பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 21 June 2011

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்




எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.



இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.



இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.



ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்' போர்வீரனாகவே களத்தில் இறங்கினார்.



சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.

அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒர் தலைமறைவு - கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக அவர் ஒரு ‘தேடப்படும் நபராக' மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவவேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது.



காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், தேசிய கௌரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக்கொண்டார்.



தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு.பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார்.



இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும், அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளிவானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார்.



தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.



சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார்.



அவரது சில போர்த் தந்திரோபாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.பிரபாகரன் ஒரு கரும வீரர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான தத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார்.



தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. தனது போராட்ட இலட்சியத்தை பிரபாகரன் இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.



தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்திலிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டுள்ளனர். தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார்.



ஒரு முகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் அபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று. திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக்கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது.



உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.



திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.



போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிற்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார். சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவற்றைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக்கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து.



ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவுவகைகளை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்திலிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு. போர்க்கலையில் திரு பிரபாகரன் அபாரமான ஆற்றல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து.



அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ - அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது. தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபாகரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கீனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக்கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது.



மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக்கொண்டார். மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார்.



தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கௌரவிப்பார். வீரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபாகரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது.



துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.‘நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது' என்று நான் பாலாவிடம் கேட்டேன்.



‘இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்' என்று பாலா சொன்னார். தனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செயற்படும் போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது.



நீதியானது, நியாயமானது, எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம். ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் தலைவருமாவார்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும் பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக்கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடந்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை.



பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீதுபடிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதி விட முடியாது.



பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக தகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணபெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும், மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார். பிரபாகரன் குடும்பப்பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.



பிரபாகரனுக்கு ‘ஓய்வு' கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார். 1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா. 1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன். முதற் குழந்தையின் பிரசவத்தில் மதிக்கு நான் உதவி செய்தபோது, உரிச்சுப் படைச்சு தோற்றத்தில் மட்டு மன்றி குணாம்சத்திலும் தகப்பனைப் போலவே குழந்தை வளர்ந்துவருமென நான் நினைக்கவில்லை. ஒரே பெண் குழந்தையான துவாரகா படிப்பில் ஆழமான அக்கறையும் பொறுப்புணர்வும் உடையவர். பிரபாகரனின் கடைக்குட்டி பாலச்சந்திரன் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லக் குட்டி. அச்சு வார்த்ததுபோல பிரபாகரனின் மறுதோற்றம். நான் வன்னியை விட்டு புறப்பட்ட வேளையில் குழந்தை பாலச்சந்திரன் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதனால் அவரது ஆளுமைபற்றி அதிகம் என்னால் சொல்லமுடியாது.



எழுத்தாளர்,

சமுகவியலாளர்,

அரசியற் செயற்பாட்டாளர்,

போராளி. பிரித்தானியா.

அடேல் பாலசிங்கம்

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

இரண்டாம் பகுதி

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்


70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.

மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.



இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:



1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.



நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.

எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு நியாயமாகத் தெரிந்தவை தான் இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.

அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.



அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.



கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.



இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.



எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.

இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.



துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.



துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.



அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.



எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.

இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.



இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம் கண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.



என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.



20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.

இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை உருவாக்கப்படுகிறது. இந்தப் பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.



காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.



இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.



பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.



இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.

இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.



இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.



இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.



இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.



மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.



துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.



அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.

அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.



இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.

மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.

அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை.



எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.



அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.


தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின் ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்……

தொடரும் .....

Monday, 20 June 2011

2ம் லெப் மாலதி வரலாறு

2ம் லெப் மாலதி



பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி
“..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…”

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………

அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன.



அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள்.


விடுதலைப் போராட்டத்தின் “விழுதுகளுள் ஒன்றாக” உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………

இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள்.

எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள்.



அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1.15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன.



துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. ‘நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ.”

தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம்.
‘என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.” எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள்.



அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது.

எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.



2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது.

தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும்.

தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.

இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் 'கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்" என்று கூறினார்.

தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.
(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.
(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.
(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.
1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் 'தமிழின அழிப்பு" ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.
1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.
1978 வைகாசி 19ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.

1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் Nஐ.ஆர். nஐயவர்த்தனா அரசு 'புதிய அரசியலமைப்பை" உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.

1979 ஆடி 20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை" அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.
இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (Nஐ.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.

இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.
இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.


சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.

1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் Nஐ.ஆர். nஐயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.
1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.

1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.
1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.

1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.

1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு Nஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது.

1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.

இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.

தமிழீழப் போர் 1
(ஆவணி 1984 - ஆடி 1987)
ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.

தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.

தமிழரைத் தேடி - 3

தமிழரைத் தேடி - 3



தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் கூறுகள்

பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி, பண்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற, ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியமாகும். அதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல் நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு கூறும் பண்பாடு எனும் முழுமைக்குள் மிகவும் ஏற்ற நிலையில் பொருத்தப்பட்டிருக்கிறது.” - பண்பாட்டு மானுடவியல், பக்.175.

மாலினோஸ்கி என்ற அறிஞர் பண்பாடு எனும் முழுமையை அவற்றுள் உள்ள கூறுகளின் செயல்பாடுகளின் மூலம் புரிந்து கொள்ளமுடியும் எனக் கூறுவார். சங்க கால தமிழ்ச் சமூகததின் மூலச் சிறப்புமிக்கப் பண்பாட்டுக் கூறுகளை விவரிப்பதன் மூலம் அச்சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் பண்புகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழில் அறநெறிக் கோட்பாடுகள் (தர்ம சாத்திரங்கள்) எழுத்தில் இல்லாதது, சமயங்களும் அவை தொடர்பான தத்துவங்களும் புராணங்களும் இல்லாதது போன்றவை தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெருங் குறைகளாகக் கூறப்படுகின்றன. இதுபோன்ற இல்லாமைகளே தமிழ்ச் சமூகத்தின் சிறப்புத் தன்மைக்கான காரணியாக இருப்பதை நுணுகி ஆராய்ந்தால் புரிந்துகொள்ளமுடியும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழரின் சிறப்புத் தன்மைகள் விவரிக்கப்படுகின்றன.

