பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

துருவ நட்சத்திரங்கள்

6.துருவ நட்சத்திரங்கள்!

நூறாயிரம் தீபங்கள்
சுடர் விட்டெரிய
நிரந்தர நித்திரையில்
ஆழ்ந்திருக்கும்
மாவீரரேனும்
உயிர் பூக்களே ...

கடந்து போனது
காலங்கள் தான்
நீங்கள் அல்ல ...
உங்கள் செயல்களினால்
இன்னும் இம்மண்ணில்
வாழ்கிறீர்கள் ...

உங்கள் வாழ்க்கை
சரித்திரத்தை
அசை போடுமளவிட்கு
நாங்கள் உயர்ந்தவர்கள் அல்ல ..
எனினும் நினைத்துக்
கொள்கிறோம் உங்களை ...

நளினமான உங்கள் இளமையினை
விவாகரத்து செய்து விட்டு
முதுமையின் மனோபாவத்தை
மணம் முடித்து கொண்டீர்கள் ...

சபலத்திலும் சலனத்திலும்
உபாதையுரும் மனித மனங்களுக்கு
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணம் ஆனீர்கள் ...

நெஞ்சில் உருக்கொள்ளும்
ஆசைகளை புறந்தள்ளி
களத்தினில் காவியமானீர்கள் ...

குரிப்பிழந்து கடந்து போய்விட்ட
காலக் கணக்குகளை
சிதைவுற்று சிதிலமடைந்த
ஞாபக பதிவேடுகளில்
பதித்து விட்டீர்கள் ....

யௌவன நினைவுகளை
அசை போட்டு
அல்லாடிக் கொள்ளும்
பருவம் வரும் முன்பே
பட்டுப் போனீர்கள் ...

அரக்கர்களால் மாய்ந்து
மயானமாகிப் போன
மன ராஜ்ஜியத்தில்
போராட்டத்தை
நிலை நிறுத்தி விட்டீர்கள் ...

பருவத்துக்கு ஏற்ற
அன்பு பாசங்கள்
கருக்கொள்ளும்
மனசுக்கு சுருக்கு மாட்டி
உங்கள் முடிவில்
முழுமை பெற்றீர்கள் ...

தீரா துயரில் நம்மவர் தவிக்க
இருண்ட நீல வானில்
நட்சத்திரங்களாய்
கண் சிமிட்டி சிரிக்கின்றீர்கள் ...

இனி வரும் எங்கள்
யுகங்களிலேனும்
விடுதலையோடு
பூரித்து புளங்காகிதம்
கொள்வீர்கள்
மறு ஜென்மங்களாய் வந்து ...

உங்களை எண்ணி எண்ணி
வானத்தை நோக்குகையில்
ஒன்றே ஒன்று புரிந்தது ...
உயிர் பூக்களே ................!
நிஜமாகவே நீங்கள்
அதிசயமாய் தோன்றும்
துருவ நட்சத்திரங்கள் தான் ...!!!

ஆம் வானில் தோன்றும்
ஒற்றை துருவ நட்சத்திரம் அல்ல ...
எங்கள் மனவானில் தோன்றி மறையும்
நூறாயிரம் துருவ நட்சத்திரங்கள் ...,,!!!!!.


நன்றி சிந்து

மண்ணின் மைந்தர்களே

5.மண்ணின் மைந்தர்களே!

பூமியெனும் மஞ்சத்தில்
உறங்கிவிட்ட உயிர்களே
நிம்மதியை கண்டீரோ ...?
வாழ்வு போதுமென
நிரந்தரமாய் போனீரோ ...?

நித்தம் நித்தம் அழுதிடும்
உறவுகளின் அழுகுரல்
கேட்காமல் மாண்டீரோ ...?
பகைவர் சூழ்ச்சியால்
கூட்டமாய் சாய்ந்தீரோ ...?

