பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

இசைந்தாள் அவளும் இருதயம் கொடுக்க

16.இசைந்தாள் அவளும் இருதயம் கொடுக்க... !!!

இவளின் அழகினை
இவனும் ரசிக்க
இன்னிசை கேட்டு
இன்பத்தில் மிதக்க
இமயத்தில் அமர்ந்து
இருப்பதாய் நினைக்க
இடைவெளி இன்றி
இருவரும் பார்க்க...

இல்லையென தோணும்
இடுப்பினை அசைக்க
இரவினில் வண்டுகள்
இசைகளை மீட்க
இதமான காற்றினில்
இலைகளும் சிலிர்க்க
இசைந்தாள் அவளும்
இருதயம் கொடுக்க...

இரத்தின கல்லென
இனியவள் ஜொலிக்க
இவளே உயிரென
இனியவன் நகைக்க
இயக்கமே இன்றி
இயல்பினை தொலைக்க
இயலுமோ காதலை
இன்றும் மறக்க...

இரத்தொன்று காதலின்
இடையினில் குதிக்க
இவனே மூச்சென
இருந்தவள் பதைக்க
இப்படி அப்படி
இன சனம் கதைக்க
இடர்கள் முளைத்தது
இவர்களை பிரிக்க...

இதயத்தின் துடிப்பது
இடியென முழங்க
இயற்கையின் மழை போல்
இரு விழி நனைக்க
இறகுகள் ஒடிந்ததாய்
இளங்குயில் துடிக்க
இரையின்றி அடிக்கடி
இரைப்பையும் தவிக்க...

இமையென நினைத்த
இறைவனும் ஒழிக்க
இளகிய மனசும்
இரும்பாய் விரைக்க
இழவொன்று விழுந்ததாய்
இடமே சலிக்க
இன்முகம் காட்டி
இல்லமும் பகைக்க...

இருந்தது இருந்த
இடத்தினில் கிடக்க
இருட்டினில் அப்புவின்
இருமலும் கேட்க
இக்கரை தனிலே
இளையவன் முறுக்க
இழந்தவள் இதயம்
இறப்பினை அணைக்க ...

இங்கிதம் இல்லா
இருப்பவர் இருக்க
இரனியர் பிறப்பில்
இவர்களும் பிறக்க
இறுகிய மனத்தவர்
இவ்விடம் நிலைக்க
இஷ்ட தெய்வங்கள்
இல்லையோ தடுக்க...

இம்சை அரசர்கள்
இருப்பிடம் தகர்க்க
இயம்பினால் போதும்
இங்கேயே மரிக்க
இரக்கத்தை மறந்த
இம்மண்ணை துதிக்க
இணக்கமும் உண்டோ
இலக்கணம் படைக்க!!!

அப்பொழுதும் அழுகின்றேன் பெண்களை நினைந்து

15.அப்பொழுதும் அழுகின்றேன் பெண்களை நினைந்து !!!