பண்பாட்டு வளர்ச்சியையும் இயங்கியலையும் புரிந்து கொள்வதற்கு இதுவரையிலும் கூறப்பட்டுள்ள கொள்கைகளில் அமெரிக்க மானுடவியல் அறிஞர் ஹென்றி மார்கனும் (1818-1881), பிரிட்டிஷ் மானுடவியலறிஞர் பர்னெட் டைலரும் இணைந்து தோற்றுவித்த ஒருவழிப் பரிணாமக் கொள்கை ஏற்புடையதாக உள்ளது. இக்கொள்கையை அடியொற்றி மார்க்சிய சிந்தனையாளர்கள் முதலாளித்துவத்துக்கு முந்தைய பண்பாட்டுக் கட்டங்களை கீழ்க்கண்டவாறு பகுத்துள்ளனர்:

(1) ஆதி பொதுவுடைமைச் சமூகம், (2) ஆண்டான்-அடிமை சமூகம், (3) நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு.

இம்மூன்று பண்பாட்டுக் கட்டங்களும் ஐரோப்பியச் சமூகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டு பகுத்துக் கூறப்பட்டுள்ளன. தொல்லியல் அறிஞர் சைல்டு என்பவர் ஒருவழிப் பரிணாமக் கொள்கையை, பரவுதல் கோட்பாட்டுடன் இணைத்து அதனைப் புத்தாக்கம் செய்தார். அவரது கருத்தின்படி வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தில், தென்மேற்கு ஆசியாவில் சமுதாய அமைப்பில் படிப்படியாக வளர்ச்சிகள் ஏற்பட்டு அவ்வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றிலுமுள்ள பண்பாட்டுக் கூறுகள் ஐரோப்பாவிற்குப் பரவியதைத் தொல் தடயங்கள் மூலம் நிறுவமுடியும்.

உண்மையில், மேற்காசியாவில் பூர்விகமாக வாழ்ந்து வந்த கருப்பின மக்கள் ஆதி பொதுவுடைமைச் சமுதயாத்திற்கும் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் பல பண்பாட்டுப் படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதை நமக்குக் கிடைத்துள்ள தொல் எச்சங்களைக் கொண்டு ஆராயும்போது அறியமுடிகிறது. மேற்காசியச் சூழலில் மனிதகுலம் கடந்து வந்த பண்பாட்டுக் கட்டங்களை தொல் தடயங்கள் மற்றும் புராணக் குறிப்புகளின் துணை கொண்டு இக்கட்டுரைத் தொடரில் விரிவாக விவாதிக்க இருக்கிறோம். இங்கு முன்வைக்கப்படும் கோட்பாட்டினை விளக்குவதற்கு, இப்பண்பாட்டுக் கட்டங்களின் பட்டியல் அவசியமாகிறபடியால், சுருக்கமான விளக்கத்துடன் அவை கீழே பட்டியலிப்பட்டுள்ளன.

(1) இரத்த உறவுக் குடும்ப அமைப்பு

சகோதர - சகோதரிகள், கணவன்-மனைவியர் உறவுகொண்டு வாழ்ந்த ஒரு கூட்டுக்குடும்பமே ஒரு கூட்டமாக வாழ்ந்த நிலையை இரத்த உறவுக் குடும்ப அமைப்பு என்று கூறுவர். தற்காலத்தில் உலகில் வாழும் எந்த மனிதக் கூட்டமும் இப்பண்பாட்டு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பண்பாட்டு நிலையில் மனித குலம் வாழ்ந்ததற்கான எச்சங்களை ஐரோப்பிய சமூகத்தின் உறவுப் பெயர்களில் காணமுடிகிறது. சகோதர - சகோதரிகளிடையேயான மண உறவுகளை ஐரோப்பியர் தொடர்பான பல புராணங்களிலும் காணமுடிகிறது.

(2) இனக்குழுச் சமூகம்

இன்று உலகில் வாழும் பல பழங்குடிகள் இப்பண்பாட்டுக் கட்டத்திலேயே வாழ்கின்றன. மேற்காசியாவில் கி.மு.10000த்தில் தோன்றிய நடூஃபியன் பண்பாடு இக்கட்டத்தின் வளர்ந்த வடிவத்தை எட்டியது. பண்பாட்டுப் பரிணாமத்தின் இக்கட்டம் வரையிலும் இனக்குழு உறுப்பினர்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இருக்கவில்லை. எனவே இவ்விரு கட்டங்களையும் சேர்த்து ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம் என ஒரே கட்டமாகக் கூறலாம். எனினும் இவ்விரு கட்டங்களிலும் மாறுபட்ட அரசியல் அமைப்பு உள்ளதனால், நுண்ணிய வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்ற விதத்தில் இரண்டாகப் பிரித்துக் கூறப்படுகின்றது. இனக்குழுச் சமூக அமைப்பில் பல தாய்வழிக் கணங்கள் இணைந்து ஒரே இனக்குழுவாகப் பரிணமித்ததும் புதிய அரசியல் (சமூக) அமைப்பைத் தோற்றுவித்ததும் மனிதகுல வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாகும்.

(3) சமுதாய ஒப்பந்தம் (நகர - கிராம சமூக அமைப்பு)

பண்டைய துருக்கியில் இருந்த சாட்டல் குயுக் நகர - கிராம சமூக அமைப்பு இப்பண்பாட்டுக் கட்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். பல கணங்கள் இணைந்து இனக்குழுவாகப் பரிணமித்த பொழுது மனித குலம் சமாதான சகவாழ்வு அடிப்படையில் அமைந்த அரசியல் அரிச்சுவடியைத் தோற்றுவித்தது. சமுதாய ஒப்பந்தக் காலத்தில் இருவேறு பண்பாட்டுப் படிநிலைகளில் வாழ்ந்த குடிகள் பண்டமாற்று வணிகத்தின் அடிப்படையில் சமாதான சகவாழ்வு வாழ்ந்த புதிய அரசியல் பண்பாட்டு வளர்ச்சி தோன்றி நிலைபெற்றது.

