரம் ஏற்றி செய்த நேர்த்தி
கடனை எல்லாம் முடித்து வைப்பாரே ...
கள்ளிப் பாலை குடித்து சாக
கலைவானியாய் பெண்ணொருத்தி
கந்தையன் மனைவிக்கு
கனிவுடனே பிறந்திடுவாளே...
கயவரெல்லாம் சொந்தமாவார்
கள்ளர் எல்லாம் உள்ளிருப்பார்
கபடம் இல்லா நல் உறவுகள்
கட்டை தாண்டி வெளியில் நிற்பாரே ...
கரும்பாக பேசிடுவார்
கரு நாகமாய் மாறிடுவார்
கழு மரத்தில் ஏற்றி சிலர்
கதை முடிக்க பார்த்திருப்பாரே ....
கழுதை மீது தாம் ஏறி
கடிவாளத்தை தேடிடுவார்
கற்கண்டை கண்டு விட்டால்
கட்டெறும்பாய் மாரிடுவாறே ....
கறவை மாடு பின் வளவில்
கறந்த பாலில் பாதி எடுத்து
கலந்து நீரை விற்றிருப்பார்
கன்றை பசியில் தவிக்க விட்டாரே ...
கலப்பை மாடு வயலினிலே
களை நடுவார் வரம்பினிலே
கச்சை கட்டிய வயல் காரர்
கத்தி வேலை செய்ய வைப்பாரே ...
கல்லூரியில் கூட படித்த
கட்டழகியை பார்த்தும் கூட
கதைக்காமல் வெட்கத்திலே
கடை தெருவில் மறைந்து கொள்வாரே ...
கத்தரிக்காய் தோட்டத்திலே
கரப்புக்குள்ளே கோழி குஞ்சு
கடுவன் பூனை அடுக்கலையில்
கலசத்திலே கறந்த பாலென்று நினைத்திருப்பாரே ...
கவர்ந்து கண்ணை பறிக்கும் உடை
கவர்ச்சியாக உடுத்தும் அவளை
கடைக்கண்ணால் பார்த்து பயத்தில்
கட்டியவளை தேடி நிற்ப்பாரே ...
கஞ்ச தனத்தை காட்டும் கணவன்
கல்லாவில் பணம் பதுக்கி
கண்டவளுக்கு செலவிடுவதை
கண்டித்து கோபம் கொள்வாளே ...
கருவேலம் பட்டை வாசம்
கட்டறுத்து பரவுவதாய்
கலகமென்றால் குடும்பத்திலே பலர்
கரகோசமாய் சிரித்திடுவாரே ...
கனன்று கண்கள் கணவன் கத்த
கயல்விழியவள் காளியாக
கட கடக்கும் சட்டிப் பானை
கதவிடுக்கில் வெளியில் செல்லுமே ....
கசியும் நீரை கண்ணில் தேக்கி
கலவரமாய் பார்க்கும் சேய்கள்
கலக்கமதை பார்க்காமல்
கண்டபடி பேசி தீர்ப்பாரே ...
கசாப்பு கடை பக்கத்திலே
கடாவை விலை பேசி விட்டு
கள்ளு கடை வாசலிலே
கல்லின் மேல் அமர்ந்திருப்பாரே ....
கலியுகத்து காதலிலே
கண்ணடித்து காதலென்று
கங்கணங்கள் கட்டிக் கொண்டு
கஷ்டம் இன்றி சேர்ந்து கொள்வாரே ....
களவானி கூட்டத்திலே
கற்புண்டோ காதலுக்கே
கருமம் தனை முடித்து கொண்டு
கருவேப்பிலை ஆக்கிடுவாறே ...
கனிந்து இருந்த காதல் சாக
கருகி விட்ட வாழ்வை எண்ணி
கம்பளியால் மூடிக் கொண்டு
கவிழ்ந்து அவளும் படுத்திருப்பாளே...
கடப்பாரைக்கும் கலங்காத
கருங்காளியாய் அவள் கணவனும்
கஞ்சா விற்கும் இடங்களையே
கதியென்று கிடப்பானே ...
கடுக்கனையும் விற்று அவள்
கடக் குட்டிக்கு பால் கொடுப்பாள்
கச்சிதமென நினைத்த வாழ்வை
கத்தரித்துச் சென்றிடுவாளே ....
கட்டு மரத்தில் அவள் சென்றிட
கண்டுக்காமல் அவனும் போக
கலை இழந்த பிள்ளைகளும்
கதறி அழுது புலம்புவாரே ...
கப்பலொன்று புயல் காற்றுக்கு
கடல் நடுவே தவிப்பது போல்
கஷ்டங்களை சொல்லாமல்
கண்ணீரை சிந்தி நிற்பாரே ...
கப்பம் இன்றி வாங்கி வரும்
கமலம் போன்ற புரிந்துணர்வை
கருத்தோடு பார்க்காமல்
கல்லறைக்குள் புதைத்ததினாலே ...!!!