இலக்கேனும் கனவது
அழிவதை தாங்காது
மண்ணுக்குள் புதைந்தீரோ ...?
செங்குருதி ஓடத்தில்
மூழ்கி தான் போனீரோ ...?

பட்டமது பறந்திடும்
அழகிய வானிலே
குண்டுதிர்வதை கண்டீரோ...?
வீழ்ந்ததும் பூமியது
எரிவதை பார்த்தீரோ ...?

பிஞ்சுதிர பூவுதிர
காயுதிர கனியுதிர
சோகத்தில் துடித்தீரோ ...?
நெஞ்சினில் நெருப்பை
தான் சுமந்தீரோ...?

குடிசையுடன் கோவிலும்
தரையுடன் படுத்து விட
நிழலின்றி தவித்தீரோ ...?
மர நிழல்கள்
போதுமென துவண்டீரோ ...?

எத்தினை ஆசைகளை
நெஞ்சினில் நீங்களும்
சுமந்து கொண்டு இருந்தீரோ ...?
சொல்லாமல் கொள்ளாமல்
சிதறுண்டு போனீரோ ...?

தாய் கண்ட கனவிலே
விடுமுறைக்கு ஒருமுறை
வீட்டுக்கு வந்தீரோ ....?
கனவது முடியும் முன்
கல்லறையில் படுத்தீரோ...?

தங்கையின் சிறு பாதம்
வாசலில் நின்று
உம்மை தேடுதே கண்டீரோ ...?
பக்கத்திலும் வாராமல்
பாராமல் போனீரோ ...?

தந்தையின் இருமலும்
தாயவளின் முனகலும்
தொலைவினில் கேட்டீரோ ...?
இல்லை தொலைத்து
விட்டு சென்றீரோ ...?

விழிகளில் சுமந்து வந்த
வலிகளை எல்லாம்
வீதியில் விட்டீரோ ...?
வழியின்றி
விதியோடு இணைந்தீரோ ...?

கடந்து வந்த பாதைகளை
கரடு முரடானதென
ஒரு வார்த்தை சொன்னீரோ ...?
வாழ்க்கையில் ஒரு
சுகமேனும் கண்டீரோ ...?

தமிழெனும் ஒரு மூச்சை
தவறாமல் சுவாசித்து
தள்ளாடி போனீரோ ...?
போகையிலும் தமிழன் தான் நானென்று
ஆணவமாய் உரைத்தீரோ ...?

காலன் உம்மை அழைக்க
காவு கொண்டு போக
காற்றோடு இணைந்தீரோ ...?
இதழோரத்தில் மென்னகையை
சோகமாய் விதைத்தீரோ ...?

போகுமிடமெல்லாம்
உம்பெயரை சொல்லும்
உயிர்களை மறபபீரோ...?
இல்லை மறைந்திருந்து
அழகாக ரசிப்பீரோ ...?

பிள்ளைகளை பறிகொடுத்த
அன்னையர் வயிற்றிலே
மறுபடியும் பிரப்பீரோ ...?
புது உலகினை
படைப்பீரோ ....?

நன்றி சிந்து

உயிருக்கும் மேல்

4.உயிருக்கும் மேல் ...!!!



அந்த மலரின் விழியில் இருந்து
ஒரு நீர்த்துளி தரையை தொட்டது ...!
அந்த நிலவு மழை பெய்ததோ...?

நீர்த்துளி தன்னை தொட்டதும்
சிலிர்த்துக் கொண்டது தரை ...!
சில நேரம் மெல்லாளின்
இதையத்தை படித்திருக்குமோ...?

தரை சிலிர்த்ததால் ஒருவன்
பதை பதைத்தான்...!
நிலவின் அன்புக்குரியவனோ ...?

அவள் விழி ஈரத்தை கண்டு
துடி துடித்தது அந்த மீசை ...!
அந்த இரவில் வானில் துடித்து மறையும்
நட்சத்திரங்களையும் விட வேகமாய் ...!
வெறும் அன்பினால் மட்டும் தானோ ...?