இதமான காற்று மெல்ல
என்னை தொட்டுச் செல்ல சில்லிட்டது உடல் ...
மெதுவாய் திரும்பி பார்க்கின்றேன் .....
அசைய முடியவில்லை
நேற்று வாங்கிய அடி உதை காரணமாய்
நொறுங்கி போய் இருந்தேன் ...
நேற்று இரவெல்லாம் பெய்த மழையில்
தெப்பமாய் நனைந்து போய் இருந்த எனக்கு
இன்று எரிக்கும் வெயில் கதகதப்பாய் இருந்தது ...
ஏதோ குத்துவது போல் உணர்வில்
அவசரமாய் பார்க்கின்றேன்
ஈர்க்கு குச்சி ஒன்று என் மேல்
குத்திக் கொண்டிருந்தது ...
ஒரு தடியின் மேல் சாய்ந்தபடி
மீண்டும் கண்ணயர்கிறேன் ...
என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்து கொண்டிருக்கும் வேளை
எனக்கு ஏற்பட்ட இன்ப துன்பங்களை
அசைபோடுகிறது மனது ...
என் பிறப்பை பற்றி சொல்ல
எனக்கு தெரியவில்லை
ஏனெனில் என்னை செய்தவரை
தான் எனக்கு தெரியும் ...
விதம் விதமாய் உடைகள் எனக்கு ...
என் உடலை அலங்கரிக்கும் உடைகள்
மற்றவர் கண்களை பறிக்கும் அளவு
பிரகாசமாய் இருக்கும் ...
குழந்தை முதல் கிழவி வரை
என்னை தேடாதவர்களே இல்லை
எல்லோருக்கும் நான் தேவை படுவேன் ..
அது அவர்களுக்கு தேவை ஏற்படும் வரை தான் ..
அதன் பிறகு இப்படி தான் செத்து மடிய வேண்டும் ..
கொண்டாட்டங்கள் திருவிழாக்கள்
நடக்கும் இடங்களில்
நானும் நிற்பேன் என் தோழிகளுடன் ...
பல பேர் வருவார்கள் விலை பேசுவார்கள்
அடி மாட்டு விலைக்கு கேட்பார்கள்
வேண்டாம் என்பார்கள் வேண்டும் என்பார்கள் ...
எம் தலை எழுத்தை பார்த்தீர்களா?
வேண்டாம் என்றாலும் நாம் பேச கூடாது ..
வேண்டும் என்றாலும் நாம் பேச கூடாது ..
எம் சந்தோஷத்தை எப்பவுமே யாருமே கேட்பதில்லை ..
வலுகட்டாயமாய் அனுப்ப படுவோம்
இஷ்டம் இருந்தாலும் இல்லை என்றாலும் ..
ஒவ்வொரு வீட்டு பெண்களும் எம்மை கண்டால்
ஒரு கணம் நிண்டு பார்ப்பது வழமை
எனக்கு கூட பெண்களை ரொம்ப பிடிக்கும் ...
அதுவும் என்னை விருப்ப பட்டு கேட்ட
சுகுணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
சுகுணா ஒரு அழகு தேவதை ...
அவளோடு நானிருந்தால் இன்னும் அழகு என்று
அவள் கணவன் எண்ணி இருப்பான் போலும் ..
ஆறு மாத காலமாய் சுகுனாவுடன் பழகிய எனக்கு ..
அவள் எப்பவுமே தீங்கு செய்ய வில்லை ...
அப்பப்போ என்னை தொட்டு பார்ப்பாள் ...
அடிக்கடி என்னை சுத்தம் செய்வாள்
அவள் உறக்கத்தில் அசைகின்ற போதெல்லாம்
நான் சிரித்துக் கொள்வேன் ...
அவள் அவசரமாய் வேலைகள் செய்யும் போது
அவளோடு பேசிக்கொள்வேன் அடிக்கடி ...
பதிலே சொல்ல மாட்டாள் ..
பதிலுக்கு ஒரு புன்னகை ..