இப்பண்பாட்டுக் கட்டத்தின் மிக வளர்ந்த பொருளியல் நிலையில் சிந்துவெளி நாகரிகம் இருந்ததாகக் கூறலாம். இந்நகரக் குடிகள் கிராமக் குடிகளை மேலாண்மை செய்வதற்குத் தேவையான போர்க் கருவிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது. நன்கு வளர்ந்த பண்டமாற்று வணிகத்தைக் கொண்டிருந்த சிந்துவெளி நகர மாந்தருக்கும் கிராம சமுதாயத்தினருக்குமான இணக்கம், சமுதாய ஒப்பந்தத்தின் மூலமாகவே சாத்தியமாகி இருக்க வேண்டும் என நாம் யூகிக்கலாம்.

(4) ரிஷி (அறிவர்) தலைமைக் குடிகளும், ரிஷி குலகுருக் குடிகளும்

மேற்காசியாவில் கி.மு.6000-கி.மு.5000 காலகட்டத்தில் தோன்றிய ஹசுனா, ஹலாஃபியன் மற்றும் சமாரன் பண்பாடுகளை, போர்த் தளபதி தலைமையில் அமைந்த ரிஷி குலககுருக் குடிகளாகக் கூறலாம். ரிக் வேத ஆரியர் இப்பண்பாட்டுக் கட்டத்தின் மிக வளர்ந்த பொருளியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தனர்.

யுகோஸ்லேவியாவில் லெபன்ஸ்-கி-வீர் இல் தோன்றிய புதிய கற்கால நகர சமூகம் ரிஷி தலைமைச் சமூகமாகும். மேற்காசியாவிலிருந்து சென்ற கருப்பின ரிஷிகள் (அறிவர்கள்) பண்படாத வெள்ளை இனக் குடிகளுக்குத் தலைமையேற்று அவர்களை மானாவாரி விவசாயம், கால் நடை வளர்த்தல் மற்றும் பண்டமாற்று வணிகத்திற்குப் பயிற்சி அளித்தனர். இவ்வாறு தலைமையேற்ற ரிஷிகளுக்குப் பிரபுத்துவம் கிடைக்காததால் இவ்வியக்கப்போக்கு அதிகரித்து, வெகுவிரைவிலேயே புதிய கற்கால மேய்ச்சல் வாழ்க்கை ஐரோப்பா முழுவதும் பரவிற்று. உலகம் முழுவதும் புதிய கற்காலப் பண்பாட்டைப் பரவச் செய்த ரிஷி தலைமைக் குடி என்ற அரசியல் நெறி மனித குல மேம்பாட்டிற்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

(5) உலோக கால நகரங்கள்

மேற்காசியாவில் கி.மு.5000 - கி.மு.4300 வரை நிலவிய உபெய்துப் பண்பாடு உலோக கால நகரப் பண்பாடாகும். கி.மு.6000 த்தில் தோன்றிய சமாரன் குடிகள் மருத நில வாழ்க்கையை மேற்கொண்டிருந்தன. இக்குடிகள் கி.மு.5500 லிருந்து உலோகக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக, விவசாய விரிவாக்கம் மெசபடோமியாவை நோக்கி நகர ஆரம்பித்தது. கூடவே, பொருளுற்பத்தி பன்முகத் தன்மையடைந்து பண்ட மாற்று வணிகம் சிறப்பாக நடைபெறத் தொடங்கியது. பண்டமாற்று வணிகத்தின் மூலம் உபரி செல்வத்தை அதிகமாகப் பெற்ற மருத நிலக் குடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நிலையான குடியிருப்புகளைத் தோற்றுவித்தனர். இத்தகைய நிலையான குடியிருப்புகளை நகரங்கள் என்றே தொல்லியல் அறிஞர் குறிப்பிடுகின்றனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற பழமொழிக்கேற்ப, சங்க காலத்திலிருந்தே ஊருக்கொரு கோயில் கட்டி வாழ்ந்த தமிழரின் மரபு அதன் தொடக்கத்தை உபெய்துப் பண்பாட்டில் கொண்டிருந்தது.

சாட்டல் குயுக் நகர அந்தணக் குடிகள், கிராமக் குடிகளை எழுதப்படாத ஒப்பந்தத்தின் மூலம் சுரண்டி வாழ்ந்தனர். பின்னர் நகரக்குடிகள் கலைந்து தனிநபர்கள் (ரிஷிகள்) கிராமக் குடிகளுக்குத் தலைமையேற்கத் தலைப்பட்டனர். பொருளுற்பத்தியில் ஈடுபட்டு பண்டமாற்று வணிகத்தை மேற்கொண்டு வந்த நகரக் குடிகள் ஒரு இனக்குழுவாகவும் மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டு நகரக் குடிகளுடனான பண்டமாற்று வணிகத்தைச் சார்ந்து வாழ்ந்த கிராமக் குடிகள் வேறு இனக்குழுவாகவும் இருந்த நிலை, சாட்டல் குயுக் நகர - கிராம சமூக அமைப்பில் நிலவிற்று. உபெய்துப் பண்பாட்டில் ரிஷிகள் தலைமையிலான நகரக் குடிகள் பொருளுற்பத்தியிலும் விவசாயம் மற்றும் போர் நடவடிக்கைகளிலும் ஒருசேர ஈடுபட்ட நிலை தோன்றியது. இத்தகைய நகரக் குடிகளின் தோற்றமானது மனித சமூகத்தை வீரயுக அரசியல் அமைப்பை நோக்கி வளரச் செய்தது.

(6) வீரயுக அரசு

மேற்காசியாவில் கி.மு.4300 இல் தோன்றிய ஊருக் பண்பாடு உலகின் முதல் வீரயுக அரசுகளைத் தோற்றுவித்திருந்தது. கி.மு.800 லிருந்து நிலவிய ஆரியரின் கிரேக்க நகர அரசுகள் வீரயுக அரசியலைக் கொண்டிருந்தன. வடஇந்தியாவில் கி.மு.600 இல் நிலவிய ஜனபதங்களின் அரசியல் வீரயுகப் பண்பாட்டு மட்டத்தின் தொடக்க கட்டத்தில் இருந்தது.