தினம் தினம் விழுந்து தினம் தினம் உருகி

23.தினம் தினம் விழுந்து தினம் தினம் உருகி...!!!

எப்பொழுது விடியும்
எப்பொழுது விடியும் என
காத்திருக்கின்றது
கூவும் சேவல்கள் ...
தூரத்தில் பசுக்கன்று
அம்மா என்று அழும் சத்தம் ...
எல்லோர் வீடுகளிலும்
அதிகாலையின் பரபரப்பு ...
அவள் பெயர் தேவி
இப்படி தான் அவள் தோழிகள்
அவளை அழைத்தார்கள் ...
அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் ...
எனக்கும் தான் ...
தினமும் என்னை தேடி வரும்
அவளை தேடுகிறேன் ...
இரண்டு வாரங்களாக
அவளை காணவில்லை ....
நேற்று அவள் தோழிகள்
உரையாடியதை ஒட்டுகேட்டேன் ..
அவள் இன்றைக்கு வருவாளாம் ..
அது தான் அவளுக்காக
இந்த இனிய காத்திருப்பு ...
ஆனால் அவளை இன்னும் காணவில்லை ...
ஏன் இன்னும் அவள் வரவில்லை
ஏக்கத்துடன் பார்க்கின்றேன் ...
காணவில்லை ...
எப்பவும் இந்த நேரம்
வந்து விடுவாளே ...
அவள் வர வேண்டும் ...
கடவுளே ...
என்று எண்ணிக் கொள்கிறேன் ...
அதிகாலையில் எழுந்தாலும்
அவளை ஒரு முறை
பார்த்த பின்பே
மனது ஆறுதல் அடையும் ...
உச்சி மரத்து காகம் ஒன்று
கரைந்து மறைந்தது ...
பள்ளிக்கு செல்லும்
மாணவர் கூட்டம் கூட்டமாய்
வெள்ளைப் புறாக்களை போல
அழகாக போய் கொண்டிருந்தார்கள் ...
ஐயோ இன்னும்
அவள் வரவில்லையே ..
அவள் வரும் திசையை
பார்க்கிறேன் ....
காணவில்லை ....
யோசிக்கிறேன் ....
இன்று எங்கு சென்றிருப்பாள் ....
மனசுக்குள் எங்கோ ஒரு மூலையில்
மெலிதாய் ஒரு சோகம் எட்டி பார்த்தது ....
தினமும் என்னோடு பேசாமல்
அவள் போவதில்லை ...
ஆனால் இரண்டு வாரங்களாக
அவள் வராதது
என்னவோ போல் இருந்தது ...
எங்கே அந்த தேவதை ....
தேடுகிறேன் காணவில்லை ...
அதோ அதோ அவள் தந்தை ....
என்னை கடந்து செல்கிறார்
அவர் முகத்தில் என்றும் போல் அமைதி ...
அவள் தங்கை அங்கும் இங்குமாய்
ஓடிக் கொண்டிருந்தாள் ....
அவள் வீட்டு வாசலில் ஒரே கூட்டம்
ஆரவாரமாய் எதோ பேசுகிறார்கள் ....
எனக்கு ஒரே படபடப்பு ...
உடலில் எதோ சுரீர் என்றது ...
ஐயோ இவனா ..? அதிர்கின்றேன் ...
அதற்குள் இவனுக்கு நேரமாகிட்டுதா ...?
ஐயோ இன்னும் அவளை காணோமே ...
மனசு அங்கலாய்த்தது ....
அவனும் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான் ...
பயத்தால் அங்கும் இங்கும் தள்ளாடுகிறேன் ...