சில நேரம் நான் அவளை காய படுத்தி இருக்கிறேன்
திட்டவே மாட்டாள் ஷ் ஷ் என்று சொல்லுவாள் ..
அத்தோடு சரி ......
அவள் கணவன் இல்லாத நேரங்களில்
அவள் தனியாக பேசுவதை எல்லாம் கேட்பது நான் தான்
பரதமும் ஆடுவாள் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல்
அப்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரிப்பேன் ...
அவள் ஆடி அசைகையில் என் சிரிப்பு அதிகமாகும்
சில நேரங்களில் அவள் சோகமாய் இருப்பாள்
அந்த சோகம் என்னையும் ஒட்டிக் கொள்ளும் ..
அப்போ கூட என்னை எண்ணிக் கொள்
என்று அமைதியாய் இருப்பேன்..
பாவமாய் இருப்பாள் அவள் நல்லவள்
நான் நினைத்துக் கொள்வேன் ...
நான் அவளோடு போன இடங்கள்
ஒரு நாளும் மறக்காது ..
அவள் கிராமத்தில் அழகிய நீர்வீழ்ச்சியில் குளித்தது ..
கோயில்களுக்கு சென்றது ...சினிமா பார்க்க சென்றது ..
இப்படி நிறைய இடங்கள் .. அங்கு எல்லாம்
அவள் கூடவே இருந்தேன்
அவள் துக்கங்களின் போது கூட
நான் பிரிய முற்படவில்லை ..
என்றும் போல் அன்றும் வேலைகளில்
மும்முரமாக இருந்தாள் அவள் ..
தொலைபேசி மணி அழைத்துக்கொண்டே இருந்தது ..
தனக்கு தானே பேசி கொண்டாள் .
. ''யாரு இந்த நேரத்துல ''
நானும் அவளை பார்கின்றேன்
என்னிடம் தான் கேட்டாளோ?
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் யாருமே இல்லை ..
தொலைபேசியை கையில் எடுத்தவள்
''யாரு பேசுறது ''என்றாள்..
அந்த பக்கம் கேட்ட ஆண் குரலில் பதற்றம் தெரிந்தது ....
அய்யோ.............. என்று வீறிட்டாள் சுகுணா .........
அப்படியே நிலத்தில் சரிந்து விழுந்தாள்...
எனக்கு ஒன்றுமே புரியவில்லை ..
யாரும் வீட்டில் இல்லை என்ன
செய்வதென்று தெரியவில்லை ..
கதறவேனும் போல உள்ளது ஆனால் எப்படி ?
சுகுணா எழுந்திருக்கவில்லை
எதுவும் தெரியாமல் நான் குழம்பி போனேன் ...
தொலை பேசியில் யாரோ
கூப்பிட்ட வண்ணம் இருக்கிறார்கள் ..
அடுத்த சில நொடிகளில்
வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம்
யாரோ உள்ளே வரும் அரவம் ....
கதவு பலமாக தட்ட படுகிறது ..
ஜன்னல் வழியா சத்தம் கேட்கிறது
அவங்க மயங்கிட்டாங்க போல ..
ஜன்னல் வழியாக உள்ளே வந்த ஒருவன்
கதவை திறக்கின்றான்
நான்கைந்து பெண்கள்
ஓடி வந்து சுகுணாவை தூக்க
யாரோ நான்கு பேர் எதையோ தூக்கி வருகிறார்கள்
வராந்தாவில் வைக்கிறார்கள்
வெள்ளை துணியால் சுற்றப் பட்டுள்ளது ..
எல்லோரும் அழுகிறார்கள் ..
ஒப்பாரி சத்தம் கேட்கிறது ...