பண்டமாற்று வணிகத்தின் அடிப்படையில் தோன்றிய சமாதான சகவாழ்வு அரசியல் உபெய்துப் பண்பாடு வரையிலும் நீடித்தது. ஊருக் காலத்தில் சுமேரியப் பகுதிக்குள் புதிதாகக் குடியேறிய கட்டுப்பாடற்ற ஐரோப்பியக் குடிகளை வாளின் வலிமையைக் கொண்டு ஏவல் மரபினராக மாற்றிய புதிய பண்பு தோன்றியது. இதன் விளைவாக இதுவரை இனக்குழுச் சமூகத் தன்மையிலிருந்த அரசமைப்பு விரிவடைந்து புதிய பரிணாமத்தைப் பெற்றது. இக்கட்டத்தில் பண்பட்ட கருப்பினக் குடிகள் பண்படாத வெள்ளை இனக் குடிகள் மீது பலாத்காரப் பிரயோகம் செய்து ஏவல் மரபினராக மாற்றியது, புதிய காட்டுக் குடிகளால் சமாதான சக வாழ்வுக்குப் பாதகம் ஏற்படாமல் தடுப்பதை அடிப்படையாக் கொண்டே தோன்றியது.

(7) ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பு

கி.மு.3200 இல் ஏற்பட்ட சுமேரியப் பெருவெள்ள அழிவுக்குப் பின்னர் அங்கு ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பு தோன்றியது. பெருவெள்ள அழிவுக்குப் பின்னர் கட்டுப்பாடற்ற செமிடிக் கூட்டங்கள் பேரளவில் சுமேரியாவை நோக்கிக் குடியேறின. இந்நெருக்கடிச் சூழலில் வலுவான நகர அரசுகளின் தலைமையை, பிற நகரங்கள் ஏற்றுச் செயல்பட்டன. கூடவே அரசர்களின் மூத்த மகன்கள் அரசுரிமைக்குரியவராகிய மரபும் தோன்றியது. கி.மு.2354 இல் சார்கோனின் அக்காடியன் அரசு தோன்றியதிலிருந்து நிலமானிய முறை தோன்றியது. முன்பு சுதந்திரமாக நகரைச் சார்ந்து வாழ்ந்த குறிஞ்சி, முல்லை மற்றும் நெய்தல் நில சார்புக் குடிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கின்ற நோக்கில் போர்த் தளபதிகளைப் பிரதிநிதிகளாக நியமிக்கின்ற வழக்கமும் தோன்றியது.

சங்க கால தமிழ் வேந்தர் குடியினரின் அரசமைப்பு, சுமேரியாவில் தோன்றிய ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒருவழிப் பண்பாட்டுப் பரிணாமமும் தேங்கிய மற்றும் திரிந்த பண்பாடுகளும்

மேலே விவாதிக்கப்பட்ட பண்பாட்டுக் கட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக, இயல்பான வளர்ச்சிப் போக்கில் பரிணமித்துள்ளன. இவையனைத்தும் நெருக்கடிச் சூழலில் சமாதான சகவாழ்வினை அடிப்படையாகக் கொண்டு மனித குலம் தோற்றுவித்துக் கொண்ட பண்பாட்டுக் கட்டங்களாகும். ஏவல் மரபினரைத் தோற்றுவித்தது மனித குலப் பொதுப்பண்பிற்கு மாறானது என்றாலும், கட்டுக்கடங்காத காட்டுக் கூட்டங்களால் பண்பட்ட, வளர்ந்த சமூகம் அழிந்துவிடக்கூடிய சூழல் ஏற்பட்ட பொழுது இதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையிலேயே கைக்கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடாகும். ஏவல் மரபினரின் கட்டுப்பாடற்ற தன்மையைக் கருத்தில்கொண்டே, அவர்கள் போர்க் கருவிகளையும், வாகனங்களையும் உடைமையாக வைத்துக் கொள்ளத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆரம்பத்தில் பலாத்காரப் பிரயோகத்தின் மூலம் அடியோராக்கப்பட்ட கூட்டங்களில், பண்பட்ட கூட்டங்களை வேளாண் வாயிலாகிய வினைவலராக மாற்றினர். வினைவலரிலும் பண்பட்ட குடிகளை நிலக் குடிகளாக (சங்க இலக்கியங்கள் கூறும் சிறுகுடிகளைப் போன்று) மாற்றி ஒப்பீட்டளவு சுதந்திரம் கொடுத்தனர். (மேற்காசியாவில் நிகழ்ந்த இவ்வியக்கப்போக்கு குறித்து பின்னர் விரிவாகக் காண்போம்.) இவ்வாறாக குறிப்பிட்ட ஒரு அரசியல் சூழலில் பண்படாத மக்கள் கூட்டங்களை அடியோராக மாற்றியச் செயல்பாடும் கூட ஒரு தற்காலிக ஏற்பாடாக அமைந்திருந்ததையே பின்னர் நிகழ்ந்த மாற்றங்கள் எடுத்துரைக்கின்றன.

ஆனால், வெள்ளை இனத்தவரால் எகிப்திலும் சுமேரியாவிலும் தோற்றுவிக்கப்பட்ட அடிமை முறை, மனித குலப் பொதுப் பண்பிற்கு முற்றிலும் புறம்பானதாகும். வரலாற்றில் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்று.

திரிந்த பண்பாடுகள்

(1) எகிப்தின் பாரோ மன்னர்களின் அரசமைப்பு, திரிந்த பண்பாட்டிற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும். மேற்காசியாவில் தோன்றியிருந்த உலோக நாகரிகம் கி.மு.3000 த்துக்கு முன் எகிப்திற்கும் பரவியிருந்தது. சுமேரியாவின் ஊர் வம்சாவழி அரசுகளைப் போன்று எகிப்திலும் வம்சாவழி அரசர்களைக் கொண்ட பாரோ மன்னர்களின் அரசு தோன்றியிருந்தது. நன்கு வளர்ச்சியடைந்திருந்த அரசியல் அமைப்பையும் பொருளியல் வாழ்க்கையையும் கொண்டிருந்த பாரோ மன்னர்களிடையில் சகோதரர் சகோதரிகளை மணம் செய்யும் இரத்த உறவுக் குடும்ப அமைப்பு என்கிற மிகவும் கீழ் நிலைப் பண்பாட்டுக் கூறு வழக்கில் இருந்தது.