அவன் கண்களுக்கு படாமல்
மறைந்து கொள்ள எத்தனிக்கிறேன் ...
இனியாவது அவள் வருவாளா ....
பார்க்கின்றேன் இல்லை அவளை காணவில்லை ...
தூரத்தில் அவன் வந்து கொண்டிருந்தான்
இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
அவன் வந்து விடுவான் ...
அவளை பார்க்காமலே
போய் விட நேருமோ...
மனது துடிக்கிறது ....
அதோ அவள் வாசல் கதவு திறக்கப் படுகிறது ...
கூட்டமாய் அவள் தோழிகள் ...
அடுத்து அவள் வருகிறாள்
ஆஹா என்ன அழகு ..
முன்பை விட இன்னும் அழகாய் தெரிந்தாள்...
கொஞ்சம் வளர்ந்தவளாய்...
மெதுவாய் அசைந்து வருகின்றாள் ..
முகத்தில் வெட்கத்தின் ஒளி பிரகாசமாய் ....
புரிந்தது மாற்றத்தின் காரணம் ...
தங்க ரதமாய் அசைந்து வந்துக் கொண்டிருந்தாள் ...
சிரிப்பொலி கோயில் மணியாய்
ஒலித்துக் கொண்டிருந்தது ...
இதோ என்னருகில் வந்து விட்டாள்...
என்னை கடக்கும் முன்
சற்று நின்றவள் ...
என்னை பார்த்து சிரித்தாள் ...
குனிந்து என்னை பார்த்தவள் ...
அவள் தோழிகள் கூப்பிட ஓடுகிறாள் ...
என்னை திரும்பி பார்த்துக் கொண்டே ...
அதற்குள் அவன் வந்து விட்டான் ...
என்னை கோபமாய் பார்க்கிறான் ...
நான் பயத்தில் நடுங்குகிறேன் ....
எனக்கு நேரே வந்து நின்றவனை
நேர் நோக்க முடியவில்லை ....
.தூரத்தில் செல்லும் அவளின்
கொலுசொலி கேட்டவண்ணம் இருக்க ...
நான் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துக் கொண்டிருந்தேன் ..
அவளின் சிரிப்பொலியும்
காலின் கொலுசொலியும்
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்து போவதை போல்
நானும் இதோ கொஞ்சம் கொஞ்சமாய் ...
சாகின்றேன் ....
எரிகிறது உடல் இன்னும் ஒரு நொடி
என் முடிவு வந்து விடும் ...
அவள் போன திசையில் பார்க்கின்றேன் ...
தொலைவில் சிறு புள்ளியாய்
அவளும் காணாமல் போகின்றாள் ...
ஆதவனும் அருகருகே வருகின்றான் ...
நானும் தொலைந்தே போகின்றேன் ...
அப்பொழுதும் ...
அவசரமாய் அவள் சொன்ன கவிதை
மனசில் வந்து மறைகிறது ...
'' ஊசி தனில் நூலை கோர்த்து
நூலினிலே உன்னை சேர்த்து
கழுத்தில் மாட்ட இஷ்டம் இல்லை ...
பள பளக்கும் உன் உடலை
சிடு சிடுக்கும் ஊசியினால்
குத்தி விட இஷ்டமில்லை ..
பிழைத்துப் போ பனித்துளியே ...
நாளையும் நீ அதிகாலையில்
வந்து விடு பனித்துளியே ...!!!