செய்வதறியாமல் நான் ஸ்தம்பித்து நிக்கின்றேன் ..
சுகுணா ஓடிச் சென்று அந்த
வெள்ளை துணியை மெதுவாய் அகற்றுகிறாள்
அவள் கணவன் இறந்து கிடக்கின்றான் ..
அதிர்ச்சியால் வாயடைத்து
நிக்கின்றாள் அவள் .. ...நானும் தான்
தன் தலையில் அடித்து கொண்டு அழுகிறாள் அவள்
எனக்கும் வலிக்கிறது அவளை பார்க்கையில் ..
சன கூட்டம் அதிகமாகியது
யார் யாரோ வருகிறார்கள் போகிறார்கள்
மறுநாள் அந்த உடலை
கொண்டு போய் விட்டார்கள் ...
எரித்து விட்டதாக யாரோ பேசுகிறார்கள் ..
சுகுணா ஒரு மூலையில்
விசும்பிக் கொண்டிருக்கிறாள் ..
பாவம் அவள் நினைத்து கொள்கிறேன் நான் ...
திடீர் என்று சில பெண்கள்
வீட்டுக்குள் நுழைந்தார்கள்
சுகுணாவை அழைத்துக்கொண்டு
போனார்கள் பின் புறமாக
அவளை இருத்தி விட்டு
எதையோ சொல்கிறார்கள் ...
எனக்கு கோபம் கோபமாய் வந்தது ...
அடுத்த நொடி அவர்கள் என்னை
அடித்து நொறுக்குகிறார்கள் ..
நான் சுகுணாவை
பரிதாபமாய் பார்க்கின்றேன் ..
சுகுணா வேண்டாம் வேண்டாம்
விடுங்கள் விடுங்கள் என்று அலறுகிறாள்
அவர்கள் அதை பொருட்படுத்தாமல் என்னை
அடித்து நொறுக்குவதில் கவனமாக இருந்தார்கள் ..
அடித்த அடியில் நொறுங்கி போகிறேன் நான்
உடலெல்லாம் துண்டு துண்டாக சிதறுகிறேன்
நிலமெங்கும் சிதறிக்கிடந்த என்னை
கூட்டி குப்பையில் போட்டு விட்டார்கள் ...
நேற்று பெய்த மழையில் வெள்ளம் பெருக்கெடுத்தது ..
அழகு ஜொலிக்கும் நான் இதோ
மழை வெள்ளத்தில் அடித்து கொண்டு வந்து
ஆற்றுக்குள் விழுந்து மிதக்கின்றேன் ...
தூரத்தில் ஒரு வெள்ளை உருவம் ..
மூடத் துடிக்கும் விழிகளை திறந்து பார்க்கின்றேன் ..
வெண்ணிற உடையில் சுகுணா விதவையாய் ,,
சோகம் தொண்டையை அடைக்கிறது ....
கணவன் இறந்து விட்டால்
பூச்சூடுவதில்லை பூவுக்கு விடுதலை ...
பொட்டு வைப்பதில்லை அதற்கும் விடுதலை
மஞ்சள் பூசுவதில்லை மஞ்சளுக்கு கூட விடுதலை
இவைகளை விட்டு விடும் அவர்கள் என்னை மட்டும்
ஏன் துவம்சம் செய்கிறார்கள்
அந்த நாளில் சொல்வார்கலாமே
அவன் இறந்தால் அவளும் உடன் கட்டை ஏறுவாள் ....
அன்று தொட்டு இன்று வரை
அவள் கணவன் இறந்தால் நாங்கள்
உடன்கட்டை ஏறுவதை என்னவென்று சொல்வீர் ?
எனக்குள் நினைத்துக் கொள்கிறேன் நான்
''அவள் விதவை என்றாள் நாங்கள் நொறுங்கி விடுவோம் .''...
வளையல் எனப் பெயர் கொண்டதால் ......
மடிகின்றேன் ஆற்றிலே மிதந்து மிதந்து
உயிர் தனை தொலைக்கின்றேன் நீருக்குள் விழுந்து விழுந்து ....
அப்பொழுதும் அழுகின்றேன் பெண்களை நினைந்து நினைந்து ....



