பத்து தடவை பாடை வராது,
பதுங்கி கிடக்கும் புலியே தமிழா .
செத்து மடிதல் ஒரே ஒரு முறை தான்,
சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

Pages

Tuesday, 7 June 2011

சுழலும் இந்த உலகினிலே

11.சுழலும் இந்த உலகினிலே

ஆயிரமாயிரம் உறவுகள் உண்டு
ஆலம் விழுது போல் படர்வதும் உண்டு
ஆடிக்கொரு முறை வருவதும் உண்டு
ஆட்டங்கள் காட்டி செல்வதும் உண்டு

ஆலயமதிலும் தெய்வங்கள் உண்டு
ஆறாத மனங்கள் செல்வதும் உண்டு
ஆசீர்வாதம் கேட்பது உண்டு
ஆசிகள் பெற்றதாய் சொல்வதும் உண்டு

ஆபத்து பலதும் வருவதும் உண்டு
ஆறா கஷ்டத்தில் விழுவதும் உண்டு
ஆண்டவன் உண்டென்று சொல்பவர் உண்டு
ஆவிகள் உண்டென்றும் சொல்பவர் உண்டு

ஆணவத்துடனே அழைபவர் உண்டு
ஆற்றினில் உண்மைகள் கரைவதும் உண்டு
ஆதவன் தினமும் வருவதும் உண்டு
ஆதியிலிருந்தே தொடர்வதும் உண்டு

ஆசைகள் நெஞ்சில் சுமப்பவர் உண்டு
ஆழியில் அதனை தொலைத்தவர் உண்டு
ஆகாய உயரத்தில் கனவுகள் உண்டு
ஆயுள் முடிய முன் செல்வதும் உண்டு

ஆற்றிய பணியை விடுவதும் உண்டு
ஆழும் ஆசையில் விழுவதும் உண்டு
ஆண் என்று கூறி முறைப்பவர் உண்டு
ஆதிக்கம் மிகையாய் வாழ்பவர் உண்டு

ஆசான் ஒருவன் இருப்பதும் உண்டு
ஆடு மேய்க்கும் சிறுவனும் உண்டு
ஆடவர் என்று செருக்கும் உண்டு
ஆண்டுகள் தோறும் மாற்றமும் உண்டு

ஆபத்தில் உதவும் நண்பனும் உண்டு
ஆறா துயரத்தில் தள்ளுபவரும் உண்டு
ஆஹா என்று புகழ்பவர் உண்டு
ஆத்திரம் கொண்டு அடிப்பவர் உண்டு

ஆவேஷம் கொண்டு கொல்பவர் உண்டு
ஆறா நோயை போக்கும் மருத்துவர் உண்டு
ஆடி அசைந்து வரும் ஆறுகள் உண்டு
ஆற்றங்கரையில் நாணல்கள் உண்டு

ஆறேழு தெரியா பாமரனும் உண்டு
ஆறெழுத்து அறிஞ்ச அறிஞனும் உண்டு
ஆஸ்தியை ஆழும் மனிதனும் உண்டு
ஆண்டியாய் திரியும் மனிதனும் உண்டு

ஆடும் கலையை அறிந்தவர் உண்டு
ஆட்டி வைக்கவும் பல பேர் உண்டு
ஆச்சியின் கதைகளில் உண்மையும் உண்டு
ஆட்சியில் பொய்யே கதையாய் உண்டு

ஆதரவெனும் சொல்லொன்று உண்டு
ஆணைகள் இட்டு சொல்வதும் உண்டு
ஆரிரோ பாடும் தாயும் உண்டு
ஆழியின் நடுவில் சுழலும் இந்த உலகினிலே ...!!!


சிந்து சிவசங்கர் .

சேவையின் சம்பளம் மரணமா

10.சேவையின் சம்பளம் மரணமா?