பண்பாடு என்பது எண்ணற்ற கூறுகள் ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியம் என்றும் அதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல் நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன என்றும் பண்பாட்டு மானுடவியலாளர் கூறுகின்றனர். சமூகம் கீழ் நிலையிலிருந்த மேல் நிலைக்கு முன்னேறுகின்றபோது குடும்ப அமைப்பும் கீழான வடிவத்திலிருந்து மேலான வடிவத்திற்கு முன்னேறுகிறது என மார்கன் கூறுகிறார். மிகச் சரியாகக் கூறப்பட்டுள்ள இந்த இலக்கணத்திற்கு முரணாக, வளர்ந்த அரசியல் அமைப்பைக் கொண்டிருந்த பாரோ மன்னர்களின் கீழான குடும்ப வடிவம் இருக்கின்றது.

எகிப்தில் பூர்விகமாக வாழ்ந்து வந்த, நன்கு வளர்ந்த பண்பாட்டினையும் அரசியல் அமைப்பையும் கொண்டிருந்த கருப்பின மக்களை, பண்பாட்டு வளர்ச்சியில் கீழ் நிலையிலிருந்த, புதிதாகக் குடியேறிய வெள்ளை இனத்தவர் ஆதிகம் பெற்று, கருப்பின மக்கள் வளர்த்திருந்த அரசியல் அமைப்பைக் கைப்பற்றிக் கொண்டபோது, அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்குத் தக்க அளவில் குடும்ப உறவுகள் மேம்படாத பாரோ மன்னர்களின் அரசு நிலைக்கொண்டது எனக்கொண்டால் மேற்கூறப்பட்ட முரண்பாடு நீங்கிவிடுகின்றது. வெற்றி பெற்ற பாரோ மன்னர்கள் தோல்வியுற்ற கருப்பினக் குடிகளை அடிமைகளாக்கி திரிந்த ஒரு அரசியல் பண்பாட்டைத் தோற்றுவித்து விட்டனர்.

(2) கீழ்நிலை பண்பாட்டுக் குடிகளாகிய செமைட்டுகள், ஆரம்பக் காலங்களில் பண்பட்ட சுமேரியரின் கீழ், அடியோராகவும், வினைவலராகவும், வினைஞராகவும், நிலமக்களாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் சார்கோன் என்ற வினைஞன் (அடைப்பக்காரன் -அகம்படி) தலைமையில் அக்காடியன் அரசைத் தோற்றுவித்து சுமேரியப் பண்பாட்டைத் தமதாக்கிக் கொண்டனர். இதன் விளைவாக அங்கேயும் பண்பாடு திரிந்து அடிமை முறை தோன்றிற்று.

மனித குலப் பொதுப்பண்பிற்குப் புறம்பான, அடிமை முறை ஐரோப்பியரால் மட்டுமே தோற்றுவிக்கப்பட்டதன் காரணிகள் ஆராயப்படவேண்டியனவாகும். கடைசி பனியுகத்தின் கடுமையான காலக் கட்டமாகிய கி.மு.20,000-கி.மு.10,000 வாக்கில் ஐரோப்பிய மக்கள் கூட்டங்கள் பனிப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டதால், உலகில் பிற மனிதக் கூட்டங்கள் இனக்குழுக்களாகப் பரிணமித்து, சமாதான சகவாழ்வுக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொண்ட வேளையில் அவை காட்டுமிராண்டி நிலையின் இரத்த உறவுக் குடும்ப அமைப்பைக் கொண்ட கூட்டங்களாகவே தேங்கி விட்டன. இத்தகைய காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த மனிதக் கூட்டங்கள் பிற கூட்டத்தின் உறுப்பினர்களை தனது வாழ்க்கைப் பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. இனக்குழு என்ற சமூக அமைப்பு தோன்றியதில் இருந்துதான் சமாதான சகவாழ்வு என்ற புதிய பண்பு மனிதரிடம் கருக்கொண்டது. இதன்பின் பண்டமாற்று வணிகம் தோன்றி இப்பண்பு மேலும் வலுப்பெற்றது.

இனக்குழு என்ற சமூக அமைப்பு பெண் தலைமைக் கணங்களுக்குள் நடைபெற்ற மிக நீண்ட நெடிய போர்களுக்குப் பின்னரே தோன்றியது. அதன்பின் மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்ட குடிகளுக்கும் வேட்டுவக் குடிகளுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த சண்டைகளுக்குத் தீர்வாகப் பண்டமாற்று வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட நகர - கிராம சமூக அமைப்பு தோன்றியது. இவ்வாறு ஒவ்வொரு பண்பாட்டுக் கட்டத்திலும் மிக நெடிய போராட்டங்களைச் சந்தித்து அதன் தீர்வாக, புதிய அரசியல் அமைப்பைத் தோற்றுவித்து, நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு வரையிலும் கருப்பினத்தவர் முன்னேறியிருந்தனர்.

மனித குலத்திற்கே நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்ததாக ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஐரோப்பிய செமிடிக்குகளும், ஆரியர்களும் கி.மு.5000 வரையிலும் காட்டுமிராண்டி நிலையிலேயே வாழ்ந்திருந்தனர். மனித குலத்தின் மிகக் கீழான குடும்ப அமைப்பான இரத்த உறவுக் குடும்ப அமைப்பே அவர்களிடம் நிலவியது. மேற்காசியக் கருப்பின ரிஷிகளின் மூலம் மேய்ச்சல் வாழ்க்கைக்கும் பண்டமாற்று வணிகத்திற்கும் இக்குடிகள் பழக்கப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களிடம் சமாதான சகவாழ்வுக்கான உளப்பாங்கு (அரசியல் பக்குவம்) தோன்றவில்லை.

மேலும் நீண்ட காலம் பனிப் பகுதிக்குள் சிக்கிக் கொண்ட பொழுது சந்தித்த இடர்ப்பாடுகளின் விளைவாக இவ்வெள்ளையின மனிதக் கூட்டங்கள் ஒருவகையான குழு உளவியலினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் தோன்றுகிறது. வெள்ளை இனத்தவரின் அரசியல் பக்குவமின்மையும் குழு உளவியல் பாதிக்கப்பட்டிருந்த தன்மையுமே அடிமை முறை தோன்றுவதற்கானக் காரணிகளாக அமைந்துவிட்டன.

தேங்கிய பண்பாடுகள்

ஒருவழிப் பரிணாமக் கொள்கையினர் விலங்குகளின் பரிணாமம் போன்றே பண்பாடுகளும் சிறிய, எளிய நிலையிலிருந்து பெரிய, சிக்கலான நிலைக்கு வளர்ச்சி பெற்றுள்ளன என்றும் ஒவ்வொரு வட்டாரப் பண்பாட்டிலும் பண்பாட்டின் நிறுவனங்கள் தனித்தனியே வளர்ந்துள்ளன என்றும் கூறுவர்.