சிந்து சிவசங்கர்

மௌனித்துக் கொள்கிறேன் ஒரு நாள்

14.மௌனித்துக் கொள்கிறேன் ஒரு நாள் .......

நான் யார் தெரியுமா ?
ஆமாம் உங்களுக்கு தெரியும்
நான் யார் என்று ..
எனக்கும் தெரியும்
இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள் ...

சூரியன் அஸ்தமிக்கும் அதி காலையில்
பின்பு மறைந்து கொள்ளும் அது மாலையில்
ஓய்வெடுக்கும் போல
சில மணி நேரம் கண்ணில் படுவதே இல்லை ...

நிலவு ஒளிதரும் பாதி மாதம்
ஒழிந்துக் கொள்ளுமோ மீதி மாதம்
அதற்கும் ஓய்வு தேவை போல
மூவைந்து நாட்கள் எங்கே போகின்றது ...?

காற்று கூட விட்டு விட்டு தான் வந்துரசும்
காற்றை உணராத நேரங்கள் அதன் ஓய்வு நேரம் போல
சில நேரங்களில் மறைகின்றதே ...

ஆனால் நான் ஓய்வே எடுப்பதில்லை
மற்றவர்க்காக உழைப்பதே என் முக்கிய வேலை
ஆனால் அதுவே என் சந்தோஷம்
நான் என் தொழிலை தெய்வமாய் மதிக்கிறேன் ...

சில நேரங்களில் எனக்கு உடல் நிலை பாதிக்கும்
அப்ப கூட நான் வேலை பார்க்க தான் இஷ்ட படுவேன்
என் எஜமானிகள் விட மாட்டார்கள் எனக்கு சிகிச்சை அளிப்பார்கள்
அவசர பட்டு அவர்கள் நல்லவர்கள் என்று எண்ணாதீர்கள்
நஷ்டம் வந்திடுமே என்ற பயம் ....

தினமும் நான் வேலைக்கு செல்கையில்
பலதரப்பட்ட மனிதர்களை காண்கின்றேன்
தத்தி தாவும் பாலகனும்
தள்ளாடும் பாட்டனும்
பூச்சூடிய பூவையும்
மீசைமுறுக்கும் இளைஞனும்
தலையை நீவும் அம்மாவும்
தட்டி கொடுக்கும் அப்பாவும்
பட்டை போட்ட சாஸ்திரியும்
சிலுவை சுமந்த மத குருவும்
பிச்சை எடுக்கும் ஆண்டியும்
அங்காங்கே திருடரும்
நயவஞ்சக காரனும்
கண் தெரியா குருடனும்
காது கேளா செவிடனும்
பொய் சொல்லும் புளுகனும்
உண்மை பேசும் நல்லவனும்
சொல்லி சொல்லி அலுத்திடும்
எத்தனையோ இன்னும் இன்னும் .....

உணர்வு எனக்கு இல்லை என்பார்
இருப்பவர் இங்கு உணர்பவரா ?
சிரிப்பெனக்கு வருவதில்ல
சிரிப்பவர் எல்லாம் நல்லவரா ...?
கண்ணீரும் வருவதில்லை
அழுவதனால் என்ன பயன் ...?

ஜாதி மதம் பார்ப்பதில்லை
பேதம் என்றும் அறிந்ததில்லை
உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும்
ஒரே நிலையில் வைத்திடுவேன்
நான் முற்போக்கு வாதியல்ல ...

நான் யோக்கியவானில்லை
நானும் பல குற்றங்கள் செய்திருக்கிறேன்
ஆனால் இதுவரை அதற்காக தண்டனை அனுபவித்ததில்லை
அது கூட என் குற்றமில்லை
யாரும் எனக்கு தண்டனை வழங்கவில்லை ...

தண்டனை என்றதும் தான் நான் சொல்ல வந்த கதை
என் மனதில் நிழலாடுகிறது
அதிகாலையில் தினமும் நான் வேலைக்கு செல்கையில்
அவளை பார்ப்பேன் ஆஹா அழகானவள்
இப்படி நானே வியக்கும் அளவு அழகானவள் அவள் ..

அவள் என்னோடே வந்து போவாள்
ஆனால் நான் பேசியதே இல்லை
அவளை பார்க்கும் போதெல்லாம்
அவள் கை முதல் முதல் என்னை தொட்ட நாள் நினைவுக்கு வரும் ...

தினமும் தான் அவள் என்னை தொட்டு தொட்டு பேசுகிறாள்
ஆனாலும் அந்த முதல் நாள் ஏனோ நினைவை விட்டு செல்லவில்லை
அவள் தொடுவதென்னவோ என்னை தான்
ஆனால் அவள் பேசுவது என்னோடல்ல
ஒரு ஆடவனுடன் பேசுவாள் ..