என்னை எல்லோருக்கும் தெரியும்
ஆனால் கண்டுக்க மாட்டார்கள் .
சில பேருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
சிலருக்கு என்னை பிடிக்காது

பிடித்த சிலரும் என்னை
ஆரம்பத்தில் நன்றாக பாதுகாப்பார்
அறைக்குள்ளே பூட்டி வைப்பார்
பார்ப்பதற்கு பலபேர் வருவார்
பெண்களில் பல பேர்
ஆண்களில் சில பேர்

என்னை தொட்டு தொட்டு பார்ப்பார்
நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன்...
கடைசியில் என்னை பிடிக்க வில்லை என்பார்
நான் நொந்து போய் விடுவேன் ...

என்னோடு அறையினுள் அடை பட்ட
மற்றவர்களில் சிலர் எம்மை விட்டு பிரிகையில்
வேதனையுடன் விடை கொடுப்போம்
எம் வேதனை எம் எஜமானிகளுக்கு புரிவதே இல்லை ...

இப்படி தான் நானும் அவர்களை போல்
ஒரு நாள் அனுப்ப பட்டேன்
பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றேன் ...
என்னை கூட்டி போன என் எஜமானி
அங்கு ஓர் அறையினுள் என்னை பூட்டி வைத்தார் ...

மறு நாள் தன்னோட சேர்த்தே என்னையும்
போகிற இடமெல்லாம் அழைத்து சென்றாள் ..
நானும் என் எஜமானி கூடவே ஒட்டிக் கொண்டேன் ...
சில பேர் என்னை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர்
பெருமை பட்டு கொண்டேன்
சில பேர் இதை எதுக்கு கூட்டி வந்தே என்றது போல் பார்த்தனர்
அப்போ எல்லாம் கூணிக் குறுகிப் போவேன் ...

நாள் பூரா எஜமானி கூடவே இருந்தேன்
அவர்கள் இழுத்த இழுப்புகெல்லாம் இழுப்பட்டேன் ..
பொழுது சாய்ந்ததும் என்னை
மூலையில் இருத்தி விட்டாள்..

அதற்க்கு பிறகு என்னை கண்டுக்கவே இல்லை ..
அவர்கள் போகும் போதும் வரும் போதும்
உழக்கு பட்டேன் சீண்ட பட்டேன் தீண்ட பட்டேன்
பகல் எல்லாம் உழைத்த களைப்பு
ஒரு புறம் இப்ப படும் அவஸ்தை ஒரு புறம்
அசதியில் உறங்கி விட்டேன் ...

என் உடலில் எதோ பாரமாய் விழ
திடுக்கிடுகிறேன் என்னை போல இன்னும்
பல பேர் எனக்கு மேலே நசுக்க பட்டு அடியில் கிடக்கிறேன் ...
எதோ பேசுகிறார்கள் ஆரவாரமாய் ...
எதுவுமே விளங்கவில்லை ...

அம்மா என்று ஒரு குரல் கேட்கும்
வந்துட்டியா என்று எஜமானி சொல்வாள்
மறு நிமிடம் நான் இருக்கும் திசைக்கு
எஜமானியின் கைகள் நீளும் ..
வந்தவன் எங்களை குண்டு கட்டாய் கட்டி தூக்குவான்
உடல் நோகும் நாம் கத்தினாலும்
வந்தவன் பொருட்படுத்த மாட்டான்...

எங்கேயோ கொண்டு போவார்
கட்டுகளை அவிழ்ப்பார்
தண்ணிக்குள் அமுக்கி வைத்திருப்பார்
மூச்சடைக்கும் வரை
அவனுக்கு கவலையே இல்லை ..

அவன் கோபம் தீரும் வரை அடிப்பான்
நான் குமுறுவது அவனுக்கு கேட்குதோ இல்லையோ
மீண்டும் மீண்டும் இது தொடரும்
அவன் அலுவல் முடியும் வரை ..
.
எல்லாவற்றையும் தாங்கி கொண்டு இருப்பேன் .....
தினம் தினம் இதே கொடுமை ...
ஒருநாள் உடம்பெல்லாம் காயப்பட்டு
தோல் கிழிந்து தொங்கும் நிலைக்கு வந்தேன் ..
ரொம்ப நொந்து போனேன்...