விலங்குகள் இயற்கைச் சூழலில் ஏற்பட்ட நெருக்கடியைச் சந்தித்தபொழுது உடல் கூறுகளில் தேவையான மாறுதல்களுக்கு உட்பட்டன. ஆனால், இயற்கையின் நெருக்கடிகள் மனிதனின் பொருளியல் வாழ்வைப் பாதித்தனவேயன்றி, சமூக வாழ்வில் (குடும்ப உறவுகளிலும் அரசியல் நிர்வாகத்திலும்) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இருவேறு மனிதக் கூட்டங்கள் உறவுகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுதுதான் சமூக வாழ்வில் மாறுதல் ஏற்பட்டது. வேற்று மனிதக் கூட்டங்களை உறவு கொள்ள அனுமதிக்காத சமூகங்களும், வேற்றுப் பண்பாட்டுக் குடிகளையே சந்திக்காமல் ஒதுங்கிவிட்ட சமூகங்களும், பண்பாட்டில் ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை. இவ்வாறு தனித்து வாழ்ந்த மனித சமூகங்களை தேங்கிய பண்பாட்டினர் எனக் கூறலாம். மனித குலம் கடந்து வந்த ஒவ்வொரு பண்பாட்டுப் படிநிலையிலும் தேங்கிய பண்பாடுகளை அடையாளம் காட்டமுடியும்.

(1) கடைசி பனியுகத்தில் பனிப்பகுதிக்குள் சிக்கிக் கொண்ட வெள்ளை இனத்தினர் கடுமையான இயற்கை மாற்றத்தைச் சந்தித்த பொழுதும் தனிமைப்பட்டு விட்டபடியினால் வேற்று இனத்தவரைச் சந்திக்கும் இரத்த உறவுக் குடும்ப அமைப்பு முறையிலேயே நீடித்தனர்.

(2) கி.மு.40,000 த்தில் ஆஸ்திரேலியாவை வந்தடைந்த பழங்குடிகள் கி.மு.25,000 த்தில் இறந்தவர் உடலைப் புதைப்பது, பாறை ஓவியங்கள் வரைந்து மதச் சடங்குகள் செய்வது போன்ற பண்பாட்டு வளர்ச்சியை, சமகால உலகின் பிற சமூகங்களுக்கு இணையாகப் பெற்றிருந்தனர். எனினும் இப்பழங்குடிகள், வேறுபட்ட பண்பாட்டுக் குடிகளுடன் உறவு கொள்ளாமல் தனித்து ஒதுங்கிய சமூகமாக வாழ்ந்து விட்டதனால், இன்றுவரையிலும் இனக்குழுச் சமூக அமைப்பின் ஆரம்ப வடிவத்தைத் தாண்டிய வளர்ச்சியைப் பெறாமல் உள்ளனர். (கி.மு.25,000 வாக்கில் இவர்களிடையே இனக்குழுச் சமூக அமைப்பு தோன்றியிருக்க வேண்டும்)

(3) ஜப்பானில் வாழ்ந்த குடிகள் கி.மு.9000 த்திலேயே மட்பாண்டங்கள் தயாரிக்கும் அளவிற்குப் பொருளுற்பத்தியில் முன்னேறியிருந்தன. இக் குடிகளும் உலோகப் பயன்பாட்டு மக்கள் குடியேறும் வரை வேற்று பண்பாட்டுக் குடிகளுடன் உறவு கொள்ளாமல் வாழ நேரிட்டதால், மேற்காசியக் குடிகளைப் போல் பண்பாட்டில் வளர்ச்சி பெற இயலவில்லை.

(4) தென் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கி.மு.4000 த்திலிருந்தே சிறு கற்காலப் பண்பாட்டுக் குடிகள் வாழ்ந்து வந்தன. கி.மு.800 - கி.மு.500 வாக்கில் இரும்புப் பயன்பாட்டுப் பெருங்கற்கல்லறைப் பண்பாட்டு மக்கள் இப்பகுதிக்குள் குடியேறும் வரை இக்குடிகள் பண்பாட்டு வளர்ச்சியில் சிறிதும் முன்னேறியிருக்கவில்லை.

(5) கி.மு.7000 - கி.மு.6000 காலக்கட்டத்தில் உலகில் தோன்றிய புதிய கற்கால நகரங்களில் ஜெரிக்கோ நகரமும் ஒன்றாகும். சமகாலத்தில் சாட்டல் குயுக் போன்ற நகரக் குடிகள் பண்டமாற்று வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமாதான சக வாழ்வுக்கான அரசியல் அறநெறியைத் தோற்றுவித்திருந்தன. ஜெரிக்கோ நகரக் குடிகளோ, பழைய இனக் குழுக் காலத்தியப் பண்பிலிருந்து மாறவில்லை. சாட்டல் குயுக் குடிகள் தங்கள் பொருள்களைக் கொள்ளையிட்டுத் தொல்லை கொடுத்துவந்த வேட்டுவக் குடிகளைப் பண்டமாற்று வணிகத்திற்குப் பழக்கியதன் மூலம் புதிய அரசியல் அறநெறியைத் தோற்றுவித்ததுடன் வேட்டுவக் குடிகளின் திருட்டுத் தொல்லையிலிருந்தும் விடுபட்டனர். ஜெரிக்கோ குடிகளோ, வேட்டுவக் குடிகளிடமிருந்து தங்கள் உடமைகளைக் காத்துக் கொள்ளும் பொருட்டு கண்காணிப்புக் கோபுரங்களுடன் கூடிய அரண் அமைத்து வாழ்ந்தனர். இவ்வாறு பிற குடிகளுடன் உறவு கொள்ளாமல் வாழ்ந்ததனால் கி.மு.1400 இல் யூதர்களால் இந்நகரம் எரியூட்டி அழிக்கப்படும் வரையிலும் ஜெரிக்கோ நகரக் குடிகள் நடூஃபியன் பண்பாட்டுக் கால சிறு கற்காலப் பண்பாட்டிலேயே தேங்கிவிட்டதை தொல் எச்சங்கள் காட்டுகின்றன. கி.மு.6500 இல் ஜெரிக்கோ குடியினருக்குச் சமமான பொருளியல் வாழ்க்கையைக் கொண்டிருந்த மேற்காசியாவின் பிறகுடிகள், மாற்றுப் பண்பாட்டுக் குடிகளுடன் தொடர்ச்சியான மோதலையும் உறவையும் மேற்கொண்டதன் விளைவாக கி.மு.1400 இல் உலோகப் பயன்பாட்டுடன் கூடிய நிலப்பிரபுத்துவ அரசமைப்பு வரை வளர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(6) கி.மு.6500 இல் சமுதாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோன்றியிருந்த நகர -கிராமக் குடியிருப்புப் பண்பாடு பலுசிஸ்தானத்தின் மெ?ர்கர் வரை பரவியிருந்தது. இப்புதிய கற்காலப் பண்பாட்டின் வளர்ச்சிப் போக்கில் சிந்து வெளி நாகரிகம் தோன்றியது. மேற்காசியாவில் தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் சிந்துவெளியில் ஏற்படாததனால், அந்நகர அரசியல் அமைப்பு கடைசி வரையிலும் சமுதாய ஒப்பந்தம் என்கிற நிலையிலேயே தேங்கிவிட்டது. அதாவது நகரக் குடிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு வலுவான குடிகள் இப்பகுதிக்குள் குடியேறவில்லை. சிந்து வெளி நகர அகழ்வாய்வுகளில் போர் ஆயுதங்கள் எதுவும் கிடைக்காததும், அந்நகரங்களைச் சார்ந்து சுற்றிலும் பல கிராம சமூகங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதையும் கொண்டு இந்நகரங்களின் அரசியல் அமைப்பு சாட்டல் குயுக் அரசியல் அமைப்பினை ஒத்துள்ளதை அறிகிறோம்.