அந்த ஆடவனை அடிக்கடி பார்க்கின்றேன்
அந்த அழகியுடன் மட்டுமல்ல பல அழகிகளுடன் ...
அவள் அதை அறிந்திருக்க நியாயமில்லை
சொல்லி விட எனக்கும் வாய் இல்லை ....
மௌனித்துக் கொள்கிறேன் ...

திடீரென்று ஒரு நாள் அவளை பார்கிறேன்
சோகமே வடிவாய் அழுது வீங்கியஅவளது அழகிய விழிகள்
கண்ணீரை துடைத்து துடைத்து சிவந்து போன கன்னங்கள் ...
இடை இடையே கேட்கும் விசும்பல் ..பரிதாபமாய் இருந்தாள்....

வழமை போல என்னை தொட்டதும்
உணர்ந்தேன் அவள் உடல் கொதிப்பதை பதறினேன்
அது அவளுக்கு தெரியவில்லை
அவள் உடலும் மனதும் நொந்து போனவளாய் காணப்பட்டாள்
எனக்குள்ளே நான் அழுது கொண்டேன் ...

மாலை நேரம் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது
நான் வேகமாய் வந்து கொண்டிருந்தேன்
அப்போது எதிரில் ஓர் உருவம்தள்ளி போ தள்ளி போ கூக்குரலிடுகிறேன்
யோசிக்கிறேன் என் மூளைக்கு எட்டவில்லை ...எ
ன் மீது மோதி மறைந்தது அந்த உருவம்
வீலென்று ஒரு சத்தம்
அதிர்ச்சியோடு நான் செல்கிறேன் ...........

மறு நாள் நான் வேலைக்கு செல்கிறேன்
போகும் வழியில் ஒரே கூட்டம் எட்டிப் பார்க்கிறேன் ..
ஒரு கணம் ஆடிப் போகிறேன் ...
என் அழகி இரத்த வெள்ளத்தில் இரு கைகளும் இல்லாமல் ...

பார்த்துக் கொண்டே சென்றேன்
என்னை தொட்டு தொட்டு பேசிய கைகள்
அவை இப்பொழுதில்லை
அழவும் முடியவில்லை
பேசவும் முடியவில்லை
யாரோ பேசுவது காதில் விழுகிறது ...

இவன் தான் அடிச்சுட்டு போய்ட்டா
ன்என்னை காட்டி சொல்கிறார்கள்
திடுக்கிடுகிறேன் அய்யோ நானா அவளை போய் நான் எப்படி ...?
அப்போ அந்த உருவம் ....?புரிந்து விட்டது எல்லாம் ...

சோகத்தில் தத்தளிக்கிறேன்
தண்டனை தருவார் என்றால் அதுவும் கிடைக்கவில்லை
என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்னோடு வருபவர்கள் பலவிதமாய் விமர்சிக்கிறார்கள்
என் அழகியை பற்றி
கொதித்து போகிறேன் ....

அவள் நல்லவள் இல்லை இப்படியும் சொல்கிறார்
அவள் கெட்டு போனவளாம்அப்படியும் சிலர்
காதலிச்சவன் எமாத்திடானாம் அட கடவுளே......

கோபம் தலைக்கேறுகிறது என்ன செய்யலாம்
இனிமேல் இந்த வழியில் செல்ல எனக்கும் இஷ்டமில்லை
மௌனிக்க நினைக்கிறேன் நிரந்தரமாய்
அவளை பற்றி அவதூறுகள் பேசுபவருக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
சிந்திக்கிறேன் ...

இப்பொழுதே இதோ கொடுக்க போகிறேன்
கீழே எட்டி பார்க்கின்றேன்
நான் தப்ப மாட்டேன் மனதுள் பட்டது
அபபடியே குதிக்கிறேன்
இதோ உருண்டு உருண்டு போகிறேன்
சாகிறேன் இனிமேல் வர மாட்டேன் .....