சிந்து சிவசங்கர் .

தொலைந்து போன புன்னகையுடன் அவனும் நானும்

22.தொலைந்து போன புன்னகையுடன் அவனும் நானும் ...!!!

தள்ளி தள்ளி ஒன்றொன்றாய் மரங்கள்
பூக்கள் நிறைய பூத்து குலுங்கியது ..
யாரும் பறிப்பார் இல்லை ..
என் வீட்டு தோட்டத்து பூக்களை
பறிக்க யாரும் வருவதில்லை ...
நான் ஒதுக்கபட்டவள்....
அவரவர்க்கு தேவை ஏற்படின்
என்னை தேடுவார்கள் ...
இல்லையேல் அனாதையாய்
இருக்கும் நிலை தான் ...
ஊருக்கு ஒதுக்கு புறமாய்
இருந்த என் வீட்டை எட்டிப் பார்க்க கூட
யாரும் விரும்புவதில்லை ....
என் பிறப்பை எண்ணி
கடவுளை நொந்துக் கொள்வேன் ..
எனக்கு ஏன் இந்த
ஈனப் பிறப்பை கொடுத்தான் ?
யோசிக்கையில் அவனின் இருமல் சத்தம் ....
இருள் சூழ்ந்து இருந்தது ....
தொலைவில் அவன் வருவது தெரிந்தது ...
போர்த்தி இருந்த போர்வையை
மீண்டும் உதறி போர்த்திக் கொண்டு
வந்துக் கொண்டிருந்தான் ...
அவன் மேல் எனக்கு கொள்ளை பிரியம் ...
நல்லவன் ... ... நாதியற்றவன் ...
அவனுக்கு எல்லாமே நான் தான் ..
என்னை விட்டால் அவனுக்கு என்று
துணை யாருமே இல்லை ...
அதனாலோ என்னவோ
அவன் தனக்குள்ளே பேசிக்கொள்வதை
எல்லாமே நான் கேட்டுக் கொண்டிருப்பேன் ...
என் வீட்டில் அவனும் அப்பப்போது
சற்று நேரம் கண்ணயர்வான்...
பாவம் அவன் என எண்ணிக் கொண்டேன் ...
ஆனால் என்னால் தான் அவனுக்கு
ஒரு நேர சோறு கூட போட முடியவில்லை ...
எதோ சாப்பிடுகிறான் ...வாழ்கிறான் ...
எனக்கு துணையாய் இருப்பவனும்
இவன் மட்டுமே ....
அவனை நான் நேசிக்கிறேன் ....
எப்பவும் என்னோடு இருக்கும் ஒரே ஜீவன் அவன் ...
பணக்காரன் ஏழை என்று பிரித்து பார்த்திடுவார் ...
அவனுக்கும் எனக்கும் அந்த கஷ்டமில்லை ...
நாங்கள் பணக்காரரும் இல்லை
ஏழையும் இல்லை ...
பரந்த மனசு அவனுக்கு ...
அவன் மூட்டிய நெருப்பில் இருந்து
கனன்ற நெருப்புகள் வானத்திலே மிதந்து
கும்மிருட்டில் நட்சத்திரங்களாய் கண் சிமிட்டியது ...
அவன் கண்ணிலே தெரிந்த சோகம் வலி
என்னை ஏதோ செய்தது ...
குப்பையாய் வளர்ந்து கிடந்த
தாடிக்கு பின்னால் ஒழிந்திருக்கும்...
அந்த நிலவு யாரோ ....?
நினைக்கையில் மனசு வலித்தது ....
ஆனால் ஏதோ ஒரு பந்தம்
அவனுக்கும் எனக்கும்
அதனால் தானோ என்னவோ
அவன் எப்பவும் என்னை விட்டு பிரியாமல்
என்னோடு தங்கி விட்டான் ....
அவன் சொந்த கதையை
என்னால் கேட்க முடியாதே ...
ஊருக்குள் பலருக்கு அவனை கண்டாலே பயம் ...
அவன் முகத்தில் சிரிப்பை காண்பதே அரிது ..
யாரிடமும் முகம் கொடுத்து பேசாத அவன் கூட
சில நேரம் சத்தமாய் பாடுவான் ...
அவனது குரல் அவ்வளவு இனிமையாய் இருக்கும் ...
அவனின் பாட்டு கேட்டால் என் வீட்டில் உள்ளவர்கள்
கண்ணுறங்கி விடுவார்கள் ...
சுகமான சில நினைவுகளால்
கனவுகளில் மிதப்பவர்கள்
நிஜமாகவே மிதப்பார்கள்
காற்றிலே நடப்பார்கள் ...
உறங்கி விட்டால்
நடப்பவைகள் தெரியவா போகின்றது
பாவம் அவர்கள் ....
இன்று புதிதாய் ஒரு பழைய லுங்கி அணிந்திருந்தான்
யாரோ கொடுத்திருக்கிறார்கள் ....
சிக்கு பிடித்த தலை முடி முனிவராய் தோற்றமளிக்க
அவன் செயல்களினால் கை கூப்ப தோணும் ...
செய்த பாவங்களை எல்லாம் போக்குவதற்க்கு
புண்ணியங்கள் செய்பவர்கள் மத்தியில்
இவன் செய்யும் புண்ணியத்தில்
இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும்
இவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் ....
கிடைக்க வேண்டும் .. இல்லையேல்
கடவுள் என்றொருவன் எதற்க்கு ...?
மௌனமாய் நானும் கடவுளை மன்றாடுகிறேன்
அவனுக்காக ...
இல்லாத இடங்களில் அன்பை தேடி ..
இருக்கும் இடங்களை தொலைப்பவரும்
இங்கு உண்டு ....
மித மிஞ்சிய கோபத்தினால்
கண்ணை மறைத்து
தப்புகள் செய்தவரும் இங்கு உண்டு ...
தப்பென தெரிந்தே தப்பு செய்தவனும் இங்கு உண்டு ...
மேளங்கள் தாளங்களோடு வருபவரும்
எதுவுமே இன்றி வருபவனும்
அவனிடத்தில் ஒரே தராதரத்தில்
மதிப்பிட படுகின்றன ...
ஊருக்காக உழைப்பவர்களில்
இவன் தான் உசத்தி ...
தேவதைகள் வானிருந்து வருவதில்லை
தெய்வங்களே இவன் ரூபத்தில் வருகின்றன ...
இதற்க்கு மேல் அவனை புகழ
வார்த்தைகள் வருகுதில்லை நினைவுக்கு ...
அவனுக்கும் எனக்குமான நெருக்கம்
வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை ....
காதலோ .. பாசமோ.. நட்போ ... தெரியவில்லை
அதற்க்கெல்லாம் அப்பாற்பட்ட
பெயரே இல்லாத ஒரு வித உணர்வு ....
ஏதோ சத்தத்தில் திடுக்கிடுகிறேன் ...
நினைக்க முடியாத தருணத்திலே
அவன் கடுமையாய் இருமுகிறான் ..
அவன் கை கால்கள் அடித்துக் கொண்டன...
தூரத்தில் யாரோ போகிறார்கள் ..
அவனை கண்டும் காணாதது போல ....
என் குரல் அவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லை ...
ஆடி அடங்கி விட்டது அவன் உயிர் ....
ஸ்தம்பித்து போகிறேன் நான் ...
என் மடியில் அவனை ஏந்திக் கொண்டேன் ...
எப்பவுமே சிரிக்காத அவன் இதழ்களில்
மென்மையான புன்னகை ஒன்று
இழையோடி இருக்க கண்டு வியந்தேன் ...
பாவ பட்ட உலகை விட்டு சென்றதனால்
சிரித்தானோ ....?
மூளை கெட்ட மனிதர்களை நினைத்ததினால் சிரித்தானோ ?
அவன் பாடலை கேட்காத நிமிடங்களை நினைத்து கூட
பார்க்க முடியவில்லை ...
அணைத்து கொண்டேன் அவனை வாஞ்சையுடன் ...
கடவுளின் சித்தத்தில் அவனும் நானும்
புண்ணியம் தான் செய்தோம் ...
என் வீடும் ஓர் அநாதை ஆச்சிரமம் தான் ...
உயிரற்று போக ஒதுக்கி வைக்கும்
உடல்களை தகனம் செய்து
நிம்மதியான நிரந்தரமான
உறக்கத்தில் ஆழ்த்தி விட்டவன் அவன் ...
அதற்க்கு இடம் கொடுப்பவள் நான் ...ஆம்
அவன் வெட்டியான் ... நான் சுடுகாடு ....
அவனுக்குண்டு மரணம் ... என் மடியில் கண்ணுறங்க ...
எனக்குண்டா மரணம் ...?
இருந்தால் நான் யார் மடியில் கண்ணுறங்க ?????
அப்போ நான் ஆதரவற்றவளா...?
ஐயோ இனி எனக்கு யார் உண்டு ...?
இதோடு நானும் ஒழிந்தாலென்ன..
எனக்கொரு அழிவு கிட்டாதா ...?
நினைக்கும் போதே தூரத்தில்
ஓர் உருவம் என்னை நோக்கி
வந்து கொண்டிருந்ததை பார்த்தேன் ..,
அதே போர்வை .. அதே கனன்ற கண்கள்
எதையோ பறிகொடுத்தவன் போன்ற தோற்றம் ...
அதே போர்வை ..... ஆள் மட்டும் வேறு ....
கடவுள் என் அழுகுரலை கேட்டு இருப்பார் போலும்
எனக்காக அனுப்பி வைத்தான்
இன்னொரு துணையை
புது வெட்டியான் வந்து விட்டான் ....
நிம்மதியான நிரந்தர நித்திரையை
மனிதர்களுக்கு கடைசி மரியாதையுடன்
இனி அவன் கையால் ...
நான் நிம்மதியாய் பெரு மூச்சொன்று விடுகின்றேன் ....
தொலைந்து போன புன்னகையுடன்
அவனும் நானும் மட்டும் இன்னும் தொலையாமல்....!!!