அது... நட்பா ...? பாசமா...? காதலா ...?
அவள் அறிந்திருக்கவில்லை ...!
அறிய முற்படவும் இல்லை ...!
அவளுக்காக ஓர் இதயம் துடிப்பதை
அவள் வரமாக நினைத்தாளோ...?

ஆம் அவள் அறிந்திருந்தால்
கருங்கட்பாரையும் கசிந்து விடும்
அவன் காட்டும் அன்பினால் ...!
இருண்ட வானமும் ஒளி தரும்
அவனது பாசத்தால் ...!
வற்றிய கிணற்றிலும் நீர் ஊரும்
அவனது நட்பினால் ...!

போகத்துடிக்கும் அவளது உயிருக்கு
அவனது கைகளால் விஷத்தை தந்தாலும்
அவள் பருகிடுவாள் காதலுடன் ...!
அந்த உயிர் பூ மீண்டும் பூக்கும்
விஷம் அவன் தந்தால்...!
ஆம் அவளுக்கு தெரியும்
அவன் அவளுக்கு உயிருக்கும் மேல் என்று ...!!!


தொகுப்பு : சிந்து சிவசங்கர் .

என்று வரும் அந்த இனிய நாள்

3.என்று வரும் அந்த இனிய நாள்?

மனிதம் வளர்ந்தது நன்று ...
உன்னை மனிதர் அறிய முன்பு ...
நீ வளர்ந்த பின்பு ...
மனிதனை அழிக்கின்றாயே இன்று ...

பாவங்கள் பல செய்தும் ...
சேர்க்க தூண்டும் பாவியே உன்னை ...
நேர்மையாய் உழைப்பவர்க்கு
அடங்கிக் கொள்வாய் கைகளுக்குள் ....
குறு வழியில் செல்வோர்க்கு...
தலை மேலே குவிந்து கொள்வாய் ...

இறந்தவனின் நெற்றியிலே ..
செல்லாத சில்லரையாய் சென்றிடுவாய் ...
அது கூட எரிகையிலே ....
வெட்டியானின் பையுக்குள் புகுந்திடுவாய்...

கருவுக்கும் நீ தேவை ....
கருவறைக்கும் நீ தேவை.....
பிறப்பே நீயாகிப் போனது ஏன் ...

பாவங்கள் பல செய்தும் ...
வீட்டுக்குள் உன்னை அழைக்க ...
பல பேர்கள் காத்திருப்பார் ...

வஞ்சமாகி வந்து நின்று ...
ஒழுங்குகளை சீர் குழைத்தாய் ...
வறுமையாக வந்து நின்று ...
கொலை கொள்ளை கேடானாய் ...

அன்புக்குள் புகுந்து கொண்டு ...
பங்குச் சண்டை பிறப்பித்தாய் ...
சீதனமேனும் வடிவில் வந்து...
பெண் வாழ்வை சீர் குழைத்தாய் ...

வறுமையாய் வேஷமிட்டு ...
பலர் அறிவை நீ அழித்தாய் ...
பள்ளிச் செல்லும் பாலகரை ....
தொழிலாலியாய் ஆக்கி வைத்தாய் ...
வறுமை கொண்ட மாதரினை ...
வழி தவற நீ வைத்தாய் ...

பலர் சொல்ல கேட்கின்றேன் ...
நல்லதும் உன்னாலே ...
கேட்டதும் உன்னாலே என்று ...
உயிர் உள்ளதும் உன்னாலே ...
உயிர் போவதும் உன்னாலே என்று ...

யாரோ சொல்கிறார் ...
உன்னை கடவுள் என்று ...
இன்னும் பலர் அதற்கும் மேல் என்பார்...

நாடாது உன்னிடம் -
நல்லவர் மனம் ...
துரவிகளுக்கெல்லாம் -
நீ வெறும் பிணம் ....