ஆனால் எஜமானி என்னை கண்டதுமே
என்னை அடித்தவனை திட்ட
மனம் குளிர்ந்து போனேன்
எனக்காக பேசுகிறாளே என்று எண்ணம்
பார்த்து செய்ய படாதா என்றாள்..

கவலையோடு என்னை பார்த்தாள்
அடுத்து அவள் செய்த விடயம்
என்னை சோகத்தில் ஆழ்த்தியது
வீட்டு சமையல் காரியிடம்
கை மாற்ற பட்டேன்
சமையல் காரி எல்லா பற்களும் தெரிய சிரித்தாள்
என்னம்மா எனக்கா என்றாள் ..?

நான் அதிசயமாய் பார்த்தேன்
அட இவளுக்கு என் மேல இவ்ளோ பாசமா ..
ரொம்ப சந்தோஷமாய் அவள்
என்னை கூட்டி போனாள்..

ஆனால் அங்கும் அதே கொடுமை
தினம் செத்து பிழைச்சு வந்தேன் ...
கடைசியில் ஒரு நாள் அவள்
என்னை துண்டு துண்டாய் வெட்டினாள்...

அழுது கொண்டே அவளை பார்த்தேன்
என் அங்கங்கள் ஒவ்வோன்றும்
தவணை முறையில் நெருப்புக்கு இரையானது .
கடைசி அங்கம் நான் தான் ...

அடுப்படியில் முடங்கி கிடப்பதும்
அடிக்கடி சூடு வாங்குவதும்
என் பிழைப்பாய் போச்சு
உழக்கு பட்டு உழக்கு பட்டு
அடி உதை வாங்கி
என் கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறேன்
குப்பை மேட்டில் அனாதையாய் ...இதோ சாம்பலாகிறேன் ...

மானம் காத்தவளுக்கு சம்பளம் மரணம்
முதலில் புதியவள்
பின்பு பழையவள்
அடுத்து கிழிந்தவள்
கடைசியில் அடுப்படி பிடி துண்டு
இப்போ குப்பையோடு குப்பையாய் நான் .....
என்ன செய்வது நான் ஒரு புடவையாகிப் போனேன் ..!!!

சிந்து சிவசங்கர்.

ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே

9.ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...!!!

முன்னம் ஒரு காலத்திலே உனக்கெனவே வாழ்கையிலே
நீ அழுதிடும் ஓசையிலே நான் அழும் குரல் கேட்கலையே ...
நீ புன்னகை புரிந்திடவே என் சுமைகள் மறைந்ததுவே
கை கடுக்க உழைக்கையிலே சோர்வேனக்கு தெரியலையே ....

நீயுறங்கும் நேரத்திலே என் கண்கள் உறங்களையே
நீ சுகமாய் உறங்கிடவே என் கண்கள் விழித்ததுவே...
உன் வயிற்றை நிரப்பிடவே என் வயிறும் காய்ந்ததுவே
உன் தாகம் தணிகையிலே என் தாகம் தணிந்ததுவே ...

நீ நன்றாய் படித்திடவே நான் விரதம் இருந்தேனே
நீ நிமிர்ந்து நடந்திடவே நான் தலையை குனிந்தேனே ...
நீ படித்து முடிக்கையிலே வேலை வெளிநாட்டினிலே
போவதாக சொல்கையிலே நான் பதறி போனேனே ...

குடி இருந்த வீட்டையுமே சொன்னாயே விற்றிடவே
நீ பயணம் சென்றிடவே வீட்டையும் நான் விற்றேனே
சென்ற முதல் மாதத்திலே நீ அனுப்பிய கடிதத்திலே
உன் கஷ்டங்கள் சொன்னதுமே என் கஷ்டங்கள் மறைந்ததுவே ...