அவளும் நானும்

21.அவளும் நானும்...!!!

தூரத்து மலை முகடுகளில்
மோதிச் செல்லும் முகில் கூட்டங்களின்
இடையே தெரிந்தும் தெரியாமலும்
நீல வானம் அமைதியாய் ...!!!
இயற்கையை ரசித்தப் படி
பயணிக்கிறேன் சொந்த ஊருக்கு
நாளை காதலர் தினம்
நிச்சயம் சந்திப்பேன் அவளை
ஏற்கெனவே எடுத்த முடிவு தான்
ஏழு ஆண்டுகளுக்கு பின்
வரும் காதலர் தினத்தில்
அவளை சந்திப்பேன் என்பது ...
ஆண்டுகள் ஏழு போனது தெரியவில்லை
அதற்குள் எத்தினை சோகங்கள்
எத்தினை உறவுகள்
எத்தினை பிரிவுகள்
வெளி நாட்டுப் பணமும் தமிழரும்
என்றொரு புத்தகமே எழுதலாம்
அவளின் வாழ்க்கை வரலாற்றை வைத்து
இப்படி நான் அடிக்கடி எண்ணியதுண்டு ...
அரபு நாடுகளில் தெரியாத முகங்களின் நடுவில்
கஷ்ட பட்டு உழைச்சதெல்லாம்
பட்ட கடனுக்கு வட்டியாகவும்
தந்தையின் மருந்துகளாகவும்
உரு மாறி போனது ...
எல்லா கஷ்டமும் மறந்து போகும்
அவள் ஒருத்தியின் அன்பை எண்ணுகையில் ...
பாவம் அவள் எண்ணிக் கொண்டேன்
எப்பவும் அன்பு காட்ட மட்டுமே தெரியும் அவளுக்கு ...
மற்றவர் துன்பத்தை கண்டாலே மனம் இலகிடுவாள் ... !
அவள் ஒருத்தியை எண்ணி எண்ணியே
என் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டேன் ...
நான் வெளிநாடு செல்வது அறிந்த உடனே
சந்தோஷப் பட்டவளும் அவளே
துன்பப் பட்டவளும் அவளே
என் கஷ்டங்கள் தீருவதை எண்ணி
சந்தோஷப் பட்டாள்...
என்னை பிரிய நேரிடுவதை எண்ணி
கவலை பட்டாள் ....
அவளிடம் நான் சொன்னேன்
ஏழேவருடங்கள் தான் வந்து விடுவேன் ...
கண்களில் நிறைந்த கண்ணீர் துளிகளாய்
கன்னங்களை நனைக்க என்னையே
பார்த்துக் கொண்டிருந்தாள் ....
அடிக்கடி அவள் சிரிக்கையில்
கன்னத்தில் விழும் குழி ...
வரிசையான அவளின் பற்கள் ...
அவள் சேலை கட்டு கூட ஒரு அழகு தான் ...
அம்மா இறந்த நாள் அடக்க முடியாமல்
கதறி அழுத என்னை ஆதரவாய் அணைத்தவள் ...
உனக்காக தான் நான் இருக்கேனே ...
கவலை படாதே என்றாள்....
இப்படி தான் வெளிநாடு பயணத்தின் போது
நீர் ததும்பும் கண்களால்
நிமிர்ந்து பார்க்காமல் விடை கொடுத்தாள்
பிரிகையில் பற்றி இருந்த அவள் கைகளின் இறுக்கத்தில்
அறிந்தேன் அவளின் மன கஷ்டத்தையும்
பிரிவின் சோகத்தையும் ...
என் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு புறப்பட்டேன் ..
வாரம் தவறாமல் வரும் அவள் கடிதங்களுக்காக
ஏங்கி தவிக்கும் என் மனது ...
கடந்த பத்து மாத காலமாக
அவளின் கடிதங்களை காணவில்லை ...
இடை இடையே என் நண்பர்களின் கடிதங்களில்
வீட்டு விடயங்களையும் அவர்களின்
இடம் பெயர்வுகளையும் அறிய கூடியதாய் இருந்தது ....
நானும் எத்தனையோ கடிதம் அனுப்பியும் பலனில்லை
அவர்களின் கடிதங்களிலும் அவளை பற்றி
எந்த ஒரு வரியும் இல்லை ....
தந்தையுடனான தொலைபேசி உரையாடலில்
அவளை பற்றி கேட்கலாம் என்றாள்
அதற்கும் தொலைபேசி துண்டிக்க பட்டது ...
என்னவோ தெரியவில்லை
கொஞ்ச நாளாக என் மனது ஒரு நிலையில் இல்லை
பலவாறாக மனது எண்ணத் தொடங்கியது ....
மிகவும் கவலையாக இருந்தேன் ...
என் பொறுமையும் நிலை கொள்ளவில்லை
வேலைக்கான நாட்களும் நீடிக்கவில்லை
கிளம்புகிறேன் ஊரை நோக்கி ...
புகையிரத வண்டி மெதுவாய் அசைந்த வண்ணம் இருந்தது
மூடி இருந்த கண்களின் ஊடே அவள் முகம் வந்து வந்து மறைந்தது
அவளுக்காக ஆசை ஆசையாய் வாங்கி வைத்த