மகா பாவியே
உன் பெயர் தான் பணம் ...
உனக்கு ஏன் தான்
இந்த குணம் ....

சபிக்கின்றேன் உன்னை
அழிந்துப் போ என்று ....
பண்ட மாற்று காலம் ...
இனியும் வாராதோ ...?
மனிதமும் இனிதாகவே மலராதோ ...?
என்று வரும் அந்த இனிய நாள் ....?

மரணப் படுக்கையிலும்

2.மரணப் படுக்கையிலும் .!!!



அன்பே அன்று ...!
கவிதைகள் வரைந்தாய்
என்னை காதலிப்பதாக கூறி
என் மனதை பறி கொடுத்தேன்
நானும் உன் காதலில் மயங்கி ....

சில நாட்களில் பிரிந்தாய்
மீண்டும் வருவதாக கூறி
வந்த வரனை எல்லாம் தட்டி விட்டேன்
நானும் உன்னை நம்பி....

நீ வரவே இல்லை
செய்தி மட்டும் வந்தது
பொன்னோடு சேர்த்து - நீ
பெண்ணையும் மனம் முடித்தாய் என்று .....

என்னவர்கள் சூழ்ந்து நின்று
என்னை திட்டி தீர்க்கையில்
என் மனம் மட்டும்
உன் பொய்களை அசை போட்டது...

முதல் முதல் நாமிருவரும்
பார்வைகளை பகிர்ந்துக் கொண்ட
மணி கோபுரம் ....!!!
நீயும் நானும் கை கோர்த்து
நடந்த வயல் வரம்புகள்.......!!!
உனக்காக நானும் எனக்காக நீயும்
காத்திருந்த கருங்கற்பாறை .....!!!
நீ எனக்காக கால் கடுக்க நிற்கும்
குடி நீர் கிணற்றடி ஒற்றைப் பனை....!!!
மழைக்காக நாம் ஒதுங்கி நின்ற
பாதி கரைந்து போன மண் வீடு...!!!
வெயில் சுடச்சுட நடந்த
செம்மன் பாதை...!!!
நிழல் தேடி அமரும்
ஓங்கி நிற்கும் அடி வளவு வேம்பு...!!!

இவற்றை பார்க்கும் போதெல்லாம்
என் நெஞ்சே வெடித்து விடும் போலுள்ளது ...
என்னை மறக்க உன்னால் மட்டும் எப்படி முடிந்தது..!!!

இன்று அழுது வடிந்த விழிகளும் ...
குனிந்த தலை நிமிராமலும் ..
அவமானத்தில் கூனி குறுகி
நான் நடப்பதை
நீ அறிந்திருக்க நியாயமில்லை தான் ...

நீண்ட நேர யோசனைக்குப் பின்
உன் நினைவினை நீக்கவென்றேண்ணி
வீடு வாசல் விட்டு பெற்றார் உற்றாரைப் பிரிந்து
வேறு திசையில் செல்கிறேன் இன்னும் படிக்கலாமென ..

ஆனால் அங்கும் ......
விட்டுப் போன நினைவுகளின் துயரமும்
மரணித்துப் போன என் காதலின் நினைவுகளும்
மறக்க எத்தனிக்கையில்
மீண்டும் நீ வருகிறாய்
அன்பிற்காக மட்டும் ஏங்கும் இதயத்தோடு ...

காணாதது போல நடக்க நினைக்கிறேன்
ஆனால் ...!! நீயோ
வலிகள் ஆறா மனப்புங்களுடன்
நினைவினூடே பின் தொடர்கிறாய் ...
அன்பே நான் எப்படி சொல்ல ......
மரணப் படுக்கையிலும்
உன்னை மறக்கும் ஷக்தி
என் காதலுக்கு இல்லை போலும் ...!!!!!!!


சிந்து சிவசங்கர் .