அன்பு பாசம் நிறைந்திடவே சின்ன சின்ன பரிசுகளே
நான் உனக்கு வாங்கியதே மனம் அனுப்பிட எண்ணியதே
மறதி எனும் பழக்கத்தையே இன்னும் நீ விடவில்லையே
நீ அனுப்பிய கடிதத்திலே முகவரி நீ எழுதலையே ...
.
ஈரேழு மாதத்திலே மறு கடிதம் வரவில்லையே
உன் சுகத்தை அறிந்திடவே என் மனசும் ஏங்கியதே ...
நீ சுகமாய் வாழ்ந்திடவே பல பூஜைகள் செய்தேனே
என் உறக்கம் தொலைத்தேனே நோயாளி ஆனேனே ...

வாடகையும் வீட்டினிலே ஏறிக்கொண்டு போனதுவே
வேலைவெட்டி செய்திடவே கையிரண்டும் நடுங்கியதே ..
முதுமை என்னை ஆட்டிடவே உன் நினைவும் என்னை வாட்டியதே
யாருமில்லை அருகினிலே என் சோகம் சொல்லிடவே ...

நான் இருமும் இருமளிலே பெருந்தெருவே திரும்பிடுதே
என் மூச்சு சத்தத்திலே பறவைகளும் விழித்திடுதே...
என் இதய துடிப்பதுவே உன் பெயரை சொல்லிடுதே
மகனே என் பாசத்தையே உன் மனசுக்கு தெரியலையே ...

உன்னை பார்த்த கண்களிலே பார்வை மங்கி போகிறதே
வந்திடுவாய் ஒரு முறையே இல்லை பார்வை போய் விடுமே ...
பெட்டி கடை ஓரத்திலே கிழிந்த பாயில் படுக்கையிலே
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே ...

உறங்காத நேரத்திலே உன் கஷ்டம் தோன்றிடுமே
வெள்ளைக்காரன் நாட்டினிலே புரியாத பாஷையிலே
என் பிள்ளை கஷ்டத்திலே என்ன செய்றானோ தெரியலையே
குளிர் என்று அறிந்தேனே போர்வயுண்டோ தெரியலையே ....

நாளை எடுக்கும் பிச்சையிலே நிறைய பணம் சேர்ந்தாலே
முருகா உன் கோயிலிலே முன் வாசல் உண்டியலிலே
போட்டிடுவேன் சரவணனே என் மகனின் கஷ்டங்களே
அத்தனையும் போக்கிடவே அருள் புரிவாய் ஆண்டவனே

தினமும் என் கனவினிலே சிரிக்கின்றாய் இரவினிலே
சிரிப்பேன் அந்த நினைப்பினிலே பொழுதெல்லாம் என் மகனே
உயிர் பிரிந்தால் என் உடலினிலே மகனே நீ கலங்காதே
நீர் வந்தால் உன் கண்களிலே என் ஆன்மா செல்லாதே ...

சிந்து சிவசங்கர் .

என் நண்பன்

8.என் நண்பன்!

யாருமே என்னோடு
விளையாட வரவில்லை ..
சோகமாய் வீட்டு
முற்றத்தில் அமர்ந்திருந்தேன் ..

அப்போது தான் அவன் வந்தான் ...
அண்ணார்ந்து அவனை பார்த்தேன் ...
எனக்கு கோபம் கோபமாய் வந்தது ...
விருட்டென்று எழுந்து
வீட்டுக்குள் சென்றேன் ...
வாசலில் நிண்டு எட்டிப் பார்த்தான்
அந்த பார்வை வா விளையாடலாம்
என்பது போல் இருந்தது ...

நானும் விளையாட்டாய்
அறையினுள் சென்று
கதவை மூடிக் கொண்டேன் ...
பரிதாபமாய் ஜன்னல் வழியாய்
எட்டிப் பார்த்தான் ...
எனக்கு சிரிப்பு வந்து விட்டது ...