இன்று உலகில் வாழும் பழங்குடிகள் அனைத்துமே தேங்கிய பண்பாட்டுச் சமூகங்களுக்கான உதாரணங்களே.

மனித குல வரலாற்றில் வாழ்ந்து மறைந்த பல்வேறு பண்பாட்டு மக்களையும் இன்றுவரை வாழ்ந்து வருகின்ற மக்களின் பண்பாடுகளையும் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள ஆறு பண்பாட்டுக் கட்டங்களில் ஏதோ ஒன்றிலோ அல்லது அவற்றின் திரிந்த அல்லது தேங்கிய பண்பாட்டு நிலைகள் ஏதோ ஒன்றிலோ பொருத்திப் பார்க்கமுடியும். இந்துப் புராண மரபு திரிந்த பண்பாட்டினரை அசுரர் என்றும் தேங்கிய பண்பாட்டினரை இராட்சசர் என்றும் குறிப்பிடுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் சட்டங்கள் எழுதப்படாமை

சங்ககாலத் தமிழ்ச் சமூகம் மேலே விவாதிக்கப்பட்டவாறு தேங்கிய சமூகமாக, திரிந்த சமூகமா அல்லது நிலப்பிரபுத்துவம் வரையிலும் ஒருவழிப் பண்பாட்டுப் பரிணாமத்தில் வளர்ச்சியடைந்த சமூகமாக என்பதற்கான விடையை தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மையுள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

உலகின் அனைத்து சமூகங்களுமே தங்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஏற்ற சட்டங்களை மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளன. ஒரு சமூகம், தானே தோற்றுவித்துக் கொண்ட மரபுகளை, சட்டங்களாக எழுதி வைத்துக் கடைப்பிடிக்கவேண்டிய தேவை ஒருபோதும் எழுவதில்லை. உதாரணமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட கணங்கள் (குலங்கள்) இணைந்து இனக்குழு என்கிற புதிய சமூக அமைப்பு தோன்றியபோது, கண உறுப்பினர்களுக்குள் நடைமுறையில் இருந்த அகமணமுறை தடை செய்யப்பட்டது. புதிதாகத் தோன்றிய இம்மரபு கடைப்பிடிக்கப்படா விட்டால் இனக்குழு என்கிற சமூக அமைப்பே தகர்ந்துபோய்விடும். எனவே நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் சமாதான சகவாழ்வை நோக்கமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மரபு, அதனைத் தோற்றுவித்தவர்களாலேயே மீறப்படும் என்ற எண்ணத்திற்கே சிறிதும் இடமில்லை. ஒவ்வொரு புதிய சமூக அமைப்பும், ஒருவழிப் பாதையில் பரிணமித்த பொழுது தோற்றுவிக்கப்பட்ட மரபுகள் எத்தகைய சிக்கல் நிறைந்தவையாக இருப்பினும் அவற்றைத் தோற்றுவித்த சமூகங்களால் எளிதில் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுவிடும். புதிய மரபுகளை எழுதிவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற தேவை அச்சமூகங்களுக்கு ஏற்படுவதில்லை.

சிக்கல்கள் நிறைந்த மரபுகளையும் பிறழாமல் கடைப்பிடிக்கக்கூடிய தன்மை ஒருவழிப் பரிணாமத்தில் வளர்ந்த சமூகங்களுக்கு மட்டுமே உண்டு. கீழ்நிலைப் பண்பாட்டினர், மேல்நிலைப் பண்பாட்டினர் மீது மேலாண்மை பெற நேரிட்டபொழுது சமூகம் திரிந்துவிடுகின்றது. திரிந்த சமூக அமைப்பில் கீழ்நிலைப் பண்பாட்டினர், வளர்ந்த பண்பாட்டின் கூறுகளைத் தமதாக்கிக்கொள்ள முயல்வர். பொதுவாக, இம்முயற்சியில் கீழ்நிலைப் பண்பாட்டினரால் வளர்ந்த பண்பாட்டுக்குரிய மரபுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க முடிவதில்லை. எனினும் புதிதாகச் சுவீகரித்துக் கொண்ட வளர்ந்த பண்பாட்டு நிலையில் அச்சமூகம் நீடிக்கவேண்டுமானால் குறைந்தபட்ச மரபுகளையேனும் கடைப்பிடிக்க வேண்டும். இப்பின்னணியில்தான் திரிந்த சமூகங்கள் தாங்கள் கடைப்பிடித்தாக வேண்டிய புதிய மரபுகளை எழுத்தில் பதிவு செய்து சட்டமாக்குகின்றன. சட்டங்கள் மீறப்படும் பொழுது கடுமையான தண்டனைகளும் இச்சமூகங்கள் வகுத்துக்கொண்டுள்ளன.