சின்ன சின்ன பரிசு பொருட்கள் எல்லாமே
அவள் ஆசை பட்டவைகள் ....
நான் ஊர் போக விடிந்து விடும் ...
நாளைக்கு எப்படியும் அவளை பார்ப்பேன் ...
விடியும் வேலை
ஊர் வந்து விட்டேன்
உடைந்து போன வீடுகளும்
சரிந்து கிடந்த மரங்களும்
பாதி கிடங்கும் பாதி கல்லுமாய்
கிடந்த வீதி வழியே வாகனம் செல்ல முடிய வில்லை
இறங்கி நடக்கின்றேன் ...
எங்கள் தெருவில் பாதி வீடுகளை காணவில்லை
பார்த்துக் கொண்டே சென்றேன் ...
எங்கள் வீடு வந்து விட்டது
படலையை திறக்கும் போதே
அப்பாவின் இருமல் சத்தம் கேட்கிறது ..
வீட்டுக்குள் நுழைகிறேன் ...
அப்பாவின் இருமலை தவிர
வீடே அமைதியாய் இருந்தது ...
அப்பா என்னை கண்டதும் சிரிக்கின்றார் ...
சிரித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்கின்றேன்
என்னடா பார்க்கிறாய்
அது அப்பாவின் குரல் ...
இல்லை ஒன்றும் இல்லை
சொல்லி கொண்டே
பின் வாசலுக்கு வருகின்றேன்
அங்கும் அவள் இல்லை ...
வராந்தாவில் பேச்சு சத்தம்
வந்து விட்டாளோ ஓடி வருகிறேன்
அங்கு சேது அண்ணா........
என்னை கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொள்கிறார்
கண்ணாலேயே அவரை கேட்கின்றேன்
அவளை காணவில்லை எங்கே என்று ?
அப்பா என்னையும் அவரையும்
மாறி மாறி பார்க்கின்றார்
பின் அவருக்கு கண் ஜாடை செய்கின்றார்
சொல்ல வேண்டாம் என்பது போல்
அப்பாவின் முகத்தில் சோகம் நிழலாடுகிறது
சேது அண்ணா முகமும் தான் ..
அவரின் பரிசு பொருள்களை காட்டுகிறேன்
கண்ணீர் மல்க பார்க்கின்றார்
அவளின் பரிசுகளையும் காட்டுகிறேன்
கட்டுபடுத்த முடியாமல் அழுகின்றார்
என்ன என்கின்றேன் ...
எல்லாம் எடுத்துட்டு வா அவளிடமே கொடுத்திடலாம்
என்றவர் பின்னாடியே போகின்றேன்
பரிசுகளையும் கொண்டு
வழியில் அவரிடம் சொல்கின்றேன்
இதை அவளிடம் கொடுத்து கட்டி பிடிக்க வேண்டும் என்கின்றேன்
அழகிய கடுதாசி ரோஜாவை காட்டி
அதை அவர் கைகளில் வாங்கி கொண்டார்
சரி சொல்லலாம் என்றார்
சரி அவள் ஏன் அங்கு இருக்கிறாள் என்கிறேன்
வா சொல்லுறேன் என்கிறார்
நானும் செல்கிறேன் ...
அடுத்து அவர் சென்று நிண்ட இடம்
ஒரு கணம் என்னை நிலை குலைய வைத்தது
ஆடிப் போய் விட்டேன் ...
நிமிர்ந்து சேது அண்ணாவை பார்கின்றேன்
கண்ணீருடன் தேம்புகிறார்
ஓடி போய் கல்லறையில் விழுகின்றேன்
ஏன் இப்படி செய்து விட்டாய்
சொல்லாமல் போய்விட்டாயே
ஐயோ என்று கதறுகிறேன்
சேது அண்ணா என் கைகளை பற்றுகிறார்
பல பேரை காவு கொண்ட
அகோர யுத்த வெறியர்களின் வேட்டைக்கு
இவளும் பலியாகிட்டாடா
என் தலையில் அடித்துக் கொள்கிறேன்
நீ வந்த உடனே விருப்பத்த சொல்றேன்னு சொன்னாளடா
இப்படி ஆகி போச்சுடா
இந்த பூவை அவள் கல்லறையில் வைக்கிறேண்டா
அலுத்து கொண்டே அந்த பூவை கல்லறையில் வைக்கிறார்
காதலர் தினத்தில் சேது அண்ணாவிடம் உன் காதலை
சொல்கிறேன் என்று சொன்னாயே அக்கா
இப்போ உயிரை விட்டுட்டியே அக்கா
துக்கம் தொண்டையை அடைத்தது
அம்மாவின் படத்துக்கு பக்கத்தில்
அக்காவின் படத்துக்கும் மாலை போடுகிறேன்
அக்கா நீ அக்கா இல்ல நீயும் என் அம்மா தான்
சேது அண்ணா சொல்கிறார் என்னடா
இன்னுமா நிற்கிறாய்
வா வா ரயிலுக்கு நேரமாகிட்டு ....
இன்னும் மூன்று வருடங்களுக்கு
வேலை வெளிநாட்டில் செல்கிறேன் விரக்தியில்
அக்காவின் கல்லறையை
கட்டி முடிக்கவும் காசு வேணுமே ...!!!