எப்பவும் இரு பாதையில் பயணிக்கும் நான்
முதல் தடவையாய் தடம் புரள்கிறேன்
இதோ இதோ தண்டவாளங்களை விட்டு
முற்றும் முழுதாய் நான் ..சுக்கு நூறாய் போகிறேன் ...
அவளை கொன்றதுக்கு நானே கொடுத்துக் கொள்கிறேன் எனக்கு தண்டனை
கடைசி மூச்சுடன் நினைத்துக் கொள்கிறேன் அவளை....
ஈன குரலில் யாரோ சொல்கிறார்கள்
ரயில் புரண்டு போகுது ...ஒண்டும் மிஞ்சாது .....
தட தடக்கும் நான் இன்று மௌனித்து விட்டேன் ...



சிந்து சிவசங்கர்

உதித்தாயே

13.உதித்தாயே !!!

அடிமைகளாய் வாழ்ந்தோம் எம்மண்ணில்
அதை தடுக்க தான் நல்லதோர் திருநாளாம்
கார்த்திகை இருபத்தாறாம் நாள்
வந்துதித்தாயோ இம்மண்ணில்....

உன் முகவரி விளங்க நின்ற வீடும்
அளவில்லா புகழ் வாய்ந்த நாடும்
ஈழம் எனும் தமிழரின்
வீடும் நாடுமாய் இருந்ததே ...

வானமும் வயலும் வீதியும் வாவியும்
உயிர்களும் மரங்களும் காற்றும் மணலும்
எஞ்ஞான்றும் ஏற்றமுற எழுந்து நின்றதே
நீ சொல்லும் ஒரு சொல்லில் ....

இணையில்லா பீடு பெற்ற ஈழத்தின் வேந்தனே
அயல் நாட்டு அரசியலும் அளவளாவும் அளவு
நயத்தகு நாகரீகம் கொண்ட
நல்லவனாம் நகைமுகனாய் இருந்தாயே ...

யார் உன்னோடு சமர் புரிய வரினும்
உன் துப்பாக்கி குவித்ததே நினக்குன்று
வீரத்தை உன் வாகை காட்டியதே
நெஞ்சின் ஈரத்தை உன் ஈகை காட்டியதே ...

விரிந்த மார்பும் வீங்கிய தோளுமாய்
விளங்கினையே மதப்பு மிகக்கொண்டு
அடங்கல் மடங்கல் ஒடுங்கல் நடுங்கல்
எல்லாம் என்னவேணு அறிந்திருக்க மாட்டாயே ...

உன் பொறி கக்கும் விழிகள் வழங்கும் வாள் முன்னே
வெண்ணிலவும் வெயிலும் வெள்கிப் பொய் தஞ்சமாகுமே
நீ ஆட்ட நினைத்து ஆட்டி இருந்தால்
ஆடிப் போய் இருக்குமே எதிரியின் தேசமெல்லாம் ...

தருக்கேறி தான்தோன்றித் தனமாய் திரிந்தவன் அல்ல
உன்னை திரைந்த பால் என்று சொல்ல ..
தாய் மண்ணை காக்க ஊண் உறக்கம் தொலைத்து
அரை நொடியும் உனக்காக வாழாத உனக்கு இன்று பிறந்த நாள் ...

உன் வீரத்தை விடிய விடிய வர்ணித்தாலும்
தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமாகி விடும்
காவியமாய் போனாயா ..? காட்டு வழி சென்றாயா ..?
காற்றோடு கலந்தாயா..? நாமறிய வாய்ப்பில்லை ...

ஆனால் உன் நாமம் மட்டும் எங்கள் நெஞ்சில்
என்றும் மறையாமல் ... வாழ்ந்து கொண்டே இருக்கும் ...
ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் வரினும் அழியா புகழில்
பிரபாகரன் எனும் உந்தன் நாமம் ......என்றென்றும் ...................