முற்றத்து தேக்கு மரத்தில்
ஓடி போய் ஒழிந்து கொண்டேன் ...
அங்கேயும் இலைகளுக்கு மறைவில்
நின்று என்னை கண்டு பிடித்து விட்டான் ...

தோட்டத்து வாழை தோப்பில்
மறைந்து கொண்டேன்...
வாழை மரங்களுக்கு நடுவே நின்று
எட்டி எட்டி பார்த்தான் ...

மீண்டும் வீட்டுக்குள்
ஓடி மறைந்து கொண்டேன் ...
மறுப்படியும் வாசலிலும் ... ஜன்னல் வழியும்
எட்டி எட்டி பார்த்தான் ...
பாவமாய் இருந்தது ..

என்ன என்று கேட்டேன்
பொழுது சாய்ந்து விட்டது
நாளை அதிகாலையில்
வந்து விடுகிறேன் என்றான் ...

அவன் முகம் சிகப்பாய் மாறியது வெட்கத்தில் ...
நானும் சரி என்று தலை அசைத்தேன் சோகமாய் ..
என்னை பிரிய மனம் இன்றி
சென்று மறைந்தான் அவனும் ...

அவன் வருகைக்காய் காத்திருந்தேன் நானும் ..
என்னை பார்க்காமல் அவனால் இருக்க முடியாது ...
கண்களை மூடி உறங்கி போனேன் நானும்
அவனையே நினைத்தபடி ...

அதிகாலையில்
அவன் முகத்தில் தான் முழிப்பேன்
வந்து விடுவான் ...
அவன் என்றும் என் நண்பன் வெயில் ....

சிந்து சிவசங்கர் ...!

தேவதையே நீ மண்ணில் வந்திறங்கும் நேரம்

7."தேவதையே நீ மண்ணில் வந்திறங்கும் நேரம்"



இளங்காற்று இதமாக தழுவிக் கொண்டு செல்லும்
தெருவோர தென்னைகள் தாலாட்டிக் கொள்ளும்
பொடி கல்லும் குறும் மணலும் சிறு தூரம் தாவும்
கிணற்றுக்குள் தவளைகள் கூட்டமாய் கத்தும் ...

காற்றசைவில் மூங்கிலும் குழல் ஊதிக் கொள்ளும் ...
வெண் மேகம் கருமையாய் தான் மாறி போகும்
சூரியனும் அதனுள்ளே தான் ஒழிந்து கொள்ளும்
குடில்களின் கதவுகளும் தான் மூடிக் கொள்ளும் ....

பறவைகள் கூட்டமாய் சிறகடித்து செல்லும்
பொடி நடையில் செல்பவரை ஓடிடச் செய்யும்
விலங்குகளும் குகைகளில் தான் அடைந்து கொள்ளும்
கோழியொன்று கொக்கரித்து குஞ்சுகளை அழைக்கும் ....

வானை விட்டு நீல நிறம் காணாமல் போகும்
பகல் தனில் இருள் கூட ஓடி வந்து சேரும்
படகுகள் கரை நோக்கி வேகமாய் செல்லும்
கடல் அலை ஓசையாய் ஒரு வீணை மீட்டும் ...

விளையாட்டில் மேகங்கள் தாம் மோதிக் கொள்ளும்
வானமது இடியாக ஒரு மேளம் கொட்டும்
தென்றலோ இசையாக ஒரு காணம் பாடும்
சிறு தோணி கடல் மீது ஒரு ஆட்டம் போடும் ...

தட தட எனும் ஓசை செவிகளை கிழிக்கும்
மின்னலும் ஒரு நொடியில் ஒளி தந்து மறையும்
செடிகளும் மலர்களும் தலை அசைத்து சிரிக்கும்
மழை தேவதையே நீ மண்ணில் வந்துதிரும் நேரம் ...!!!


சிந்து சிவசங்கர் .