---சிந்து சிவசங்கர்.

எதனாலே

20.எதனாலே ?

உற்றாரும் தூர நிற்பார்
உறவினரும் தூர நிற்பார் எதனாலே ...?
உண்மைகளை மறைத்திடுவார்
உற்ற நீதி அகற்றிடுவார் எதனாலே ?
உணவு வகை மறந்திருப்பார்
உறக்கத்திலும் பசி இருப்பார் எதனாலே ?
உச்சத்திலே அமர்ந்திருப்பார்
உருக்கி ஏழை வயிற்றிலடிப்பார் எதனாலே ?
உசுப்பி தப்பை செய்ய வைப்பார்
உருண்டு விட்டால் கை விரிப்பார் எதனாலே ?
உலையில் அரிசி கொதிக்குதென்பார்
உதைத்து பிச்சை இல்லை என்பார் எதனாலே ?
உரசி பெண்ணை காதலிப்பார்
உயந்த வீட்டில் பெண்ணெடுப்பார் எதனாலே ?
உபாதையால் படுத்திருப்பார்
உண்டு பல நாட்கள் என்பார் எதனாலே ?
உமையவளை வணங்கி நிற்பார்
உரியவளின் வாழ்க்கை என்பார் எதனாலே ?
உத்தரவுக்கு காத்திருப்பார்
உதிர்ந்து விட்டால் மாண்டிடுவார் எதனாலே ?
உள்ளம் தனை கொள்ளை அடிப்பார்
உரிமை என்றால் விலகிடுவார் எதனாலே ..?
உற்சவங்களை மறந்திருப்பார்
உயர் படிப்பை நிறுத்தி வைப்பார் எதனாலே ?
உப்பளத்தில் வேலை செய்வார்
உப்பு வீட்டில் இல்லை என்பார் எதனாலே ?
உச்சி மரத்தில் காகமென்பார்
உடனே வீட்டை பூட்டி வைப்பார் எதனாலே ?
உழுந்து இல்லை விதைக்க என்பார்
உழவன் தான் அவர் என்பார் எதனாலே ?
உள்ளிருந்தே குளிபறிப்பார்
உருட்டு கட்டைக்கு வேலை வைப்பார் எதனாலே?
உச்சு கொட்டி சிலர் உண்டிருப்பார்
உலர்ந்த கண்ணால் சிலர் பார்த்திருப்பார் எதனாலே ?
உறிஞ்சி குடிக்க சிலர் பானமென்பார்
உயிர்ப்பின்றி சிலர் பார்த்திருப்பார் எதனாலே ?
உடையை பார்த்து மதிப்பிடுவார்
உடம்பை பார்த்து மதிப்பிடுவார் எதனாலே ?
உடுக்கை அடித்து பாடிடுவார்
உய்யாத பேயென்பார் எதனாலே ?
உப்பி சிலர் உடம்பெடுப்பார்
உருகி சிலர் நோயாவார் எதனாலே ?
உண்டியலை உடைத்திடுவார்
உத்தியோகத்தை குறை சொல்வார் எதனாலே ?
உடும்பை போல பணம் பிடிப்பார்
உருசி அறியா உண்டிருப்பார் எதனாலே ?
உமியை கூட விற்றிடுவார்
உறியில் எறும்பை ஏற விடார் எதனாலே ?
உதிரத்துக்கும் விலை வைப்பார்
உருக்குலைந்து போய் விடுவார் எதனாலே ?
உளியால் சிலைகள் செதுக்கிடுவார்
உறுதிமொழியை மறந்திருப்பார் எதனாலே ?
உலகெங்கும் அலைந்திடுவார்
உனக்கும் விலை உண்டு என்பார் எதனாலே ?
உறையும் பணியை கரைத்திடுவார்
உதவி செய்ய மறுத்திடுவார் எதனாலே ?
உமிழ் நீரும் துப்ப மாட்டார்
உடைந்த சட்டி வீச மாட்டார் எதனாலே ?
உதைத்தாலும் வாங்கிடுவார்
உரைத்தாலும் உண்டிடுவார் எதனாலே ?
உக்கிரத்தையும் பொருத்திடுவார்
உளுப்பினாலும் அசைய மாட்டார் எதனாலே ?
உதித்த உடன் கதிரவனும்
உறுமியோட கிளம்பிடுவார் எதனாலே ?
உறுமும் புலி சிங்கத்துக்கும்
உறைகள் போட்டு மாட்ட வைப்பார் எதனாலே ?
உத்தரத்தில் பிறந்ததென்பார்
உல்லாசமாய் வாழ்க்கை என்பார் எதனாலே ?
உரலில் நெல்லை கொட்டிடுவார்
உலக்கை கொண்டு குத்திடுவார் எதனாலே ?
உடைகள் மானம் காக்க என்பார்
உருவி அதையும் எறிந்திடுவார் எதனாலே ?
உள்ளி இன்றி சமைத்திருப்பார்
உரிக்கும் தோலும் சமைத்திடுவார் எதனாலே ?
உண்ணாத விரதமென்பார்
உரைகள் பல நடத்திடுவார் எதனாலே ?
உலவி எங்கும் நடந்திடுவார்
உன்னையும் என்னையும் பிரித்திடுவார் எதனாலே ?
உரிமை என்று பொய்யுரைப்பார்
உழைப்பு இன்றி வாழமாட்டார் எதனாலே ?
உயிலை மாற்றி எழுத சொல்வார்
உருக்கமாக பேசிடுவார் எதனாலே ?
உத்தமியாம் தாயவளின்
உயிரை கூட எடுத்திடுவார் எதனாலே ?
உள்ளங்கையில் பணம் வேண்டும் அதனாலே ...!!!

சிந்து சிவசங்கர் .