உதாரணமாக, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை, கீழ்நிலைப் பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளும் பொழுது, ஆணின் வாரிசுரிமையைச் சாத்தியமாக்கக்கூடிய பெண்ணின் கற்புநெறி குறைந்தபட்சத் தேவையாகிவிடுகிறது. பெண் கற்பு நெறியைக் கடைப்பிடிக்காவிடின், ஆணின் வாரிசுரிமைக்கு உத்தரவாதமில்லாமல் போய்விடும். இது தனியுடைமை சமூக அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துவிடும். எனவேதான், பண்டைய எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பெண்ணின் கற்பு நெறிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன. இச்சமூகங்கள் கற்பு தவறிய பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை வகுத்ததுடன், கற்பு தவறாமைக்கு மிகக் கடுமையான வழிமுறைகளையும் கைக்கொண்டன. அரேபியப் பெண்கள் உடலை முழுவதுமாக மூடிக்கொள்ளுதல், சில பண்டைய சமூகங்களில் அல்குல் பூட்டு பயன்படுத்தப்படுதல் போன்ற வழிமுறைகள் கற்புநெறியைக் கடைப்பிடிப்பதற்கென பின்பற்றப்பட்டன. கற்புநெறிக்கு இத்தகைய கடுமையான சட்டங்களையும், வழிமுறைகளும் கைக்கொண்ட பெரும்பாலான சமூகங்களில், மணவிலக்கிற்குப் பின்னரோ, கணவனின் மறைவுக்குப் பின்னரோ, பெண்ணின் மறுமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் இத்தகைய எழுதப்பட்ட சட்டங்களைக் கொண்டிராத தமிழ்ச் சமூகத்தில் பெண்ணின் கற்பு நெறி மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளதுடன், மறுமணமும் (மேலோர் மூவராகிய உயர்குலத்தில்) அனுமதிக்கப்படுவதில்லை. திரிந்த பண்பாட்டிலோ பெண்ணின் மறுமணத்தை அனுமதிக்காமல், சமூக ஒழுங்கினைக் காக்க முடியாது என்பதால் கற்பு நெறியில் சிறிது தளர்வு மேற்கொள்ளப்பட்டு மறுமணம் அனுமதிக்கப்பட்டது. கீழ்நிலைப் பண்பாட்டினர் புதிதாக மேல்நிலை பண்பாட்டை தமதாக்கிக் கொள்ளும் முன், அவர்களிடையே தாய் வழி சமூக அமைப்புக் கூறுகள் மேலோங்கியிருந்தால், மாறிய பண்பாட்டு சூழலில் மறுமணத்தை தடை செய்து வாழ்வதற்கு அச்சமூகத்தினரால் முடியாமல் போய்விட்டது என்பதே உண்மை.

திரிந்த பண்பாட்டின் அறிஞர்கள், அதிகம் பண்படாத தங்கள் சமூகம், அதிக பட்சமாக கடைப்பிடிக்க முடியும் என கருதிய பழைய மரபுகளையெல்லாம் சட்டமாக்கி விடுகின்றனர். எனினும், புதிய பண்பாட்டு மட்டத்தில் கடைப்பிடித்தே தீரவேண்டிய மரபுகளைத் தவிர பிறவற்றிற்கு இச்சமூகத்தினர் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே தான் பண்டைய சமூகங்களில் எழுத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கும், நடைமுறைப்படுத்தப்பட்டவற்றுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை காண முடிகின்றது.

வடஇந்தியாவில், மகாபாரதம் தொடர்பான புராண கால க்ஷத்திரியர் ஓரளவு பண்பட்ட சமூகத்தினராவர். பண்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மூல மரபுகளிலிருந்து அவர்கள் ஓரளவே திரிந்திருந்தனர். இவ்வரச வருணம், வட இந்திய அரசியல் அரங்கிலிருந்து மறையும் வரை அங்கு சட்டங்கள் எழுத்தில் கொண்டு வரப்படாமல் மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டன. இவர்கள் கடைப்பிடித்த மரபுகளை மகாபாரதம், மற்றும் இராமாயணம் மூலம் அறிய முடிகின்றது. கி.மு. 600க்குப் பின் சூரிய சந்திர குலத்தவரான புராண கால அரச குடியினரின் பணி மக்கள் (செவிலித்தாய், தோழி, பார்ப்பார் போன்ற வாயில் மரபினர்) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம் வட இந்தியச் சமூகம் திரிந்து விடுகின்றது. இக்காலக் கட்டத்திற்குப்பின் தான் அங்கு தர்ம சாஸ்திரங்களும், அர்த்த சாஸ்திரம், மனுஸ்மிதி போன்ற பிற சட்ட நூல்களும் எழுதப்பட்டன. ஆனால் இவ்வெழுதப்பட்ட சட்டங்களுக்கும் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக ரோமிலா தாப்பர் கூறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கி.மு. 600க்குப்பின் தோன்றிய திரிந்த பண்பாட்டினராகிய வடஇந்திய அரசவம்சத்தினரால் பண்டைய மரபுகள் முழுவதையும் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதே இதற்குக் காரணமாகும்.

சட்டங்களை எழுதிவைத்துக் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வளர்ந்த பண்பாட்டு நிலையிலும், அறங்களை மரபாகக் கடைப்பிடிக்கும் சமூகங்கள் எளிய பண்பாட்டு நிலையிலும் உள்ளன என்கிற தவறான கருத்தோட்டம் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றது. சமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் எழுதப்படாத சட்டங்களை மரபுசார் சட்டங்கள் என பண்பாட்டு மானுடவியலாளர் கூறுவர். மரபுசார் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயங்களுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ சமுதாய ஒழுங்கு கட்டிக்காக்கப்படுவதாகப் பண்பாட்டு மானுடவியலாளர் கருதுவது கவனத்திற்குரியது.

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மரபுசார் சட்டங்கள் சமகாலத்தில் வடஇந்திய சமூகத்தினரால் எழுத்தில் கொண்டு வரப்பட்டு ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டச் சட்டங்களை விட சிக்கல்கள் நிறைந்ததாகவும், செவ்வியல் தன்மை கொண்டதாகவும் இருந்ததை மேற்கொண்டு விவாதிக்க போகும் தலைப்புகளில் காணலாம்.