சிந்து சிவசங்கர் .

அவன் தமிழன் என்பதனால்

12. அவன் தமிழன் என்பதனால் ...!!!

அலை கடலின் ஓசையிலே
அஸ்தமிக்கும் நேரத்திலே
அரை உயிராய் மறைந்தவரை
அடையாளம் சொன்னதுவோ ..?

அவனியிலே உதித்ததனால்
அவன் தமிழன் என்பதினால்
அணு அணுவாய் சிதறுண்டு
அகாலமாய் போனதுவோ ...?

அந்தி சாயும் பொழுதுகளில்
அன்னையரின் வயிற்றினிலே
அக்கினியை கட்டி வைக்கும்
அகோரங்கள் மறந்ததுவோ ...?

அன்பு மிக்க தமிழ் மொழியை
அறுக்க துடிக்கும் கயவர்களை
அம்பெய்து கொன்றாலும்
அழுவதற்கு யாரும் உண்டோ ...?

அள்ளி அள்ளி கொடுத்தாரை
அகதியாக்கி துரத்தி விட்ட
அரக்கர்களின் ஈனச் செயலை
அறிந்தும் தலையை குணிவதுவோ..?

அருகதையே அற்றவர்கள்
அண்டி வாழ நினைக்கையிலே
அல்லலுறும் எம்மவர்கள்
அனாதையாய் போலாமோ ...?

அழகான எம் மண்ணில்
அசைந்தாடிய மரச் செடிகள்
அவமானம் தாங்காமல்
அழியும் கதையை அறிவீரோ ...?

அத்தி மர நிழலினிலே
அப்பம் சுட்ட ஆச்சி கிழவி
அடுப்பில் தள்ளி எரித்தகதை
அத்தனையும் நினைவிலுண்டோ...?

அம்மன் கோவில் தேர் இழுக்க
அர்ச்சகரை தான் விரட்டி
அநியாயமாய் கொன்ற நினைவு
அதுக்கிடையில் மறைந்திடுமோ...?

அட்டைகளாய் ஒட்டிக் கொண்டு
அபய குரலை எழுப்புகின்ற
அறுந்து போன துரோகிகளும்
அசராமல் நிற்பதுவோ ...?

அல்லும் பகலும் பாடு பட்டு
அரிதரிதாய் சேர்த்து வைத்த
அத்தனையும் ஒரு போரில்
அலங்கோலம் ஆகிடுமோ ...?

அட்டகாச விளைச்சல்களை
அறுவடைகள் செய்ய முன்பே
அச்சுறுத்தி நசுக்கியதை
அந்நியரும் அறிவாரோ ...?

அம்பிலியே ஒளி கொடுக்க
அகதியாக மர நிழலில்
அமர்ந்திருக்கும் நம் உறவை
அப்படியே விடலாமோ ...?

அப்பு ஆச்சி வாழ்ந்த வீட்டில்
அப்புஹாமி வாழ்வதற்கு
அதிகாரம் கொடுத்தவர்கள்
அலட்டுவது சரி தானோ ...?

அரும்பு மீசை முலைக்கு முன்னே
அவர்கள் கழுகு பார்வையிலே
அகப்பட்ட இளசுகளை
அடித்தடித்தே முடித்ததுவோ ...?

அண்டை நாட்டு பெரியோரும்
அன்று நடந்து முடிந்தவற்றை
அலசி பார்க்க மறுக்கும் நிலை
அவசரமாய் தோனலையோ...?

அருவருப்பாய் பார்த்து எம்மை
அவமானப் படுத்தியதை
அயர்ந்து தூங்கும் நேரத்திலும்
அடி நெஞ்சை தொட வில்லையோ ...?

அற்புதமாய் ஓங்கி நின்ற
அருமையான எம் தேசம்
அகந்தை கொண்ட மனிதர்களால்
அம்மணமாய் ஆனதுவோ ...?


சிந்து சிவசங்கர் .